இரண்டு மகன்களுக்கும் மருமகனுங்களுக்கு ராசசிங்கன் குடுத்த தண்டனையை பற்றி யாரும் வாய் திறக்கவே இல்லை. வலியை அனுபவித்தவன் அவன். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை செய்து அவனது மணக் காயங்களை ஆற்றிக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டார்கள். அதோடு கண் முன்னே பெற்ற மகன்கள் என்று கூட பார்க்காமல் கொலை செய்ய துணிந்தவர்கள் ஆயிற்றே. அதனால் அவர்களை பற்றி யாரும் பெரிதாக அக்கறை பட்டுக் கொள்ளவில்லை.
அடுத்த நாள் வரை ரயில்வே ட்ராக்கில் நாய் கூட்டத்தோடும் உயிர் போகும் வலியோடும் போராடியவர்களை போனால் போகட்டும் என்று அரசு மருத்துவமனையில் போய் சேர்த்தார்கள் சிங்கனின் ஆட்கள்.
அதன் பிறகும் கூட வீட்டில் இருந்து ஒருவர் கூட அவர்களை வந்து எட்டிப் பார்க்கவில்லை. அரசு மருத்துவமனையில் நாயை விட கேவலமாக அவர்களை ட்ரீட் பண்ண ஒவ்வொரு கணமும் செத்து மடிந்தார்கள் உயிரோடு இருக்கும் பொழுதே.
“அதுங்க எல்லாம் அநாதைங்க.. அதுங்களுக்கு பெட்டு ஒன்னு தான் கேடு” என்று சொல்லி பாத்ரூம் வாசலுக்கு அருகில் உள்ள இடத்தில் அவர்களை போட்டு கடமைக்கு என்று கூட மருத்துவம் பார்க்கவில்லை.
வலியோடு பெருத்த அவமானமும் சேர ஆணவம் அகம்பாவம் என எல்லாமும் அழிந்துப் போனது. அதுவும் மருத்துவமனையில் கொடுத்த உணவை வாங்க கூட தட்டு இல்லாமல் பசியின் கொடுமையில் கையிலே சுட சுடவாங்கி கையும் புண்ணாய் போக மிக கொடுமையாய் இருந்தது அவர்களின் நிலை.
பார்க்கும் பார்வையில் கூட தூசு பதியாமல் பார்த்தவர்களின் நிலை இந்த நிலைக்கு ஆளாகிப் போனதில் கூனிக் குறுகிப் போனார்கள் நால்வரும். இந்த இழி நிலைக்கு பேசாமல் சாவதே மேல் என்று எண்ணி இடுப்பால் நகர்ந்துக் கொண்டே மேலே மொட்டை மாடியை நோக்கி போனவர்கள் அங்கிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளப் பார்க்க,
தூய சீருடை அணிந்த சில ஆட்கள் வந்து நால்வரையும் ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து தூக்கிக் கொண்டு போனார்கள்.
தமிழ் நாட்டிலே மிகவும் பெயர் போன மருத்துவமனை. நன்றாக கவனிப்பு. ஒரு வாரமாய் இருந்த கால் வலி சுத்தமாக இருக்கவில்லை. மேம்படுத்தப் பட்ட மருத்துவம் அவர்களுக்கு பார்க்கப் பட்டது.
பல நாட்கள் அங்கேயே இருந்து இரண்டு கால்களையும் நீக்கி பாதி உடம்பாய் அவர்களின் வீட்டுக்கு ராசசிங்கனால் வரவழைக்கப் பாட்டார்கள்.
வீட்டுக்கு வந்தாலும் யாரும் அவர்களை வந்து பார்க்கவில்லை. வீட்டில் யாரவது இருந்தால் தானே அவர்களை வந்து பார்க்க. அவர்கள் எல்லோரும் தான் சிங்கனின் வீட்டில் இருக்கிறார்களே. இங்கு இவர்கள் நால்வர் மட்டும் தான். அவர்களை கவனித்துக் கொள்ள வேலையாட்கள் சுற்றி இருந்தார்கள்.
எவ்வளவு தனிமை படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவர்களை எல்லோரும் சேர்ந்து தனிமை படுத்தி விட்டார்கள்.
உங்களுக்கு காசு பணம் கெளரவம் தானே முக்கியம், நாங்களோ இல்ல குடும்பமோ எதுவுமே பெருசு இல்லல்ல. அப்போ எங்களுக்கும் நீங்க வேணாம். உங்களை சுற்றி காசு நிறைய இருக்கு. அதையே உறவும் உயிருமா வச்சுக்கோங்க என்று சொல்லி விட்டு வந்து விட்டார்கள்.
அப்பொழுது தான் சுந்தரம், கண்ணன், மகேஸ்வரன், திருமகன் நால்வரும் உறவுகளின் உன்னதத்தை உணர்ந்தார்கள். இப்பொழுது உணர்ந்து என்ன பயன். எல்லாமே கை நழுவி போய் விட்டதே... கண் கெட்ட பிறகு கதிரவனை கும்பிட்டு என்ன ஆகப் போகிறது.
வெகு விமர்சையாக ஏந்திழையாளின் வளைகாப்பு விழா நடைபெற்றது... எப்பொழுதும் போல எல்லா ஏற்பாடும் ராசசிங்கனே பார்க்க,
யுகேஷும் கார்த்தியும் அவனை தடுத்து விட்டு தாங்களே முன் நின்று எல்லா ஏற்பாடும் செய்தார்கள். அவர்களுக்கு துணையாக வருண், பிரகாஷ், நடாஷ், சுரேஷ், சபேஷ் எல்லோரும் கைக் கொடுக்க எவ்வளவு அமரக்களப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அமர்க்களப் படுத்தி விட்டார்கள். ஏந்திழையாளின் கல்யாணத்தில் எதை எல்லாம் செய்ய நினைத்து மிஸ் பண்ணினார்களோ அதை அத்தனையும் இந்த வளைகாப்பில் நிறைவேற்றிக் கொண்டார்கள்.
வருணின் காதலி எலிசாவும் வந்து விட்டாள். யுகேஷின் மனைவி ஷெண்பாவும் ஈன்றெடுத்த ஒரு மாத குழந்தையோடு வந்து விட்டாள்.
அத்தை மகள்களான கிருத்தி, நிவேதாவோடு பெரியப்பா மகள் நட்சத்திராவும், அவளின் அண்ணன் கார்த்தியின் இரு வயது மகளும் கலகலவென்று வளைய வர எல்லோருக்கும் மனம் நிறைந்துப் போனது.
திருமண சேலையில், புதிதாய் வாங்கிய நகைகளுடன், வயிறு பெரிதாக அதை சிறிய ஒட்டியாணத்தில் அலங்கரித்து அலங்கார பூங்கொத்தாய் கிளம்பினாள் ஏந்திழையாள்.
அவளை பார்த்து பார்த்து சிறிதும் நோகாமல் அலங்காரம் செய்ய பியூட்டிஷியனை ஏற்பாடு செய்து இருந்தான் சிங்கன். அவர்களது கை வண்ணத்தில் மிதமான அலங்காரத்தில் தேவதை போல மின்னினாள் இழையாள்.
தாய்மையின் பூரிப்பும் வீட்டு ஆட்களின் கவனிப்பும் குறிப்பாக கணவனின் அருகாமையும், குறையாத காதலும், அளவுக்கு அதிகமான நேசமும் அவளுக்கு நிறைவாக கிடைக்க அதுவே அவளை இன்னும் அதிகமாக அழகாக்கியது.
பூதேராய் அசைந்து வந்தவளை கைப்பிடித்து அழைத்துக் கொண்டு வந்து இருக்கையில் அமரவைத்தார்கள் தாய்மார்களும் அத்தைமார்களும். ராசசிங்கன் எல்லாவற்றையும் ஓரமாய் தோரணையாக அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஏந்திழையாளின் திருமணத்தில் ஒதுங்கி இருந்த குடும்பம் இப்பொழுது அப்படி இல்லாமல் விழுந்து விழுந்து வேலை செய்தார்கள். வேலை செய்ய அவசியம் இல்லை தான். சொடுக்கு போட்டாலே வேலை செய்ய ஆயிரம் பேர் இருந்தாலும் ஏந்திழையாளுக்கும் ராசசிங்கனுக்கும் தாங்களே முன்னின்று எல்லாவற்றையும் செய்தார்கள்.
ராசசிங்கனை கைப்பிடித்து அழைத்து வந்து தங்கையின் அருகில் அமரவைத்தார்கள் யுகேஷும் கார்த்தியும்.
கம்பீரம் சிறிதும் குறையாமல் தன் தோரணையும் விலகாமல் மிக நேர்த்தியாக வணங்கா முடியாக வந்து அவளின் அருகில் வந்து அமர்ந்தான் ராசசிங்கன்.
தன்னை நோக்கி நடந்து வந்த தன் கணவனின் தோரனையை விழியகலாது பார்த்து தனக்குள் அவனை சுருட்டிக் கொண்டாள் ஏந்திழையாள். அவளின் பார்வையை கண்டு,
“என்னடி?” என்று புருவம் உயற்றி கேட்டான்.
“இல்ல ரொம்ப தான் மாப்பிள்ளை முறுக்கு காண்பிக்கிற மாதிரி இருக்கு அது தான் என்னன்னு பார்க்கிறேன்” என்றாள்.
“வாய் இப்போ எல்லாம் ரொம்ப தான் நீளுது.. இன்னைக்கு நைட்டு வா உடைச்சி விடுறேன்” என்றான்.
அவள் முறைத்துப் பார்க்க,
“ராசசிங்கன்டி எதுக்கு அசைய மாட்டேன் ” என்றான்.
“இந்த ராசசிங்கனை மொத்தமா சுருட்டி என் நெஞ்சுக்குள்ள பதுக்கி வச்சு ரொம்ப நாள் ஆச்சு மிஸ்டர். சோ இந்த அகம்பாவ பேச்செல்லாம் இங்க வேணாம்” என்றாள் இழையாள்.
“அப்படியா?” என்று கேட்டவன்,
“எங்க நான் இருக்கிற உன் நெஞ்சை காட்டு” என்றான் எகத்தாளமாய்.
அவள் முறைத்தாள்.
“இன்னைக்கு இரவு காட்டுற... இல்லன்னா நீ தொலைஞ்ச” என்று மிரட்டியவனின் கன்னத்தில் ஜில்லென்று சந்தனம் தடவப் பட நிமிர்ந்துப் பார்த்தான்.
பாக்கியம் தான் அவனது கன்னத்தில் வைத்தார். அதன் பிறகு எல்லோரும் வந்து ஏந்திழையாளுக்கு தங்கம், வைரம், வைடூரியம், மரகதம், நவரத்தினம் மற்றும் கண்ணாடி என பலதரப்பட்ட வளையல்களை போட்டுவிட்டு இருவரையும் வாழ்த்தி விட்டு நகர்ந்தார்கள்.
எல்லோரும் எல்லா கிப்ட்டும் ஏந்திழையாளுக்கு கொடுக்க ராசசிங்கன் என்ன கொடுப்பான் என்று எல்லோருமே பெரிய எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க அவனோ அதை உணராதவனாய் வந்த விஐபிகளை கவனிக்க சொல்லி கதிரிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.
கதிருக்கு கூட அவன் என்ன பரிசு அண்ணிக்கு கொடுப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான். ஆனால் எல்லோரையும் புஸாக்கி விட்டான் ராசசிங்கன்.
ஏந்திழையாளுக்கு தான் அவனை பற்றி தெரியுமே. அதனால் பெரிதாக அவனது பரிசுக்காக காத்திருக்கவில்லை. அவள் அவளாகவே இருந்தாள்.





