“இன்னும் எத்தனை நாள் இப்படியே வச்சு இருப்பீங்க. கோமாவுக்கு போன யாரும் பிழைச்சதா இல்ல. அப்படியே மத்தவங்க பிழைச்சாலும், இவரு பிழைக்க வாய்ப்புல்லன்னு எல்லா டாக்டரும் சொல்லிட்டாங்க. பிறகு எதுக்கு ஒரு பெட்டை போட்டு வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க. இறந்த பொணத்துக்கு எல்லோரும் ஊன்னு அழுது ஒப்பாரி வச்சுக்கிட்டு நேரத்தை வீணாக்கிட்டு இருக்குறதுக்கு தூக்கி போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்” என்று ஒரு குரல் கேட்க எதற்கோ அந்த பக்கம் வந்த அதிரலின் காதில் விழுந்தது இந்த பேச்சு.
“ச்சீ என்ன மனுசன் இவரு” என்று எண்ணிய பொழுதே,
“டேய் உன் வாயை வாச்கிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? எப்போ பாரு அபச குணமாவே பேசிட்டு இருக்க.. இதுக்கு தான் உன்னை இங்க வர வேணான்னு சொன்னேன். நீ பேசுற பேச்சை கேட்டா எல்லோருக்கும் எவ்வளவு வேதனையா போகும். ஏன்டா இப்படி பேசுற..” வேதனையுடன் சொன்னவனை பார்த்து எகத்தாளமாக சிரித்த இன்னொருவன்,
“என்ன அண்ணா உன் மாமியார் வீட்டு பாசம் கட்டி இழுக்குதோ.. என்னோட முதல் எதிரியே அங்க கோமால படுத்து இருக்கான் பாரு அவன் தான். அவன் ஒளிஞ்சா தான் நான் நினைச்சது எல்லாம் நடக்கும்” என்று கறுவினான்.
“ச்சீ அவரை பத்தி உனக்கு என்ன தெரியும்னு தேவை இல்லாமல் அவர் மேல இவ்வளவு பகையை வளர்த்து வச்சு இருக்க.. உன் மனசை மாத்திக்க செல்வா.. இல்லன்னா ரொம்ப கஸ்ட்டப்படுவ. உன் வனமத்துக்கும் பேராசைக்கும் ஒரு அளவு இருக்கு. உடம்பு முடியாம இருக்குற மனுசன் கிட்ட உன் விசத்தை கக்காத” என்றான் தேவா.
தீரனின் தங்கை கணவன் தான் தேவா. அவனின் தம்பி தான் செல்வா. அவனுக்கு தீரனின் சொத்து மேல் ஒரு கண். அதனால் அண்ணனுக்கு பெண் எடுக்கும் பொழுதே, தங்களின் தங்கையை தீரனுக்கு பேச சொல்லி பெற்றவர்களை தூண்டி விட்டான்.
ஆனால் தீரன் அந்த பேச்சை அப்பொழுதே கத்தரித்து விட்டதோடு தன் செலவிலே அவர்களின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணமும் செய்து வைத்து விட்டான்.
அது போனா போகட்டும் என்று தீரனின் சின்ன தங்கையை தனக்கு கட்டி வைக்க சொல்லி செல்வா சொல்ல,
“அந்த பேச்சுக்கு இடமே இல்லை. அவ இன்னும் படிச்சே முடிக்கல. அப்படியே படிச்சு முடிச்சாலும் சம்மந்தம் வச்ச இடத்துலயே மறுபடியும் சம்மந்தம் வச்சா அது சரி வராது.. நீங்க வெளில பொண்ணு தேடிக்கோங்க” அறுதியிட்டு சொல்லி விட்டான்.
ஆளவந்தான் கூட,
“ஒரே குடும்பமா போயிடும் இல்லப்பா.. அக்காவும் தங்கச்சியும் ஒரே வீட்டுல இருப்பாங்க இல்லையா?” என்று கேட்க,
“சரி வராதுப்பா. இங்கயும் ஒண்ணா இருந்து, போற வீட்டுலயும் ஒண்ணா இருந்தா அக்கா தங்கச்சிங்க ரெண்டு பேருக்குள்ளையும் சண்டை வரும். தனி தனியா சம்மந்தம் வச்சா வாசம் விட்டுப் போகாது” உறுதியாக சொல்லிவிட,
ஆளவந்தான் ஏதோ சொல்லவர,
“அது தான் பெரியவன் ஒத்து வராதுன்னு சொல்றான் இல்ல.. அப்புறம் என்ன எடுத்து கட்டி பேசிட்டு இருக்கீங்க.. அவன் சொல்லுக்கு அப்புறம் என்ன மரியாதை இருக்கு. அவனுக்கு எல்லாம் தெரியும். நீங்க அவனுக்கு ஒன்னும் புத்தி சொல்ல வேணாம். உங்களை விட அவனுக்கு புத்தி சாதூர்யம் அதிகம். அதனால அவனுக்கு புத்தி சொல்றதை விட்டுட்டு போய் வேலையை பாருங்க” என்று தீரனின் அன்னை ஒரு போட்டுட்டு விட்டு போக அதன் பிறகு ஆளவந்தான் வாயை திறக்க முடியுமா என்ன?
தீத்திரள் தீரனுக்கு அப்பவே செல்வாவை பற்றி பெரிதாக நல்ல அபிப்ராயம் இல்லை. தங்களின் சொத்து மீது அவனுக்கு ஆசை இருக்கிறது என்று புரிந்துக் கொண்டு எல்லா வகையிலும் தங்களின் குடும்பத்துக்குள் அவனை வர விடாமல் பார்த்துக் கொண்டான்.
சின்ன தங்கையிடம் பேச புடிக்க அவன் வர, ஆரம்பத்திலே தாரகையிடம் சொல்லி எச்சரித்து விட்டான் தீரன்.
“சில மனிதர்கள் பார்க்க பளபளப்பா இருப்பாங்க. அவங்க உள்ளுக்குள்ள எவ்வளவு விசம் வச்சு நடிப்பாங்கன்னு தெரியாது தாரா. எல்லாத்தையும் பாலுன்னு நினைச்சு பழகக் கூடாது. நம்ம வாழ்க்கையையே ஒன்னும் இல்லாம பண்ணிடுவாங்க” என்று சொன்னவன்,
“இந்த செல்வாவும் அதே இனம் தான். அவன் பார்க்க பேச சரியா இருந்தாலும் அவன் கிட்ட ஏதோ ஒன்னு தப்பா இருக்கு. சோ கவனமா இரு. அவனோட டார்கெட் நீ தான். என்னால உன்னை பார்த்துக்க முடியும் தான். பட் உன்னை நீயே பார்த்துக்கிட்டா அண்ணன் ரொம்ப ஹேப்பியா இருப்பேன்” என்று சொல்ல,
“உங்க பேச்சை மீறி எதுவும் செய்ய மாட்டேன் அண்ணா. என்னை விட எனக்கு நல்லதுன்னு பார்த்து செய்ய நீங்க இருக்கும் பொழுது விட்டில் பூச்சியை பார்த்து எல்லாம் விழுந்திட மாட்டேன்” என்று உறுதியாக வாக்கு கொடுத்து விட்டாள்.
அதனால் தாரகை செல்வாவை பார்த்தாலே ஒதுங்கிப் போய் விடுவாள். அவளுக்கு அண்ணன் சொல் தான் வேதவாக்கு. அதே போல தன் தங்கையை சுற்றி வரும் செல்வாவை நெருங்க விடாமல் கண்ணுக்கு தெரியாமல் பாதுகாப்பு வளையம் போட்டு வைத்து இருந்தான் தீரன். எனவே அவளை எந்த வகையிலும் நெருங்க முடியவில்லை செல்வாவால். அதில் எழுந்த ஆத்திரமும் கோவமும் பல மடங்கு அதிகம். அவனின் கனவுகளை பொசுக்கி போட்டு விட்டானே இந்த தீரன்.
அதனாலே தீத்திரள் தீரன் மீது அத்தனை வஞ்சகம் கொண்டு இருந்தான் செல்வா. அதன் வெளிப்பாடு தான் இவ்வளவு பேச்சு.
இவன் குடும்பத்தில் இவன் தான் இப்படி. மற்றபடி அவனின் குடும்பத்தில் எல்லோருமே நல்லவர்கள் தான்.
தீரனின் பெரிய தங்கை கயலை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் அவளின் மாமனார் மாமியார் இருவரும். கணவன் தேவாவை சொல்லவே வேண்டாம். எங்கும் அவளை விட்டுக் குடுக்கவே மாட்டான்.
“என்ன தேவா உன் மச்சானுக்கு ரொம்ப தான் முட்டு குடுக்குற.. அவன் குடுத்த சீர் வரிசை பேச வைக்கிறது போலையே” ஏளனமாய் பேசியவனிடம் மேற்கொண்டு பேச முடியாமல் எரிச்சலுடன் அங்கிருந்து போய் விட்டான் தேவா.
போனவனை நிறுத்தி வைத்து,
“என்ன தேவா நான் பாட்டுக்க பேசிட்டு இருக்கேன். நீ பாட்டுக்க போற.. நில்லுடா” என்ற தம்பியை பார்த்து முறைத்தான்.
“இங்க பாரு எனக்கு ஒத்துழைச்சா ரெண்டு பேருமே நல்லா வாழலாம். இனி உன் மச்சான் தீரன் தேறவே மாட்டன். அவனை தூக்கி எரிச்சுட்டு அவன் தங்கச்சியை எனக்கு கல்யாணம் பண்ணி வை. சொத்தை ரெண்டு பாகமா பிரிச்சுக்கிட்டு அவன் தம்பிக்கு கொஞ்சத்தை குடுத்து ஓரம் கட்டிடலாம்” என்று குள்ளநரியாய் திட்டம் போட்டவனை கண்டு நெஞ்சை பிடித்துக் கொண்டாள் அதிரல்.
“ச்சீ உயிரோட இருக்குற மனுசனை போய் எரிக்க சொல்றானே.. இவனெல்லாம் ஒரு மனுசனா.. அந்த மனுசருக்காக ஒரு கூட்டமே வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கிட்டு இருக்காங்க. இவன் என்னன்னா இப்படி சொத்துக்கு ஆசைப்பட்டு எரிக்க சொல்றானே..” என்று மனம் குமைந்துப் போனாள்.





