Notifications
Clear all

அத்தியாயம் 53

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என் உயிரா இருந்தவ இப்போ என் அனைத்து பிறவிக்கும் உயிரா மாற்றிட்டடி” அவளை காதலால் அர்ச்சித்து முடித்து முத்தங்களால் குளிப்பாட்டினான்.

இடைவிடாத அவனது முத்தங்களில் பெண்ணவள் தான் தவித்து தடுமாறிப் போனாள்.

“ஹைய்யோ என்ன பண்றீங்க மாமா.. நான் மறுபடியும் கிளம்பணும்” என்று அவள் பதற,

“பரவாயில்லை” என்று சொல்லி அவளின் மார்பில் தன் முகத்தை அழுத்தமாக புதைந்துக் கொண்டவன் நிமிர்ந்து அவளை பார்த்தான். அவனது பார்வையில் இருந்த உணர்வில் சிறுபிள்ளையாய் அவளுக்கு அவன் பட, அவனின் முகத்தை இழுத்து இதழ் முத்தம் கொடுத்தவள், பின் அவனை தானே தன் மார்பில் புதைத்துக் கொண்டாள் பனிநிலவு.

--

மீண்டும் மேக்கப் போட்டு அலங்கரித்து வைத்த தேர் போல பனிநிலவு வெளியே வந்தாள். கூடவே அவளின் கையை பிடித்துக் கொண்டு கதிரவன் வர, திருமணத்துக்கு வந்த அத்தனை பேரின் கண்களும் இவர்கள் இருவரின் மீது தான்.

மிக முக்கியஸ்த்தர்கள் வர அவர்களை வரவேற்க இவன் செல்ல, கூடவே இவளையும் வைத்துக் கொண்டான்.

“என்ன பண்றீங்க மாமா.. நான் அம்மா கூட இல்லன்னா அம்மாச்சி கூட இருக்கேன். என்னை எதுக்கு கூட்டி வச்சுட்டு இருக்கீங்க” என்றாள் இரகசியமாக.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். இந்த கல்யாணம் முடியிற வரை என் கூடவே இருடி” என்று வைத்துக் கொண்டான்.

“அது தான் ஏன்னு கேக்குறேன்” என்று அவள் முரண்ட,

“அவனவன் எனக்கு பொண்ணு குடுக்க ரெடியா இருக்காங்க.. துளசி கல்யாணத்துக்காக தான் அத்தனை பெரும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. இப்ப தான் அது முடிய போகுதுல்ல. அதனால சூட்டோட சூட்டா எனக்கு பெண் குடுக்க இப்பவே பேசி வச்சுடுவாங்க. அதை தடுக்க தான். எனக்கு ஆள் ரெடி பொண்ணு இருக்குன்னு காண்பிக்க வேண்டாமா?” என்றான்.

“அடேயப்பா மாஸ்டர் ப்ளான் தான்” என்றாள்..

“நான் இப்படி பண்ணலன்னா அப்பாவாளையும் சித்தப்பாவாளையும் சமாளிக்க முடியாது. துளசி கல்யாணத்தை பார்ப்பாங்களா இல்ல. இவங்க பேசுற சம்மந்தத்துக்கு நின்னு பதில் சொல்லிட்டு இருப்பாங்களா..” என்றான்.

“டுயின் ஒன்..” என்றாள்.

“அப்படின்னு இல்ல..” என்றவன், பின் கண்ணடித்து ஆமான்டி என் பொண்டாட்டி” என்று சிரித்தான்.

“பலே ஆளு மாமா நீங்க” என்று பனியும் சிரித்தாள். இருவரும் சிரித்து பேசுவதை பார்த்த அத்தனை பேருக்கும் உள்ளுக்குள் பெருத்த ஏமாற்றம் தோன்றியது.

வரவேற்பில் இவர்கள் இருவரும் நின்று இருப்பதை பார்த்த குடும்பத்தார்களுக்கு கூட வயிறு காந்தியது. அதுவும் மங்கைக்கு சொல்லவே வேண்டாம்.

பனி மேக்கப் போடும் பொழுது நார்மலாக போட்டுக் கொண்டாள்.

“ஏன்டி” என்று கேட்க,

“போதும் மாமா அது தான் அப்பா அம்மா அம்மாச்சிக்கு தெரிஞ்சிடுச்சு இல்லையா. மறுபடியும் எதுக்கு.. சும்மாவே நான் அம்மா சாயல்ல தான் இருக்கேன். இதுல மேக்கப் போட்டு போனா நானே ஊருக்கு தண்டோரா போட்ட மாதிரி ஆகிடும். அதோட துளசி சித்தி கல்யாணத்துல தேவை இல்லாத குழப்பம் வரும். அவங்க கல்யாணம் நல்ல படியா நடக்கட்டும் முதல்ல” என்று சொல்லி விட, அவளின் பேச்சை ஒப்புக் கொண்டான்.

“ஆனா மேடம் என் கூடவே தான் இருக்கணும்” என்று அவளின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். அப்பொழுது இருந்து இதோ இப்பொழுது வரை அவனுடன் தான் இருக்கிறாள்.

காமாட்சி கூட “பாப்பாவை என்னோட வச்சுக்குறேன் தம்பி” என்று கேட்டு வந்தார். ஆனால் அவன் விடவே இல்லை.

“இல்ல இருக்கட்டும்” என்று தன்னுடனே வைத்துக் கொண்டான். அதற்கு முன்பே ரேவதியும் சேகரனும் வந்து கேட்க,

“அவ என்னோடவே இருக்கட்டும்..” என்று அவளை யாருக்கும் குடுக்கவில்லை.

“ரொம்ப பண்றடா” சேகரன் தான் கடுப்படித்தார்.

“யோவ் போய்யா” என்று விட்டான் கதிரவன்.

“மாமா மாமான்னு வருவல்ல.. அப்ப வச்சுக்குறேன் உன்னை” என்று கடுப்படித்தவர் வேறு வழியில்லாது போய் விட்டார்.

அடுத்து சித்து வர,

“நீ வேணா இவ கூட நின்னுக்க.. அவ்வளவு தான். அவளை தனியா கூட்டிட்டு போற வேலையெல்லாம் வேணாம்” என்று சொல்லி விட,

“சரி மாமா” என்று அவர்களோடு சிறிது நேரம் நின்றவன், பிறகு அவனின் நண்பர்கள் வந்து விட, ஓடி விட்டான்.

துளசியோடு மகாவும் வினுவும் இருந்துக் கொண்டார்கள். கலாவின் பிள்ளைகள் சென்னையில் இருந்து இன்று காலையில் தான் வந்து இறங்கினார்கள். பெரியவன் இனியன், சின்னவள் அகிலா.

இனியன் படித்து முடித்து விட்டு சொஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அகிலா கல்லூரியில் பைனல் இயர் படித்துக் கொண்டு இருக்கிறாள். இருவரும் பெரிதாக வீட்டில் ஒட்டவே மாட்டார்கள். கலா குடும்பத்தோடு ஒட்டினால் தானே அவர்கள் ஒட்ட..

இதோ கல்யாணத்திற்கு வந்தவர்கள் எல்லோரையும் பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு அவர்களின் போனோடு கையோடு அமர்ந்துக் கொண்டார்கள்.

இனியவனை மாற்ற எவ்வளவோ முயன்று விட்டார் கலா. ஆனால் அவன் கொஞ்சமும் மாறவே இல்லை. வேலையை விட்டுட்டு இங்க வந்து நம்ம தொழிலை பாருன்னு சொல்லி பார்த்து விட்டார். ஆனால் அவன் கேட்கவே இல்லை.

அவரின் இரு பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு பக்கம் போனோடு அமர்ந்து விட, இங்கே கதிரவனோ உறவில் உள்ள பெரியவர்கள், முக்கியஸ்த்தர்கள், வியாபார சங்கத்து உறுப்பினர்கள், எம்.எல்ஏ, கவுன்சிலர், காவல்துறை அதிகாரிகள், ஊர் தலைவர், பொது மக்கள் அறிந்தவர் தெரிந்தவர் என எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்று அவரவர்களுக்காக ஒதுக்கி இருந்த இடத்தை பணியாளர்கள் மூலம் காட்டி உபசரித்துக் கொண்டு இருந்தான்.

அதோடு இந்த திருமணத்திற்கு வந்த அத்தனை பேரின் பார்வையும் கதிரவன் மீது தான். அவனின் கம்பீரம், ஆளுமை, நிமிர்வு, உபசரிக்கும் பாங்கு என எல்லாமே கவர்ந்தது. அவனை அங்கு ஒரு மன்னனாக காட்டியது. கூடவே மன்னனின் துணைவியாக நின்ற பனியை ஒரு அரசியாக காட்டி இருந்தான்.

அடிக்கடி அவளின் காதோரம் சரிந்து பேசுவதாகட்டும், அவ்வப்பொழுது பிரெஷ் ஜூஸ் குடுத்து அவளை  கவனிப்பதாகட்டும், என அவன் என்ன வேலையாக இருந்தாலும் அவளை கவனிக்க மறக்கவில்லை. அதோடு வருகிற அத்தனை முக்கியமான ஆட்களுக்கும் அவளை அறிமுகம் செய்து வைப்பதோடு, அவளுக்கும் அவர்கள் யார் என்ன என்று பொறுமையாக சொல்லிக் கொண்டு இருந்தான்.

அவனின் அப்பா தாத்தா சித்தப்பா க்கு கூட அவன் யாரையும் பெரிதாக அறிமுகம் செய்து வைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அதிலே தெரிந்துப் போனது கதிரவனின் வருங்கால துணைவி இவள் தான் என்று. அதை பார்த்த ரேவதிக்கு இணை பொறுத்தம் ஊர் கண்ணே பட்டுப் போயிடும் போலையே புலம்பினார்.

“முதல்ல இவங்க ரெண்டு பேருக்கும் சுத்தி போடணும்” என முணக,

“அப்போ உன் பொண்ணு தான் உன் தம்பி பொண்டாட்டியா?” அவரின் காதோரம் சிரிப்புடன் கேட்ட சேகரனை முறைத்துப் பார்த்தவர், விசிறியாக விட்டு இருந்த புடவை முந்தானையை எடுத்து தன் இடுப்பில் சொருகிக் கொண்டவர்,

“பின்ன வேற யாரையாவது கல்யாணம் பண்ண தான் நான் விடுவனா? என் பொண்ணு குத்து விளக்காட்டம் இருக்க நான் எப்படி வேற பொண்ணை பார்க்க விடுவேன்.. நம்ம பொண்ணு என் வயித்துல இருக்கும் போதே பொண்ணா இருந்தா அது என் தம்பிக்குன்னு நான் முடிவு பண்ணி வச்சு இருந்தேன்..” என்றார்.

“உன் மங்கை அத்தைக்கு என்ன பதில் சொல்ல போற?” நக்கலுடன் கேட்டார்.

“நான் ஏன் பதில் சொல்லணும். என் உரிமை என் தம்பிக்கு நான் தான் பொண்ணு குடுப்பேன். அதை தடுக்க யார் வந்தாலும் நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்” சிலிர்த்துக் கொண்டார்.

Loading spinner

Quote
Topic starter Posted : June 12, 2026 4:01 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top