ஒரு முறை பிசினெஸ் மீட்டிங்கின் போது வசமாக நேருக்கு நேர் ஏந்திழையாளின் அப்பா அண்ணா மாமா பெரியப்பா என எல்லோரும் பிசினெஸ் மீட்டிங்கின் போது வந்து இருக்க அவர்களை எதிர்க்கொண்டு அழைத்தது என்னவோ ராசசிங்கன் தான்.
அதை கொஞ்சமும் எதிர்பார்க்கதவர்கள் திகைத்துப் போய் விட,
“இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்க போறீங்க மிஸ்டர் தனசேகரன்...” என்று அவன் ஆரம்பிக்க,
“எங்களுக்கு இதையே கட்டி ஆள முடியல மிஸ்டர் சிங்கன்.. அதனால எங்களுக்கு இந்த ஓட்டம் போதும். உங்களுக்கு வயசும் இருக்கு திறமையும் இருக்கு. நீங்க ஓடுங்க... யங்ஸ்டர்க்கு வழி விட்டு நிக்கிறது தான் எங்கள மாதிரி பெரியவங்களுக்கு அழகு...” என்று சொல்லி அவனை கடந்துப் போய் விட்டார் தனசேகரன்.
அவர் அப்படி சொல்லவும் இவனுக்கு கட்டுக்கடங்காத கோவம் வந்தது. என்னவோ இவர்கள் எல்லாம் ஒதுங்கி நிற்கவும் தான் என்னால முதலிடத்தை அடைய முடிஞ்சது போல பேசுறாரு என்று கறுவியவன் அடுத்த நாளே அவர்களின் நிறுவனத்துக்கு எல்லாம் ரெய்ட் வந்தது. இத்தனைக்கும் ஒரு சொல் கூட அவனை சொல்லவில்லை. ஒரு சொல் சொல்லாமலே அவர்களை ஒரு வாரத்துக்கு கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்லாமல் ஒட்டுமொத்த நிறுவனம் வீடு, பார்ம் ஹவுஸ், கெஸ்ட் ஹவுஸ் என்று வாட்டி வதைத்து விட்டான் ரெய்ட் என்கிற பெயரில்.
இத்தனைக்கும் அவர்கள் எல்லா டாக்குமேன்ட்டும் சரியாக இருந்தது. இது போதாது என்று இவர்களுக்கு சொந்தமான கல்லூரிகளில் ஸ்ட்ரைக் என்று பரபரப்பாக வைத்து இருந்தான்.
அந்த அளவு மோசமான ஆள் அவன். அப்படி பட்டவனிடம் தன் பெண் பேசி இருக்கிறாள் என்றால் அது உறுதியாக நல்ல செய்தியாக இருக்காது என்று எண்ணிக் கொண்டார்கள் அந்த வீட்டின் ஆண்கள் எல்லோரும். அதனாலே ஏந்திழையாளிடம் விசாரித்தார்கள்.
அவள் சிரித்து சும்மா கீழே விழுந்துட்டேன் அப்போ வந்து அவரு ஹெல்ப் பண்ணாரு ப்பா” என்று எதையும் சொல்லாமல் மறைத்து விட்டாள்.
ஆனால் அவளின் குடும்பத்தாருக்கு மனமே இல்லை. ஏனெனில் அடுத்த நாளில் இருந்து அவள் கோயிலுக்கு போவதையே நிறுத்தி விட்டாள். அதோடு ட்ரெஸிங் ஸ்டையிலையும் மாற்றி விட்டாள். அதிலே தெரிந்துக் கொண்டார்கள் என்னவோ நிகழ்ந்து இருக்கிறது என்று.
அதை தெரிந்துக் கொள்ள இவர்கள் எவ்வளவோ முயன்றாலும் எதையும் கண்டுப் பிடிக்கவே முடியவில்லை. மகளிடம் அழுத்தி கேட்கவும் முடியவில்லை...! அதன் பிறகு அவளிடம் அதிக மாற்றம் ஏற்பட்டு இருக்க அதை கண்டும் உணர்ந்தும் எதுவும் அழுத்தி கேட்கவில்லை.
ஆனால் எல்லோரின் மனத்திலும் அந்த ராசசிங்கன் மீது அவ்வளவு கோவம் இருந்தது. ஏனெனில் அவள் தான் அந்த தேவதை. அந்த தேவதையின் சிறகொடித்து முறித்துப் போட்டதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அவனை எதிர்த்து எதுவும் செய்யவும் முடியாது. ஆனால் அவனை அப்படியே விடவும் முடியவில்லை.
ஏந்திழையாளின் தாத்தா பாட்டிக்கு நான்கு வாரிசுகள். இதில் தாத்தாவின் தம்பி குமரேசன் குடும்பமும் அவர்களோடு தான் இருந்தது. இவருக்கு மூன்று வாரிசுகள். அதில் இரண்டு பேரும் திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ தான் வருவார்கள்.
அவரின் மூத்த மகன் பெருமாள் இங்கே இவர்களோடு குடும்பமாக இருக்கிறார்.
ஏந்திழையாளின் தாத்தா வேல்முருகன். அவரின் துணைவி பாக்கியம். அவரின் பெரிய மகன் கண்ணன் மருமகள் லட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் என கார்த்திக், சுரேஷ், நட்சத்திரா. இதில் கார்த்திக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு மகளும் இருக்கிறாள். மனைவி திலோ.
ஏந்திழையாளின் அப்பா சுந்தரம் அம்மா தேவகி. இவர் இரண்டாவது மகன். இவர்களுக்கு ஒரு மகன் யுகேஷ்வரன் அவனின் மனைவி ஷெண்பா. ஷெண்பா இப்பொழுது தான் கருவுற்று இருக்கிறாள். இந்த லிஸ்டே ரொம்ப நீளமா போகுது. போகிற போக்கில் மற்றவர்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
வீட்டு ஆட்கள் எவ்வளவோ முயன்று பார்த்தும் ஏந்திழையாளை முன்பு போல இயல்புக்கு கொண்டு வரவே முடியவில்லை.
சற்றே பளீரென விளக்கு வெளிச்சம் பட்டாலே துடிதுடித்துப் போனாள் பெண்ணவள். அந்த அளவு அந்த அரக்கன் அவளை பயமுறுத்தி வைத்து இருந்தான். அதிக சத்தம் கேட்டாலே மிரண்டுப் போனாள் அவள். இப்படியே எவ்வளவு காலம் இருக்க முடியும் என்று அவளுக்கு அவளே ஆறுதல் தேறுதல் சொல்லிக் கொண்டு, தனக்காக தன் வீட்டு ஆட்கள் போடும் முயற்சியை கண்டு மனம் நெகிழ்ந்துப் போனவள் இந்த நிகழ்வில் இருந்து தான் வெளியே வந்தால் மட்டுமே இவர்கள் இயல்புக்கு திரும்புவார்கள் என்று புரிந்துக் கொண்டு மெதுமெதுவாக இயல்புக்கு திரும்ப ஆரம்பித்தாள்.
ஆனால் அதற்குள் அவளின் அண்ணன்களும் அத்தை மகன்களும் சேர்ந்து ஒரு ப்ளான் போட்டு சும்மா இருந்த சிங்கத்தை சொரிந்து வைத்து இருந்தார்கள்.
அது தெரியாமல் ஏந்திழையாள் பல நாட்கள் கழித்து இயல்புக்கு திரும்பி இருந்தாள். இப்பொழுதும் அவள் புடவை உடுப்பதே இல்லை. அதை கவனமாக தவிர்த்து இருந்தாள்.
காலர் வைத்த சுடிதான் எப்பொழுதும் அணிய ஆரம்பித்து இருந்தாள். இரவு நேரம் அவளது படுக்கை அறையில் கூட இரவு உடையை கூட தவிர்த்து இருந்தாள் இவ்வளவு காலமும்.
தன் அறைக்குள் தன்னை மீறி யாரும் வரமாட்டகள் என்ற எண்ணம் வலுத்த பிறகே அவள் கையில்லாத முன்பக்கம் இரக்கம் உள்ள இரவு உடையை அணியவே ஆரம்பித்து இருந்தாள்.
இந்த இடைப்பட்ட நாளில் அவள் எங்கும் பெரிதாக வெளியே செல்லவில்லை ஆதலால் அவளுக்கே எங்காவது சென்றால் நன்றாக இருக்குமே என்று எண்ணி வருனிடம் சொல்ல,
“அதுக்கென்ன ஜோரா போயிட்டாப் போச்சு..” என்றவன் சிறியவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு மாலுக்கு சென்றான்.
“ப்ச் மால் போரடிக்கிது வருண்” என்று அவனின் தங்கை கிருத்தி சொல்ல,
“உனக்கு எங்கயும் சுத்தாம ஒரு இடத்துல உட்கார்ந்து இருந்தா போதும். அதுக்கு தானே ப்ளான் பண்ற” என்று அவளின் தலையில் கொட்டினான் சுரேஷ். இவன் ஏந்திழையாளின் பெரியப்பா மகன்.
“தெரிஞ்சா சரி தான். ப்ளீஸ் டா கால் எல்லாம் வலிக்கிது தெரியுமா மாமா? தினமும் ஆபிஸ் போய் பாரு... எப்படி பெண்டு எடுக்குறாங்கன்னு” என்று தான் கட்டிக்கபோகிற மாமனான சுரேஷை பார்த்தாள்.
இருவருக்கும் திருமணம் பேசி முடிவாகி இருந்தது. இருவருக்கும் விருப்பம் என்பதால் பெரிதாக எந்த தடையும் இல்லை வீட்டில்.
“எப்போ பாரு அவளை கொட்டிட்டே இருக்க. இப்படியே பண்ணிட்டு இருடா. என் தங்கச்சிக்கு வேற ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறேன்” என்று சபேஷ் சுரேஷை முறைத்தான்.





