அத்தியாயம் 6

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ப்ளீஸ் கம் இன் சார்” என்று வேரலின் தாத்தாவை வரவேற்று தன்னுடைய கரஸ்பாண்டன்ட் ரூமுக்கு அழைத்துச் சென்று அமர வைத்தான் கங்குவன்.

இது அவருக்கான மரியாதை இல்லை. அவர் வகிக்கும் பதவிக்காக கொடுக்கப்படும் மரியாதை.

உள்ளே வந்து அமர்ந்த இளமாறன் தன் அருகில் இருந்த சேரில் தன் பேத்தியை அமர்த்திக் கொண்டார்.

“இல்ல தாத்தா” என்று அவள் மறுக்க வர,

“ப்ளீஸ் டேக் இட் வேரல்” என்றான் வேறு வழி இல்லாது.

அதன் பிறகே அமர்ந்தாள். உள்கட்சி பூசல் எல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருவரும் இயல்பாக இருந்தார்கள்.

“ஹலோ மிஸ்டர் கங்குவன்..” என்று அவனுக்கு கையை கொடுத்தார் தாத்தா.

பேத்தி வேலை செய்யும் இடத்தை பற்றி அக்குவேறு ஆணிவேராக அறிந்து வைத்து இருந்தவருக்கு இவனது பெயர் தெரிந்து இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே..

அதை தெரிந்து வைத்து இருந்தவனும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், “ஹலோ சார்.. ஹார்ட்லி வெல்கம் டூ அவர் ஸ்கூல்..” சிநேகிதமாக அவரை வரவேற்றான்.

“தேங்க்யூ கங்குவன்.. நான் என் பேத்தியை பிக்கப் பண்ண வந்தேன்..” என்றார்.

“ஓகே சார்.. கூட்டிட்டு போங்க” என்றான்.

“இல்ல தாத்தா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..” தயங்கினாள்.

“சீன் போடுறா” தனக்குள் முணகிக் கொண்டவன் இளமாறனுக்கு தெரியாமல் அவளை முறைத்துப் பார்த்தான்.

அவளும் அவனை தான் பார்த்தாள்.

“போடா பொட்டேட்டோ..” தனக்குள் சொல்லிக்கொண்டவள்,

“எனக்கு குடுத்த வேலையை பினிஷ் பண்ணிட்டு வந்தா தான் தாத்தா எனக்கு திருப்தியா இருக்கும்.. சோ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க” என்றாள்.

“இன்னும் எவ்வளவு நேரம் ம்மா.. உன் வேலை டீச்சிங் மட்டும் தானே.. எதுக்கு ஆபிஸ் ஒர்க் எல்லாம் பண்ணிட்டு  இருக்க.. அதுவும் உட்கார்ந்து கூட செய்யாம நின்னுக்கிட்டே செஞ்சுட்டு இருக்க.. வாட்டிஸ் திஸ் வேரல்” என்றார்.

“நத்திங் தாத்தா.. நான் தான் கிளம்புற அவசரத்துல சேர் போடாம நின்னுக்கிட்டே செய்தேன்..” என்றாள்.

“என்ன ஆச்சு கங்குவன்.. ஏன் ஆபிஸ் ஒர்க் எல்லாம் டீச்சர்ஸ செய்ய வைக்கிறீங்க..” யோசனையாக அவனை பார்த்தார்.

அவனோ கொஞ்சமும் பதட்டப் படாமல்,

“நிறைய ஸ்டாப் அப்பாயின்ட்மென்ட் பண்ணி இருக்கேன் சார்.. பட் இந்த ஒரு வாரம் ஆடிட்டிங் ஒர்க் போயிட்டு இருக்கு. கூடவே ஸ்கூல் சம்மந்தமான முக்கிய சீக்ரெட் ஒர்க் ஒன்னு இருக்கு. அதை வேற யாரையும் நம்பி குடுக்க தோணல. இதுக்கு முன்னாடி இந்த சீக்ரெட் ஒர்க் பண்றவங்க ரிட்டையர்ட் ஆகிட்டாங்க..”

“சோ எனக்கு உங்க பேத்தியை தவிர வேற யாரையும் அதுல அப்பாயின்ட்மென்ட் பண்ண தோணல.. உங்க நேர்மை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அதனால உங்க வளர்ப்புல வளர்ந்த உங்க பேத்தியும் உங்களை மாதிரி நேர்மையா இருப்பாங்கனு தான் அவங்களை இந்த ஒர்க் பண்ண வச்சேன்..”

“கூடிய சீக்கிரம் வேற ஒரு நம்பிக்கையான ஒர்க்கரை அப்பாயின்ட்மென்ட் பண்ணிடுவேன். பட் அது வரைக்கும் உங்க பேத்தியை எனக்கு இந்த ஒர்க் பண்ணி குடுக்க நீங்க சம்மதிக்கணும்.. நானே எவ்வரி ஈவினிங்கும் ட்ராப் பண்ணிடுறேன். நீங்க இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்க வேண்டாம் சார்” எவ்வளவு நல்லவனா தன்னை ப்ரோஜெக்ட் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு தன்னை காட்டிக் கொண்டான் பிராட் கங்குவன்.

“அப்படியா தம்பி” என்று அவரின் நேர்மையை பற்றி அறிந்து வைத்ததோடு அதை பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக அவன் காட்டி பேத்தியையும் நேர்மையாக வளர்த்தது என்று சொல்லி அவருக்கு கூடை கூடையாக ஐஸை வைத்ததில் குளிர்ந்துப் போய் ஓகே சொல்லி விட்டார்.

இப்படி தனக்கே ரிவிட் வரும் என்று தெரியாத வேரல் அதிர்ந்துப் போய் பார்த்தாள் அவனை.

அவன் இளமாறனுக்கு தெரியாமல் கண்ணடித்து ஏளனமாக சிரித்தான். இனி அவன் எப்பொழுது வேண்டுமானாலும் ஈவினிங் நேரம் அவளை வேலை வாங்கலாமே..

ப்ச் இது தெரியாமல் தானே தன் வாயால் மாட்டிக் கொண்டோமே.. என்று நொந்துக் கொண்டாள்.

“சரிடா கண்ணா.. நீ போய் சார் சொன்ன ஒர்க்கை முடிச்சுட்டு வா.. நான் அதுவரை இவர் கிட்ட பேசிட்டு இருக்கேன்” என்று சொன்னவர், கங்குவனிடம் பேச ஆரம்பிக்க, இவனும் உற்சாகமாக பேச ஆரம்பித்தான்.

மினிஸ்டர் ஆச்சே.. ஒவ்வொரு வார்த்தையும் பார்த்து பார்த்து பேசியவன், தனக்கு வேண்டிய சில பல சலுகைகளையும் நேரம் பார்த்து வாங்கிக் கொண்டான்.

“இந்த இயர் ஸ்போட்ஸ் டேக்கு நீங்க தான் சார் தலைமை தாங்கனும்.. நீங்க ஸ்போட்ஸ்ல பர்ஸ்ட் கேட்டகரி தானே.. உங்க ஆர்ம்சே சொல்லுது சார்” என்று அவருக்கு இன்னும் ஐஸை வைத்தான் கங்குவன்.

“ஆமா தம்பி.. என்ன தான் நான் கட்சியில சேர்ந்து மினிஸ்டரா இருந்தாலும் அடிப்படையில நான் பீடி சாரா தான் என் கேரியரை ஆரம்பித்தேன்” என்று அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாறை சொல்ல ஆரம்பித்தார்.

இவனும் ரொம்ப ஆர்வமாக இருப்பது போல கேட்டுக் கொண்டு இருந்தான். மேற்கொண்டு அரை மணி நேரம் இருவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

என்னவோ அவனை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது.

“உங்க வைப் தம்பி” அவர் கேட்க,

“டைவேர்ஸ் வாங்கிக்கிட்டு ஜெர்மனி போயிட்டாங்க சார்”

“அப்போ நீங்களும் உங்க மகனும் மட்டும் தான் தனியா இருக்கீங்களா தம்பி”

“ஆமா சார்.. எனக்கு அவன். அவனுக்கு நான்..” என்றான் சற்றே பெருமூச்சு விட்டு.

யாரிடமும் தன் வாழ்க்கையை பற்றி பகிர்ந்துக் கொள்ளாதவன் முதன்முறையாக அவரிடம் தன் வாழ்க்கையை பற்றி லேசாக பகிர்ந்துக் கொண்டான்.

“ரொம்ப கஷ்ட்டமா இருக்குமே தம்பி.. ஒரு கல்யாணத்தை பண்ணிக்கலாமே”

“விருப்பம் இல்ல சார்.. என் மகனை யாராலும் பார்த்துக் கொள்ள முடியாது.. ரொம்ப சேட்டை. ரொம்ப பிடிவாதம்.. எப்படி திருத்துறதுன்னே தெரியல.. என்னை பக்கத்துலையே விட மாட்டிக்கிறான்” என்றான் ஆதங்கமாய்.

அவனை பார்த்தவருக்கு பாவமாய் போக,

“நீங்க கேஜி வகுப்புல போட்டு பார்க்கலாமே தம்பி”

“வீட்டுலையே அடங்க மாட்டிக்கிறான் சார்.. ஸ்கூலுக்கு கூட்டிட்டு வந்தா யாரையாவது போட்டு அடிச்சுட்டா என்ன பண்றது.. தேவையில்லாம ரிஸ்க் எடுத்த மாதிரி ஆகிடும் சார். அதனால தான் அவனை ஸ்கூல்ல சேர்க்காம இருக்கேன்”

“அதுவும் சரி தான் தம்பி” என்ற நேரம்,

“அவன் தனியா ரொம்ப லோன்லியா இருக்குறதுனால தான் இப்படி எல்லாம் பிகேவ் பண்றான்னு தோணுது.. ஸ்கூல்ல அவனுடைய தனிமை போக ஒரு வாய்ப்பு இருக்கு.. ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. ஒத்து வந்தா கண்டினியூ பண்ணுங்க சார். இல்லன்னா டிராப் பண்ணிடுங்க” என்றபடி உள்ளே வந்தாள் வேரல்.

அவள் இப்படி அவனுடைய பெர்ஸ்னலில் தலையிடுவதை கொஞ்சமும் விரும்பாதவன் இளமாறனுக்காக பொறுத்துப் போனான்.

அவர் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் அவளை உண்டு இல்லை என்று ஆக்கி இருப்பான். “இவ யாரு எனக்கு அட்வைஸ் பண்ண” என்று அவளை ஒரு வழி செய்து இருப்பான்.

ஆனால் இளமாறன் அங்கே இருக்கவும் வேறு வழியில்லாது,

“ட்ரை பண்றேன் மேடம்” என்றான். ஆனால் அவனது முகத்தில் அவனுக்கான எரிச்சல் அப்பட்டமாக தென்பட்டது. அதை இளமாறனுக்கு காட்டாமல் சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டான்.

பெண்ணவளை மட்டும் முறைத்து தள்ளினான்.

“போடா..” என்று அவனை சட்டை செய்யாமல், “தாத்தா என் வேலை ஓவர்.. கிளம்பலாமா?” கேட்டாள்.

“போகலாம் கண்ணா” என்றவர்,

“சரிங்க தம்பி நான் கிளம்புறேன்.. இன்னொரு நேரம் மீட் பண்ணலாம்” கங்குவனிடம் விடை பெற்றுக் கொண்டு பேத்தியோடு கிளம்பி போனார்.

அவர்கள் போன பிறகு தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்த கங்குவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.

கதவை தட்டி விட்டு வர வேண்டிய பேஸிக் மேநேர்ஸ் கொஞ்சமும் இல்லாமல் அவள் பாட்டுக்கு உள்ளே வந்து தனக்கு அட்வைஸ் பண்ணியதை அவனால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இளமாறன் மட்டும் அவ்விடம் இல்லாமல் போய் இருந்தால் நிச்சையம் அவளை கடித்து குதறி இருப்பான். என்னவோ அவளுக்கு முன்னாடி தன் பெர்சனல் வெளியே வந்ததை கொஞ்சமும் அவனின் மனம் விரும்பவே இல்லை.

அதே நேரம் காரில் போய்க்கொண்டு இருந்தவளிடம் தாத்தா கங்குவனை பற்றி சொல்லிக் கொண்டு வர,

“ம்கும் அந்த காட்டானுக்கு பெரிய ஆளிடமே எப்படி நடந்துக்குறதுன்னு தெரியாது.. இங்க கத்துற மாதிரியே அந்த சின்ன பிள்ளைக்கிட்டையும் போய் கத்தி இருப்பான். அந்த பிள்ளை மிரண்டு, பயந்து, அழுது இவனை கிட்டவே சேர்த்து இருக்காது. இது தான் நடந்து இருக்கும்.. இப்படி முள்ளை மூஞ்சில கட்டி இருந்தா எந்த பிள்ளை இவனை அண்டும்.. எரிஞ்சு விழுந்துக்கிட்டே இருந்தா பிள்ளை மிரண்டு தான் போகும்.. அப்பான்னு பக்கத்துல வந்து காலை கட்டிக்குமாக்கும்” என்று பக்கத்தில் இருந்து பார்த்தது போல சரியாக கணித்துக் கொண்டாள் வேரல்.

தொடரும்..

Loading spinner

Quote
Topic starter Posted : August 25, 2026 10:20 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top