Notifications
Clear all

அத்தியாயம் 38

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அவ்வளவு தானா?” அவளுக்கே எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல. கதிரவன் இவ்வளவு இலகுவாக தன் முடிவை ஏற்றுக் கொள்வான் என்று.

“வேற என்ன?” என்றான்.

நெஞ்சுக்குள் சுருக்கென்று ஒரு வலி எழுந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், “வேற ஒன்னும் இல்லை” என்றாள்.

“ம்ம்” என்று விட்டு அவன் செல்ல, செல்லும் அவனை வலி நிறைந்த விழிகளோடு பார்த்து நின்றாள். ஏனோ நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது அவளுக்கு.

“போறது தான் போற.. ஒரே ஒரு முறை மட்டும் மாமான்னு கூப்பிட்டுட்டு போ” என்றான் கதவு வரை வந்து தேங்கி நின்றான்.

அவன் அப்படி கேட்கவும் ஏற்கனவே கலங்கி நின்றவளுக்கு விக்கிக் கொண்டு கண்ணீர் வந்து விட,

“என்னை கொல்றதுன்னு முடிவு பண்ணீட்டீங்களா?” ஆதங்கத்துடன் கேட்டாள்.

“நான் கொல்லலடி.. நீ தான் என்னை ஒவ்வொரு நாளும் ப்ளாக் மெயில் பண்ணி கொன்னுட்டு இருக்க” அசராமல் அவள் மீது குற்றம் சுமத்தினான்.

“நான் ப்ளாக் மெயில் பண்றது எதுக்காகன்னு தெரிஞ்சும் இப்படி பேசுறீங்களே.. துளசி சித்தி வாழ்க்கையை நினைச்சு பாருங்க. அவங்களால நிம்மதியா கல்யாண மகிழ்ச்சியை அனுபவிக்க முடியல.. எந்த நாள் என்ன பிரச்சனை வரும்னு பயந்துக்கிட்டே இருக்காங்க ங்க.. அவங்க நிம்மதியா கல்யாண நாட்களை அனுபவிக்க தடையா நான் இருக்கேன்னு நினைக்கும் பொழுது தொண்டை குழியை அடைத்துக் கொண்டு வருது” என்றாள் கண்கள் கலங்க.

“இது உன் தப்பு இல்லன்னு சொல்லிட்டேன்”

“ஆனா என்ன வச்சு தானே வருது. உங்களுக்கு புரியுது. ஆனா ஏத்துக்க மாட்டிக்கிறீங்க”

“சோ..” என்றான்.

“போறனே..”

“ம்ம்.. போறதுக்கு முன்னாடி ஒரே ஒரு முறை அழுத்தமா மாமா சொல்லிட்டு போ.. உன்னை அதுக்கு மேல தொந்தரவு பண்ண மாட்டேன்” என்றான்.

“இதென்ன பிடிவாதம்” என்றவளுக்கு இன்னுமே கண்கள் கலங்கியது.

“மாமான்னு ஒரே ஒரு முறை சொல்ல கூடவா உனக்கு பிடிக்கல”

“பிடிக்காம ஒண்ணும் சொல்ல மறுக்கல.. சில விசயங்கள் ரொம்ப பிடிச்சா கூட சொல்ல முடியாது..” என்றாள்.

“ப்ச்.. இப்ப சொல்ல முடியுமா முடியாதா?” சிடுசிடுத்தான்.

அவனது கோவ முகத்தை பார்த்தவள், “இப்ப என்ன மாமா சொல்லணும் அவ்வளவு தானே.. அப்படி மாமான்னு சொன்னா என்னை முழுசா விட்டுவீங்களா?” ஆத்திரமாக கேட்டாள்.

“நீ முதல்ல சொல்லு.. அப்புறம் மீதியை பார்த்துக்கலாம்” என்றான் அழுத்தமாக..

“மாமா.. மாமா.. இந்த வார்த்தையில அப்படி என்ன தான் இருக்கோ..” கோவத்துடன் லேசாக கத்தியவள், அவனின் அசையாத பார்வையில் மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானப் படுத்திக் கொண்டவள்,

“மாமா” என்றாள் மிக நிதானமாக. அந்த அழைப்பில் தன் மொத்த உயிரையும் குழைத்து அழைத்தாளோ என்னவோ.. ஆனால் அதை கதிரவன் கேட்கும் முன்பே அவளை தனக்கு மிக நெருக்கமாக இழுத்து தன் நெஞ்சோடு மோதி நிறுத்தியவன் அவளின் இதழ்களை மிக மிக மிருதுவாக கவ்விக் கொண்டான் கதிரவன்.

--

கதிரவன் இப்படி தன்னை இழுத்து தன் இதழ்களை கவ்விக் கொள்வான் என்று அறியாத பனி பெரிதினும் பெரிதாக அதிர்ந்துப் போனாள்.

“ஹக்” என்று அவள் விக்கித்து நின்று விட்டாள் சில கணங்கள். இப்படி ஒரு நிகழ்வை அவள் கனவில் கூட எதிர்பார்த்தது இல்லை. அப்படி இருக்கையில் கதிரவன் இப்படி நடந்துக் கொண்டதில் கண்கள் எல்லாம் கலங்கிப் போனது.

கதிரவனை அவளுக்கு பிடிக்கும் தான். ஆனால் இப்படி முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக எல்லாம் அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

தாயின் கூடப்பிறந்தவன் என்கிற எண்ணத்தோடு, தான் எவ்வளவோ கோவப்பட்டு அவனை அவமானப்படுத்தி பேசி துரத்திய போதும் விடாமல் தன்னை தேடி தேடி வந்து பார்த்துக் கொள்ளும் கதிரவனை அவள் எப்படி வெறுப்பாள்.

அவனை வெறுக்க முடியாமல் மறுக்க முடியாமல் தானே இந்த வீட்டுக்கும் வந்தாள். வந்தவளிடம் இவன் இப்படி நடந்துக் கொள்வதை தாங்க முடியாமல் கண்ணீர் வடித்தாள்.

அவளின் இதழ் மென்மையில் கரைந்துக் கொண்டு இருந்தவன் முத்தத்தில் கரிப்பு சுவையை உணர்ந்து அவளை விட்டு விலகி நின்றான்.

சாற்றிய கதவை அழுத்தமாக ஒரு கணம் பார்த்தவன் மீண்டும் அவளை இழுத்து கட்டிக் கொண்டு அழுதுக் கொண்டு இருப்பவளின் முகத்தை பற்றி நிமிர்த்தி, அவளின் முகம் நோக்கி குனிந்து மீண்டும் அவளின் இதழ்களை சிறை செய்துக் கொண்டான்.

அவன் அப்படி மீண்டும் மீண்டும் முத்தமிடுவதில் வெகுண்டு போனவள் அவனை தள்ளி விட முயன்றாள். ஆனால் அவனை கொஞ்சமும் அசைக்க முடியவில்லை.

வலுக்கட்டாயமாக தன் இதழ்களை அவனிடம் இருந்து பிடுங்கிக் கொண்டவள்,

“ஏன் இப்படி பண்றீங்க?” வேதனையுடன் கேட்டாள். அவளின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை தன் விரல்களால் துடைத்து விட்டவன்,

“உனக்கு தான் இந்த வீட்டோட வாரிசா இருக்க இங்க பிடிக்கலன்னு சொன்னியே” என்றான் அவளை தன் கை வளைவுக்குள் வைத்துக் கொண்டு.

“அதுக்காக இப்படி நடந்துக்குவீங்களா?” ஆற்றாமையில் வெடித்தாள்.

“நீ இந்த வீட்டோட வாரிசா இருக்க வேண்டாம்..” என்றான் அழுத்தமாய்.

“புரியல” அவளுக்கு அவன் சொல்ல வருவது ஒன்றுமே புரியவில்லை.

“இந்த வீட்டோட வாரிசா நீ இருக்க தேவை இல்லை. நானும் அதை யார் கிட்டயும் சொல்ல போறதும் இல்லை. நீயும் போறேன் போறேன்னு என்னை வச்சு பிளாக்மெயில் பண்ண வேண்டாம்.. நானும் உன் கிட்ட இருன்னு கெஞ்ச போறதும் இல்ல” என்றான்.

“ரொம்ப சந்தோஷம்” என்றாள் அவ்வளவு கடுப்புடன். இவளும் இதை தானே சொன்னாள். ஆனால் அப்பொழுது எல்லாம் அதை காதிலே போட்டுக் கொள்ளாமல் வீம்பு பிடித்து நின்று விட்டு இப்பொழுது அவனே பெரிய மனது பண்ணி சொல்வது போல சொல்ல கடுப்பு வருமா வரதா? அதனால் முறைத்துக் கொண்டே சொன்னாள்.

“எனக்கு தான் தெரியுமே நீ இந்த முடிவில் ரொம்ப சந்தோசமா இருப்பன்னு” என்றவன், “ஆனா எந்த காலத்துக்கும் நீ இந்த வீட்டை போக முடியாது” என்றான்.

“என்ன? என்ன சொன்னீங்க?” மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்துப் போனாள். அவன் முத்தமிட்ட பொழுது கூட இந்த அளவுக்கு அதிர்ச்சி அடைந்து இருக்க மாட்டாள் போல. அந்த அளவுக்கு அதிர்ந்துப் போனாள்.

“என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல.. இந்த வீட்டு வாரிசுன்னு சொல்லக் கூடாதுன்னு சொன்னேன். ஓகே. ஆனா நான் இந்த வீட்ட விட்டு போகக் கூடாதா? அதெப்படி முடியும். நான் இங்க இருந்து போக தான் போறேன். என்னை தாடுக்க யாராலும் முடியாது” என்றாள்.

“என்னால முடியும்” என்றவன் தன் கைவளைவில் இருந்தவளை இடையோடு இறுக்கிப் பிடித்தவன் அவளின் கண்களை நேருக்கு நேராக பார்த்து பார்வையால் அவளது விழிகளை கவ்விக் கொண்டவன்,

“நான் டிசைட் பண்ணிட்டேன்” என்றான். அவனது பிடியில் இருந்து வெளியே வர முயன்று முடியாமல் சலித்துப் போனவள்,

அவனது பார்வையிலே ஏதோ புரிந்தும் புரியாமலும் ஒரு உணர்வை உணர்ந்துக் கொண்டு, “என்ன டிசைட்?” என்று கேட்டாள். அவளுக்குள் மெல்லிய கலவரம் உண்டாகியது. என்ன சொல்ல போறானோ என்று.

“இந்த வீட்டுக்கு வாரிசா இருக்க வேண்டாம்.. ஆனா இந்த வீட்டோட வாரிசுக்கு ஒரு வாரிசை பெத்து குடு” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

Loading spinner

Quote
Topic starter Posted : May 13, 2026 1:42 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top