Notifications
Clear all

அத்தியாயம் 22

 
Admin
(@ramya-devi)
Member Admin

வாழைகள் குழை தள்ளி போய் இருந்தது. தென்னை தோப்புக்கள் சீர் எடுக்கப்பட்டு சுத்தமாய் இருக்க கண்டு “பரவாயில்லை சரியாக தான் வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க...” எண்ணியவன் திண்ணையில் அமர, சரியாக ஓடி வந்தார் செவுனப்பன்.

“அய்யாருக்கு வணக்கமுங்க...” என்று தலையில் கட்டி இருந்த துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டு சொன்னவரை நிமிர்ந்து பார்த்தான்.

“நீங்க யாரு...”

“நான் இப்ப தான் நாலு மாசமா இங்க வேலைக்கு வந்து இருக்கேனுங்க... நம்ம மலைச்சாமிக்கு என்னைய தெரியுமுங்க... அவரு தயவுல தான் இங்க வேலைக்கு சேர்ந்தேனுங்க.” என்றார் அந்த முதியவர்.

“ம்ம்ம் பேரு...”

“செவுனப்பனுங்க..”

“ம்ம்ம்...” என்றவன்,

“மலைச்சாமி எங்க போனாரு...”

“அதுங்க அறுவடைக்கு ஆளுகளை வர சொல்லி பக்கத்து ஊரு காட்டுக்கு போயிருக்கான்... இன்னும் செத்த நாழில வந்து போடுவான். அதுவரை அய்யாரு இளநி தண்ணி குடிக்கிறீகளா...?” வாஞ்சையுடன் கேட்டார்.

“சரி வெட்ட சொல்லுங்க...” என்றவன், எழுந்து உள்ளே சென்று வேட்டையை கட்டிக்கொண்டு மேலே ஒரு துண்டை மட்டும் போட்டுக்கொண்டு வெளியே வந்தான்.

அதற்குள் செவுனப்பன் இரண்டு இளநீரை வெட்டி தயாராக வைத்து இருந்தார். வாங்கி குடித்தவனுக்கு வயிறும் மனதும் நிரம்பி போனது.

“எனக்கு ஒண்ணு போதும். இன்னொன்னை நீங்க குடிச்சுடுங்க...”

“அய்யாரு...” என்றார் தயக்கமாய்.

“குடிங்க... உங்களுக்கும் பசிக்குமில்ல..” என்றவன் எழுந்து சுற்றி பார்க்க சென்றான்.

எல்லா வேலைகளும் சரிவர நடந்துக்கொண்டு இருந்தது. இங்கு அதிகம் வந்தது வெள்ளியம்பலத்தார் தான். அதனால் வேலை செய்தவர்களில் பாதி பேருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. ஆனாலும் அவனது நடையழகும் தோற்றமும் கம்பீரமும் நிலத்துக்கு உடையபட்டவர் என்று காட்டி கொடுக்க, அனைவரும் வணக்கம் செய்தார்கள்.

பதிலுக்கு தலையசைத்துவிட்டு சுற்றிலும் ஒரு நடை போய்விட்டு வந்தான். கிட்டத்தட்ட அங்கு மட்டும் இருபத்தி ஐந்து ஏக்கர் அளவு நிலம் இருந்தது. அதை இன்று ஒரு நாளில் சுற்றிவிட முடியாது எண்ணியவன்,

அறுவடை செய்துக்கொண்டு இருக்கும் நிலத்தில் சிறிது நேரம் நின்றான் அதை மேற்பார்வை செய்த படி. அதன் பின் கரும்பு விளைச்சல் எப்படி இருக்கு என்று பார்க்க சென்றான்.

போகும் வழியல் கேப்பை நடவு போய்க்கொண்டு இருந்தது. அதையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டு சென்றான். அப்பொழுது செவுனப்பன்,

“ஏ புள்ள கரையேறு... கொஞ்சம் வேலை இருக்கு...” என்று யாரோ ஒருவரை கூப்பிடும் சத்தம் கேட்டது.

“வா வெரசா வா புள்ள...” என்று கையோடு இழுத்துக்கொண்டு சென்றார் அந்த பெண்ணை.

“ஐயோ என்ன ஆச்சுய்யா எதுக்கு இப்படி அவசரப்படுத்துறீக... நடவு வேலை கிடக்கு... மலை மாமா வந்தாரு அவ்வளவு தான் ஒரு நாள் கூலிய குறைச்சி புடுவாரு...” முணகிக்கொண்டே கைக்கால்களில் உள்ள சேற்றை கழுவிக்கொண்டு அவர் இழுத்த இழுப்புக்கு சென்றாள்.

“கூலி என்ன கூலி... அது போனா போயிட்டு போவுது. முதல்ல நீ கொஞ்சம் சோத்தை ஆக்கு கண்ணு...” என்றார் திண்ணையில் அமர்ந்துக்கொண்டு.

“ஏன் காலையில தான் சொன்னீரு ஏதோ பழைய கஞ்சியவே குடிச்சுக்குவேன்னு. இப்போ என்னவாம்..” என்று முறைத்துக்கொண்டே குடிசையின் வெளியே காய்ந்த விறகை அள்ளிக்கொண்டு இருந்தாள்.

“ஏங்கண்ணு எனக்கா உன்னை சமைக்க சொன்னேன். இந்த நிலத்துக்கான அய்யாரு ஊருல இருந்து வந்து இருக்காவ. அவுகளை பட்டினியா போட சொல்லுரியாக்கும்... அவுகளுக்கு சமைக்க கூப்பிட்டா ரொம்ப தான் பகுமானம் கட்டுறியே...” அப்பாவியாய் அவர் சொல்ல அதில் சிரித்தவள்,

“அய்யா உம்மட அய்யாவுக்கு வக்கனையா சமைச்சி போடுறேன். நீரு போயி அவுக கூட நில்லும்...” என்று சொன்னவள்,

“போறதுக்கு முன்னாடி தோட்டத்துல போயி காய் கசவுகளை கொஞ்சம் பறிச்சுட்டு வாங்க...” என்றவள் விறகுகளை எடுத்துக் கொண்டு குடிசையின் உள்ளே நுழைந்தாள்.

நுழைந்தவளின் உணர்வுகள் ஒரு நொடி ஸ்தம்பித்து போனது. தன் உணர்வுகள் பொய்யா இல்லை தன் கற்பனையா எண்ணி தவித்தவள்,

சுற்றிலும் எதையோ தேடினாள். ஒன்றும் புலப்படவில்லை. அதன் பின்பு தன் தலையை தட்டிக்கொண்டவள் மடமடவென்று சமைக்க ஆரம்பித்தாள்.

செவுனப்பனும் காய்கறிகளுடன் வர, சின்னதாய் ஒரு விருந்து சமைத்தாள்.

“அய்யா கறவைக்கு ஆள் வந்து இருக்குமே... இந்தாங்க தூக்கு போவுனி சேர்த்து பால் வாங்கிட்டு வாங்க...”

“எதுக்கு கண்ணு...”

“கொஞ்சமா பாயாசம் வச்சு புடலாம்னு தான்ய்யா ...”

“அப்ப சரி கண்ணு... இந்தா ஒரு எட்டுல வந்து புடுறேன்...” என்று தன் வயதை மீறி ஓடினார். போகும் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு விழிகளில் கண்ணீர் நிறைந்து போனது.

சுவரோரம் சாய்ந்து அமர்ந்தவளின் பார்வை இலக்கின்றி அருகே இருந்த ஆலமரத்தையே வெறித்துக்கொண்டு இருந்தது. விழிகளில் வழிந்த கண்ணீரை விரக்தி புன்னகையில் ஒழித்துக்கொண்டவள் சட்டென்று நினைவு வந்து அடுப்பை கவனிக்க உள்ளே ஓடினாள்.

செவுனப்பனும் பாலோடு வர, பால் பாயசம் வைத்து முடித்துவிட்டு, கைகளை முந்தானையில் துடைத்துக்கொண்டே வெளியே வந்தாள்.

“அய்யா வேலைய முடிச்சுட்டேன். இந்தாங்க கொஞ்சம் பாயாசம்...” என்று அவரிடம் நீட்டினாள்.

“என்ன கண்ணு அவுகளுக்கு இல்லாம நாம முன்னாடி சாப்பிட்டா பண்பாடாகுமா...? போ கண்ணு போய் எல்லாத்தையும் இப்படி திண்ணையில எடுத்து வை. நான் போய் அவுகளை சாப்பிட கூட்டியாறேன்.”

“ஐயா அவுக இப்படி உட்காந்து சாப்பிடுவங்கலான்னு தெரியாதே...?”

“அதனால என்ன கண்ணு அவுக விருப்பம் என்னவோ அது படி செஞ்சிடலாம்... இந்த சமயம்னு பாத்து இந்த மலைச்சாமி எங்க போய் தொலைஞ்சானோ தெரியல... நமக்கு அவுகள பத்தி ஒண்ணுமே தெரியல... ஒரு விசயமும் மண்டைக்கு அம்புட மாட்டிக்கிது.” புலம்பியபடி ஓடினார் பாண்டியனிடம். ஓய்வே இல்லாமல் அவர் ஓடியதை கண்டு நெஞ்சில் உதிரம் வடிய பார்த்துக்கொண்டு இருந்தவள், இலை அறுக்க குடிசையின் பின்னால் இருந்த வாழை மர தோப்பிற்கு சென்றாள்.

“கண்ணு கண்ணு...” செவுனப்பன் அவளை அழைத்துக்கொண்டு இருக்க,

“இந்தா வாறன்ய்யா... இலை அறுக்க சொல்ல மறந்துட்டேன். அது தான் ய்யா போய் அறுத்துக்கிட்டு வரேன்...” என்று சொல்லிக்கொண்டே குடிசையின் வாசலில் வந்து நிமிர்ந்து பார்த்தாள். பார்த்த உடனே பக்கென்று இருந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : December 18, 2025 9:58 am
(@gowri)
Reputable Member

டேய் ரைட்டர்! ஒன்னும் புரியாம கொரியன் படம் பார்த்து போலவே இருக்கு....

நல்ல தானே போச்சி.....என்ன ஆச்சி இவனுக்கு????

பொழில் இவனுக்கு துரோகம் பண்ணிடாளா என்ன????

ஏன்????எப்படி தெரிஞ்சது இவனுக்கு?????

பொழில் அங்க தானே இருக்கா.....வீட்டில்....

இப்ப இங்க இருக்கறது யாரு?????

ஏன் ஷாக் ஆகணும் அவனை பார்த்து?????

Loading spinner

ReplyQuote
Posted : December 19, 2025 10:53 am
Admin
(@ramya-devi)
Member Admin

Posted by: @gowri

டேய் ரைட்டர்! ஒன்னும் புரியாம கொரியன் படம் பார்த்து போலவே இருக்கு....

நல்ல தானே போச்சி.....என்ன ஆச்சி இவனுக்கு????

பொழில் இவனுக்கு துரோகம் பண்ணிடாளா என்ன????

ஏன்????எப்படி தெரிஞ்சது இவனுக்கு?????

பொழில் அங்க தானே இருக்கா.....வீட்டில்....

இப்ப இங்க இருக்கறது யாரு?????

ஏன் ஷாக் ஆகணும் அவனை பார்த்து?????

 

அது தான் டா ட்விஸ்ட் டே.. பொழில் துரோகம் எல்லாம் செய்யல. ஆனா அவ ஷாக் ஆனதுக்கு காரணம் இருக்கு

 

Loading spinner

ReplyQuote
Topic starter Posted : December 20, 2025 11:31 am
(@megalaveera)
Trusted Member

Nice 

Loading spinner

ReplyQuote
Posted : January 26, 2026 12:04 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top