“அப்போ வேறும் புடவைய தான் கட்டிக்கப் போறியா?” அவன் கேட்க, திகைத்துப் போனாள்.
“திசிஸ் டூ மச்.. ரொம்ப எல்லை மீறுறீங்க நீங்க”
“அதனால தான் சொல்றேன்.. போய் ப்ளவுஸ் தைக்க குடுக்கலாம்னு” விடாமல் அவன் சொல்ல, இவளுக்கு முகம் சிவந்துப் போனது.
“சரி” என்று சொல்ல முடியாமல்,
“கீழ போறேன்” என்று கீழே ஓடி விட்டாள்.
அவளின் கூச்சத்தை கண்டு இதழ்கள் பிரியாமல் சிரித்தவன் சிறிது நேரம் அமர்ந்து விட்டு தானும் படுக்க கீழே வந்தான்.
அடுத்த நாள் அதிகாலையில் மொட்டைமாடியில் எப்பொழுதும் போல உடற்பயிற்சி செய்துக் கொண்டு இருந்தவனுக்கு வேலையாள் சூப்போடு வந்தார்.
ஓரமாக வைக்க சொல்லி விட்டு அவனது வேலையை இடைவிடாமல் தொடர்ந்தான். அந்த அதிகாலை நேரத்தை ரசிக்க மேலே வந்த பனி அவன் இருப்பதை பார்த்து மீண்டும் கீழே இறங்க,
“இங்க வா பனி” என்று அழைத்தான்.
மனம் அவளை கீழேப்போக சொல்ல, கால்களோ அவளை அவனிடம் நகர்த்திச் சென்றது.
“நீயும் வந்து ஜாயின் பண்ணு” என்றான்.
“ஹாங்.. நானா” என்று தினறியவள்,
“இல்ல நான்.. எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல” என்றாள்.
“பரவாயில்ல நான் பழக்கி விடுறேன் நீ செய்” என்றவன் தான் செய்வதை நிறுத்தி விட்டு அவளுக்கு அருகில் வந்து நின்றவன்,
“முதல்ல வாம்அப் மாதிரி பண்ணிட்டு பிறகு ஸ்டார்ட் பண்ணலாம்” என்று அவளுக்கு அவன் சொல்லி தர,
திகைத்தாள். இதென்ன வம்பு என்று.
“இல்ல.. ப்ளீஸ்.. நான் கீழ போறனே”
“போய்க்கலாம் போய்க்கலாம்” என்றவன் அவளை விடவே இல்லை.
“செய்து தான் ஆகணும்” என்று விடாபிடியாய் நிற்க, தவித்துப் போனாள்.
“ட்ரெஸ் கூட ட்ரக்கிங் போற மாதிரி தானே இருக்கு. சோ நோ ப்ராப்ளம். செய்” என்று அவள் மறுக்க மறுக்க செய்ய வைத்த பிறகே விட்டான்.
பத்து நிமிடம் கூட ஆகி இருக்காது.. இவளுக்கு வியர்த்து விறுவிறுத்துப் போனது.
இந்தா இந்த துண்டுல துடைச்சுக்க.. என்று அவனது துண்டை குடுக்க, யோசனை இல்லாது வாங்கி முகம் துடைத்தவளுக்கு அவனின் ஆண் வாசனை அவளின் முகம் எங்கும் அப்பிக் கொண்ட உணர்வு.
“ஐயோ கடவுளே” என்று முன்பை விட இப்பொழுது தான் அதிகமாக தவித்துப் போனாள்.
“ம்ம் துடைச்சுட்டு மறுபடியும் கண்டினியூ பண்ணு” என்று அவளை பிழிந்து எடுத்தான்.
“காலைப்பொழுதை இரசிக்கலாம்னு தெரியாம வந்துட்டேன். அதுக்குன்னு இப்படியா வச்சு செய்வாரு” மனதுக்குள்ளே முணகிக் கொண்டவள், முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் செய்தாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல், “நான் சித்தியை கூட்டிட்டு வரவா..?” கேட்டாள்.
“அவளுக்கு கல்யாணம் ஆகப் போகுது இல்லையா.. அதனால அவ வேணாம். நம்ம மட்டும் செய்வோம்” என்று அவளை அங்கும் இங்கும் அசையக் கூட விடவில்லை.
சக்கையாய் பிழிந்து எடுத்து விட்டான்.
“அடப்பாவி.. ஒரு வாயில்லா பிள்ளை கிடைச்சா நீ என்ன வேணாலும் செய்வியா? இனி நான் அதிகாலையில எழுந்தா தானே நீ என்னை இப்படி எக்ஸ்சைஸ் பண்ண சொல்லுவ.. இனி எனக்கு அதிகாலை நீ வேலைக்கு கிளம்புன பிறகு தான்” மனதுக்குள் சூழுரைத்துக் கொண்டாள் பனிநிலவு.
ஆனா அது கதிரவனிடம் செல்லுபடியாகுமா என்ன..? கீழே இருந்த வேலையாளிடம் இன்னொரு கப் சூப் அனுப்பி விட சொன்னவன் வந்த பிறகு அவளுடன் இணைந்து குடித்தான்.
“சாப்பிட்டுட்டு கிளம்பி வா.. அளவு குடுத்துட்டு வந்திடலாம்” என்றான்.
“இவர் இதை மறக்கவே மாட்டாரா..” புலம்பியவள் வேறு வழியில்லாது காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பி வந்தாள்.
அவளை அழைத்துக் கொண்டு ஜீப்பில் ஏறியவன் அவளை முன் பக்கமாக அமர சொல்ல ஏறி அமர்ந்தவளுக்கு இவருடன் தனியாவா அளவு குடுக்க போறோம் என்று கூச்சமும் சொல்லரியாத உணர்வும் அவளை ஆக்கிரமித்தது.
வீட்டின் உள் பக்கமாய் குரல் கொடுத்தான். “அம்மா” என்று.
அவர் அவசர அவசரமாய் வருவதை பார்த்து, “அம்மாச்சி வராங்களா.. அப்போ நான் பின்னாடி போய் உட்கார்ந்துக்கவா அவங்களோட?” கேட்டாள்.
“நான் என்ன சிங்கம் புலியா என் பக்கத்துல உட்கார்ந்தா உன்னை கடிச்சு தின்ன.. அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ இங்கயே இரு. அம்மா பின்னாடி இருப்பாங்க” என்று விட்டான்.
“எல்லாம் ஆடர் தான் போல..” எண்ணிக் கொண்டாள்.
அதன் பிறகு அவர்களை கடையில் இறக்கி விட்டுட்டு கிளம்பி விட்டான்.
அவனது அந்த நாகரீகம் ஏனோ நெஞ்சை விட்டு அகலவில்லை. போகும் அவன் அவளின் நெஞ்சில் நிறைந்து தான் போனான் அவனறியாமலே.
“ஒரே டிசைன் போல இல்லாம எல்லாமே வேற வேற டிசைனா பார்த்து தைங்க..” என்று காமாட்சி எடுத்துக் கொடுக்க,
“அதை எல்லாம் நீங்க சொல்லணுமா ம்மா” என்றவர்,
“ஆமா இந்த பொண்ணு யாரும்மா இவ்வளவு கவனிக்கிறீங்க?” ஆர்வமுடன் கேட்ட பெண்ணுக்கு,
“என் பேத்தி ம்மா” என்றவரை திகைத்துப் போய் திரும்பி பார்த்த பனிக்கு நெஞ்சுக்குள் பெரும் அதிர்வு.
“ஆன்டி நீங்க..” தடுமாறினாள் பனி.
“இருக்கட்டும் ம்மா.. வெளில இருக்கவங்களுக்கு எல்லாம் விளக்கம் சொல்ல முடியாது பாரு.. அது தான் இப்படி சொல்லிட்டேன். நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத” என்ற காமாட்சியை வாயடைத்துப் போய் பார்த்தாள்.
“இவருக்கு எதுவும் தெரிஞ்சு இருக்குமோ” என்று உள்ளுக்குள் ஒரு உதறல்.
தலையை ஆட்டியவள் அதன் பிறகு அவரிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் காமாட்சி அவளிடம் பேசிக் கொண்டே இருந்தார்.
“நாளைக்கு கழிச்சு குலதெய்வ கோயிலுக்கு போய் பொங்கல் வச்சு சாமி கும்பிட்டு வரணும் கண்ணு.. கல்யாணம் வேற நெருங்குது இல்லையா.. ஒன்னு ஒன்னா செஞ்சா தான் சரியா வரும். அதுக்கு பிறகு முகூர்த்த கால் ஊனிட்டா அங்கும் இங்கும் நகரவே முடியாது.. இன்னும் கொஞ்சம் புடவை எடுக்கணும்னு மாமியார் சொன்னாங்க.. நம்மக்கிட்ட வேலை செய்யிறவங்களுக்கு மட்டும் துணி எடுக்கணும். இந்த வேலை முடிஞ்சா கடை தெருவுக்கு போற வேலை இருக்காது” என்று அவர் பாட்டுக்க சொல்ல இவள் கேட்டுக் கொண்டாள்.
காமாட்சியின் போனுக்கு போன் வந்தது கதிரவனிடம் இருந்து..
“வேலை முடிஞ்சதா ம்மா”
“அவ்வளவு தான் தம்பி.. முடிஞ்சுது” என்றார்.
“சரி நீங்க வெயிட் பண்ணுங்க.. நான் வந்திடுறேன்” என்றவன் சிறிது நேரத்திலே வந்து விட்டான்.
போகும் பொழுது ரொம்ப உஷாராக காமாட்சியுடன் பின்னாடி அமர்ந்துக் கொண்டாள் பனி. கண்ணாடி வழியாக அவளை முறைத்துப் பார்த்தவன், வீட்டில் காமாட்சியை இறக்கி விட்டவன்,
“அவளுக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா” என்று தன்னோடு அழைத்துக் கொண்டு போய் விட்டான். மறக்காமல் முன் பக்கம் அமவைத்து அழைத்துக் கொண்டு சென்றான்.





