அவள் உயிர். ஆனால் அவளுக்கு அப்படி இல்லையே.. அதனாலே அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் கட்டிய தாலி அவளது கழுத்தில் பார்த்த உடனே அவனது மனம் எவ்வளவு குதியாட்டம் போட்டது என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
அந்த தாலியை கழட்ட மாட்டேன் என்று சொன்னவளின் வார்த்தையில் தானே இவனது உயிர் மறுபடியும் கூடியது. இப்பொழுதே இந்த நொடியே அவளை அவனோடு கூட்டிக்கொண்டு போக முடியும். ஆனால் அவளை அப்படி காதும் காதும் வைத்தது போல கூட்டி வர அவனுக்கு மனம் வரவில்லை.
அதனாலே தன் வீட்டில் முதல்ல புகைச்சலை கிளப்புவோம் என்று எண்ணியே நேற்றைக்கு ஆடில் எடுத்த புகைப்படத்தை தன் பிஏவை விட்டு வேறு யார் மூலமோ வருவது போல தன் தாய்க்கு அனுப்பி வைத்தான் உதயாதிபன். ஆனால் தேனாண்டாள் மிக விவரமாக உதயாதிபனிடம் எந்த கேள்வியும் கேட்காமல் வராளியிடம் தன் கோவத்தை காட்டி இருந்தார்.
தன் விளையாட்டில் தன் மனைவி காயம் கொண்டு விட்டாளே என்று மனம் நொந்தான். ஒரு சின்ன மருந்துவமனையின் முன்பு வண்டியை நிறுத்தியவன் தலையில் தொப்பியும், முகத்துக்கு மாஸ்க்கும் அணிந்தவன் வராளியை அழைத்து அவளின் காயத்துக்கு மருத்துவம் பார்த்தான்.
“அதெல்லாம் எதுவும் வேணாங்க... சரியா போயிடும்” என்றவளின் பேச்சை காது குடுத்து கேட்காதவன் அவளுக்கு சிகிச்சை அளித்த பிறகே விட்டான். “அப்படியே அந்த பிடிவாதம் மட்டும் இன்னும் மாறல” நொடித்துக் கொண்டாள்.
“நான் எப்போடி பிடிவாதம் பிடிச்சேன்” அவளை கீழ் கண்களால் இரசித்துக் கொண்டே காரை கிளப்பினான். “அடேயப்பா நீங்க கொஞ்சமும் பிடிவாதம் பிடிக்காத ஆளு தான்...” நொடித்துக் கொண்டாள்.
“உண்மையாடி” என்று அவன் கண்ணடித்தாள். “சும்மா என் வாயை கிண்டாதீங்க... அப்புறம் அமைச்சரோட மானம் போயிடும்” என்று கடுப்படித்தாள்.
“அப்படி என்னத்துக்கு நான் பிடிவாதம் பிடிச்சேனாம்?” இதழ்களில் நக்கல் புன்னகை கொட்டிக்கிடந்தது. “எதுக்கா?” வெடுக்கென்று கேட்டவள், “ரொம்ப பயமா இருக்குங்க... இன்னைக்கு வேணாம்னு நான் சொல்ல சொல்ல நீங்க என்ன பண்ணீங்க.. இல்லடி இன்னைக்கு தான் நாளு நல்ல நாளா இருக்கு. இன்னைக்கு தான் ஆரம்பிக்கணும்னு சின்ன பிள்ளைன்னு கூட பார்க்கம மேல பாயல” முகம் சிவந்துப் போனாள். அது கோவமாக்கும்... வெட்கம் இல்லையாம்.
“ஹேய்..” என்றவன், “உண்மையா அன்னைக்கு என் சட்டையில ரொம்ப செக்சியா இருந்தடி... என்னால கண்ரோல் பண்ண முடியல” என்று உதட்டை கடித்தான். “ப்ச் நீங்க தானே அன்னைக்கு உங்க சட்டையை குடுத்து போட சொன்னீங்க? இப்போ இப்படி சொல்றீங்க” என்று சிணுங்கினாள்.
“அதெல்லாம் அப்படி தான்டி.. மாமன் சொன்னா நீ உடனே செஞ்சிடுவியா?” மேலும் கேலி செய்தான். “சின்ன பிள்ளைன்னு ரொம்ப தான் சீண்டுறீங்க” முறைத்தாள்.
“நீ சின்ன பிள்ளை தான்...” என்று சிரித்தவன் ஒரு குக்கிராமத்துக்கு வண்டியை விட்டான். அங்கே ஒரு வசதி கூட இல்லாத மிகவும் பின் தங்கிய கிராமம். “இங்க எதுக்குங்க?” என்று அவள் அதிர, அவளின் வாய் மேல் விரலை வைத்தவன்,
“உன் கூட ஒரு வாரம் இருக்கணும்டி. எந்த இடையூறும் இல்லாம” என்றான். அதிலே தனக்காக எவ்வளவு ஏங்கிப் போய் இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டவள், “பிள்ளைக்கு உடை வாங்கணுமே” என்றாள்.
“அப்போ உனக்கு இருக்கா?” என்று நக்கல் பண்ணினான். அவனது நக்கலில் கோவம் வந்தது. “எனக்கு எதுக்கு உடை... உங்க சட்டையே போதும். பாவம் உங்களுக்கு தான் சட்டை இல்லாம போகும்” என்று அவனை வாரி விட்டாள்.
அவளது கூற்றில் கண்கள் மின்னியவன், “ஹுர்ரே...” என்று கத்தினான். “வாட் மிஸ்டர் மினிஸ்டர் உங்க பையன் எழுந்தான்னா சீக்கிரம் தூங்க மாட்டான் பார்த்துக்கங்க” எச்சரித்தாள்.
அதில் கப்பென்று வாயை மூடிக் கொண்டவன் விழிகளால் மனைவியை அளந்துக் கொண்டே வந்தான். முன்பு இருந்த அதே வனப்பு தான். ஆனால் முன்பை விட சற்றே மெலிந்து இருந்தாள். அது அவளின் ஓட்டத்தை சொன்னது.
கழுத்து எலும்பு அப்பட்டமாக தெரிந்தது. தன்னிடம் இருந்து இருந்தால் அவளுக்கு இந்த குறை நேர்ந்து இருக்காதே... குழந்தைக்கு பால் கொடுக்கணும் என்பதற்காகவே அவள் நன்றாக சாப்பிட்டால் தான். ஆனாலும் அவளின் உள்ளத்தில் இருந்த வேதனை அவளின் உடலிலும் தெரிந்தது அவனுக்கு. வேறு யாரும் கண்டு அறியா முடியாத அவளின் மாற்றம் கொண்டவனுக்கு மட்டும் நன்கு தெரிந்தது.
பெருமூச்சு விட்டான். “நான் இல்லாம ரொம்ப கட்டல்(கஷ்ட்டப்) ப்பட்டுட்டியோடி” அவனின் குரல் வேதனையை சுமந்து வந்தது. அவனது கையின் மீது தன் கையை வைத்து ஆறுதலாக பற்றிக் கொண்டவள்,
“நீங்களும் தான் நான் இல்லாம கட்டல் பட்டுட்டீங்க.. போனதையே பேசாம வேற ஏதாவது பேசுங்க” என்றாள். அவளின் புரிதலில் மனம் நனைந்தவன்,
“பைவ் ஸ்டார் ஹோட்டல்ஸ், பண்ணை வீடு, கெஸ்ட் ஹவுஸ், வீடு இங்கெல்லாம் கூட்டிட்டு போகாம அத்துவான கிராமத்துக்கு கூட்டிட்டு போறேன்னு உனக்கு கோவம் வரலையாடி” அவளின் விழிகளை பார்த்து கேட்டான்.
அவனது கேள்வியில் புன்னகை மலர்ந்தது அவளுக்கு. “உங்களையும் என்னையும் பிரிக்காம இருக்கிற இடம் எந்த இடம்னு நீங்க தேடி அங்க என்ன கூட்டிட்டு போறீங்க... பிறகு எனக்கு எப்படி கோவம் வரும். உங்களை போல தான் எனக்கும். உங்கக்கூட இருந்தாலே போதும். வசதி வாய்ப்பு பார்த்து உங்களை கல்யாணம் பண்ணல.. இன்பேக்ட் யாரு என்னன்னு தெரியாம தான் தாலியே கட்டிக்கிட்டேன். அதுக்கு பிறகும் கூட நீங்க அமைச்சர்னு தெரியும். அப்பவும் உங்க மேல எந்த பிடிப்பும் வரல. ஆனா எனக்காக உங்க பதவி பணத்தை எல்லாம் விட்டுட்டு உங்க வீட்டு சமையல் கட்டுல கரண்டி பிடிச்சீங்க பாருங்க... அந்த உள்ளத்தை தான் நான் தேடுனேன்... அந்த உள்ளம் இத்தனை நாட்களா என்னை மட்டும் தான் தேடுதுன்னு உண்மையா எனக்கு தெரியாது” என்றாள்.
“தெரிஞ்சு இருந்தா என்னடி பண்ணி இருப்ப?” “வேற என்ன பண்ணி இருப்பேன்.. உங்களை உள்ளுக்குள்ளையே காதலிச்சு இருப்பேன்” என்றாள். அதில் அவனது கண்களில் மின்னல் வந்துப் போனது.
“என் மேல கோவமே இல்லையா?” கேட்டான். “கோவம் இருந்தது இன்னைக்கு காலையில வரை.. ஆனா அத்தனை உறவுகள் இருந்தும், அத்தனை பணம் இருந்தும், ஊர் போற்றும் மிகப் பெரிய பதவி இருந்தும் எதுவுமே இல்லாதவர் போல தெருவுல படுத்து இருந்தீங்களே அப்போ புரிஞ்சது சார் என்னை தான் தேடுறீங்கன்னு... அதுக்கு முன்னாடி நீங்க தாலியை பற்றி சொல்லன்னா இன்னும் உங்க உணர்வுகளை நான் புரிஞ்சு இருந்து இருக்க மாட்டேன். உங்க நல்ல நேரம் முதல் நாளே என் பெயரையும் தாலியையும் பத்தி க்ளூ குடுத்தீங்க இல்லன்னா உங்க பாடு ரொம்ப குஷ்ட்டமா போய் இருக்கும்” என்று நக்கல் பண்ணினாள்.
அதை கேட்டு சிரித்தவன், “அதென்னவோ வாஸ்த்தவம் தான்டி” என்று சொன்னவன் காரை வேகமாக ஓட்டினான். ஒரு இடத்தில் அதை நிறுத்தி விட்டு “இதுக்கு மேல நாம இதுல பயணம் பண்ண முடியாது” என்றான்.
“அப்போ நடராஜா சர்வீஸ் தானா..?”
“உன்னை என் உள்ளங்கையில வச்சு பார்த்துக்குவேன்டி... வெயில் கூட உன் மேல பட விடமாட்டேன்”
“அதை நீங்க சொல்லி தான் நான் கேட்கணும்னு அவசியம் இல்லை. அது எனக்கு நல்லாவே தெரியும். பட் இப்போ என்ன பண்றது?” என்று கேட்டாள்.
“வெயிட்” என்ற நேரம் வேறொரு கார் வந்தது. அந்த காரில் பின்னாடி வராளியை அமரவைத்து தானும் அமர்ந்துக் கொண்டான். “இவன் என்னோட உயிர் நண்பன் குகன்” என்று டிரைவர் சீட்டில் அமர்ந்து இருந்தவனை அறிமுகம் செய்து வைத்தான்.





