“அதை அப்புறம் பார்த்துக்கலாம் மாமா.. முதல்ல துளசி கல்யாணம் நல்லபடியா முடியட்டும். பிறகு பொறுமையா ஆரம்பிக்கலாம்” என்று சொன்னவன், மீதம் இருந்தவர்களையும் பேருந்தில் ஏற்றி கிளப்பியவன் தன்னோடு பனியை மட்டும் வைத்துக் கொண்டான்.
அதிலே பலருக்கு காதில் புகை வந்தது. ஆனால் அவனை எதிர்த்து யார் கேள்வி கேட்டபது. மாதவனையும் பேக் பண்ணி பேருந்திலே அனுப்பி வைத்து விட்டான்.
இந்த முறை இவர்கள் இருவரும் மட்டும் தான். அவனை அறிந்த பிறகு, இருவரின் மனமும் ஒன்றான பிறகு அவனோடு தனிமையான நீண்ட பயணம்.. உள்ளுக்குள் ஒரு விதமான மகிழ்ச்சியின் வெள்ளம் புரண்டுக் கொண்டு இருந்தது.
கியர் மேல் படிந்து இருந்த அவனது திடமான கையின் அழகில் பனியின் பார்வை படிந்து இருந்தது. சில்வர் நிற பட்டையான வாட்ச் அவனது கைக்கு மிக பொருந்தி போய் இருந்தது. ஒரு தங்க மோதிரமும் அணிந்து இருந்தான். முழு கை சட்டை. ஆனால் அதை முட்டி வரை மடித்து விட்டு இருந்தான்.
அது கூட இன்னும் அழகாக இருந்தது அவனுக்கு. ஒரு வித கம்பீரமாகவும் இருந்தது. மெல்ல மெல்ல அவளின் விழிகள் கையில் இருந்து அவனது முகத்துக்கு நகர்ந்தது.. இரண்டு நாள் தாடி அவனுக்கு ஒரு மேன்லி லுக்கை கொடுத்தது. கற்றை மீசை அவனது கம்பீரத்துக்கு கம்பீரத்தை சேர்த்தது..
பெண்ணவளின் பார்வை தன்னிடம் இருப்பதில் சின்னதாய் புன்னகை மலர்ந்தது கதிரவனுக்கு. அவனின் பார்வை திருட்டு தனமாய் அவள் மீது காலையில் இருந்து படிந்துக் கொண்டு தான் இருந்தது.
அவன் எடுத்து குடுத்த புடவையில், நீண்ட பின்னலை முன்னுக்கு போட்டு தலையில் நான்கு சரம் மல்லிகை பூக்களை சூடி இருந்தாள். அவன் வாங்கி தந்த நகைகளில் அவளின் அழகு இன்னும் மெருகேறி இருந்தது.
எங்கே அவளின் அழகில் தன் கட்டுப்பாட்டை மீறி விடுவமோ என்று பயந்து தான் மாதவனை காருக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு வந்தான்.
எனவே போகும் பொழுது அவளின் அழகு சற்றே குறைந்து இருக்கும். தானும் தன் கட்டுப்பாட்டில் இருந்து விடலாம் என்று எண்ணி அவனை பேருந்தில் ஏற்றி விட்டான்.
ஆனால் பெண்ணவளின் அழகு காலையில் இருந்ததை விட இப்பொழுது பல மடங்கு கூடிப் போய் இருந்தது போல இருந்தது.
லேசாய் கலைந்த தலைமுடி, அவளிடம் இருந்து வரும் மெல்லிய வியர்வை வாசம், புடவை சற்றே நலுங்கி அவனுக்கு மயக்கத்தை கொடுத்தது.. போட்டு இருந்த லிப்ஸ்டிக் கரைந்து அவளின் உண்மையான உதட்டின் நிறம் தெரிய, கூடவே அவளின் வடிவான இதழ்கள் அவனை இன்னும் கிளர்ச்சி ஊட்டியது.
காந்தமாய் அவளின் உதடுகள் அவனை ஈர்த்துக் கொண்டு இருந்தன.. இது போதாது என்று இரசனையாக அவளின் பார்வை அவன் மீது தொட்டு தொட்டு செல்ல, முற்றிலும் நிதானம் இழந்துப் போனான் கதிரவன்.
--
பனியின் பார்வை மெல்ல மெல்ல கதிரவனின் மீது படர்ந்து ஒரு கட்டத்துக்கு மேல் இன்னும் ஆழமாக அவன் மீது பார்வையை பதிக்க, அவளின் பார்வையின் வீரியம் அவனை முற்றும் முழுதுமாக செயல் இழக்க வைத்தது. காதலியின் பார்வையில் உள்ளம் செந்தணலாய் கொதிக்க ஆரம்பித்தது. அதுவும் அவளின் இதழ்களை ஸ்பரிசித்த பிறகு அந்த அவனின் பித்தம் இன்னும் அதிகமாகியது.
சும்மாவே அவள் மீது மையல் கொண்டு இருப்பவன், இப்பொழுது அவளே அவனை பார்த்தால் அவனது உணர்வுகள் கட்டுக்குள் அடங்கி இருக்குமா என்ன? கட்டுகளை அறுத்து எரிந்து இருந்தது அவளது பார்வை.
ஆண்மையின் முழு உருவத்துடன் இருந்தவனின் மீது பார்வையை நிலைக்க விட்டவளுக்கு அவன் தனக்காக எத்தனை நாட்கள் ஹாஸ்டல் முன்பு தூங்காமல் காத்து இருந்தான் என்று நினைவு வர அவளின் பார்வை தீவிரமாக அவன் மீது படிந்தது.
அப்படி என்ன யாருக்கும் இல்லாத அக்கறை என் மீது இவருக்கு. பெத்தவங்க கூட என்னை தேடி வராத பொழுது இவருக்கு மட்டும் ஏன் நான் முக்கியமா பட்டேன்.. அவளுள் எப்பொழுதும் எழும் கேள்வி இந்த நொடியும் எழுந்தது. அதனாலே அவன் மீது இன்னும் பார்வை அதிக தீவிரத்துடன் படிந்தது.
அவளின் பார்வையில் தன் சிந்தனையை சிதற விட்டவன், பட்டென்று அவளின் இடுப்பில் கையை கொடுத்து தன் அருகில் இழுத்துக் கொண்டான்.
அதை எதிர் பாராதவள், “ஹேய் என்ன பண்றீங்க?” பதறிப்போனாள்.
“என்ன பண்றேன்?” என்று பதிலுக்கு அவனும் அதே கேள்வியை கேட்டவன், தன்னை கொஞ்சமும் அடக்க முடியாமல் அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.
“ஐயோ கார் ஓட்டும் போது இதென்ன இப்படி பண்றீங்க?” மிரண்டுப் போனாள். ஹைவேஸில் கார் ஓடிக் கொண்டு இருக்க, இந்தே நேரம் பார்த்து இப்படி இவன் செய்ய பெண்ணவள் மிகவும் பதறிப் போனாள்.
தன் கழுத்தில் புதைந்து இருந்தவனை விலக்கப் பார்த்து முடியாமல் போக,
“ஐயோ.. ப்ளீஸ்.. இப்படி பண்ணாதீங்க மாமா.. எனக்கு பயமா இருக்கு.. ஒன்னு காரை நிறுத்துங்க, இல்லன்னா என்னை விடுங்க.. இதென்ன ஒரே நேரத்துல ரெண்டு வேலை” அவள் வாயை விட, சட்டென்று அவள் மீது இருந்த எழுந்துக் கொண்டான் கதிரவன்.
அதில் அவளுக்கு பக்கென்று போய் விட்டது.
“கோவிச்சுக்கிட்டாரோ..” புலம்பினாள். முன்பை விட காரை அதி வேகத்துடன் ஒட்டியவனின் செயலில் அவளின் புலம்பல் இன்னும் அதிகம் ஆகியது.
“போச்சு உண்மையாவே கோவிச்சுக்கிட்டாரு..” முணுமுணுத்துக் கொண்டாள்.
அதற்கு மேல் அவனை பார்க்க முடியாமல் குறுங்கண் ஓரமாக திரும்பிக் கொண்டவளுக்கு ஏனோ கண்கள் கலங்கியது.
“நான் என்ன சொன்னேன்.. கார் ஓட்டிக்கிட்டு இருக்கும் பொழுது.. இதெல்லாம் வேணா...” மனதுக்குள் நினைத்து முடிப்பதற்கு முன்பே அவளை புயலாய் சுழற்றி இழுத்து தன் மீது போட்டுக் கொண்டான் கதிரவன்.
“ஹாங்” என்று அவள் அதிர, அந்த அதிர்ச்சியை கூட முழுமையாக முடிக்கும் முன்பே அவளின் இதழ்களை தன் இதழ்களுக்குள் அடக்கிக் கொண்டான்.
பனியின் கீழ் இதழ் மொத்தமும் கதிரவனின் பற்களுக்கு இடையில் சிக்கி சின்னாப்பின்னமாகியது. அத்தனை வன்மை அவனிடம். மென்மையான இதழ் முத்தம் எல்லாம் எங்கோ மலை ஏறிவிட்டது போல அத்தனை முரட்டு தனம் காட்டினான் இதழ் முத்தத்தில்.
பெண்ணவளின் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் அகலமாக விரிந்துக் கொண்டன.. மூச்சு அடைத்துக் கொண்டது. கிடைத்த சிறு இடைவெளியை கூட விடாமல் தனக்குள் அவளை இழுத்துக் கொண்டான்.
“ஐயோ கார்” என்று அவள் பதற, லேசாக அவளை விட்டு விலகியவன்,
“காரை சேபா பார்க் பண்ணிட்டேன்.. நீ மாமனை கவனி” என்றவன் தன் மீது மொத்தமாக அவளை அள்ளி போட்டுக் கொண்டான்.
“நடு ரோட்டுயலையா?” திகைத்துப் போனாள்.
“ஆள் ஆராவரம் இல்லாத பக்கவாட்டு ரோட்டுல தான்டி நிப்பாட்டி இருக்கேன்” என்றவனின் குரலில் இருந்த காண்டை கண்டு லேசாக சிரிப்பு வந்தது அவளுக்கு.
அவளின் சிரிப்பை கண்டு முறைத்தவன்,
“காலையில இருந்து என்னை பைத்தியமாக்கிட்டு இருக்கடி.. என்னால வேற எதையுமே யோசிக்க விடாம ரொம்ப சுண்டி இழுக்குற” என்றவன் மீண்டும் அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.





