எபிலாக் 1
பனிநிலவின் முகத்தை பார்த்த இருவருக்கும் மனதோடு வயிறும் நிரம்பிப் போனது.. எப்போ இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு பனியின் தோற்றம் நிறைவை கொடுத்தது.
அந்த மகிழ்வுடன், “ம்மா நான் வேலைக்கு லீவ் போடுறேன்” என்றார் ரேவதி.
“நானும் அதை தான் நினைச்சேன்.. முதல்ல போய் உன் அத்தை சித்தி எல்லோரையும் மத்தியம் வரை எங்காவது வெளிய அனுப்பு.. நான் தாத்தா பாட்டியை தோப்பு வரைக்கும் போயிட்டு வர சொல்றேன்” என்றார்.
“வீட்டுல யாரும் இல்லாம பார்த்துக்கணும்” என்ற ரேவதி, “மத்தியம் என்னம்மா சமைக்கலாம்?”
“ரெண்டு கோழியும் ஒரு சின்ன ஆட்டையும் பிடிச்சுட்டு வர சொல்றேன் அப்பாவை” என்றவர் கணவனுக்கு போன் போட்டு சொல்ல,
“பண்ணையில இருந்து ஆளை அனுப்பி வைக்கிறேன். வேற எதுவும் வேணுமா?” என்றார்.
“அது மங்கை புருசனை மட்டும் இன்னைக்கு ஒரு நாள் உங்கக்கூட வச்சுக்கோங்க” என்றார்.
“ம்ம்” என்று கேட்டுக் கொண்டவர்,
“மச்சான்” என்று அவருக்கு போன் செய்து தன்னோடு வைத்துக் கொண்டார் எந்த சந்தேகமும் வராமல்.
அதே போல ரேவதி கலா மங்கை இருவரையும் விசாலத்துக்கு துணி எடுக்க வேண்டும் என சொல்லி அவர்களை கிளப்பி விட்டார்.
“அப்படியே நாங்களும் எடுத்துக்குறோம்” என்று சொல்ல, தலையை ஆட்டிய ரேவதி, சேகரனை ஒரு பார்வை பார்த்தார்.
“நான் வேலைக்கு கிளம்பிட்டேன்” என்று சிரிப்புடன் வெளியே போய் விட்டார். பிள்ளைகள் எல்லோரும் வெளியே கிளம்பிவிட, வீட்டில் காமாட்சி ரேவதி இருவர் மட்டும் தான். முன் பக்க வாசலை சாற்றி தாழ் போட்டு விட்டு, பின் பக்கமாக அடுப்பு மூட்டி சமைக்க ஆரம்பித்து விட்டார்கள். வீட்டுக்குள் வேலையாட்களை கூட அனுமதிக்கவில்லை காமாட்சி.
கணவனை எழுப்பி குளிக்க வைத்து தானும் நனைந்து வேறு புடவை மாற்றி டீ குடிப்பதருக்குள்ளே நேரம் கடந்து இருந்தது. பிறகு கீழே இறங்கி இருவரும் வர ஒருவரும் வீட்டில் இல்லை.
“என்ன வீடே காலியா இருக்கு” திகைத்துப் போனாள் பனிநிலவு.
“எல்லாம் உன் அம்மாச்சி ஏற்பாடா தான் இருக்கும். வா சாப்பிடலாம்”
“ம்ம்” என்றவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது..
டைனிங் டேபிளில் காலை உணவு சுட சுட இருக்க கதிரவனுக்கு பரிமாறினாள். அவளுக்கு அவன் பரிமாற இருவரும் ஒன்றாய் சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததார்கள்.
அங்கே அக்காவும் அம்மாவும் சமைப்பதை பார்த்து, அங்கே வந்தார்கள்.
யாரும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. தாயின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டு அம்மாச்சி சமைப்பதை பார்த்தாள்.
“கால் வலிக்க போகுது.. இங்க அடுப்புல நின்னா கண்ணு எரியும்.. ரெண்டு பேரும் உள்ள போங்க” ரேவதி இருவரையும் அனுப்பி வைத்தார். தன் தம்பி மற்றும் மகள் வாழ்ந்து விட்டார்கள் என்று புரிய, தன் அம்மாவை கட்டிக் கொண்டார் மகிழ்வுடன். காமுவுக்கும் அத்தனை மகிழ்ச்சியா இருந்தது.
இதற்காக தானே ஆசை பாட்டார்கள். அது நிறைவேறியதில் அத்தனை சந்தோசம் அவருக்கு.
மேலே வந்த பனியை தன்னிடம் இழுத்துக் கொண்டான் கதிரவன்.
“ஹைய்யோ விடுங்கா மாமா..” சிணுங்கினாலும் அவனின் கைகளுக்குள் நிற்பது தான் அவளுக்கு மகிழ்ச்சியே.. அவளை தனக்கு முன் அமரவைத்து அவளை பின்னிருந்து கட்டிக் கொண்டு அமர்ந்தவன்,
“எங்கயும் பெயின் இருக்காடி” கேட்டான்.
“ப்ச் சும்மா இருங்க மாமா” முகம் சிவந்தாள்.
“சொல்லுடி கண்ணம்மா” கேட்டவன் அவளின் தோளில் தன் தாடையை பதித்து அவளின் வயிற்றில் கை வைத்து,
“நம்ம பாப்பா எப்போடி வரும்” என்று ஆசையாக கேட்டான். அவனின் கையில் ஒரு அடி போட்ட கதிரவனின் நிலவு,
“கொன்னுடுவேன் உங்களை.. எனக்கு ஆம்பளை பிள்ளை தான் வேணும்.. நோ பொம்பளை பிள்ளை” முறைத்தாள்.
“எனக்கு ஆசையா இருக்குடி”
“ம்ஹும்.. அதுக்கு மட்டும் வாய்ப்பே இல்லை.. இந்த கதிரவனின் அன்பு முழுக்க முழுக்க எனக்கு மட்டும் தான்.. அதுக்கு பங்கு போட வர்றவ என் மகளா இருந்தா கூட எனக்கு வேணாம்” அவன் மீது பைத்தியமாக இருந்தாள். அவளின் அன்பில் குளிர் காய்ந்தவன்,
“மாமனை அவ்வளவு பிடிக்குமாடி” சீண்டினான். அவனது மீசையை வலிக்க பிடித்து இழுத்தவள்,
“இந்த மாமனை மட்டும் தான் பிடிக்கும் போதுமா?” என்று சொன்னவள், அவனின் இறுகிய அணைப்பில் குலைந்துப் போனாள்.
அந்த இறுகிய அணைப்பு பெண்ணவளின் வாழ்நாள் முழுவதும் தொடரும். ஆனவனின் முரட்டு அன்பில் உயிர் தொலைந்து அவன் மீது பித்தாகி சர்வமும் கதிரவன் ஆனாள் கதிரவனின் நிலவு பெண்.
அவள் ஆசை பட்டது போல மூன்றும் ஆண் பிள்ளைகள் தான். அதில் கதிரவனுக்கு சற்றே மனத்தாங்கல் தான். ஆனாலும் வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை.
கணவனின் ஏக்கம் புரியாதா மனைவிக்கு. அடுத்த வருடத்தில் அவனின் கையில் அவன் ஆசை பட்ட பெண் பிள்ளையை கொடுத்தாள் பனி.. திக்குமுக்காடிப் போனான் கதிரவன்.
“ஹேய் கண்ணம்மா” என்று அவன் நெகிழ்ந்துப் போய் அவளின் இதழ்களில் அத்தனை வன்மையா முத்தம் குடுத்தான்.
“இதெல்லாம் சரி தான்.. ஆனா என்னைய டீல்ல விட்டீங்க.. மகனே அப்புறம் தெரியும் இந்த நிலாவ பத்தி” மிரட்டினாள்.
“நீ ஒரு கண்ணு என் மக ஒரு கண்ணுடி.. அப்படி எல்லாம் டீல்ல விட மாட்டேன். ஆனா மேடம் தான் மகனுங்க வந்த பிறகு என்னை கண்டுக்குறதே இல்லை” குறை பட்டுக் கொண்டான்.
“பொய் பொய்... வாயை பாரேன்.. வெளில தான் உத்தம்ன்னு சீனை போடுறது. பொண்டாட்டிக்கிட்ட மட்டும் அராஜகம் செய்ய வேண்டீயது.. தினமும் எனக்கு என் கண்ணம்மா வேண்டும்னு நிதமும் ஒரு புடவையை கொண்டு வந்து குடுத்துட்டு மேல பாய வேண்டியது.. இதுல ஒண்ணுமே நடக்காத மாதிரி எப்படி மாமா இப்படி பேச முடியுது” முறைத்தாள்.
“அதெல்லாம் அப்படி தான்டி.. எனக்கு போதலையே..”
“அதுக்கு உங்க மகன்களை தூங்க வைக்கணும்.. அவனுங்களோட சேர்ந்து என்னை பாடாய் படுத்தி எடுக்க வேண்டீயது. பிறகு தூங்க லேட் தான் ஆகும்..”
“அதுக்கு உன் மகனுங்க உன்னை விடணும். மூணும் உன் மேல தான் தூங்கணும்னு அடம் பிடிக்கிறாணுங்க.. எனக்கும் நீ இல்லாம தூக்கம் வராதுன்னு தெரியாதாடி” அவளின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டான். அவனின் பிடரியை வருடி விட்டவள்,
“இப்போ போட்டிக்கு உங்க மக வேற வந்துட்டா.. இனி இரவு தூக்கம் சுத்தம்” என்று சிரித்தாள்.
“அப்போ பகல்ல உன்னை கடத்திட வேண்டீயது தான்” என்றான்.
“ஆசை தோசை.. விசாலம் பாட்டி விட மாட்டாங்க.. உங்க மக நடை பழகுற வரைக்கும் நான் வீட்டுல தான்” என்று சிரித்தாள்.





