“எல்லாத்தையும் எவ்வளவு பாடு படுத்தி இருக்காரு.. இனி வாங்குற நேரம். அதனால அதிகமாவே வாங்குவாரு” என்றவன் விழாவை அவனோடு சேர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.
அன்றிரவு எல்லா ஆர்ப்பாட்டமும் முடிய மொட்டை மாடியில் ரேவதியின் மடியில் தலை வைத்து படுத்து இருந்தவள் தன் அன்னையின் முகம் பார்த்து,
“எப்படிம்மா என்னை தொலைச்சீங்க? என்னம்மா நடந்தது?” என்று கேட்டாள்.. அவர்களோடு கூட அமர்ந்து இருந்தார்கள் சேகரனும் கதிரவனம்..
அனைவாரிடமும் பெறுத்த அமைதி நிலவியது. எவ்வளவு கனமான பக்கங்கள் அவை.. அவ்வளவு எளிதாக அதை கடந்து விட முடியுமா? கண்களை குத்தும் முள்ளாக அல்லவா இருக்கிறது இன்று வரையிலும் நடந்த நிகழ்வுகள் அத்தனையும்.
மெதுவாக ரேவதி தன் நெஞ்சை இறுத்து அறுத்த பக்ககங்களை சொல்ல ஆரம்பித்தார்.
உங்க அப்பாவும் நானும் விவரம் புரியாத சின்ன வயசுலேயே பழக ஆரம்பிச்சுட்டோம். ஒரே படிப்பு, ஒரே வகுப்பு. அது எப்போ காதலா மாறுனதுன்னு எங்களுக்கு தெரியல.. நான் வயசுக்கு வந்தப்பவா.. அவரை விட்டு ஒதுங்கி இருக்க சொன்ன பொழுதா.. இல்ல இனி அவர் கூட பழகக் கூடாதுன்னு முட்டுக் கட்டை போட்ட பொழுதான்னு எங்களுக்கு தெரியல..
இனி பார்த்துக்கக் கூடாதுன்னு எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு, ஒண்ணா விளையாடக் கூடாதுன்னு வீட்டுக்குள்ளயே அடச்சி வச்சப்ப தான் எங்க நேசம் இன்னும் கூடிப் போச்சு போல.
வயசுக்கு வந்த பெண்ணும் ஆணும் பழகக் கூடாதுன்னு முட்டுக் கட்டை போட்டே எங்க அன்பையும் எங்க காதலையும் இன்னும் வலுவாக்கிப் போச்சு.. நீண்ட நாள் எங்களை பேசவே விடல. வகுப்புலயும் பேசிக்கவே முடியல..
ஏதோ ஒரு கட்டத்துல அடக்கி வச்ச எங்க அன்பு எங்கையோ வெடிக்க ஆரம்பிச்சுடுச்சு. அதன் விளைவு சரியா நாங்க பதினோராம் வகுப்பு படிக்கும் போது நீ எனக்குள்ள உண்டாகிட்ட..
எங்க முழுமையான காதலுக்கும் பரிசுத்தமான அன்புக்கும் கிடைச்ச பரிசு நீ.. என்ற பொழுதே கண்ணீருடன் அவளின் நெற்றியில் குனிந்து முத்தம் வைத்தார் ரேவதி. அந்த முத்தத்தில் தேகம் மொத்தமும் சிலிர்த்துப் போனாள் பனி. ஏனெனில் மகவை ஈன்ற பிறகு வைக்கும் முதல் முத்தம் போல அல்லவா ரேவதி அவளுக்கு முத்தம் வைத்தார்.
அந்த நேரம் வைக்க முடியாத முத்தத்தை இதோ இந்த நிமிடம் குடுத்தார்.
“நீ வயித்துக்குள்ள இருக்கன்னு தெரிஞ்ச உடனே இரண்டு வீட்டிலும் ஒரே கலவரம். யார் தான் ஏத்துக்குவா படிக்கிற வயதில் இருக்கும் மகன் மகள் இப்படி ஒரு காரியத்தை செய்து இருந்ததை.. கோவம் வந்தது. எங்களை அடிச்சு காயப்படுத்தினாங்க.. ஆனாலும் நாங்க எதற்கும் அசையவே இல்லை. எங்க குழந்தையை கலைக்கனும்னு நிலையா நின்னாரு சேகரனின் அப்பா.. ஆனா உங்க அப்பா நான் பார்த்துக்குவேன் என் பிள்ளையை என் பொண்டாட்டியை.. அதில் உங்க யாருடைய உதவியும் எனக்கு தேவை இல்லைன்னு உன் அப்பா ரொம்ப உறுதியா இருந்தார்.. அதே போல நம்மளை பார்த்துக்கவும் செய்தார்” என்று சேகரனை பார்த்தார் ரேவதி. அந்த கண்களிலும் பார்வையிலும் தான் அத்தனை காதல் நிறைந்து இருந்தது..
சேகரனும் பதிலுக்கு தன் காதலை பார்வையால் வெளிப்படுத்தினார்.
“உன் செக்கப் அத்தனைக்கும் உன் அப்பா யார் கையையும் எதிர் பார்க்காம பள்ளிக்கூடம் விட்டு வந்து ஒரு கடையில கணக்கு எழுத போய் சம்பாதிச்சு என்னை பார்த்துக்கிட்டாரு.. உன் சதாசிவம் தாத்தா உன்னை கலைக்க அத்தனை போராட்டம் செய்தாரு. ஆனா உன் அப்பா ரொம்ப ஸ்ட்ராங்.. அவரை மீறி என்னை யாராலும் நெருங்க கூட முடியவில்லை” என்றார்.
பனிக்கு அத்தனை பெருமையாக இருந்தது தன் பெற்றவர்களை எண்ணி. தனக்காக எத்தனை போராட்டத்தை எதிர்க் கொண்டு இருக்கிறார்களே என்று.
“ஆனா பிரசவத்தின் போது என் கழுத்துல தாலி காட்டணும்னு எங்க தாத்தா சொல்லி சேகரனை என் கழுத்துல தாலி கட்ட வச்சாங்க. ஆனா அதுக்கு கூலியா என் தாத்தாக்கிட்ட சேகரன் அப்பா உன்னை கேட்டது எங்களுக்கு சத்தியமா தெரியாது பனி.. அது மட்டும் தெரிஞ்சு இருந்து இருந்தா நாங்க அந்த தாலிக்கும் அங்கீகாரத்துக்கும் ஒத்துக்கிட்டு இருந்து இருக்கவே மாட்டோம்..”
“உன்னை பெற்றுவிட்டு நான் மயக்கத்தில் இருக்கும் பொழுது, சேகரனை அடித்து அவருக்கு மயக்க மருந்து குடுத்து உன்னை எங்கக்கிட்ட இருந்து முழுசா எடுத்துட்டு போயிட்டாரு சேகரனின் அப்பா.. ரெண்டு பேரும் முழிச்சு பார்த்து உன்னை கேட்டா யாருக்கும் எதுவும் தெரியலன்னு கையை விரிக்கிறாங்க. பெத்த எங்களுக்கு எப்படி இருக்கும் சொல்லு..” என்று இப்பவும் அந்த வேதனையை எண்ணி அழுதவர்,
“அப்ப எனக்கு உற்ற துணையா இருந்தது எல்லாம் கதிரவனும் உன் அப்பாவும் மட்டும் தான். இவங்க ரெண்டு பெரும் மட்டும் இல்லன்னா என்னை புதைச்ச இடத்துல மரம் முளைச்சு இருக்கும்” என்றவர்,
“சேகரனின் அப்பா அதோட எங்களை விடல.. அவரோட வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாரு.. உன்னை தேடி போடக்கூடாதுன்னு அவர் உயிர் மேல சத்தியம் வாங்கிட்டாரு. அதனால உன்னை தேட முடியாம எங்களை நாங்களே தண்டிச்கிக்கிட்டோம். போதாதுன்னு அவர் வார்த்தையால எங்க ரெண்டு பேரையும் எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு அசிங்கமா பேசுவாரு.. அவர் மட்டும் இல்ல அவரோட மனைவி, தங்கச்சி தம்பி எல்லோருமே அசிங்கமா பேசுவாங்க.. அப்படி ஒரு நாள் குடும்பமே எங்களை ஏசும் பொழுது சரியா கதிரவன் வந்து விட்டான்”
“வந்தவனின் காதில் இவர்கள் பேசியது எல்லாம் விழ, அடுத்த ஒரு நிமிடம் கூட எங்க ரெண்டு பேரையும் அந்த வீட்டில் இருக்க விடவில்லை. கையோடு அழைத்துக் கொண்டு போய் விட்டான்” என்றார். திரும்பி கதிரவனை பார்த்தாள் பனி.
“அதும் சும்மால்லாம் இல்ல.. அவர் கிட்ட சபதம் போட்டுட்டு கூட்டிட்டு வந்தான்” என்றார்.
“யாரை பிண்டம்னு சொல்லி, அவமானம் அசிங்கம்னு சொல்லி தூக்கிப் போட்டியோ அவ தான் என் பொண்டாட்டி.. அவ எங்க இருந்தாலும் தேடி கண்டு பிடிச்சு உன் முன்னால கொண்டு வந்து நிறுத்துவேன்.. அதும் சும்மால்லாம் இல்ல.. தங்க தேர் மாதிரி அவளை உன் முன்னாடி நிற்க வைப்பேன்.. அவ தான் உன் முதல் பேத்தி, வாரிசுன்னு ஊர் முழுக்க நான் தெரியப்படுத்தல. நான் கதிரவன் கிடையாதுன்னு சபதாம் போட்டு அவனோட பத்து பன்னிரண்டு வயசுல இருந்து தேட தொடங்கியவன் தான்.”
“தேடிக்கிட்டே இருந்தான். அதுக்கும் சேகரனின் அப்பா எங்க தாத்தா மூலமும் அப்பா மூலமும் அத்தனை முட்டுக் கட்டை போட்டார். பத்து வயசுல அவனுக்கு ஒன்னும் தெரியாது தான். ஆனா நீ பிறந்த ஹாஸ்பிட்டலயே சுத்தி சுத்தி வந்தான். நீ எங்க போன எப்படி போனன்ற விவரத்தை கொஞ்சம் கொஞ்சமா கரந்து நூல் பிடிச்ச மாதிரி தேடித் போனான்.
ஆனா முழு விவரமும் கிடைக்கல.. மிஸ்டர் சதாசிவம் தன் பண பலத்தால் அத்தனை பேரையும் விலைக்கு வாங்கி விட்டார்.





