‘பதட்டமா...? செத்து போற மாதிரி மூச்சை அடைச்சுக்கிட்டு வருது பெரியப்பா... ஆனா அதை நான் சொன்னா நீங்க அவரோட சேர்த்து எனக்கும் சங்கு ஊதிடுவீங்கன்னு தெரியும்’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவள்,
“யார் எப்படி போனா எனக்கு என்ன.. என்னை எவ்வளவு கொடுமை படுத்தி இருக்கான்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அப்படி பட்டவன் எப்படி இருந்தா என்ன எந்த நிலைக்கு போனா தான் எனக்கு என்ன... யாரை பத்தியும் என்கிட்டே சொல்ல வேணாம் ப்ளீஸ்...” என்று சொன்னவளை குடும்பமே ஊடுருவி பார்த்தது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம். அதை அறிந்து ஆராய எல்லாம் அவளுக்கு நேரமில்லை. அவளுக்கு இப்பொழுதே அவளின் பிள்ளையையும் கணவனையும் காப்பாத்தி ஆகணும். அதுக்காக என்ன வேணாலும் செய்ய முடிவு எடுத்து விட்டாள்.
அதை அறியாமல் பெரியவர்கள் குறுக்கு விசாரணை நடத்த பெரியவர் வேலு எதற்கும் தலையிட்டுக் கொள்ளவில்லை. அவர் ஒதுங்கி இருந்தார். கண்ணனும் சுந்தரமும் ஒதுங்க வைத்து விட்டார்கள்.
மனம் நிறைய வேதனையுடன் தன் பேத்தியை பார்த்தார். அவருக்கு எவ்வளவோ அவளிடம் சொல்ல ஆசை இருந்தது. ஆனால் அவரை வாய் திறக்க விடாமல் அவரின் தம்பியும் பிள்ளைகளும் மாப்பிள்ளைகளும் செய்து விட தன் பேத்திக்காக வேதனை மட்டுமே பட முடிந்தது.
பேரன்களிடம் சொல்லலாம் என்று பார்க்க கண்ணன் தன் தலையில் அடித்து சத்தியம் வாங்கி விட பேரன்களிடம் கூட தன் பிள்ளைகளின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்ட முடியாமல் நொந்துப் போனார்.
ஏற்கனவே ஒரு இழப்பு கண் முன் வர எதுவும் பேசாமல் அமைதியாகிப் போனவர் தனக்குள் மறுகிப் போனார் அவர்.
அப்படி இப்படி என்று அவளை மருத்துவமனைக்கு போக விட்டவர்கள் கூடவே கார்த்தியும் யுகேஷும் கிளம்ப அவர்களை தடுத்து விட்டு கண்ணனும் சுந்தரமும் வந்தார்கள்.
அவர்களுடன் வந்தவளுக்கு என்ன செய்வது என்று எந்த யோசனையும் இல்லை. மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது.
அண்ணனுங்க வந்தால் கூட அது இது என்று எப்படியாவது சமாளித்து இருப்பாள். ஆனால் தந்தைமார்கள் வரவும் அவளால் எதையுமே யோசிக்க முடியவில்லை. தேவகி கூட வரேன் என்று சொல்லியும் யாரையும் அழைத்துக் கொண்டு வரவில்லை தந்தை.
வேல் முருகனுக்கு தன் மகன்களின் செயல்களை எல்லாம் கண்டு அடுத்த இழப்பா என்று தான் தோன்றியது. அப்படி மட்டும் இருந்து விடவே கூடாது கடவுளே... என்று அவர் மனம் அடித்துக் கொண்டது.
இங்கே மருத்துவமனைக்கு உள்ளே நுழைந்தவர்கள் அப்பாயின்ட்மென்ட் படி காத்திருக்க வேண்டி இருந்தது. ராசசிங்கன் இந்த மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அந்த தகவலை கதிர் கசியவிடவில்லை.
“இதுக்கு தான் சொன்னேன் டாக்டரை நம்ம வீட்டுக்கே வர சொல்லி சொல்லாம்னு ஆனா கேட்டா தானே” என்று சுந்தரம் முகத்தை காட்டினார் ஏந்திழையாளிடம்.
அவள் வாய் பேசவே இல்லை. அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
“ப்ச் போனதை விடுடா... டீன் கிட்ட பேசி உள்ளே அவளை போகச்சொல்லு” என்றார் கண்ணன்.
“சரிண்ணா” என்றவர் அந்த மருத்துவமனை டீனுக்கு போனை போட்டார்.
அவர் எடுத்து இவர்களை தன்னுடைய அறைக்கே வரச் செய்தவர் அவர்களை விழுந்து விழுந்து உபசரித்தார். ஏந்திழையாளுக்கு நெருப்பின் மீது நிற்பது போல இருந்தது.
“கடவுளே ஒரே ஒரு முறை என் புருசனை பார்க்க விடு... அவரோட உயிருக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது... உனக்கு பெரிய படையல் வைக்கிறேன்” என்று மனம் கலங்க இறைவனை சரணடைந்தாள்.
இந்த மருத்துவமனையில் தான் ராசசிங்கன் இருக்கிறான் என்று தெரிந்தும் அவளால் அவனை போய் பார்க்க முடியாமல் இருந்ததில் அவளால் மூச்சே இழுத்து விட முடியவில்லை.
அந்த அளவுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. எங்கே மூச்சு திணறல் வந்து விடுமோ என்று பயந்துப் போனவள்,
“ப்பா நீங்க இங்க இருங்க.. நான் டாக்டரை பார்த்துட்டு வந்திடுறேன்” என்றவள் நேராக மகப்பேறு மருத்துவரின் ஓபி க்கு வந்து அமர்ந்து விட்டாள். உள்ளமெல்லாம் ஒரே படபடப்பு...
தன் உடல்நலத்தை பார்க்கும் முன்னாடி தன் கணவனை ஒரே ஒரு முறை மட்டுமாவது பார்த்து விட அவளின் உள்ளம் துடியாய் துடித்தது..
ஆனால் இப்பொழுது அவளால் அசையவும் இயலாது. தற்பொழுது வரை ராசசிங்கன் எங்கு இருக்கிறான் என்று தெரியாதவர்கள், தான் போய் பார்க்க நேர்ந்து தன்னால் அவர் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்று தன்னை அமைதிப் படுத்திக் கொள்ள முயன்றாள்.
ஆனால் கண்களில் கண்ணீர் ஆறாய் பொங்கிப் பெருகிக் கொண்டு இருந்தது..
“இங்க தான் இருக்கீங்க.. ரொம்ப பக்கத்துல தான் இருக்கீங்க.. ஆனா என்னால உங்களை வந்து பார்க்க கூட முடியலயே... நான் என்ன செய்வேன்” என்று தன்னை நொந்தவளுக்கு மனம் ரணமாய்ப் போனது. அதோடு அவளின் கால் வழியாக உதிரம் கசிந்து கீழே வர ஆரம்பிக்க,
அங்கிருந்த நர்ஸ் வேகமாய் ஓடி வந்து அவளை மகப்பேறு மருத்துவரிடம் கூட்டிக் கொண்டு போனார்.
“ஏன்மா எமெர்ஜென்சின்னு சொல்லக் கூடாதா” என்று அவர் ஏந்திழையாளை சத்தம் போட,
“ஐ ஆம் பிரக்னன்ட்” என்றாள்.
“வாட்?” என்று அவர் அதிர,
“ப்ளீஸ் இந்த விசயத்தை என்னோட வந்தவங்களுக்கு மட்டும் சொல்லாதீங்க.. இந்த குழந்தையை கலைச்சிடுவங்க” என்று கைக்கூப்பினாள்.
“முதல்ல குழந்தை உள்ள எப்படி இருக்குன்னே தெரியல.. அதுக்குள்ள எதுவும் முடிவெடுக்க வேணாம் பொண்ணே. அதோட இந்த மாதிரி விசயத்தை எல்லாம் சொல்லாம இருந்தா அது தவறு. முறைப்படியான குழந்தை இல்ல போலையே” என்று கூறிய நர்ஸ் மருத்துவரிடம் கூட்டிக் கொண்டு சென்றார்.
தன் கழுத்தில் பதுக்கி வைத்து இருந்த ராசசிங்கன் கட்டிய தாலியை எடுத்து வெளியே போட்டாள். அந்த தாலியை பார்த்த பிறகே நர்ஸ் முகத்தில் சின்னதாய் அவள் மீது அபிமானம் வந்தது.
கண்ணனும் சுந்தரமும் அவள் கழுத்தில் இருந்த தாலியை கழட்ட சொல்லி சொன்னார்கள் தான். ஆனால் இரண்டு பாட்டியும் அம்மாக்களும் சேர்ந்து அவர்களுடன் போராடி தாலியை அவளது கழுத்தில் இருந்து இறங்காமல் பார்த்துக் கொண்டார்கள்.
மருத்துவரிடம் அவளை கூட்டிக் கொண்டு போக டாக்டர் அவளை ஏற இறங்க பார்த்தார். பார்த்தவர், “இவங்களுக்கு எல்லாம் இங்க மருத்துவம் பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க நர்ஸ்..” என்றார் டாக்டர்.
“ஏன்?” என்று ஏந்திழையாள் அதிர்ந்துப் போனாள்.
“உன் வயித்துல வளர்ற பிள்ளை பாவம் அதுக்கு பெட்டர் ...” என்று சொல்ல இன்னும் அதிர்ந்துப் போனாள். முன் பின் தெரியாத ஒருவளை பார்த்து ஏன் இப்படி சாபம் போல பேசணும் என்று மனம் பதைபதைத்துப் போனாள்.





