வேல் முருகனுக்கு போன் போட்டு பார்த்தான் யுகேஷ். ஆனால் ஏந்திழை மற்றும் வேல்முருகன் இருவரின் போனும் ராசசிங்கனின் வசம் இருந்தது. அதனால் அவர்களை தொடர்பில் கொண்டு வரவே முடியவில்லை.
அதை தேவகியிடம் சொல்லி ஆத்திரம் கொண்டவன்,
“இதுக்கெல்லாம் நீ நல்லா அனுபவிப்ப சிங்கன். எனக்கும் ஒரு நேரம் வரும். அப்போ தெரியும் ஏன் இந்த யுகேஷ் கிட்ட பகைச்சுக்கிட்டோம்ன்னு. நினைக்க வைப்பேன்டா” என்று இவன் கொக்கரிக்க,
“அப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில வரவே வராதுடா... நீ பகல் கனவு வேணா கண்டுக்கிட்டு இரு” என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டான்.
எவ்வளவு முயற்சி செய்தும் ஏந்திழையாளை பார்க்க முடியாமல் போனதில் சோர்வுற்று ஹோட்டலுக்கு சென்றார்கள்.
அங்கே நடந்ததை கேள்வி பட்ட பெரியவர்கள் இன்னும் ராசசிங்கனின் மீது கடும் வெஞ்சினம் கொண்டார்கள். ராசசிங்கன் வீழும் நாட்களுக்காக அனைவரும் காத்திருக்க தொடங்கினார்கள்.
பல வல்லுரு ஓநாய்கள் ஒன்று கூடி காட்டின் சிங்கத்தை வீழ்த்த தக்க தருணம் பார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்தும் சிங்கன் எதற்கும் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவன் எப்பொழுதும் போல மிக இயல்பாகவே இருந்தான்.
திருமண நாள் மிக அழகாக விடிந்தது... தங்க இழைகள் கோர்த்து வைரம் மினுமினுங்க கை தேர்ந்த சிற்பி வடித்த உயிருள்ள சிலை போல மணமேடை ஏறினாள் ஏந்திழையாள். அவளுக்கு முன்னாடியே மனையில் அமர்ந்து இருந்தான் ராசசிங்கன்.
பெயருக்கு ஏற்றவாறு சிங்கமாக முரட்டு தனத்துடன் கம்பீரமும் உயரமும் கூடி கல்யாண மிளிரவும் கூட ஆண்மைக்கு உரிய ஒட்டு மொத்த இலக்கணமாக அமர்ந்து திருமண சடங்கை செய்துக் கொண்டு இருந்தான்.
இவளின் அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவன் இதமாக சிரித்தான். அவனது முதல் புன்னகை தனக்காக மலர்ந்து என்பதில் தடுமாறிப் போனாள் ஏந்திழையாள்.
“கவனம்” என்று சொல்லி எச்சரித்தவன் அவள் அமர தன் கையை நீட்டினான். அவனின் கையை தொட தயக்கமாக இருந்தது என்றாலும் அனைவரின் முன்பும் எந்த மனக்கசப்பையும் காட்டிக் கொள்ளாமல் இவளும் புன்னகையுடன் அவனது கையை பற்றிக் கொண்டு அவனுக்கு அருகில் மனையில் அமர்ந்தாள்.
அவளுக்கு எதிரே அவளின் வீட்டு ஆட்கள் அமர்ந்து இருந்தார்கள். மணமேடையில் தான் அனைவரும் சுற்றி இருந்து இருக்க வேண்டும். ஆனால் ராசசிங்கன் யாரையும் மணமேடையில் ஏறவிடவில்லை. வேல்முருகனை தவிர அனைவரும் கீழே தான் நின்று இருந்தார்கள் வேறு வழியில்லாமல்.
இவ்வளவு நாளும் திருமணத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருந்தவர்கள் திருமண நாளன்று மட்டும் மேடை ஏறி அருகில் நிற்க பார்க்க அதற்கு ராசசிங்கன் விட்டு விடுவானா என்ன? நீங்க என்னடா வெண்ணை ஒதுக்கி வைக்கிறது... நான் ஒதுக்கி வைக்கிறேன்டா உங்க ஒட்டு மொத்த பேரையும் என்று களத்தில் இறங்கி விட்டான் சிங்கன்.
கதிரை அழைத்து விசயத்தை சொல்ல “நான் பார்த்துக்குறேன் பாஸ்” என்று சொன்னவன் அதன் பிறகு மணமேடைக்கு யாரும் செல்லா வண்ணம் பார்த்துக் கொண்டான்.
காட்சை மீறி அவர்களால் ஏந்திழையாளை நெருங்க முடியவில்லை. தேவகிக்கு நேற்றிலிருந்து கண்ணீர் நிற்கவே இல்லை. மணமாக போகும் பெண்ணுடன் பேச தாய்க்கு ஆயிரம் விசயங்கள் வரிசை கட்டி இருந்தது. ஆனால் அதை எதையும் செய்ய விடாமல் சிங்கன் தடுத்து விட்டான்.
தீம் முதல் தவறு தங்கள் பக்கம் தான் உள்ளது என்று உணர்ந்தவர் தன் மனக்குமுறலை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. காட்டிக் கொண்டால் மட்டும் என்ன பெரிய மாற்றம் நடந்து விடும்.
வீட்டு ஆண்கள் குடும்ப கெளரவத்துக்காக மண்டபத்தில் வந்து நின்றார்களே தவிர உள்ளார்ந்த அன்பு எள்ளு முனையளவு கூட இல்லை. அதை தெரிந்து வைத்த பெண்கள் அவர்களுக்கு அடங்கி போக வேண்டி இருந்தது.
அன்றிலிருந்து இன்று வரை பெண்களின் நிலை இப்படியே தானே இருக்கிறது... சுயமான முடிவு எதையும் எடுக்க விடாமல் குடும்பம் என்னும் வலையில் சிக்க வைத்து விடுகிறார்கள்.
பெண் சுதந்திரம் என்பது அவள் விரும்பியதை செய்வது மட்டும் இல்லை. அவள் செய்ய விரும்பாத செயலை செய்ய சொல்லி வற்புறுத்தாமல் விடுவதே பெண் சுதந்திரம் என்றார் ஒரு பெண் பேச்சாளர். ஆனால் நடைமுறையில் இது இரண்டுமே சாத்தியமில்லை.
அதை எண்ணி பெருமூச்சு விட்ட பெண்கள் தேவகியை அவர்களால் முடிந்த மட்டும் தேற்றி எடுத்தார்கள்.
கன்னிகா தானம் எல்லாமே வேல்முருகன் தான் பார்த்துக் கொண்டார். சம்மந்தி நடைமுறை எதையும் செய்யவில்லை. இவன் பக்கம் பெற்றவர்கள் இல்லாததால் அதெல்லம் எதுவும் வேணாம் என்று விட்டு விட்டார்கள்.
ஆனால் தாரை வார்த்து கொடுக்கும் நிகழ்வை மட்டும் செய்துக் கொண்டார்கள். அது முடிந்த உடன் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஒலிக்க,
ஒன்பது ஏழு என்கிற கணக்கில் மஞ்சள் நூலில் தங்க தாலி கோர்த்து ஏந்திழையாளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான் ராசசிங்கன். அழுத்தமான அவனது கை கழுத்தில் பட்டு மூன்று முடிச்சை போட ஏனோ பெண்ணவளுக்கு கண்கள் எல்லாம் கலங்கியது.
அதை அடக்கிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டிய சூழல்...
புன்னகை முகமாக தாலியை இரண்டு கையால் ஏந்தி நிமிர்ந்து கேமராவை பார்க்க, அவளை சுற்றி வளைத்து தாலியில் குங்குமம் வைப்பது போல ராசசிங்கன் போஸ் கொடுத்தான்.
தாலி கட்டி முடிந்த உடன் பெரிய பெரிய பிசினெஸ் தலைகள், அரசியல் பெரும் புள்ளிகள் அனைவரும் வந்து வாழ்த்த வர அதன் பிறகு நேரம் ரெக்கை கட்டிக் கொண்டு போனது.
ஆனால் ஏந்திழையாள் வீட்டு ஆட்களை மட்டும் மணமேடையில் அனுமதிக்கவே இல்லை. இவள் கண்கள் கலங்க அவர்களை பார்த்தாள்.
“எதுக்கு இப்போ அழற..” சுல்லேன்று சிங்கனின் குரல் காதோரம் கேட்க விழிகளில் தேங்கிய நீருடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“நீ பாசம் வைக்கிற அளவுக்கு அவங்களுக்கு தகுதியே இல்லை” என்றான். அவன் எதற்காக சொல்கிறான் என்று புரிந்தது. கல்யாண வேலையை ஒருவர் கூட பார்க்கவில்லை அல்லவா... அதை அவன் குறிப்பிட்டு சொன்னான்.
“ப்ளீஸ்... அவங்க என் குடும்பம்” என்றாள்.
“அப்போ நான் யாரு” என்று அவன் பட்டென்று கேட்டான். அவளிடம் பதிலில்லை.
“ரைட்...” என்றவன் காட்ஸிடம் சைகை செய்ய ஏந்திழையாள் குடும்பம் மேலே வந்தது. அவர்கள் ஒரு பக்கம் மேடை ஏற இன்னொரு பக்கம் ராசசிங்கன் மணமேடையை விட்டு கீழே இறங்கி போய் விட்டான்.
அதை எதிர்பார்க்காதவள் விக்கித்துப் போனாள். அவன் விலகி போவதை அவளது குடும்பம் கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளவே இல்லை. அவன் அவர்களுக்கு ஆகாதவன் ஆயிற்றே..
மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி அப்படிகர மாறி.....
பாவம் இழை நிலையும் ஆகிட்டு.....
ஏண்டா இப்படி அவளை படுத்தறிங்க🤦🤦🤦🤦🤦🤦🤦
எம்மா தேவகி....இப்ப அழுது என்ன use?????
இழை கலங்கி நின்னப்பா எங்க போனீங்க எல்லாம்.......
என்னமோ போங்க அவ தான் கடைசில பாவம்





