அத்தியாயம் 67

 
Admin
(@ramya-devi)
Member Admin

நர்ஸ் வந்து உடைமாற்ற சொல்லி உதவி செய்ய தேவகி ஏந்திழையாளுக்கு இலகுவான உடையை அணிவித்து விட்டு பழைய உடையில் இருந்த உதிரக் கரையை கண்டு அய்யோ இவ்வளவு உதிரமா என்று பயந்துப் போனார்.

“அதுக்கு தான் அடுத்த வாரம் ஆபரேஷன் பண்ண சொல்லி சொல்லி இருக்காங்க... இந்த ஒரு வாரம் எங்க கண் காணிப்புல இருக்கணும்” என்று டாக்டர் சொல்லிக் கொடுத்தது போல அப்படியே சொல்லி விட்டு அந்த நர்ஸ் போய் விட்டார்.

எப்பொழுது தனிமை கிடைக்கும் என்று அந்த நேரத்துக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். அவளுக்கான உணவும் அங்கேயே கொடுக்கப்பட யாருடைய உதவியும் தேவை இல்லை என்பது போல மருத்துவமனையில் பார்த்துக் கொண்டார்கள்.

ஏ கிளாஸ் ஹாஸ்பிட்டல்.. எல்லா முக்கியமான விஐபிகளும் இங்கு தான் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்வார்கள். ஹாஸ்பிட்டல் மொத்தம் ஏழு பில்டிங்கை உள்ளடக்கி இருந்தது. ஒவ்வொரு பில்டிங்கும் ஒன்பது தளங்களை கொண்டு ஏசி வசதியோடு கண்ணாடி மாளிகையாய் மின்னிக் கொண்டு இருந்தது. தரையும் அப்படி தான் மின்னியது. எங்கும் சுத்தம் எதிலும் சுத்தம்.

“நல்ல மேனேஜ்மென்ட்” என்று எண்ணியவளுக்கு,

“அப்போ என் கணவனை நல்லா பார்த்துக்குவாங்க தானே” என்று மனம் அவளின் கணவனிடமே போனது.

இடையில் டாக்டர் வரவே இல்லை. “எப்படியாவது அவரு நினைவு திரும்பிடணும் கடவுளே” என்று மனமுருக வேண்டிக் கொண்டவள் தக்க சமயத்துக்காக காத்திருந்தாள்.

மாலை நேரம் போல மருத்துவர் வந்து ஏந்திழையாளை செக் செய்ய,

“டாக்டர் நான் அவரை பார்க்கலாமா?” என்று தவிப்புடன் கேட்டாள்.

“இங்க பாரு நீ ரொம்ப க்ரிட்டிக்கலா இருக்க பொண்ணே. கட்டிலை விட்டே எழுந்திரிக்க கூடாது. ஏன் புரிஞ்சுக்க மாட்டிக்கிற. உன் குழந்தைக்கு அது ரொம்ப பெரிய ஆபத்த போயிடும். முதல்ல உன் பிள்ளையை கவனி. பிறகு உன் புருசனை பார்க்கலாம். கொஞ்சம் பொறுமையா இரு நீ” என்று சொல்லி விட்டு வெளியே நின்று இருந்த அவளின் தாயிடமும் தமையனிடம் சில சொற்கள் பேசிவிட்டு போய் விட்டார்.

“என்னால பொறுமையா இருக்க முடியலையே” என்று கண்களில் நீர் வடிய படுத்து இருந்தவளுக்கு மனம் எங்கும் ராசசிங்கனின் நினைவே ததும்பி இருந்தது.

படுக்கையை சற்றே குறுங்கண் ஓரம் நகர்த்தி போட்டு வெளியே வேடிக்கை பார்க்க, அப்பொழுது தான் கவனித்தாள். அந்த மருத்துவமனையை சுற்றிலும் காட்ஸ் நிறைய பேர் இருப்பதை. இவர்கள் எல்லோரும் அவளின் தந்தையிடம் வேலை பார்ப்பவர்கள்.

“கடவுளே” என்று எண்ணிக் கொண்டவளுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் வற்றிப் போனது.

எப்படி இவங்க எல்லோரையும் மீறி அவரை காப்பாத்தி இருந்த இருந்து கூட்டிட்டு போவேன் என்று கலங்கினாள்.

போதாதற்கு பக்கத்திலே அன்னையும் தமையனும் வேறு. இரவு பொழுதாவது பார்க்கலாம் என்றால் அதற்கும் வழி இருக்காது போலையே என்று கலங்கி நின்றாள்.

எட்டு மணி ஆகவும் அவளுக்கு டான் என்று உணவு வர அவளுக்கு உதவி செய்தார் தேவகி. உண்டுவிட்டு அமரப்போனவளை அழுத்தி கூட அமரக்கூடாது என்று ஊழியர்கள் எச்சரிக்க வேறு வழியில்லாது படுக்கையை தலை புறம் மட்டும் உயர்த்தி போட சொல்லி படுத்துக் கொண்டாள்.

“இவ்வளவு கட்டுக்காவல் இருக்கே... இதை எல்லாம் எப்படி தாண்டி அவர பார்ப்பேன். ஒருவேளை என்னால அவரை பார்க்கவே முடியாதா...?” என்று எண்ணியவளுக்கு நெஞ்செமெல்லாம் வலியில் சுறுங்கிப் போனது.

நெஞ்சை அடைப்பது போல இருந்தது. ராசசிங்கனின் காட்டு தேக்கு உருவம் கண்ணில் எழ கண்கள் கலங்கிக் கொண்டு இருந்தது.. அதை தன் குடும்பத்துக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டவளுக்கு அவனுடன் வாழ்ந்த நினைவுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுக்க அந்த இனிமையான நினைவுகளில் தொலைந்துப் போனாள்.

முதல்முறையாக அவனை பார்த்தது, அடுத்த சந்திப்பு அத்தனை பேரின் கட்டு காவலையும் மீறி தன்னை சிறை எடுத்தது என எல்லாம் வர,

“ரொம்ப தைரியம் தான் இவருக்கு.. எப்படி இவ்வளவு தில்லா இருக்கிறாரு” என்று அவனது செயலில் இருந்த தீரத்தில் மனம் மயங்கினாள் புதிதாக.

“என்னவோ எல்லோரும் சொல்றாங்க காதல் அது இதுன்னு. ஆனா இந்த மனுசன் இத்தனை மாசம் கூட வாழ்ந்தும் வாயையே திறக்கவில்லை. அப்போ நான் யாராம். என்னை தவிர எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கு. சரியான கல்லு பாறை.. அவரோட மயக்கம் தீர்ந்துடனும்.. தீர்ந்த பிறகு அவரது சட்டையை பிடிச்சு கேள்வி கேட்கணும்...” என்று அவனது நினைவிலே மூழ்கினாள்.

“பாப்பா... பாப்பா” என்று அன்னையும் தமையனும் மாற்றி மாற்றி அழைக்க “ஹாங்” என்று முழித்தாள்.

“என்ன யோசனை பாப்பா... உன் உடம்பு பூரண குணமாகும்.. கவலைப்படாத.. நாங்கல்லாம் இருக்கோம்ல அப்படி எல்லாம் எதுவும் ஆகிடாது.. பயப்படாத தங்கம்” என்று அன்னை அவளின் நிலையை கண்டு பரிதவிக்க,

“இல்லம்மா.. அதெல்லாம் எதுவும் இல்லை” என்று அவள் தடுமாறினாள்.

“பாப்பா இங்க விசிட்டர்ஸ் யாரும் இருக்க கூடாதாம்... ரூம் கேட்டு பார்த்தேன். இந்த பில்டிங்ல எந்த விஐபி அட்டேன்டரும் இருக்க கூடாதாம். ஏன்னா இங்க அனுமதிக்கப் பட்டு இருக்கிறவங்க அத்தனை பேரும் ரொம்ப முக்கிய ஆட்களாம். சோ பக்கத்து பில்டிங்கல தான் ரூம் தருவாங்களாம். அதனால நானும் அம்மாவும் அங்க தங்குறோம். வீட்டுல எல்லோரும் உன்னை பார்க்கணும்னு சொல்லி ஒரே அடம். நான் தான் நாளைக்கு பார்த்துக்கலாம்னு சொல்லி அமைதி படுத்தி வச்சி இருக்கேன். நாளைக்கு அவங்களோட வந்து உன்னை பார்க்கிறோம். நீ மனசுல எதையும் வச்கிக்காம நல்லா படுத்து தூங்கு. உனக்கு ஒண்ணுன்னா கண்டிப்பா அண்ணன் முன்னாடி நிற்பேன்” என்று அவன் சொல்ல அதுவரை பொதுவாக கேட்டுக் கொண்டு இருந்தவள் கடைசி வரியில் அதிர்ந்து விழித்தாள்.

“அண்ணா” என்று அவள் திகைக்க,

“உன்னை யாரும் தொந்தரவு செய்யாம பார்த்துக்குவேன். நீ நிம்மதியா இரு.. உனக்கு எப்பவும் இந்த அண்ணன் இருப்பேன். எதுவுமே உன் விருப்பத்தை வச்சு தான் இந்த அண்ணன் செயல்படுவேன். அதனால கவலை படாத” என்று அவன் சொல்ல இன்னும் திகைத்துப் போனாள்.

என்ன திடிர்னு இவன் இப்படி எல்லாம் பேசுறான் என்று ஏந்திழையாள் திகைக்க,

“என்னடா ஏதேதோ பேசுற” தாய் கேட்க,

“ஒன்னும் இல்லம்மா நீ வா” என்று அவரை அழைத்துக் கொண்டு போய் விட்டான் யுகேஷ்.

யுகேஷ் சொன்னதை கேட்டவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் தன் கூட இருப்பதாக சொல்ல அந்த தனிமையான நிலைக்கு பெரும் ஆறுதாலாக அமைய அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து சரிந்துப் படுத்துக் கொண்டாள்.

அவர்கள் எல்லோரும் கிளம்பிய பிறகு நிம்மதியை உணர்ந்தவள் சட்டென்று அந்த யோசனை தோன்றியது...

இரவு கவிழ்ந்து முற்றிலும் சந்தடி நின்றுப் போகும் நேரத்துக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் இழையாள். டியூட்டி நர்ஸ் பன்னிரண்டரை போல வந்து செக் செய்து விட்டு போக தூங்குவது போல படுத்துக் கொண்டாள்.

மெது மெதுவாய் காத்திருந்து இரவு ஒரு மணிக்கு வெளியே வந்தாள் இழையாள். ஏற்கனவே அந்த பில்டிங் முழுக்க சைலன்ட்ஸ் தான். இதுல இரவு கவிழ சொல்லவே வேண்டாம். முற்றிலும் டிம் லைட்டில் பெரும் அமைதியை சூழ்ந்து இருந்தது.

ஒவ்வொரு தளமா போய் பார்க்கணுமே என்று யோசித்தவள் அந்த கட்டிடத்தின் ப்ளூ பிரிண்ட் ஒவ்வொரு தளத்தின் ரிஷப்ஷனிலும் இருந்தது நினைவுக்கு வர வேகமாய் அவ்விடம் நோக்கி சென்றாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : May 5, 2026 6:29 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top