அத்தியாயம் 35

 
Admin
(@ramya-devi)
Member Admin

என்ன அது என்று அவள் பார்க்க அவர்களின் கல்யாண பத்திரிக்கை தான் அது. அதை எடுத்து பார்த்தவளின் காலில் நிலம் நழுவியது...

“நோ...” என்று அவள் அலற,

“இனி நீ என்னோட தான். தப்பிக்கணும்னு நினைக்காத... தொலைச்சு கட்டிடுவேன்.. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்கு பிறகு மொத்தமா நீ எனக்கு மட்டும் தான்” என்று அவளிடம் எச்சரித்து விட்டு வெளியே போய் விட்டான்.

மீண்டும் அவனது அரக்க குணத்தை காட்டி விட்டு போக அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.

மெல்லிய நேசம் நூலறுந்த முத்து மாலையாய் சிதறிப் போனது போல அவன் மீது தோன்றிய மெல்லிய நேசமும் அறுந்து சிதறிப் போனது.

ராசசிங்கனுடனான கல்யாண வாழ்க்கையை அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதுநாள் வரை தன்னை பேசிய பேச்சுக்கள், தன்னிடம் நடந்துக் கொண்ட முறைகள் என எல்லாமும் உலா வந்தது. அதோடு தன் விருப்பத்தை சிறிது கூட மதிக்காமல் கல்யாணத்துக்கு முழு ஏற்பாடு செய்து வைத்து விட்டு அதை தன்னிடம் ஒரு சொல் கூட சொல்லாமல் என் மீதே தினமும் துயில் கொண்டவனின் அழுத்தம் பற்றி பயந்துப் போனாள்.

இந்த கல்யாணத்தில் என் விருப்பம் என்ன என்பதை கூட தெரிந்துக் கொள்ள மனமில்லாமல் எல்லா முடிவையும் அவனே எடுத்ததில் மனம் மிகவும் அடிபட்டுப் போனது.

அவளுக்கும் திருமணத்தை ஒட்டி பல கனவுகள் இருந்தது. திருமணம் பேசி முடித்த நாளில் இருந்து அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும். மாப்பிள்ளையோட வெளில போகணும். கை பிடித்து நடக்கணும், நாள் முழுக்க பேசியில கடலை போடணும், கல்யாணத்துல ஒன்னொன்னும் பார்த்து பார்த்து இருவரும் சேர்ந்து செய்யணும் என்று பல கனவுகளை வைத்து இருந்தாள் ஏந்திழையாள்.

ஆனால் அதில் ஒன்றை கூட அவளால் செய்ய முடியவில்லை. அவளுக்கும் சேர்த்து ராசசிங்கனே அனைத்து முடிவுகளையும் எடுத்தான். செயல் படுத்தினான்.

“அப்போ என் பார்ட் என்ன?” என்று அவளின் மனம் கேள்வி எழுப்பியது,

“ஆக்கியதை தின்னுட்டு மூலையில கிடக்கணும் அது தானே” என்று அவளின் மனம் வேதனைக் கொண்டது. “இதுக்கா என்னை இவ்வளவு சீரும் சிறப்புமா வளர்த்து எடுத்தது” மனம் குமைந்துப் போனாள்.

அன்றிரவும் அவள் மீது படுத்துக் கொண்டான். அவனை பார்த்தாலே அருவெறுப்பு வர அவனை தன் மீது இருந்து தள்ளிவிடப் பார்த்தாள். ம்ஹும் கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை.

“எருமை மாதிரி படுத்து இருக்கான்” என்று முணகியவள் வேறு வழியின்றி விடியும் வரை அவனை தாங்கி இருந்தாள். அவனே கண் விழித்து எழுந்த பிறகு தான் இவள் எழுந்தாள்.

“சரியான இம்சை” என்று திட்டிக் கொண்டே வெளியே போனவள் அதன் பிறகு உள்ளே வரவே இல்லை. “தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு” என்கிற கணக்காக அவனை விட்டு வெகு தூரம் போய் இருந்தாள் ஏந்திழையாள்.

எழுந்துப் பார்த்தவன் அவள் இல்லாததை கண்டு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்ல.

காலை உணவுக்கு பிறகு வாக்கிங் போகிறேன் என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆக முடிவெடுத்தவள், சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அவளின் பின்னாடி ஒரு காட்டெருமை துரத்த பெரும் திகிலாய் போனது.

“அய்யோ கடவுளே இதுக்கு அந்த ராசசிங்கனே தேவலாம் போலையே” என்று எண்ணிக் கொண்டவள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டமாய் ஓடி வந்தாள். எதிரில் அவள் எண்ணத்தின் தலைவனே வந்து நின்றான் இரு கையையும் பின் பக்கமாய் கட்டிக் கொண்டு.

அவனை அங்கு எதிர் பார்க்காதவள் அசட்டு சிரிப்புடன்,

“வாக்கிங் ரொம்ப தூரம் வந்துட்டேன் காட்டெருமை துரத்துது” என்று சொன்னாள்.

அவன் அசையவே இல்லை. அவளை வைத்த கண் எடுக்காமல் மிக மிக அழுத்தமாய் பார்த்தான். பத்து கிலோ மீட்டர் யாராவது வாக்கிங் வருவாங்களா, அதை சொன்னா சின்ன குழந்தை கூட நம்பாது. அப்படி இருக்கும் பொழுது இந்த வளர்ந்து கெட்டவன் நம்புவானா? என்று தன்னை தானே குற்றிக் கொண்டவள் அவனது அசையாத பார்வை பார்த்து மிடறு விழுங்கி,

“எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல... அது தான் இந்த இடத்தை விட்டு போகலாம்னு பார்த்தேன்.. ப்ளீஸ்..” என்று அவள் உண்மையை சொன்னாள் அவனது பார்வையின் வீரியம் தாங்கமால்.

அவன் அப்பொழுதும் எதுவும் பேசாமல் இருந்தான்.

“ப்ளீஸ் ராசசிங்கன் சார்... எனக்கு உங்களை கொஞ்சம் கூட பிடிக்கல... பிடிக்காத உங்களோட எப்படி என்னால வாழ முடியும்..” என்று அவள் தவித்துப் போய் கேட்டாள்.

அவன் எந்த பதிலும் பேசாமல் அருகே நின்று இருந்த வண்டியில் ஏறிக் கொண்டான். ஒன்னும் சொல்லாமல் அவன் பாட்டுக்கு கிளம்ப இவள் விழித்து நின்றாள்.

“ஏறு” என்று அடிக்குரலில் உறுமினான்.

“இல்ல நான்” என்று அவள் தடுமாற,

“உன்னை ஏறுன்னு சொன்னேன்” என்று அவளை தீ விழி விழித்துப் பார்த்தான். அதில் அரண்டுப் போனவள் பட்டேன்று அவனுக்கு அருகில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

“நான் சொன்னதை கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே” என்று அவள் மீண்டும் கெஞ்ச வண்டி முன்பை விட அதிக வேகம் எடுத்தது. அதில் பயந்துப் போனவள் இருக்கையோடு இருக்கையாக ஒட்டிக் கொண்டாள்.

அவளது வீட்டுக்கு தான் வண்டி சென்றது. வண்டியை விட்டு கீழே இறங்கி இருந்த சமயம் வீட்டின் உள்ளே இருந்து அவளின் மொத்த குடும்பமும் வெளியே வந்தது. அண்ணன், தங்கச்சி, அக்கா, அண்ணி, குழந்தை, அம்மாக்கள் என எல்லோரும் அவளை சூழ்ந்துக் கொண்டார்கள்.

அவர்களை அங்கு எதிர் பார்க்காதவள் திகைத்துப் போனாள். திரும்பி ராசசிங்கனை பார்த்தாள். அவன் அவளை பார்க்கவே இல்லை. அவனது பார்வை மொத்தமும் வேல் முருகனிடம் மட்டுமே இருந்தது.

அவர் பொதுவாக தலை அசைக்க இவனும் தலை அசைப்புடன் உள்ளே போய் விட்டான். போகும் அவனை வெறித்துப் பார்த்தார்கள் ஏந்திழையாளின் உடன் பிறப்புகள். அவர்களது முகத்தில் கொஞ்சம் கூட மகிழ்ச்சியே இல்லை. ஆனால் வேல் முருகன் அத்தனை பேரின் வாயையும் கட்டி போட்டு விட்டார்.

ராசசிங்கனுக்கும் ஏந்திழையாளுக்கும் திருமணம் என்று பத்திரிக்கையை கொண்டு வந்து நீட்ட மொத்த குடும்பமும் பெரும் அதிர்ச்சி அடைந்தது.

“இதென்னங்க எங்க யாருக்கிட்டயும் எதையும் சொல்லாமல் கேட்காம நீங்களே எல்லா முடிவு எடுத்து இருக்கீங்க... முதல்ல என் பேத்திக்கு இதுல சம்மதமா?” என்று பாய்ந்து வந்தார் பாட்டி.

“அவளுக்கு சம்மதம்ன்றதுனால தான் இவ்வளவு வேகமா இந்த கல்யாணத்தை நடத்த வேண்டி இருக்கிறது..” என்று பொதுவாக சொன்னவர்,

“உங்க எல்லோருக்கும் சேர்த்து ஒன்னு சொல்றேன்...” என்று அங்கு கூடி இருந்த அத்தனை பேரையும் பார்த்தவர்,

“என் பேத்தி மகிழ்ச்சிக்கு முன்னாடி எதுவும் பெரிது இல்லை. அவளுக்கு ராசசிங்கனை தான் பிடிச்சி இருக்கு.. எனக்கும்...” என்று தொண்டையை செருமியவர்,

“அதனால உங்க எதிர்ப்பு எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு இந்த கல்யாணத்தை எவ்வளவு சிறப்ப செய்ய முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பா செய்ய எனக்கு கூட இருந்து உதவி பண்ணுங்க. அப்படி விருப்பம் இல்லாதவங்க முதல்லையே விலகிக்கோங்க. என் பேத்தி திருமணத்தை நான் ஒருத்தனே முன்னாடி நின்று பார்த்துக்குறேன்” என்று ஒரே போடாக போட்டு விட்டு போய் விட்டார். அதனால் வீட்டு ஆட்கள் யாரும் வேல்முருகனின் முடிவுக்கு குறுக்கே நிற்கவில்லை.

Loading spinner

Quote
Topic starter Posted : April 10, 2026 11:34 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top