Notifications
Clear all

அத்தியாயம் 44

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 992
Topic starter  

இவர்கள் வழக்கத்தில் முகத்தை மறைத்து தான் தாலி கட்ட வேண்டும். அதாவது ஒரு பட்டு துண்டை இருவருக்கும் நடுவே வைத்து அந்த பக்கம் இந்த பக்கம் என்று பிடித்துக் கொண்டார்கள் மற்றவர்கள்.

எனவே வாழைக் கன்றை அருகில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்த ஆதினியின் கழுத்தில் தாலியை கட்டினான் பெருவளத்தான்.

அவனுக்கு இங்கு நடந்த எதுவும் தெரியாது. அவனை பொறுத்தவரை மரத்துக்கு கட்டினான் என்று தான் இன்று வரையிலும் எண்ணிக் கொண்டு இருந்தான். ஆனால் அவனுக்கு தெரியாமல் திரை மறைவில் இத்தனை வேலைகளும் நடந்து இருந்தது.

ஆதினியின் கழுத்தில் இருந்த தாலியை அப்பொழுதே கழட்டி கேட்க மறந்த குமுதா கல்யாண பரபரப்பில் அதை மறந்து விட்டார்.

ஆனால் இவர்கள் எப்படியும் கேட்பார்கள் என்று எண்ணி மஞ்சள் கயிற்றில் கோர்த்து இருந்த தாலியை மட்டும் கழட்டி தன்னுடைய சின்ன செயினில் கோர்த்துக் கொண்டவள் மஞ்சள் கையிற்றை எங்கோ தூக்கி எரிந்து இருந்தாள்.

காரணம் கேட்டால் எங்கோ அறுந்து விழுந்துடுச்சு... என்று சொல்லிக்கொள்ளலாம் என்றே அந்த கையிற்றை வேதனையுடன் தூக்கி எறிந்தாள்.

அந்த கயிறுக்கு ஆசை பட்டால் மொத்தமும் ஆராய்ந்து தன் கழுத்தில் இருக்கும் தாலி பறிபபோய் விடுமே என்று பயந்து அதை செய்தாள். இதுவரை அதை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வந்திருந்தாள்.

ஆனால் பெருவளத்தானுக்கு விபத்து நேர்ந்த பொழுது அதை கழட்டிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம். வேறு வழியே இல்லை. அவன் கட்டிய தாலி பெரிதா, இல்லை அவனது உயிர் பெரிதா என்று யோசிக்க கூட இல்லாமல் தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி அடமானம் வைக்க சொல்ல அந்த ரிஷப்ஷன் கேர்ல் வியந்து போய் அதிர்ச்சியுடன் பார்த்தாள். வேறு வழியில்லையே அவளது பார்வையை கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டாள்.

ஆனால் விசாகனிடம் அந்த பெண் சொல்லி இருப்பாள் போல. அதனால் விசாகன் அந்த நகைகளை மீட்டு ஆதினியிடம் கொடுக்க அவளோ அதை வாங்காமல் போய்விட விசாகன் அதை பத்திரமாக வைத்துக் கொண்டார்.

பெருவளத்தானை தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும் அவனின் மனைவி ஆதினி என்று. இரண்டாவது முறை கனிகாவின் கழுத்தில் தாலி கட்டும் பொழுது முடிச்சு ஒழுங்காக விழாமல் குமுதா தான் எடுத்து கட்டினார்.

அது எல்லோருக்கும் தெரியும். விசாகனும் வாணியும் அன்றிலிருந்து இப்போது வரை ஏனோ மனதார ஆதினியை மருமகளாக பார்த்தார்கள். ஆதினி அன்றைக்கு கோயிலுக்கு கூட்டிட்டு போன பொழுது கூட எங்கள் மருமகளான ஆதினியை எங்களுக்கே குடுத்துடு என்று வேண்டினார்கள்.

ஆதினியை முதல்முறை விசாகன் வீட்டுக்கு கூப்பிடும் பொழுது,

“ஏன் மாமா உங்க மகன் அவரோட மனைவியோடு சேர்ந்து வாழறதை பார்த்து நான் கண்ணு போட்டுடுவனொன்னு பயந்துட்டு இங்கே கூப்பிடுறீங்களா?” என்று கேட்டாள்.

மிக இயல்பான கேள்வி தான். அடிப்படை கோவம் சுமந்த கேள்வி தான். ஆனால் விசாகனோ,

“நீ அவங்களை பார்த்து கண்ணு போட்டுடுவனோ இல்ல அங்க இருந்தா உன் மனம் துன்பப்படும்னோ நான் உன்னை இங்க கூப்பிடல ஆதினி. என்னவோ எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சி இருக்கு. யாருமே செய்ய துணியாத ஒரு காரியத்தை என் மகனுக்காக நீ செய்து இருக்க அதுக்காக உன்னை கொண்டாடனும்னு நான் கூப்படல” என்றவரை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“இந்த சின்ன வயசுல உனக்கு இருக்கிற பக்குவத்தை பார்த்து மிரண்டு போயிட்டேன் பாப்பா. சத்தியமா இந்த கல்யாணம் நின்னு போயிடும்னு இருந்தேன். ஏன்னா என் மகனுக்கு தாலி தோஷம். அதை கழிக்காம விட்டதுல உன் அக்காவுக்கு ஏதேனும் ஆகிடுமோன்னு பயந்து முதல் தாலியை நான் கட்டிக்க மாட்டேன்னு சொல்லி எங்க எல்லோர நெஞ்சுலையும் நெருப்பை கொட்டி அதுல எண்ணையும் ஊத்துனா. தோஷம் தானே இரண்டாவது பெண்ணை வைத்து போக்கலாம்னு சொன்னப்ப உன் இரண்டாவது அக்கா என்னை இந்த கல்யாணத்துக்கு வற்புருத்துனா நான் ஓடி போயிடுவேன்னு சொன்னா. ஆனா நீ கொஞ்சமும் யோசிக்காம என் பையனோட உயிருக்காக உன் கழுத்துல அவனோட முதல் தாலியை வாங்கிக்கிட்ட பாரு அந்த நல்ல மனசு வேற யாருக்கும் வராது. அந்த அன்பு உள்ளம் கொண்ட உன்கிட்ட எங்க தனிமையை போக்கிக்கொள்ள தான் உன்னை இங்க கூப்பிட்டோம் பாப்பா. உனக்கு இது பிடிக்கலன்னா இனி நீ இங்க வரவேண்டாம்” என்றவரின் பேச்சில் என்னத்தை கண்டாளோ அன்றிலிருந்து அவர் கூப்பிடும் நேரமெல்லாம் விசாகனோடு வந்து விடுவாள்.

வந்து இங்கே வாணியோடு கலகலத்து என அவளுக்கு நன்றாகவே நேரம் போகும். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு நினைவுகள் என்றும் நீங்க சுமை என்று புரிந்தது. கடந்துப் போன எல்லாவற்றையும் எண்ணிக்கொண்டு வந்தான் பெருவளத்தான்.

இன்றைக்கு காலைவரை பெருவளத்தான் வேதனையிலும் துக்கத்திலும் தான் இருந்தான். போனது எல்லாம் போகட்டும் என்று அவனால் இருக்க முடியவில்லை. தாளாத துக்கத்தில் அவன் இருக்க அவனை தேடி வந்தார்கள் செல்வம், பிரபு, விசாகன், கனிகா, சஞ்சு.

வெறுமென கல்யாணத்தை நிறுத்துன்னு சொன்னா நிறுத்த மாட்டான் என்று அவனை பற்றி தெரிந்த கனிகாவும் விசாகனும் கணித்து இருந்தார்கள்.  

அதே போல அவனிடம் போய் கல்யாணத்தை நிறுத்த சொல்ல,

அவன் போக மாட்டேன் என்று மறுத்து விட,

“டேய் அவ உன் பொண்டாட்டிடா” என்று விசாகன் கத்தியே விட்டார். அவரால் ஆதினியை வேறு யார் வீட்டுக்கோ தாரை வார்த்துக் கொடுக்க முடியவில்லை. அதனால் ஆத்திரத்தில் கத்தியே விட்டார்.

“ப்பா” என்று பெருவளத்தான் அதிர்ந்துப் போனான். என்ன சொல்றாரு என்று திகைத்துப் போனான். அதன் பிறகு திருமணத்தன்று நடந்த அத்தனை விசயங்களையும் அவரும், கனிகாவும், சஞ்சுவும் சொல்ல வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை.

எப்படி கட்டுப் படுத்திக் கொண்டான் என்று அவனுக்கே தெரியவில்லை.

“சோ எல்லாரும் என் வாழ்க்கையில என் உணர்வுகளோட விளையாண்டு இருக்கீங்கல்ல” என்று கேட்டவனின் தோளை ஆதரவாக தொட்ட செல்வம்,

“போனது எல்லாம் போகட்டும் முதல்ல நாம கிளம்புவோம். பிறகு எல்லாவற்றையும் பேசிக்கலாம் பெருவளத்தான்” என்று சொல்ல,

“ஆமாம் சகல.. நேரம் ரொம்ப குறைவா இருக்கு. நாம இப்ப கிளம்புனா தான் சரியா இருக்கு” பிரபுவும் சொல்ல, அதன் பிறகு அப்படியே கிளம்பிவிட்டான்.

“சகல குளிக்கல” நேரம் காலம் தெரியாமல் பிரபு கலாய்க்க அவனை முறைத்துப் பார்த்தான் பெருவளத்தான்.

“ஏன் மாமா சும்மா இருக்க சிங்கத்தை சொறிஞ்சி விடுறீங்க” கனிகா இன்னும் கலாய்க்க,

“பெரிய மாமா குளிக்கலன்னாலும் கலையா தான் இருக்காரு” சஞ்சு வேறு சொல்ல,

“அவர் இருக்குற வேகத்துக்கு எதுவும் பேச முடியாம இருக்காரு. இருக்கிற கோவத்தை எல்லாம் பார்சல் பண்ணி ரெடியா வச்சு இருக்காரு. மேடமை பார்த்த உடன் இறக்கி விட்டதுக்கு பிறகு தான் உங்களுக்கு எல்லாம் இருக்கு. சுனாமியா பொங்க போறாரு. அது வரை நீங்க எவ்வளவு வேணாலும் கலாய்க்கலாம்” என்று செல்வம் சொல்ல, கப்பென்று வாயை மூடிக் கொண்டார்கள் மற்றவர்கள்.

ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு வந்த பிறகு ஆதினியை கண்களால் தேடினான். அவளோ யாரையும் கண்டுக் கொள்ளாமல் அழைப்பு வரவும் உள்ளே நுழைந்துக் கொண்டு இருந்தாள். இவன் வந்ததே அவளுக்கு தெரியாது.

எந்த சலனமும் இல்லாமல் அவள் பாட்டுக்கு கையெழுத்துப் போடப் போக நெருப்பில் தானே குதித்தது போல உடம்பு முழுக்க எரிந்தது.

அவளின் அருகில் மாப்பிளையாக இருந்தவனை பார்த்து நெஞ்சு எரிந்தது.

“சகல அவனையும் அவன் குடும்பத்தையும் நாங்க பார்த்துக்குறோம். நீங்க போய் ஆதினி மேடமை கவனிங்க” என்று சொன்ன இரு சகளைகளும் எடுத்து சொல்லி கேட்காமல் இரண்டு அடி போட்டு அந்த ஆபிசை விட்டே துரத்தி அடித்தார்கள்.

எந்த சலனமும் இல்லாமல் கையெழுத்துப் போட்டவளை பார்த்து கண்கள் சிவந்துப் போனது. யாரா இருந்தாலும் இவ கல்யாணத்துக்கு ஒத்துக்குவாளா... அப்போ என் தாலியை இத்தனை வருடமா சுமந்ததுக்கு பொருள் என்னவாம் கடுப்போ கடுப்பு. அந்த கடுப்புடனே அவளை அவளை தன் உயரத்துக்கு தூக்கி அவளின் இதழ்களில் வன் முத்தத்தை அத்தனை பேரின் மத்தியிலும் கொடுத்தான்.

ஏனோ தான் வாழ இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்தவளை உயிரில் வைத்து முடிந்துக் கொண்டான். அதே போல தன் கோவத்தையும் அவளிடம் காட்டினான் வன்மையாக. ஒரே முத்தம் தான் அந்த ஒற்றை முத்தத்தில் எவ்வளவு உணர்வுகள் கொட்டிக் கிடந்தது... நினைத்துப் பார்கையிலே தேகம் எல்லாம் சிலிர்த்துப் போனது.

தன் அருகில் இருந்தவளை திரும்பிப் பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

“இப்பொழுதே அவளை தூக்கி தன் மடியில் வைத்துக் கொள்ள வேண்டும் போல கைகளும் மனதும் பரபரத்துப் போனது. ஆனால் இப்படி அவசரமாக அவளை அள்ளி எடுக்க மனம் வரவில்லை.

நிதானமாக அவளை தனக்குள் இறுக்கிக்கொள்ள வேண்டும் அவனுக்கு. ஆரத்தழுவ கூட இயலாத காதல் வேதனையில் அவன் தவித்த தவிப்புகள் அவனுக்கு மட்டும் தானே..

கூடல் எல்லாம் பிறகு தான். முதலில் அவளை ஆசை தீர தன் அணைப்பால் அவளை கொன்று எடுக்கணும். மூச்சு முட்ட முத்தம் கொடுக்கணும். கண்கள் வலிக்க வலிக்க அவளை சலிக்காமல் பார்க்கணும். அவளை தன் உயிரில் போட்டு துவட்டனும். அவளை ஆசை தீர கொஞ்சனும், அவளை பேசவே விடாமல் முத்தாடி தீர்க்கணும், விட்டால் அவளை பிச்சு தின்னும் வேகத்தில் அவன் இருந்தான். இதெல்லாம் செய்த பிறகு தான் மற்றது எல்லாம் என்று அவனது மனம் அவசரமாய் பட்டியல் போட்டது.

வீடு வர காரை கிரீச்சிட்டு நிப்பாட்ட அதன் சத்தத்தில் விழிகளை திறந்தாள். வருகிற வழி முழுக்க நல்ல தூக்கம். பதமாகவே வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான். அதனால் ஆதினி அலுங்காமல் தூங்கிக்கொண்டு வந்தாள்.

“இறங்கு” என்று கர்ஜித்து விட்டு தன்னிடம் உள்ள சாவியை கொண்டு கதவை திறந்தான்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top