“பனிநிலவு..” என்று அழுத்தமாக அழைத்தான்.
“ஹாங் மாமா இங்க தான் உங்கக்கூட இருக்கேன்” என்றாள். அவளுக்கு வந்தவர்கள் யார் என்று எதுவும் தெரியாது.
“இங்க வா உன் கிட்ட ரொம்ப முக்கியமானவர்களை அறிமுகம் செய்து வைக்கிறேன்” என்று சொன்னவன்,
“என் மாமா சேகரன் இருக்காரு இல்லையா அவரோட குடும்பம் இது” என்று சொன்னவன் ஒவ்வொருவரகாக அவர்களின் பெயரை சொல்லி, சேகரனுக்கு என்ன உறவோ அதையும் விளக்கமாக சொல்லி அறிமுகம் செய்து வைத்தான்.
ஹாங்.. அப்பா குடும்பமா?” மனதுக்குள் மகிழ்ச்சி பரவியது. அதனால் சிரிப்புடனே அவர்களை வரவேற்றாள்.
“ரொம்ப முக்கியமான ஆள் போல.. இவ்வளவு விளக்கமா சொல்லிட்டு இருக்க.. யாரு இது..?” என்று ஊரே மதிக்கும் கதிரவனை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் யாரோ போல பேசினார் சேகரனின் அப்பா..
அதை பற்றி கவலை படாமல்,
“இவ என் பொண்டாட்டி.. சீக்கிரம் கல்யாண பத்திரிகை வைக்க உங்க வீட்டுக்கு என் அப்பா அம்மா ரெண்டு பெரும் வருவாங்க” என்றான் பெருமிதமாய்.
ஒரு கணம் அவனது பேச்சை கேட்ட பெரியவர்,
“ஏன்டா என்னவோ பெரிய இவனாட்டம் கட்டுனா என் அக்கா மகளை தான் கட்டுவேன்னு பெருசா சபதம் எல்லாம் போட்ட.. எங்க உன் அக்கா மகளை கண்டு பிடுச்சுட்டியா? இல்ல பத்து வயசுல போட்ட சபதம் இப்போ முப்பது வயசுல மறந்துடுச்சுன்னு கண்டவளையும் கட்டிக்க பார்க்குறியா? அந்த அளவுக்கு உடம்பு அரிப்பு எடுத்துடுச்சோ..” என்று சொன்னவர் அதோடு நிற்காமல்,
“உன் அக்கா காரி மாதிரி பதினைஞ்சு வயசுலயே உடம்பு அரிப்பு எடுத்து போய் என் மகனை மயக்கி அவன் கூட படுத்தாளே அது மாதிரி நீயும் இவக்கூட..” என்று முடிக்கும் முன்பே கதிரவனின் செவ்வரி ஓடிய விழிகளை கண்டு லேசாக பயந்து தான் போனார் அந்த பெரியவர்.
அவரின் பேச்சை கேட்ட பனிநிலவு விக்கித்துப் போனாள். எவ்வளவு தரக்குறைவான வார்த்தைகள்.. இதுக்காக தானே நான் அசிங்கம் வேணான்னு சொன்னேன். இடி விழுந்தது போல கலங்கி நின்றாள் பனி.
கட்டுக்கடங்காத கோவம் வந்தது கதிரவனுக்கு. அவனின் தீரத்துக்கு இந்த ஆளை ஒரே பிடியில் சுவற்றில் ஏற்றி நிறுத்தி விடுவான். ஆனால் ஒற்று பிடிக்கு கூட தாக்கு பிடிக்காத கிழவனிடம் என்ன வீரத்தை காட்டுவது என்று தன்னை அமைதிப் படுத்திக் கொண்டவனின் இதழ்களில் ஏளனப் புன்னகை அரும்பியது.
அவனின் புன்னகையை பார்த்த பெரியவருக்கு கோவம் கொப்பளிக்க, “என்னடா ஏகத்தாளமா சிரிக்கிறியா? இந்த சிரிப்பு எத்தனை நாள் உன் முகத்துல இருக்குன்னு நான் பார்க்க தானே போறேன்.. அந்த பிண்டத்தை தேடி அலைஞ்சி நீ பைத்தியமாக தான் போற.. அதை நான் பார்க்க தான் போறேன்” என்றவரை நக்கலாக பார்த்தவன்,
“என் புன்னகைக்கு என்றைக்கும் குறைவே இருக்காது ஏன் தெரியுமா பெரியவரே..” நக்கலாக கேட்டவன்,
அருகில் இருந்த பனிநிலவை தன் தோளோடு அணைத்து அவருக்கு முன்பாக நிறுத்தியவன்,
“ஏன்னா என் அக்கா மக என் கூட இருக்கா.. அதுவும் என் பொண்டாட்டியா.. என் பொக்கிஷம் என் கூட இருக்கும் போது நான் எதுக்காக பைத்தியமாக போறேன். எதுக்காக தேடி அலைய போறேன்.. இவ என் பொண்டாட்டி மட்டும் இல்ல.. என் உயிரும் கூட..” என்று சொன்னவன், சட்டென்று தன் குரலை கர்ஜனையாக மாற்றி,
“இன்னொரு முறை என் கண்ணு முன்னாடி பிண்டம் அது இதுன்னு சொன்னன்னு வை. உன்னை பிண்டம் ஆக்கி, அப்புறம் என் மாமனை உனக்கு பிண்டம் வைக்க சொல்லிடுவேன்.. ஜாக்கிரதை” அடிக்குரலில் சிம்மம் மாதிரி உறும அந்த பெரியவருக்கு அவனின் குரலை கேட்டு ஸ்ட்ரோக்கே வந்து விடும் நிலை ஆனது. அதுவும் அவர் யாரை வெறுத்து யாரை அசிங்கம் என்று சொல்லி தூக்கிப் போட்டாரோ அந்த பெண் இன்று அவரின் முன்பு தேவதையாக வந்து நிற்கிறாள்.
அதை அவரால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
“என்னய்யா மிரண்டு போய் பார்க்குற.. என் மாமன் மவளை பார்த்தியா சும்மா ராணி மாதிரி நிக்கிறா.. தகதகன்னு மின்னுறா இல்ல என் பொண்டாட்டி.. அதவாது உன் முதல் பேத்தி...” நறுக்கென்று சொன்னவனின் சொல்லில் உண்மையாகவே அவரின் கை ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும் நிலைக்கு போனது.
அதை பார்த்த கதிரவன்,
“நீ இன்னும் உன் வாழ்க்கையில அனுபவிக்கனும்.. அனுபவிப்ப.. அனுபவிக்க வைப்பேன் நான்” என்று சிங்கமாக சொன்னவன், அவரின் கண் முன்னாடி ராணியாக அவளை கைப்பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்றவன்,
மச்சான் சீர் எல்லாவற்றையும் அவளுடன் சேர்ந்தே செய்தான். மிரண்டு நின்றவளின் கையை பிடித்து செய்ய வைத்தான் கதிரவன்.
“மாமா” என்று அவள் அழுகை வெடிக்க அழைக்க,
“உன் கண்ணீரை கண்டவனுக்காக வீண் பண்ணாதடி..” என்றான் ஒரே ஒரு வரியில்.
பட்டென்று தன் கண்ணீரை உள் இழுத்துக் கொண்டவள், முன்பை விட கம்பீரமாக கதிரவனுக்கு ஏற்ற இணையாக மாற்றிக் கொண்டவள் எங்கும் தொய்யவே இல்லை.
கால் வலி எடுத்தாலும் அசரவே இல்லை. சிரித்த முகமாக அனைத்தையும் எதிர் கொண்டாள். அதுவும் தன் தகப்பனின் அப்பன் முன்பு அசராமல் நிற்க கற்றுக் கொண்டாள். மனதை திடப்படுத்திக் கொண்டாள்.
“டேய் கண்ணா” என்று ரேவதி வர,
“ஒழுங்கா ஓடிடு.. இப்ப தான் நான் அவளை அழாம பாத்து வச்சுட்டு இருக்கேன். நீ பேசி அழ வைக்காத” என்று அக்காவை விரட்டியே விட்டுட்டான்.
சேகரன் அதற்கு மேல்..
“யோவ் மாமா ஒழுங்கா போயிடு.. இல்ல மண்டபம்னு கூட பார்க்க மாட்டேன்” என்று கதிரவன் அவரையும் மிரட்ட,
“போடா ரொம்ப தான் பண்ற.. என் அப்பன் என் மகளை பார்க்கிற பார்வையே சரி இல்லன்னு வந்தா.. ரொம்ப தான் பண்ற” என்று அவனை திட்டியவர், தன் மகளை தங்கத்தை விட அதிகமாக தாங்கும் மச்சான் இருக்கையில் எதற்காக கவலை கொள்ள போகிறார். சிரிப்புடனே நகர்ந்தார்.
“நிலா.. வாங்கி வச்ச சீர் வரிசையை எடுத்துட்டு வா” என்று கதிரவன் சொல்ல, எல்லாவற்றையும் காமாட்சி ரெடியாக வைத்து இருந்தார்.
“இந்தா கண்ணு மாமாட்ட குடு” என்று அவளிடம் நீட்டினார்.
“நீங்களே குடுங்க அம்மாச்சி”
“குடுன்னா குடு பாப்பா” ரேவதி சொல்ல, சரி என்று சொல்லி அவனிடம் நீட்ட அவனோ,
“சேர்ந்து குடுக்கலாம் வா” என்று அவளின் கையை பிடித்துக் கொண்டு சென்று அவளுடன் சேர்ந்தே மச்சினன் சீரு செய்தான்.
அதுவரை எப்படியும் தன் மகளுக்கு கதிரவனை பேசி விடலாம் என்று இருந்த மங்கைக்கு மொத்தமும் கைநழுவி போய் விட்டது என்று நன்றாக புரிந்தது. ஆத்திரம் கண்ணை மறைத்தது. ஆனால் அவரால் ஒன்றுமே பேச முடியவில்லையே.. அதோடு சேகரனின் அப்பாவுக்கு உடல் மொத்தமும் பற்றி எரிந்தது..
மச்சினன் சீரு செய்வதை அழகாக புகைப்படம் எடுக்க, அதில் கதிரவனும் பனிநிலவும் இணையாய் நிற்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது.
அந்த புகைப்படம் தான் எத்தனை அழகு.. புகைப்படம் மட்டுமா திருமணத்துக்கு நேரில் வந்து இருந்த அத்தனை பேருக்கும் அந்த காட்சி அவ்வளவு அழகாக தெரிந்தது.





