Notifications
Clear all

அத்தியாயம் 2.1

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

“உங்களால தான் என்னை அடிச்சுட்டு போறாங்க. எப்போ பாரு எனக்கு அடி வாங்கி வச்சுக்கிட்டே இருக்கீங்க. உங்க பொண்டாட்டி வந்து உங்களுக்கு பரிமாறுனா எனக்கு இந்த கொட்டு தேவையா?” கடுப்படித்த ஆதினி இரண்டு தோசையோடு எழுந்துக் கொள்ள,

“ஹேய் என்ன இரண்டு தோசையோடு எழுந்துக்குற.. இன்னும் இரண்டு சாப்பிடு” என்று ஹாட்பாக்ஸில் இருந்த இரண்டு தோசையை அவளுக்கு போட,

“சாயங்காலமே நான் ஸ்நேக்ஸ் சாப்பிட்டுட்டேன்... இது உங்க பங்கு தான்” என்று அவன் சாப்பிட்ட இரண்டு தோசையோடு இந்த இரண்டு தோசையை வைத்து விட்டு அவள் எழுந்துக் கொள்ள போனவளின் முதுகை பார்த்தான் பெருவளத்தான்.

இந்த இரண்டு தோசை தனக்காக தான் வைத்து இருக்கிறாள் என்று அறியாதவனா அவன். வெளிப் பார்வைக்கு வேணா அவள் அன்பிள்ளதவள் போல தெரிவாள். ஆனால் உள்ளுக்குள் பேரின்பம் ஒளிந்து இருக்கிறது என்பதை எப்பொழுதோ உணர்ந்துக் கொண்டான் பெருவளத்தான்.

ஆனால் அதை அவளின் சொந்த குடும்பத்தார்கள் உணர்ந்துக் கொள்ளவில்லை. உணர்ந்துக் கொள்ள கூடிய சந்தர்ப்பமும் இன்னும் அமையவில்லை போலும்.

இண்டர்வியூ க்கு படிக்க வேண்டும் என்றாலும் அந்நேரத்துக்கு முட்டை தோசை ஒன்றை போட்டுக் கொண்டு வந்து அவனுக்கு கொடுத்தவள் கூடத்தில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

எல்லோரும் தூங்க போய் விட்டார்கள். அந்த வீட்டில் மொத்தம் மூன்று அறைகள். பெண் பிள்ளைகள் ஒன்றாக தூங்க, தாய் தந்தைக்கு ஒரு அறை என்றாலும் விதுலோடு வைகுந்தன் பல நேரம் படுத்துக் கொள்வார். எனவே ஹால் தான் ஆதினியின் ஸ்டெடி ரூமாக இருந்தது.

டிவி பார்க்க முடியவில்லை என்று புலம்பினாலும் எதையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டாள். அவள் பாட்டுக்கு படிக்க ஆரம்பித்து விடுவாள்.

இன்றும் அது போல அவள் படிக்க ஆரம்பிக்க பெருவளத்தான் இங்கு வந்தால் கூடத்தில் தான் படுத்துக் கொள்வான். வைகுந்தன் அவனை விதுலோடு படுத்துக் கொள்ள சொன்னாலும்,

“இல்ல மாமா நான் இங்கயே படுத்துக்குறேன் ஒண்ணும் பிரச்சனை இல்லை” என்று அங்கேயே படுத்துக் கொள்வான். “இல்ல மாப்பிள்ளை சின்னவ படிக்கிறா” என்று தயக்கமாக அவர் சொல்ல, “பரவாயில்லை மாமா எனக்கு தூக்கம் வராது... நான் பார்த்துக்குறேன். டிஸ்ட்டபா பீல் பண்ணல...” என்று அவன் போன் பார்க்க ஆரம்பித்து விடுவான்.

அவள் அவனை கண்டுக்கொள்ளாமல் படிக்க இவனும் அவள் முழித்து இருக்கும் வரை போன் பார்ப்பான். சில சமயம் அவளுக்கு காபி போட்டுக் கூட கொடுப்பான். அப்போதெல்லாம் அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்ப்பாள். அவ்வளவு தான் ரியாக்ஷன். வாங்கி குடித்து விட்டு அந்த டம்ளரை கூட கழுவி வைக்க மாட்டாள். படிப்பில் அவ்வளவு கவனமாய் இருப்பாள்.

அவளது டம்ளரையும் அவனே சேர்த்து கழுவி வைப்பான். அவள் படித்து முடிப்பதற்குள் இவன் இரண்டு, மூன்று முறை காபி போட்டு வந்து கொடுப்பான். ஆனாலும் அவன் மீது இருக்கும் இகழ்ச்சி மட்டும் மாறவே மாறாது ஆதினிக்கு. ஆனால் அவனுக்கு என்ன வேண்டுமோ அதை செய்துக் கொடுப்பாள் யாரின் கவனமும் ஈர்க்காமல். பல நேரம் பெருவளத்தானுக்கே தெரியாது. ஆனால் அவளுக்கு தன் மீது ஏதோ கோவம் இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. அதனாலே பெருவளத்தானும் பெரிதாக அவளது உதாசீனத்தை கண்டுக் கொள்ள மாட்டான்.

அவனுக்கு சத்தமில்லாமல் முட்டை தோசையை வைத்து விட்டு போய் படிக்க ஆரம்பித்தாள். முட்டை தோசையை பிய்த்து சாப்பிட்டவனுக்கு வயிறு நிறைந்தது போல ஒரு உணர்வு.

கைக்கழுவி விட்டு வந்தவன் அவளுக்கு எதிரில் போனை பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டான். கண்களை சுழட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் எழுந்து போய் தூங்க மனமில்லாமல் அவளுக்கு துணையாய் அங்கேயே அமர்ந்து இருந்தான்.

படித்துக் கொண்டு இருந்தவளுக்கும் கண்களை சுழட்டிக் கொண்டு வர தலையை உலுக்கிக் கொண்டு படிக்க ஆரம்பிக்க கண்கள் எல்லாம் எரிந்தது. எழுந்து போய் முகத்தை கழுவிக் கொண்டு வந்தாள்.

அவளுக்கு எதிரே சூடாக இஞ்சி தட்டிப் போட்டு மணக்க மணக்க தேநீரை நீட்டினான் பெருவளத்தான். ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் குடித்தவள் மீண்டும் புத்துணர்வாக படிக்க ஆரம்பித்தாள்.

சில பல நிறுவனங்களில் சனிக்கிழமை தான் இண்டர்வியூ வைப்பார்கள். இங்கு ஆதினிக்கும் சனிக்கிழமை தான் இண்டர்வியூ. அதாவது அடுத்த நாள்.

எனவே கண் விழித்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு படித்துக் கொண்டும் இருந்தாள். நல்ல சம்பளம். நல்ல எதிர்காலம். ஒன்ஸ் என்ட்டர் ஆகிவிட்டால் அதுக்கு பிறகு கவலை இல்லை. எனவே அவளுடைய முழு முயற்சியை போட்டுக்கொண்டு இருந்தாள்.

அதை உணர்ந்தவன் தானும் அவளுடன் அமர்ந்து உதவி செய்ய அலட்டிக் கொள்ளாமல் அவனது உதவியை வாங்கிக்கொண்டாள்.

“போதும் குட்டி இதுக்கு மேல கண் விழிச்சா நாளைக்கு காலையில இண்டர்வியூல தூங்கி விழுவ...” என்று அவளை தூங்க அனுப்ப,

“இன்னும் கொஞ்சம் இருக்கு... ப்ளீஸ்” என்றவள் அதையும் முடித்துக் கொண்டே எழுந்தாள். அடுத்த நாள் காலையும் சீக்கிரமே எழுந்தவள் தன் வேலைகளை பரபரப்புடன் பார்க்க ஆரம்பித்தாள்.

குமுதா எழுந்து அவளுக்கு தேவையான உணவுகளை செய்ய, அந்த அதி காலையிலே பெருவளத்தானை அழைத்துக் கொண்டு மார்க்கெட்டுக்கு கிளம்பி விட்டார் அப்பா.

போகும் பொழுது ஆதினிக்கு அவன் வாழ்த்து சொல்ல, சின்ன தலையசைப்பு மட்டுமே அவளிடம் இருந்து அவனுக்கு கிடைத்தது.

மனமுருக சாமிக் கும்பிட்டவள் காலை ஏழு மணிக்கே கிளம்பி விட்டாள் வீட்டி விட்டு தன்னுடைய ஸ்கூட்டியில். அவளே சம்பாதித்து வாங்கிய வாகனம். எனவே அதை ஓட்டும் பொழுது எப்பொழுதும் ஒரு கர்வம் அவளிடம் இருக்கும். அதே போல தனி நிமிர்வும் அவளிடம் இய்லபாகவே இருக்கும். அது அவள் கற்ற கல்வியால் வந்தது என்றால் மிகையில்லை.

தேர்ந்த அறிவு அவளிடம் இருந்தது...! எதை படித்தால் எந்த வேலை கிடைக்கும் என்று ஒரு கணக்கோடு படித்தவள் ப்ரைவேட் வேலைக்கே முக்கியத்துவம் கொடுத்தாள். முப்பது வயதில் அரசு வேலைக்கு எழுதி போட வேண்டும் என்று கணக்கு வைத்து இருக்கிறாள். அதுவரை ப்ரைவேட் தான். இந்த வயதிலே சோம்பி போய் வேலை பார்க்க அவளால் இயலாது. அதோடு அங்கு கிடைக்கும் ஒரு வருடத்து வருவாயை அவள் ப்ரைவேட் வேலையில் நான்கு மாதத்திலே சம்பாதித்து விடுவாள். அந்த மாதிரி திறமை உள்ளவள். எனவே மாதம் ஒரு இலட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வேலையாக பார்த்து படித்தாள்.

இதோ நாளைக்கு நேர்முகத் தேர்வுக்கு செல்கிறாள். சீப் இஞ்சினியர் வேலைக்கு... சாலைகளுக்கு பாலம் போடுவாந்தி ஆரம்பித்து பல மல்ட்டி காம்ளெக்ஸ் கட்டி கொடுக்கும் மிகப்பெரிய ப்ரைவேட் நிறுவனதுக்கு தான் செல்ல இருக்கிறாள்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top