தன் மகளிடம் போவதற்கு முன்பு தேவகி வீட்டிற்கு தகவல் தர எல்லோரும் அடித்து பிடித்துக் கொண்டு ஓடி வந்தார்கள். கார்த்தியை அவசர பிரிவில் சேர்த்து தோளை துளைத்த குண்டை வெளியே எடுக்கும் தீவிர பணி தொடங்கியது.
இன்னொரு பக்கம் யுகேஷ்க்கு மண்டை பிளந்து அதிக உதிரம் வெளியேறி இருக்க அவனுக்கு இரத்தம் ஏற்றி மண்டையை தையல் போட வேண்டி இருந்தது.
வருணும் பிரகாஷும் இரத்தம் குடுக்க முன்வர வகை பார்த்து எடுத்துக் கொண்டார்கள். இந்த பக்கம் ஏந்திழையாளை அனைவரும் கட்டி தழுவி ஆசுவாசம் கொண்டு கண்ணீர் விட்டு என அவளை பாடாய் படுத்திக் கொண்டு இருந்தார்கள்.
ராசசிங்கனை யாராலும் நெருங்க முடியவில்லை. இல்லை என்றால் அவனையும் இந்த கும்பல் ஒரு வழியாக்கி இருக்கும்.
வேல்முருகன் அடித்து பிடித்துக் கொண்டு அந்த மருத்துவமனைக்கு ஓடி வர, அவரை எல்லோரும் பிடி பிடி என்று பிடித்துக் கொண்டார்கள்.
“சொந்த பேரனையே என்கிட்டே இருந்து மறைச்கிட்டீங்கள்ள? அப்படி என்ன பண்ணினேன் உங்களுக்கு.. ஏற்கனவே மகளை பறிக்கொடுத்தது பத்தாதுன்னு என் பேரனையும் என்கிட்டே இருந்து மறைச்சிட்டீங்களே” என்று பாக்கியம் பாட்டி அழ, அவரை யாராலும் சமாதனம் செய்ய முடியவில்லை.
“எனக்கே ஆறு மாசத்துக்கு முன்னாடி தான்டி தெரியும்” என்று அவர் சொல்ல,
“அதெல்லாம் எனக்கு தெரியாது... நீங்க ஏன் சொல்லல அவன் என் பேரன்னு..” என்று மூக்கை சிந்த,
“இப்போ உன் பேரன்னு தெரிஞ்சா மட்டும் நீ என்ன பண்ணிடுவ?” என்று ஒரு கம்பீர குரல் கேட்க கண்களில் நீர் வடிய திரும்பி பார்த்த பாட்டி,
“அய்யா ராசா... என்னய்யா இப்படி சொல்லி போட்ட.. உன்னை என் கண்ணுக்குள்ள வச்சி பார்த்து இருந்து இருப்பேன் ய்யா... நீ என் சாமி” என்று அவனது உயரம் போதாமல் அவனது நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் வடிக்க அவன் கொஞ்சமும் இளகவே இல்லை...
“உன் கண்ணுல வைக்கிற உருவமா நான்?” என்று அவன் முறைக்க.
“போ ராசா... உன்னை நான் பொத்தி பொத்தி வச்சு இருந்து இருப்பேன்னு சொன்னேன்..” என்றவர்,
“கீழ வாரா ராசா” என்று சொல்லி அவனை குனிய வைத்து அவனின் முகத்தை வருடி விட்டவர்,
“அப்படியே என் பொண்ணு சாயல்ல உங்க தாத்தனை மாதிரியே இருக்க சாமி” என்று கண்ணீர் நெகிழ அவனை அணைத்துக் கொண்டார்.
“ம்கும் இவ்வளவு நாள் இது தெரிலையா?” என்றான் முறைப்பாக.
“அப்போ நான் உங்க சாமி இவ்வளவு பக்கத்துல பார்த்தேன்...” என்று அவர் ஆதங்கமாய் சொல்லி சின்ன பாட்டியிடம் அவனை காட்டினார்.
“பாருடி என் பேரனை. அப்படியே அவங்க தாத்தனாட்டம்.. ராசா கணக்கா இருக்கான்ல.. என் சாமி...” என்று அவனுக்கு திருஷ்ட்டி கழிக்க எல்லோரும் அவனை வியந்து போய் பார்க்க, ஏந்திழையாள் மட்டும் அதையெல்லாம் வெறும் காட்சியாக கூட பார்க்கவில்லை. கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.
“உன் மாமன் மகன்னு தெரிஞ்சு தான் இழையை கட்டிக்கிட்டீங்களா அண்ணா?” என்று இழையாலின் அத்தை மகள் கேட்க,
“ம்ம்” என்றான்.
“உண்மையை சொல்லியே திருமணம் செய்து இருக்கலாம் சாமி.. நாங்க எல்லோரும் உன் பக்கம் நின்று இருப்போம்” என்று தன் மனக்குறையை பாக்கியம் சொல்ல அவரை கூர்ந்து பார்த்தவன்,
“இப்ப கூட எனக்காக தான் பார்க்குறீங்க.. அப்போ இவ்வளவு நாள் உங்க கூட இருந்த உங்க பேத்தியை நீங்க கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கவே இல்லல்ல...” என்றான் கோவமாக.
“ராசா என்னய்யா சொல்ற...” என்று அவர் பதற,
“மாப்பிள்ளை யாரா வேணா இருக்கட்டும் . ஆனா அங்க மணமகளா உட்கார்ந்து இருக்கிறது உங்க பேத்தி தானே... ஏன் அவளுக்கு நீங்க எதுவும் செய்யல. ஏன்னா உங்களுக்கு அவ பொருட்டே இல்ல. அவளோட உணர்வுகள் கூட ஒரு பொருட்டே இல்ல... ஆனா அவ உங்க யாருக்கும் ஒன்னும் ஆகக் கூடாதுன்னு அவ வாழ்க்கையே பணையம் வச்சு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவ ஒன்னும் இந்த திருமணத்தை ரொம்ப விரும்பி எல்லாம் செய்துக்கல. வேறு வழியே இல்லாம உங்களுக்காக செய்துக்கிட்டா. ஆனா நீங்க அவளுக்காக ஒரு தூசியை கூட எடுத்து போடல..” என்று அவனது கோவத்தை காட்ட எல்லோருமே ஸ்தம்பித்து போனார்கள்.
ஆமாம் யாருக்குமே மனம் வரவில்லையே... சீர், செனத்தி, பத்திரிக்கை அடித்து, பந்தல் போட்டு, ஊர் சனங்களை அழைத்து விருந்து போட்டு, வீட்டு பெண்ணுக்கு பார்த்து பார்த்து நகை நட்டு எடுத்து போட்டு, பட்டு சேலை புது சேலையா பார்த்து பார்த்து செய்யணும் இல்லையா? ஏன் எதையும் செய்யாம போனோம் என்று அனைவரும் தலையை குனிய,
யாரும் செய்யாம போகட்டும். ஆனா நீங்க அவளை பெத்தவங்க தானே.. உங்களுக்கு கூடவா தோணல.. என்று அவரை நிற்க வைத்து கேள்வி கேட்க,
“எங்க அம்மாவை தேவையில்லாம பேசவேண்டாம்.. அவங்க வந்தாங்க. ஆனா நீங்க தான் அவங்களை உள்ள விடல” என்று அதுவரை அமைதியாக இருந்த ஏந்திழையாள் வாயை திறந்தாள்.
“எப்போ விடியற் காலையில கல்யாணத்தை வைச்சுக்கிட்டு வெறும் நகையை மட்டும் அர்த்த ராத்திரியில தூக்கிட்டு வந்தா ஆச்சா...? உடனே வாங்கன்னு கூப்பிட்டு உன்கிட்ட அந்த நகையை போட சொல்லி குடுக்கணுமா? சுந்தரம் மகளுக்கு வேணும்னா அந்த பிச்சை நகை பெருசா தெரியலாம். ஆனா நீ ராசசிங்கன் பொண்டாட்டிடி. உனக்கு அந்த பிச்சை நகை எதுவும் வேணாம்னு தான் உன்னை பார்த்து பார்த்து வைரத்துள இளைச்சேன்” என்று சொன்னவனின் காதலை அங்கு இருந்த அத்தனை பெரும் உணர்ந்துக் கொண்டார்கள்.
ஆனால் ஏந்திழையாள் மட்டும் அதை கண்டுக் கொள்ளவே இல்லை.
‘போடா உன் கூட நான் டூ... நீ என்ன கம்பி கட்டுற கதை சொன்னாலும் சரி நான் மயங்க மாட்டேன்...’ என்று எண்ணிக் கொண்டவள் அவனது முகத்தை பார்க்காமல் திரும்பி படுத்துக் கொண்டாள்.
அதன் பிறகு அங்கு எந்த சத்தமும் இல்லாமல் போக என்ன அதுக்குள்ள எல்லோரும் போயிட்டாங்களா என்ன என்று திரும்பி பார்க்க திகைத்துப் போனாள். அவளுக்கு வெகு அருகில் படுத்து இருந்தான் ராசசிங்கன்.
அவனை இவ்வளவு நெருக்கத்தில் எதிர் பாராதவளுக்கு பக்கென்று இருக்க சட்டென்று திரும்பிக் கொண்டாள்.
“என்னடி திரும்பிக்கிட்ட கொழுப்பா... ஒழுங்கா என் பக்கம் திரும்பு” என்றான் அதிகாரமாய்.
“நான் ஏன் உங்க பக்கம் திரும்பனும்.. ஆமா நீங்க யாரு? உங்களுக்கும் எனக்கு என்ன சம்மந்தம்?” என்று கேட்டவளின் முதுகோடு ராசசிங்கன் முகம் புதைக்க,
“ப்ச் கண்டவங்களும் என் கிட்ட ஒட்டி உரச வேண்டாம்.. முதல்ல நீங்க இங்க இருந்து கிளம்புங்க” என்று அதட்டலாக சொன்னவளை வலுக்கட்டாயமாக திருப்பி போட்டவன்,
“உன்னை யாரு ஒட்டி உரசுனா? நான் என் மகனை தான் தொட்டு வருடுறேன்” என்றவன் அவளின் புடவையை நகர்த்தி விட்டுட்டு தன் கையை அவளின் வெற்று வயிற்றில் வைத்து வருடி விட அவளுக்கு தேகம் மொத்தமும் சிலிர்த்தது.





