Notifications
Clear all

அத்தியாயம் 58

 
Admin
(@ramya-devi)
Member Admin

சும்மா இருந்த மாதவனையும் பிடித்து அமர்த்திக் கொண்டு அவனுக்கும் ஒரு டீயை சேர்த்து போடா சொல்லி நால்வரும் சேகரனின் அப்பாவை சுற்றி அமர்ந்துக் கொள்ள,

சேகரனின் தம்பி பதறிப்போய் அவ்விடம் வந்தான்.

“அண்ணா” என்று அவர் வர,

“உங்க அப்பாவை ஒன்னும் பண்ணிட மாட்டோம். இப்ப எப்படி இருக்காரோ அப்படியே திருப்பி அனுப்பிடுவோம்.. ரொம்ப கவலை பட வேண்டாம்” சேகரன் அதித எரிச்சலுடன் சொல்ல, வந்த வழியே திரும்பி போய் விட்டார் அவர்.

“மாமா” என்று அவரின் தோளில் கையை வைத்து அமைதி படுத்தினான் கதிரவன்.

“மனசே ஆறல மாப்பிள்ளை” என்றவர் தன் தகப்பனை நேருக்கு நேராக பார்த்து,

“இது கல்யாண வீடா மட்டும் இல்லன்னா இந்நேரம் உங்களை..” என்று அவர் முடிக்கும் முன்பே,

“என்னை என்னடா செய்வ.. என்ன செய்ய முடியும் உன்னால.. பதினஞ்சு வயசுலையே சுகத்தை தேடி போனவன் தானே.. உன்னால என்ன செய்ய முடியும்” ஆவேசமாகவும் வக்கிரமாகவும் கேட்டார்.

அவர் பேசிய பேச்சில் கேட்டுக் கொண்டு இருந்த நால்வருக்கும் அத்தனை கோவம் வந்தது.

“ஒரு அசிங்கத்தை பகிங்கரமா பண்ணிட்டு அதை பத்திய கவலை கொஞ்சமும் இல்லாம இருந்தவன் தானே நீ.. ச்சீ ஒழுக்கங் கெட்டவனே... நீ என்னை பேச வந்துட்டியா?” என்று கோவத்தின் சீற்றத்தில் அவர் கொந்தளித்துக் கொண்டு இருக்க,

அவரை ஆழ்ந்த பார்வை பார்த்த கதிரவன் ஏளனமாக சிரித்தான்.

--

கதிரவன் தன்னை பார்த்து ஏளனமாக சிரிப்பதை பார்த்தா அந்த பெரிய மனிதனுக்கு அத்தனை ஆவேசம் வந்தது.

அவரின் ஆவேசத்தை எல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல்,

“என் மாமா ஒழுக்கம் கெட்டாருன்னா அந்த நிமிடமே நீங்க அவரை கொன்னு போட்டு இருந்து இருக்கலாம். அப்போ நீங்க பெரிய மனுசன்னு நான் ஒத்துக்கிட்டு இருந்து இருப்பேன். ஆனா நீங்க என்ன பண்ணீங்க..?”

“என் அக்காவையும் என் மாமாவையும் தகாத வார்த்தையால பேசி, அடிச்சு அவமானப் படுத்துனீங்க. அது கூட பெத்தவரு ஆற்றாமையில செஞ்சுட்டீங்கன்னு எடுத்துக்குவேன். ஆனா அப்பவும் உங்க ஆத்திரம் தீராம, குடும்ப கெளரவம், மான மரியாதை, அசிங்கம் அது இதுன்னு பிறந்த குழந்தை மேல கொஞ்சமும் ஈவு இறக்கம் இல்லாம அவளை கொல்ல துணிஞ்ச உங்களை எப்படி மனுசனா பார்க்க முடியும்..

“மனுசனாய்யா நீயெல்லாம்.. ராணி மாதிரி என் வீட்டுல வளர வேண்டியவளை எங்கோ கொண்டு போய் விட்டுட்டு வந்தியே உன்னையெல்லாம் பார்த்தா கூட பாவம் வந்து சேரும்.. மூணு நேர சோத்துக்கு என் தேவதையை கை ஏந்த வச்சுட்டியே.. நீயா பெரிய மனுசன்” ஆத்திரத்தில் கதிரவனின் நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டு நின்றது.

அதுவும் அவன் பேச பேச அவனின் கழுத்து எலும்பு அப்படி துடித்தது. எத்தனை வருட தேடல்.. முழுதாய் இருபத்தி இரண்டு வருட தேடல் அல்லவா அது. அவ்வளவு எளிதாக விட்டு விடுவானா என்ன..

“நீ என்ன சொன்னாலும் அவ எனக்கும் சரி என் குடும்பத்துக்கும் சரி அசிங்கம் பிடிச்சவ தான்.. எனக்கு அவ அவமானம் தான். நான் அவளை எந்த காலத்துக்கும் ஏத்துக்கப் போறது இல்லை” என்றவரின் வன்மம் அங்கிருந்த நால்வருக்கும் புரிந்தது.

அந்த நேரம் ரேவதி டீயை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தார்.

ஆம் அவர்கள் அமர்ந்து இருந்த இடம்.. வரவேற்பறைக்கு அருகில் இருக்கும் அலுவலக அறையில் தான். அதனால் யாருடைய கவனமும் அவர்களின் மீது பதியாமல் போனது.

“அசிங்கமா யாரு அசிங்கம்..? வறட்டு கௌரவத்தை கட்டிக்கிட்டு என் மகளை எங்களை விட்டு பிரிச்சு, குடும்ப மானம், ஊரு மரியாதைன்னு அலையிற நீங்க தான் அசிங்கம்.. நீங்க தான் அருவெறுப்பு.. நீங்க தான் அவமானம்.. என் மக கிடையாது. என் மக எங்களோட கெளரவம். எங்க குல விளக்கு” வெகுண்டு எழுந்து சேகரன் ஆத்திரத்துடன் சொல்ல,

“நீங்க ஏன் சேகரன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க.. அவரு அசிங்கம்னு சொன்னா நம்ம மக அசிங்கம் ஆயிடுவாளா.. இல்ல அவமானம் ஆயிடுவாளா.. அவ நம்ம தூய்மையான காதலுக்கு கிடைச்ச தேவதை. என் தம்பியோட இதய ராணி அவ..” என்ற ரேவதி தன் மாமனாரை தீர்க்கமாக பார்த்து,

“என் மகளை தேடி என்னையும் என் வீட்டுகாரரையும் போகக்கூடாதுன்னு உங்க உயிர் மேல சத்தியம் வாங்கி எங்களை கட்டி போட்டுட்டீங்க. என் அப்பா அம்மாவையும் எங்க தாத்தாவை வச்சு ப்ளாக் மெயில் பண்ணி தேட விடாம பண்ணிட்டீங்க.. ஆனா என் சிங்கக்குட்டி ஒருத்தன் இருப்பதையே மறந்துட்டீங்க மாமனாரே.. பாருங்க என் பெண்ணை தேர் மாதிரி கூட்டிட்டு வந்துட்டான். இனி உங்களால எதையும் செய்ய முடியாது.. நீங்க வெறும் பல்லு பிடுங்கின பாம்பு.. என் மகளுக்கு எதிரா ஒரு முடியை கூட அசைக்க முடியாது.. நீங்க அசைக்கணும்னு நினைச்சாலே என் தம்பி கொஞ்சமும் ஈவு இறக்கம் இல்லாம உங்களை கொன்னு போட்டாலும் போட்டுடுவான்.. ஆச்சரியப்படுறதுக்கு இல்லை” என்றார் ரேவதி.

“என்ன எல்லாரும் ஒண்ணா சேர்ந்தது என்னை கவிழ்க்கலாம்னு பார்க்குறீங்களா? நீங்க என்ன தான் அவளை தலை மேல தூக்கி வச்சு கொண்டாடினாலும் அவளை நான் ஏத்துக்க மாட்டேன்” ஆவேசத்துடன் கொந்தளித்தவரை பார்த்த கதிரவன்,

“நீங்க ஏன் அவளை ஏத்துக்கணும்.. உங்களை ஏத்துக்க சொல்லி இங்க யாரும் உங்க காலுல விழுந்து கிடக்கல.. என் பொண்டாட்டிக்கு இப்படி ஒரு கேவலமான தாத்தா தேவையே இல்லை. அவளுக்கு எல்லாமுமா இந்த தாய்மாமன் இருக்கான். நான் ஒருத்தன் போதும் அவளுக்கு..” என்றவன் பனியின் புறம் திரும்பி

“ஆமா தானே கண்ணம்மா உனக்கு நான் மட்டும் போதும் தானே.. இல்ல உனக்கு உன் தாத்தா வேணுமா?” கேட்டான்.

இவ்வளவு நேரம் மௌனமாக அவனுக்கு அருகில் அமர்ந்து அங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த பனிக்கு என்னை யாரும் விரும்பாமல் தூக்கிப் போடவில்லை. என் அப்பாவும் என் அம்மாவும் சூழ்நிலை கைதி என புரிந்துக் கொண்டவள்,

கூடவே கதிரவனின் ஆத்மார்த்தமான தேடலை நன்கு புரிந்துக் கொண்ட பனிக்கு கண்கள் கலங்கியது. இவர்களின் மூன்று பெரும் தன் மீது எவ்வளவு அன்பும் நேசமும் வைத்து இருக்கிறார்கள் என்று புரிந்தவளுக்கு கண்களில் ஈரம் கோர்த்தது.

ஆனால் தன்னை வெறுத்து தூக்கிப் போட்டவரின் முன்பு தன் கண்ணீரை காட்ட விரும்பாமல், தாயை போல திடமாக இருந்துக் கொண்டாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : July 2, 2026 2:38 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top