சேகரனும் ரேவதியும் நீண்ட வருடங்களுக்கு பிறகு அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார்கள். இந்த முறை அத்தனை கம்பீரத்துடன் யாரும் துரத்தி அடிக்கா வகையில் தங்களின் உயரத்தை வளர்த்துக் கொண்டு கம்பீரமாக உள்ளே வந்தார்கள்.
இங்கிருந்து போகும் பொழுது அவர்களிடம் ஒன்றுமே இல்லை. ஏன் படிப்பு கூட முழுமையாக இல்லை. ஆனால் இப்பொழுது ரேவதி மிகப்பெரிய பேங்க் ஆபிசெர், சேகரன் பெயர் சொல்லும் அளவுக்கு பதவியில் இருக்கிறார். சொத்து சுகம் என அனைத்திலும் முன்னணியில் இருக்கிறார்கள். இது போதாது என்று கதிரவன் என்கிற மிகப் பெரிய மலை பின்னாடி இருக்கிறதே.. பிறகு அவர்கள் எப்படி பின் தங்கிப் போய் இருப்பார்கள்.
யாரும் அழைக்காமல் அந்த வீட்டுக்குள் தன் மகன், மகள், மனைவி சகிதம் உள்ளே வந்த சேகரன் அடுத்த நாள் நிச்சயத்துக்கு வீட்டை தயார் செய்ய ஆரம்பித்து விட்டார்.
கூடவே மாதவனும் நிறுவனத்தின் ஆட்களும் வர பரபரவென்று வேலை நடந்தேறியது.
“இங்க எந்த நிகழ்ச்சியும் நடக்க விட மாட்டேன்” என்று சதாசிவம் கத்த,
“உம்ம அனுமதி யாருக்கு வேணும்” என்று கேட்ட சேகரன்,
“இது பரம்பரையா வந்த வீடு. இந்த வீட்டுல தான் என் பொண்ணுக்கு நிச்சயம் நடக்கணும். அதை தடுக்கு உமக்கு எந்த உரிமையும் இல்லை. மீறி தடுக்க நினைச்சா இந்த வீட்டுல இருக்குற பங்கை கேட்டு கோர்ட்டுக்கு போவேன்” சேகரன் மிரட்டிவிட, வேறு வழியில்லாது சதாசிவம் அடங்கி தான் போகவேண்டி இருந்தது.
கொதிக்கும் எரிமலை உள்ளுக்குள் வெடித்துக் கொண்டு இருந்தது அவருக்கு. ஆனால் அதை எங்குமே காட்ட முடியவில்லை என்பது தான் சிறப்பு. இல்லன்னா இந்நேரம் அவ்வளவு அசிங்கமான வார்த்தைகள் எல்லாம் அவரின் வாயில் இருக்கும் என்று சொல்லவே முடியாது.
ஆனால் வார்த்தைகளை கூட அவரால் இஷ்ட்டப்படி வீச முடியவில்லை. காரணம் கதிரவனும் அந்த வீட்டுக்குள் நுழைந்து இருந்தான். முழுமையாக பல்லை பிடுங்கிய பாம்பின் நிலை. போதாதற்கு வாயையும் தைத்து விட்ட நிலையில் இருந்தார் அந்த கிழட்டு மனிதன்..
நிச்சயத்தை சிறப்பாக நடத்தி முடித்தவன், பெண்ணவளை ஆசையாக பார்த்தான். சபை என்பதால் வெளிப்படையாக அவளை பார்க்க முடியவில்லை.
உறுதி பண்ணும் வேளையில் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட வைரத்தால் செய்த நெக்லசை அவளின் கழுத்தில் அணிவித்தான். எல்லாமே பனிநிலவுக்கு பார்த்து பார்த்து செய்தவனின் அன்பில் அவள் திக்குமுக்காடி போனாள்.
அத்தனை பேரின் மத்தியிலும் அவனை நிமிர்ந்துப் பார்க்க அத்தனை கூச்சமாக இருந்தது. ஆனாலும் அவனை கண்ணில் முழுமையாக நிரப்பி இதயத்துக்குள் நிரப்பிக் கொண்டாள்.
--
அடுத்த நாளே அந்த வீட்டின் முன் வாசலில் முகூர்த்த கால் ஊன்றி, ஊருக்கே தாய்மாமன் சோறு ஆக்கிப் போட்டான் கதிரவன்.
அவனின் ஒவ்வொரு செயலிலும் பெண்ணவள் தான் பெரிதும் தடுமாறிப் போனாள். இப்பொழுதே அவனின் நெஞ்சில் புதைந்துக் கொள்ள அத்தனை வேட்கை பிறந்தது. ஆனால் நேரம் அவர்களுக்கு வாய்க்கவே இல்லை.
அதோடு ரேவதியின் குடும்பம் மொத்தமும் சதாசிவத்தின் வீட்டில் வசிக்க எங்கிருந்து கதிரவனை பார்ப்பது. முகூர்த்த புடவை எடுக்க, தாலி செய்ய, பத்திரிகை அடிக்க, நகை எடுக்க, என அவளை அழைத்துக் கொண்டாலும் கதிரவனிடம் மனம் விட்டு ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
அல்லி தன் மருமகள் துளசியை அழைத்துக் கொண்டு கதிரவனின் வீட்டுக்கு வந்து விட்டார் கல்யாண வேலையை பார்க்க. காமாட்சியின் அண்ணியும் அவரின் தங்கையின் குடும்பமும் உதவி செய்ய வந்து விட.. வீடே மனித தலைகளால் நிரம்பி போனது.
அது போதாது என்று அக்கம் பக்கம் இருக்கும் நெருங்கிய சொந்தம் அங்காளி பங்காளி என அனைவரும் வந்து விட்டார்கள். மாதவனின் குடும்பமும் வந்து விட்டது உதவியாக. மூன்று நேரமும் இங்கு தான் உணவு. தூங்க மட்டும் தான் வீட்டுக்கு போனார்கள்.
கல்யாணத்திற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பே அனைவரும் வந்து விட்டார்கள்.
விசாலாட்சிக்கு பெருமை தாங்கவில்லை. “இருந்தா என் பெரிய பேரன் மாதிரி இருக்கணும். எப்படி ஊருக்கே ராசா மாதிரி இருக்கிறான் பாரு..” என்று தன் தங்கையிடம் சொல்லி பெருமை பட்டவர் தினமும் அவனுக்கு சுற்றி போட்டார்.
தேவன் தன் பிள்ளைகளை அதட்டி உருட்டி ஊருக்கு வர சொல்லி விட்டார் பத்து நாட்களுக்கு முன்பே. கலாவுக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால் தேவனின் கோவத்துக்கு பயந்து அமைதியாகிப் போனார்.
காமாட்சிக்கு உதவி செய்ய நான் நீ என்று அத்தனை பேரும் வந்து விட அங்கு செல்லா காசாகிப் போனார்கள் மங்கையும் கலாவும். ஆனால் அவர்களை எந்த குறைவும் இல்லாமல் கவனித்துக் கொண்டார் காமாட்சி.
பொன்னனும் தேவனும் பத்திரிகை வைப்பதில் பிசியாகி விட்டார்கள். மாதவன் கல்யாணத்துக்கு வேண்டிய அத்தனை வேலைகளையும் கம்பெனி ஆட்களை வைத்து செய்துக் கொண்டு இருந்தான். கோபாலும் பத்து நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து விட, கதிரவனுக்கு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ செய்தான். தன் தந்தையை மாதவனுக்கு உதவியாக இருக்க சொன்னான். அவரும் மகிழ்வுடன் மாதவனுடன் இணைந்துக் கொண்டார்.
ஆனால் கலாவின் பிள்ளைகள் இருவரும் கொஞ்சமும் அசையவில்லை. அதை யாரும் கண்டுக் கொள்ளவே இல்லை.
சேகரன் தான் தடுமாறிப் போனார். எல்லாத்துக்கும் கதிரவன் இருந்தான். இப்பொழுது அவனை தொந்தரவு பண்ண முடியாதே என்று அவர் தனியாக வெளி வேலைகளை பார்க்க ஆரம்பிக்க, அவருக்கு காரை ஓட்ட வந்து விட்டான் கதிரவன்.
“டேய் நீ மாப்பிள்ளை டா.. நீ எதுக்கு வர்ற.. நீ போய் ரெஸ்ட் எடு. அப்ப தான் கல்யாணத்தப்ப பிரெஷா இருக்கும்” என்றவரின் பேச்சை காதில் வாங்காமல் அவர் பத்திரிக்கை வைக்க வந்து விட்டான்.
அதோடு ரேவதிக்கு உதவி செய்ய உறவினர்களை அனுப்பி வைத்தவன், போதாது என்று கம்பெனி ஆட்களையும் அனுப்பி வைத்தான்.
மகளுக்கு நகை புடவை எடுக்க மற்ற சாமான்கள் வாங்க என்று வந்து விட்டான்.
அதை பார்க்க பார்க்க ஒருத்திக்கு உள்ளுக்குள் அத்தனை நெகிழ்வு..
“எப்படி தான் எல்லோருக்கும் இவ்வளவு அன்பை பாராபட்சம் இல்லாம குடுக்குறாரோ..” எண்ணியவன் வீடு வத்து பொழுது அவனுக்கு தண்ணீரை கொண்டு போய் நீட்டினாள். வாங்கி பருகியவன்,
“இன்னும் கொஞ்ச நாள் தான்” என்றான்.
“ம்ம்” என்று மட்டும் சொன்னவள்,
“வெளில கூட்டிட்டு போகலாம் இல்லையா?” கேட்டாள்.
“உனக்கு போகணுமா?” என்று கேட்டான்.
“ம்ம்” என்றவளை கிளம்ப சொன்னவன், தன் அக்காவையும் கிளப்பி மாமனோடு காரில் ஏறினான்.
அப்பாவையும் அம்மாவையும் வச்சுக்கிட்டு தான் வெளில போவாங்களா தன் மாமனை முறைத்துப் பார்த்தவள் கடுப்புடன் திரும்பிக் கொண்டாள் வெளிப்புறம். அதை நமட்டு சிரிப்புடன் பார்த்த கதிரவன்,
அந்த கடைக்குள் நுழைந்து வேண்டா வெறுப்பாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ந்தவளின் காதுக்குள்,
“உன்னை தனியா மட்டும் கூட்டிட்டு போனனா என்னை என்னாலையே கட்டுப் படுத்திக் கொள்ள முடியாதுடி.. அவ்வளவு தீவிரமா உன் மேல இருக்கேன்...” என்று சொன்னவன், “உன் மாமாவும் பாவம் தான்” என்றான்.
உதட்டை சுளித்து அவனுக்கு பழிப்பு காட்டியவள்,
“என்னை தவிக்க விடுறதுக்கு எல்லாம் பனிஷ்மென்ட் கண்டிப்பா உண்டு” என்றாள்.
“பரவாயில்ல.. அனுபவிசுக்குறேன்டி..” என்றவன்,
“ஆனா எல்லாமே என் மேல இருந்து தான் நீ குடுக்கணும்” இவன் கண்டிஷன் போட்டான்.
“ம்கும்.. இதுக்கு எதுக்கு நான் பனிஷ்மென்ட் குடுக்கணும்” நொடித்துக் கொண்டவள் சட்டென்று அவனின் கையை பிடித்துக் கொண்டாள்.
“பேட்லி மிஸ் யூ கதிரவா” என்றாள் அவளின் விழிகள் கலங்கிப் போனது.





