அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவளுக்கு எங்கு போவது என்றே தெரியவில்லை. தன் வீட்டுக்கு போகலாம் தான் ஆனால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அங்கு போவது.
எல்லோரையும் எதிர்த்து அல்லவா இவள் ராசசிங்கனை திருமணம் செய்துக் கொண்டாள். இப்பொழுது அவனை விட்டு பிரியவும் உடனே தாய் வீட்டில் ஒட்டிக் கொள்ள முடியாமல் அவளது சுயநலம் இல்லாத மனம் அதை மறுத்து ஒதுக்கியது.
சொத்துக்காகவும் காமத்துக்காகவும் மட்டுமே தன்னை ராசசிங்கன் பயன் படுத்திக் கொண்டான் என்கிற உண்மை முகத்தில் அறைய கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது.
ஆனால் இருக்கும் சூழ்நிலையில் எங்கிருந்து அழ... நட்ட நடு தெருவில் கண்களில் கண்ணீரோடு நின்றால் அடுத்த நிமிடமே ப்ளாஷ் நியூசில் அவளது அழுத முகம் வந்து விடுமே. அதனால் இரு குடும்பத்து மானமும் அல்லவா சந்தி சிரிக்கும். பிறகு எங்கிருந்து அழ...
வந்த அழுகையை அடக்கிக் கொண்டு நிறுவனத்தின் வாசலை நோக்கி நடந்தாள் ஏந்திழையாள்.
“எனக்கு இனி நீ மட்டும் தான் தங்கம்... அம்மாவை நீ பத்திரமா பார்த்துக்குவ தானே..” என்று வயிற்றில் கையை வைத்து பிள்ளையோடு பேச,
“ஆமா அவன் இப்பவே வெளிய வந்து குதிச்சு நாளைக்கே வளர்ந்து உன்னை கண்ணு கலங்காம வச்சு காப்பாத்துவான். நீ ஹாயா காலை ஆட்டிக்கிட்டு தின்னு” என்று ராசசிங்கனின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் அவனை முறைத்தாள்.
“என்னடி முறைப்பு எல்லாம் பலமா இருக்கு...? என்ன பயம் விட்டு போச்சா?” என்று அவன் கேட்டான்.
“இங்க பாருங்க உங்களுக்கும் எனக்கும் எந்த பேச்சு வழக்கும் கிடையாது. அது தான் சொத்தை எல்லாம் எழுதி குடுத்துட்டேன் ல்ல... அப்புறம் என்ன? இனி நீங்க யாரோ நான் யாரோ..” என்று சொன்னவளை கூர்ந்து பார்த்தவன்,
“அப்போ நீ முடிவு பண்ணிட்ட இல்லையா?” என்று கேட்டான்.
“ஆமாம் ஒரு நெத்தி முத்தம் குடுக்காத நீங்க எனக்கு தேவை இல்லை... நான் என் அண்ணனை வர சொல்லி சொல்லி இருக்கேன். அவனோட போகப் போறேன்” என்று அவள் சொன்ன அடுத்த நொடி அவளுக்கு அருகில் ஒரு கார் சீறி பாய்ந்துக் கொண்டு வந்தது.
அதை எதிர் பார்க்காதவள் வேகமாய் ராசசிங்கனின் கையை பற்றிக் கொண்டாள்.
“அது உங்க அண்ணன் கார் தான்டி” என்றான் இரகசியமாய்.
“ஏன் அதுக்காக உங்க பக்கத்துல வந்து கூட நிற்க கூடாதா?” என்று அவனை முறைத்தவள் வேகமாய் அவனை விட்டு தள்ளி நின்றுக் கொண்டாள்.
அவன் எதற்கும் அலட்டிக் கொள்ளவே இல்லை.
“அது தானே... நான் தான் எல்லாத்துக்கும் கிடந்து தவிக்கணும். நீங்க அப்படியே பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரியே இருங்க... உங்க மனசுல கொஞ்சம் கூட பாசமே இல்லை. பொண்டாட்டின்ற எண்ணம் இருந்தா தானே என் மேல பாசமோ அன்போ வர்றதுக்கு... உங்களுக்கு யாருமே வேணாம். நான் வேணாம் என் பிள்ளை வேணாம்... நீங்க கடைசி வரை தனியாவே இருங்க” என்று கண்கள் கலங்க சொன்னவள் காரை விட்டு இறங்கிய தன் தமையனை பார்த்தாள்.
இவ்வளவு நாள் தூரத்தில் இருந்து பார்த்தது இருந்தாலும் இவ்வளவு அருகில் இப்பொழுது தான் பார்க்கிறாள். பார்த்த உடனே மனதுக்குள் அப்படி ஒரு நிம்மதி.. யுகேஷை தொடர்ந்து கார்த்தியும், வருணும் இறங்கினார்கள்.
மூவரையும் பார்த்தவளுக்கு புன்னகை வந்தது. அதைவிட விழிகளில் பயம் சூழ தன் கணவனை பயத்துடன் பார்த்தாள்.
அவளது கண்களில் தெரிந்த பயத்தை கண்ட தமையன்மார்கள்,
“பாப்பா” என்று இரு கை நீட்டி அழைத்தார்கள்.
“ம்ஹும்” என்று அவள் தலையை ஆட்ட, அதில் மூவருக்கும் ராசசிங்கனின் மீது அவ்வளவு கடுப்பு வந்தது.
“என்னவோ உங்க அண்ணனுங்களை வர சொல்லிட்டேன். அவங்களோட போக போறேன்னு சொன்ன... என்னடி போகலையா?” நக்கலுடன் அவளுக்கு மட்டும் கேட்குமாறு கேட்டான் சிங்கன்.
“அய்யோ நான் எங்க அவங்க கிட்ட பேசினேன். உங்க பேச்சை மீறி நான் யார் கிட்டயும் பேசலைங்க. அவங்களா தான் வந்து இருக்காங்க. ப்ளீஸ்... அவங்களை எதுவும் செய்திடாதீங்க” என்று அவனிடம் கெஞ்சினாள்.
“அப்போ நீ சொல்லி அவங்க வரலையா?” என்று கேட்டான். அவனுக்கு ஏந்திழையாளை பற்றி நன்கு தெரியும் அவனை தாண்டி அவள் எதுவும் செய்ய மாட்டாள் என்று. ஆனால் சரிக்கு சரியாக தன்னிடம் நிற்கும் அவளை வம்பிளுக்கவே கேட்டான்.
சொத்து கை மாறுனது... இவள் கையெழுத்து போட்டு கொடுத்தது எல்லாமே ஏந்திழையாளின் பியேவாள் தான். இதோ இப்பொழுது அவளின் அண்ணனுக்கு தகவல் தந்து வர சொல்லி இருப்பதும் அவள் தான்.
ராசசிங்கன் அந்த பெண்ணை வேலைக்கு வைத்து இருந்தாலும் அவள் விசுவாசமாக இருந்தது என்னவோ வேல் குடும்பத்துக்கு தான்.
“இல்லவே இல்லங்க” என்றாள் பரிதாபமாய்.
“சரி நம்பிட்டேன்” என்றவன்,
“என்ன காத்து இந்த பக்கம் அடிக்கிது” என்று இழையின் அண்ணன்கள் மூவரையும் பார்த்து கேட்டான்.
“அது தான் சேர்ஷ் எல்லாம் குடுத்தாச்சே... இதுக்கு தானே எங்க தங்கச்சியை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துக்கிட்ட... உனக்கு நீ எதிர் பார்த்தபடி சேர்ஷ் குடுத்தாச்சு. சோ இனி என் தங்கை உனக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் ஒரு மணி நேரத்துல டைவர்ஸ் பேப்பர் கைக்கு வரும் கையெழுத்து போட்டு குடுத்து விடு” என்று சொன்ன கார்த்திக்கை அதிர்ந்து பார்த்தாள் ஏந்திழையாள்.
“அண்ணா” என்று அவள் அதிர,
“போதும் பாப்பா இதுக்கு மேல நீ இவன் கூட இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. இனி அவன் எதையும் வச்சு மிரட்ட முடியாது... அப்படியே மிரட்டினாலும் அவன் குடுமி இப்போ நம்ம கையில. நீ எதுக்கும் கவலை படாத... வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று அவளை அழைத்தனர் மூவரும்.
“இல்லண்ணா அது” என்று அவள் தடுமாற,
“அது தான் சொல்லிட்டாங்களே... இனி உனக்கு என்னால எந்த தொந்தரவும் இருக்காது.. நீ உன் விருப்பம் போல இருக்கலாம். எனக்கு நான் கேட்ட எல்லாமே கிடைச்சிடுச்சு... சோ நீ என்னை விட்டு போயிடு” என்று அவளின் தலையில் பெரிய இடியை சத்தமில்லாமல் போட்டு விட்டு அடுத்த ஒரு நொடி கூட அவ்விடம் தேங்காமல் தன் அலுவலகத்துக்குள் போய்விட்டான்.
ராசசிங்கன் இப்படி தன்னை விட்டு செல்வான் என்று கொஞ்சமும் எதிர் பார்க்காதவள் வேர் வரை ஆடிப் போனாள். முன்பு அவனிடம் சொன்னது எல்லாம் சும்மா தான். ஆனால் ராசசிங்கன் இப்படி தன்னை அம்போ என்று வயிற்று பிள்ளையுடன் போக சொல்லுவான் என்று கனவு கூட காணவில்லை.





