“அப்போ கோபால் அத்தைங்கக்கிட்ட யார் பேசுனது. அவங்க போன்ல உங்க நம்பர் எப்படி வந்தது? உங்க கால் ஹிஸ்டரியை செக் பண்ணலாமா? அப்போ தெரியுமே இந்த கல்யாணத்தை யார் நிப்பாட்டா பார்த்தாங்கன்னு..” என்றவனின் சரமாரியான கேள்வியில் வெலவெலத்துப் போனார் மங்கை.
“ஆமாம் நான் தான் செஞ்சேன்..” என்றார் திடமாக. தனக்குள் இருந்த பயத்தை மறைத்துக் கொண்டு .
கதிரவன் ஏன்னு எதிர் கேள்வி கேட்கவில்லை. மௌனமாக அவரையே பார்த்து இருந்தான்.
“ஆமா நான் தான் செஞ்சேன். இனிமேலும் செய்வேன்..” என்று ஆத்திரமாக சொன்னவர்,
“என் மகளை இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கிக்கிட்டா நான் துளசி கல்யாணத்துல எந்த தடங்களும் செய்ய மாட்டேன். ஆனா என் மகளை அண்ணி மருமகளா ஆக்கிக்காம போனா இதை விட அதிகமான தடங்களை ஏற்படுத்துவேன்..” என்றவரின் பேச்சை கேட்டு காமாட்சி ஆடிப்போனார்.
வாயில் முந்தானையை வைத்து பொத்திக் கொண்டார். அழுகை விம்மிக் கொண்டு வந்தது அவருக்கு.
துளசிக்கு மேனி மொத்தமும் நடுங்கிப் போனது. கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று கொட்ட, அதை துடைக்க இல்லாமல் வெறித்துப் பார்த்தாள் மங்கையை.
“அப்படியா? இந்த கதிரவன் கிட்டயே சவாலா? சரி ஓகே.. இனி நீங்களா நானான்னு பார்த்திடுறேன். எந்த காலமும் உங்க மக இந்த வீட்டுக்கு ஐ மீன் என் அம்மாவுக்கு மருமகளா வர மாட்டா.. வர நான் விட மாட்டேன். ஓப்பன் சேலஞ்... உங்களால என்ன செய்ய முடியுமோ செய்துக்கோங்க.. என் தங்கச்சி கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கும். நான் நடத்தி வைப்பேன்” உறுதியாக சொன்னவன், மங்கையை உருத்துப் பார்த்தான். அவனது பார்வையில் கிலி பிடித்தது அவருக்கு.
“இப்படி சொன்னா எப்படி மாப்பிள்ளை.. என் பொண்டாட்டிக்கு துணையா நான் இருக்கேன். அதனால இந்த சாவல்ல என் பொண்டாட்டி தான் செயிப்பா” என்ற சிங்காரத்தை பார்த்து ஏளனமாக சிரித்த கதிரவன் எதுவும் பேசவில்லை.
ஆனால் காமாட்சி தான் மங்கை சிங்காரம் இருவரையும் பார்த்து கை எடுத்து குடும்பிட்டு,
“என் பொண்ணு வாழ்க்கையை நீங்களே அழிச்சுடாதீங்க.. உங்களுக்கு கோடி புண்ணியமா போக்கு..” என்றவரின் கெஞ்சல்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் போனது.
ஆனால் விசாலம் மங்கையின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.
“போதும் நிறுத்துடி.. விட்டா ரொம்ப தான் பேசுற.. வயசு பொண்ணு கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொல்றியே.. உனக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்ல.. மனசாட்சியோட நடந்துக்கடி.. நீயும் ஒரு பொண்ணு வச்சு இருக்கன்னு மறந்திடாத.. இன்னைக்கு காமாட்சி என்ன வேதனை படுறாளோ, என்ன நிலையில நிக்கிறாளோ அதே வேதனை நீயும் படுவ.. அதே நிலையில நீயும் நிற்ப. அது நடக்க ரொம்ப நாள் ஆகாது.. நீ ஆடுற ஆட்டத்துக்கு நீ இன்னும் படுவ. இதுக்கு மேலையும் படுவ..” என்ற தாயின் சாபத்தில் மங்கை ஆடிப்போனார்.
துளசியின் கல்யாணம் மறைந்து தன் மகளின் திருமணம் கண்னுக்கு முன் வர, நெஞ்சை பிடித்துக் கொண்டார் மங்கை.
கதிரவன் எல்லாவற்றையும் மௌனமாக பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர வாயை திறக்கவே இல்லை. அவனுக்குள் ஒரு எரிமலை அடங்கா வேகத்தோடு சீறிக் கொண்டு இருந்தது.
அதை வெளியே கக்கினால் உறவு முறை உடைந்து சிதறி விடும் என்ற ஒரே காரணத்துக்காக அடக்கி விட்டான். அதும் தங்கையின் கல்யாணம் என்ற ஒரே காரணத்துக்காக.
இல்லை என்றால் எல்லாம் அவன் அடங்கி போகும் குணம் கொண்டவன் கிடையாது.
தலைக்கு மேல் வெள்ளம் போவது போல இருந்தது பனிக்கு. மூச்சு விடவே அவ்வளவு சிரமமாக இருந்தது. எல்லாம் என்னால வந்தது..
இந்த ஆள் பேச்சை கேட்டு வந்ததுக்கு இன்னும் என்னத்தை எல்லாம் அனுபவிக்க போறனோ தெரியல.
விசாலம் பேச பேச மங்கை கூனி குறுகிப் போனார். சிங்காரம் வேறு மாமியாரிடம் பேசப் போக, பொன்னனும் தேவனும் சிங்காரத்தை நெருங்க, அது இன்னும் விபரீதத்தில் போய் முடியுமோ என்று பயந்து,
பனி, “மிஸ்டர் கதிரவன்” என்று விட்டாள் வீட்டு ஆட்கள் அத்தனை பேரின் முன்பும்..
“ஹாங்...” என்று தலையில் இடி விழுந்தது போல அதிர்ந்துப் போய் அவளை பார்த்தார்கள்.
மங்கை கூட தன் கோவத்தில் இருந்து வெளியே வந்து அதிர்ந்துப் பார்த்தார்.
சிங்காரத்துக்கு அத்தனை கோவம் வந்தது அவர் வீட்டு மருமகனை யாரோ ஒரு பெண் அவ்வளவு எளிதாக உரிமை கொண்டாடுவதை பார்த்து.
கதிரவன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அவள் புறம் திரும்பி,
“என்ன பனி?” என்று கேட்டான்.
அவன் கேபார்த்த பார்வையை கண்டு ட்ட பிறகு தான் வீட்டு ஆட்களின் மத்தியில் அவனது பெயரை சொல்லி அழைத்ததே அவளுக்கு புரிந்தது. அதுவும் வீட்டு ஆட்கள் அனைவரும் அவளை பார்த்த பார்வை கண்டு பெரிய தவறு செய்து விட்டேனோ என்று பயந்துப் போனாள்.
ஆனால் கதிரவன் அதை சட்டை செய்யாமல்,
“என்னன்னு கேட்டேன்?” வார்த்தையில் அழுத்தத்தை கூட்டி அவளை தன் பக்கம் திசை திருப்பினான்.
“அது..” என்று அவள் தடுமாற, துளசியோ அவளின் கரத்தில் இருந்து தன் கரத்தை எடுத்துக் கொண்டு மிரட்சியுடன் பனியை பார்த்தாள். பிறகு தன் அண்ணனை பெயர் சொல்லி அழைத்து விட்டு இருக்கிறாளே.. இன்று வரை அய்யா என்ற சொல்லுக்கு எதிர் சொல் சொல்லி அழைத்து இருக்கவில்லை.
ரேவதியும் சேகரனும் தான் அவனை பெயர் சொல்லி அழைப்பார்கள். அதுவும் சேகரன் அழைப்பதை கண்டு தான் மங்கை கூட மாற்றிக் கொண்டார்.
இளைய தலைமுறை எல்லோருக்கும் அவன் அண்ணன் மாமா தான். யாரும் அவனின் பெயரை சொல்லி அழைத்ததே இல்லை. ஆனால் இன்றைக்கு வந்த இந்த பொண்ணு அனாயசம பெயரை சொல்லி அழைக்கவும் பக்கென்று இருந்தது.
“உன்னை என்னன்னு கேட்டேன்?” என்றான்.
“அது கொஞ்சம் பேசணும்” என்று தயங்கினாள். அவளின் பார்வை ஒவ்வொருவரிடமும் சென்று மீண்டும் வந்து மிரட்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தது.
அதுவும் மங்கை அவளை உருத்து விழித்துப் பார்க்க பனிக்கு பேஸ்மென்ட் நடுங்க ஆரம்பித்து விட்டது. அதை பார்த்த கதிரவனுக்கு இதழ்களுக்குள் புன்னகை எழுந்தது.
“பாடி சோடா...” என்றான் தனக்குள்.
“ம்ஹும் இவ பாடி சோடா இல்ல.. கேடி சோடா..” மீண்டும் தனக்குள் சொல்லி கொண்டவன் அழுத்தமாக அவளை பார்த்தான் கதிரவன்.





