அவனை கவனித்தாள். அவளின் முதுகோடு ஒன்றி அமர்ந்துக் கொண்டான் உதயாதிபன். வராளி அவனது வெற்று மார்பில் சாய்ந்துக்கொண்டாள். அவளோடு சேர்த்து பிள்ளையையும் தாங்கிக் கொண்டான்.
அதன் பிறகு குழந்தையின் “ஆ.. ஊ...” “இங்கா” “பா...” “ஆ” என்கிற சத்தம் மட்டுமே அந்த வீட்டை நிறைத்தது. இருவருக்குமே அந்த நேரம் பொன்னான நேரமாக தோன்றியது. படுக்கையில் அவன் படுத்து பெண்ணவளை கை வளைவுக்குள் இழுத்துக் கொண்டவன் அவனது நெஞ்சில் பிள்ளையை படுக்கப் போட்டுக்கொண்டான். எத்தனையோ நாள் அவன் இது மாதிரி கனவு கண்டான்.
ஆனால் கைக்கூடும் நேரம் தான் அவனுக்கு வாய்க்கவே இல்லையே. இன்று அது நடக்கையில் அவனால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.
நொடிக்கு நூறு தரம் பெண்ணவளின் நெற்றியில் முத்தம் வைத்தான். சற்று இறங்கி வன்மையாக அவளின் இதழில் முத்தமிட்டான். போதாதற்கு அவளின் கன்னங்களையும் கடித்து வைத்தான்.
அவனை வராளி தடுக்கவே இல்லை. அவளுக்கு மட்டும் இல்லை. அவனது மகனுக்கும் நொடியில் ஆயிரம் முத்தம் குடுத்தான். அந்த முத்தங்கள் தீரும் நேரம் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து முத்தங்களை கொடுத்தான்.
அம்மா மகன் இருவருக்கும் அவனது முத்தம் வாங்கி வாங்கியே கன்னம் பள்ளமாய் போனது. ஆனாலும் அவன் கொடுப்பதை நிறுத்தவில்லை. ஒரு பக்கம் எச்சில் வடியும் இதழ்களால் தலையை தாழ்த்தி அவனின் மார்பில் பிள்ளை முத்தம் கொடுக்க, இன்னொரு பக்கமோ அவனின் மனையாள் அவனின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்து நேசத்தை சொல்ல, இதை விட பேரின்பம் உலகில் ஏது என்று தான் தோன்றியது. அவன் வாங்கி இருந்த அத்தனை சாபமும் அந்த நொடியில் தொலைந்துப் போனது போல உணர்ந்தான்.
“உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போகலன்னு வருத்தமாடி” என்று கேட்டான். “ப்ச் அதையே எத்தனை முறை கேட்பீங்க...” அவனை முறைத்தவள், “எனக்கு உங்க கூட இருக்கணும். அவ்வளவு தான். அது எங்க இருந்தா என்ன... உங்கக்கூட இருக்கிற நேரம் தான் எனக்கு சொர்க்கம்” என்றவளின் நெற்றி காயத்தில் முத்தம் வைத்தவன்,
“சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணிட்டு உன்னை கூட்டிட்டு போறேன்டி” என்றான்.
“ப்ச் நான் எதுவும் கேட்கலைங்க... நீங்க அவசர அவசரமா எதையும் செய்ய வேண்டாம். நிறுத்தி நிதானமா நம்ம வாழ்க்கைக்கு எது அவசியமோ அதை மட்டும் செய்யிங்க போதும். யாரையும் காயப்படுத்தி நம்ம என்ன பண்ண போறோம். எதுவும் தேவையில்லை” என்றவளின் நல்ல குணத்தை மெச்சியவன்,
“அம்மணி சொன்னா அப்படியே ஏத்துக்குறேன்” என்று அவளை இன்னும் நெருக்கிக் கொண்டான். இரவு முழுவதும் பிள்ளை தூங்கவே இல்லை. விளையாட்டு என்றால் அப்படி ஒரு விளையாட்டு... இத்தனை நாட்களாக தனி ஒருத்தியாக எப்படி பிள்ளையை சமாளித்தாள், இதில் வேலைக்கு வேறு போக வேண்டும். இவளுக்கு வேறு சமைக்க வேண்டும்.. ஆனால் எப்படி அனைத்தையும் சமாளித்தாள் என்று பெரும் வியப்பு தோன்றியது உதயாதிபனுக்கு.
வராளியின் மீது அதிக மரியாதை தோன்றியது. “நீ தூங்குடி நான் பார்த்துக்குறேன்” என்று அவளை தட்டிக் கொடுத்து தூங்க வைக்க குறுகுறுவென்று அவனை பார்த்தாள் அவள்.
“என்னடி பார்வை ஒரு மாதிரியா இருக்கு?”
“இல்ல இவ்வளவு நேரமும் சட்டையை போடு சட்டையை போடுன்னு களரி பண்ணீங்க. ஆனா இப்போ தூங்க வைக்கிறீங்களே அது தான் பார்த்தேன்” என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு. அவளை ஆதூரமாக பார்த்தவன்,
“இனி நீ எங்கடி போயிடப்போற... என் கூட தானே இருந்து ஆகணும். அப்போ இப்பைக்கும் சேர்த்து வட்டியோட வாங்கிக்குவேன்... இவ்வளவு நாள் சரியா தூங்கி இருக்க மாட்ட... கொஞ்ச நேரம் தூங்குடி” என்று அவளுக்கு மீண்டும் தட்டிக் குடுக்க அவளுக்கு உண்மையாகவே கண்களை இழுத்தது தூக்கம்.
சமாளித்து பார்த்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. “ப்ச் கண்ட்ரோல் பண்ணாதடி. பையன் அழுதா உன்கிட்ட போடுறேன்..” என்று அவளை சமாதனம் செய்தவன் அவளை இன்னும் இழுத்து தன் நெஞ்சோடு போட்டுக் கொண்டான். அவளுக்கு சிறு குழந்தை போல தட்டிக் கொடுக்க எந்த கவலையும் இல்லாமல் தூங்க ஆரம்பித்தாள்.
அவள் தூங்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலே மகன் எழுந்துக் கொண்டான். அவன் பசிக்கு விரலை வாயில் வைத்து அழுக,
“இப்ப தான்டா உன் அம்மா தூங்குனா... அதுக்குள்ள உனக்கு பசிக்கிதா?” என்று சொல்லிக்கொண்டே அவளின் இன்னொரு பக்கம் பிள்ளையை படுக்க வைத்தான்,
அவளின் உடையை நெகிழ்த்தி பிள்ளைக்கு பசியாற்ற அவன் சிரமப்பட, தூக்கத்திலே உதவி செய்தாள் வராளி. உதயாதிபன் எப்படி என்பதை பார்த்துக் கொண்டான் கவனமாக. அடுத்த முறை பெண்ணவளை எழுப்பக் கூடாதே என்று.
பிள்ளையை தட்டிக் கொடுத்தான். பிள்ளையும் அவனோடு ஒட்டிக் கொள்ள உள்ளம் பூரித்துப் போனான். “என் வீட்டு குல விளக்குடா நீங்க ரெண்டு பேரும்... இத்தனை நாள் உன்னை பத்தி தெரியாமலே விட்டுட்டேன் தங்கம். இந்த அப்பாவை மன்னிப்பியா?” என்று குரல் கமற பிள்ளையின் பிஞ்சு பாதத்தில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.
“உன்னையும் அம்மாவையும் ரொம்ப நாள் ஏங்க வச்சுட்டேன்டா... நீ இருக்கிறது சத்தியமா எனக்கு தெரியாது. உன் அம்மா இருக்கிறது தெரியும். ஆனா உங்க அம்மா மேல ஒரு கோவம். என்னை விட காசு பணம் பெருசா போயிடுச்சான்னு. ஆனா உங்க அம்மா ஒத்த பைசா காசு வாங்காம போயி இருக்காடா. நான் தான் தீவிரமா விசாரிக்காம போயிட்டேன்” என்று விழிகள் கலங்கியது.
தூக்கத்திலே அவனின் கண்ணீரை துடைத்து விட்ட மனைவியின் காதலில் உருகியவன் மகனோடு விளையாடி அவனை தூங்க வைத்து தானும் தூங்கிப் போனான்.
கோடிகோடியாய் கொட்டி கிடக்கிறது சொத்துக்கள். ஒரு மாவட்டத்தில் முக்கால்வாசி இடத்தை வளைச்சு போட்டு அந்த இடத்தில் முக்கிய புது பஸ்டான்ட் கொண்டு வரும் அளவுக்கு பவரான இடத்தில் இருப்பவன், ஆடம்பர வில்லாவில் வராத தூக்கமும் நிம்மதியும் இந்த சின்ன ஓட்டு வீட்டில் உதயாதிபனுக்கு வந்தது.
மூவரும் நிம்மதியான தூக்கத்தில் இருந்தார்கள். ஆனால் அவர்களை காணாமல் அவர்களது வீட்டு ஆட்கள் தான் திணறி திண்டாடிப் போனார்கள். கலாவதி பாரதி சாரை பிடித்து “என் பொண்ணு எங்க சார்? காலையில ஷூட்டிங் வந்தாளே” என்று பொய்யாய் அக்கறை இருப்பது போல கேட்க,
“நெத்தியில காயம் இருக்குறதுனால ஒரு வாரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வராதன்னு சொல்லி அனுப்பிட்டேன். அதனால எங்காவது போய் இருப்பா” என்று வைத்து விட்டார்.
“ஒருவேளை வீட்டை விட்டு ஓடிட்டாளோ” என்று சிவா கேட்டாள். “அப்படி போனா நிம்மதி தானே” என்று கூடப் பிறந்த தமையன் சொன்னான்.
“அது அப்படி இல்லடா.. இன்னைக்கு தான் அந்த தேனாண்டாள் வந்துட்டு போய் இருக்கா... அவளால நமக்கு இன்னும் சொத்து வர வாய்ப்பு இருக்கு. அதனால அவளை அப்படி எல்லாம் விட முடியாது. எங்க போனான்னு தேடணும்” என்று மகனுக்கு அறிவுறுத்தியவர் வராளியை தேடும் பணியை மேற்க்கொண்டார்.
அதே நேரம் இங்கே உதயாதிபனை காணாமல் தேனாண்டாள் வீட்டில் அத்தனை பேரும் பரிதவித்துப் போனார்கள்.





