அத்தியாயம் 1

 
Admin
(@ramya-devi)
Member Admin

அந்த திருமண மண்டபத்தில் மக்கள் கூட்டம் சாரை சாரையாய் வந்துக்கொண்டு இருக்க, வரவேற்பு நடத்திய பெண்கள் பன்னீர், சந்தனம் தெளித்துத் தெளித்தே ஓய்ந்து போனாலும் முகத்தில் புன்னகை மட்டும் குறையவே இல்லை.

ஆறடி உயரத்தில் கண்களை நிறைக்கும் வண்ணம் அம்சமாக மாப்பிள்ளை தோரணத்தோடு அக்னியின் முன் அமர்ந்து இருந்தான் விக்ரமசேனன். ஊர் போற்றும் நாயகன். கல்விகளில் சிறந்து விளங்கியவன் மதராஸில் காவல் துறையில் உயரதிகாரியாக வேலையில் இருக்கிறான்.

சிரிப்பு என்ன விலை என்று கேட்கும் மனிதன் இவன். இப்பொழுது கூட முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இன்றி யாருக்கோத் திருமணம் என்பது போல இதுவும் ஒரு கடமை என்று அய்யர் சொல்வதைச் செய்துக்கொண்டு இருக்கிறான்.

“முகூர்த்தத்துக்கு நாழியாகிறது பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ.” குரல் கொடுக்க உறவு பெண்கள் புடைச்சூழ மணப்பெண்ணான நறுமுகையை அழைத்துக்கொண்டு வந்து விக்ரமசேனன் அருகில் அமரவைத்தார்கள்.

நறுமுகை பெயருக்கு ஏற்றார் போலவே மனம் வீசும் மனதைக் கொய்யும் பண்புடைவயவள். தேவதை போல இருந்தாள் விக்ரமசேனன் வாங்கி கொடுத்த கூரை புடவையில்.

ஓரக்கண்ணால் தன் அருகில் அமர்ந்து இருந்தவனைப் பார்த்தாள். அமர்ந்து இருந்த பொழுதே அவனது உயரம் நன்கு தெரிந்தது. கூன் விழாத முதுகு, நரம்பு புடைத்துக்கொண்டு தெரிந்த அவனது கரம், கருமை என்றாலும் கம்பீரமாய் தெரிந்த அவனது தீர்கமான முகம் எல்லாமே அவளை வசீகரித்தது. அதோடு அவனது தோற்றமே சொல்லியது காவலன் என்று. உள்ளுக்குள் பயம் எழுந்தது.

தான் வந்து இவ்வளவு நேரம் ஆகியும் அவன் திரும்பி கூட பார்க்கவில்லையே என்று அவனை பார்க்க அவனோ கருமமே கண் என்று அய்யர் சொன்னதைச் செய்துக் கொண்டு இருந்தான்.

லேசாய் அவள் மனம் வாடிப்போனது. எல்லா மணப்பெண்களுக்கும் இந்த ஒரு நாளை மனதில் நிலை நிறுத்திக்கொள்ள பல சுவையான சம்பவங்கள் இருக்கும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் இங்கு அப்படி எதுவும் இல்லாமல் போக மனதில் ஒரு வெற்று இடம் உருவானது.

இருவருக்கும் நிச்சயம் ஆன பொழுது கூட அவளது விரலை பற்றி மோதிரம் போட்ட தோடு சரி, அவளது கண்களை கூட அவன் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அதன் பிறகு ஒரு நாள் அவளது போன் லைனில் வந்தான். ஒரு ஹலோ கூட சொல்லவில்லை. எடுத்த எடுப்பில்,

“உனக்கு எதுவும் என்கிட்டே பேசணுமா?” என்று கேட்டான் அதிரடியாய். அதில் அவள் திருதிருவென்று முழிக்க,

“உன்கிட்ட தான் பேசுறேன். என்கிட்டே உனக்கு ஏதாவது சொல்லணுமா? இல்ல பேசணுமா?” என்று சற்றே முரட்டு தனமாக கேட்டான் விக்ரமசேனன். அவனது இந்த அதிரடியில் திகைத்துப் போனவள்,

“அப்படியெல்லாம் எதுவும் இல்லங்க” என்று தட்டுத்தடுமாறி இவள் சொல்ல, “அப்போ ஓகே. கல்யாணத்துல மீட் பண்ணலாம்” என்று வைத்துவிட்டான்.

அவ்வளவு தான் அவன் இது வரை பேசியது. இப்போது கூட எதுவும் பேசவில்லை. நேர்கொண்ட பார்வை தான் அவனிடம் இருந்தது. யாருக்கும் தலையை கூட அசைக்கவில்லை. முகத்தில் புன்னகை இல்லை. அழுத்தமாக அமர்ந்து இருந்தான்.

மங்கல மேளம் ஒலிக்க, பெரியவர்கள், வந்தவர்கள், உற்றவர்கள், உறவினர்கள், நண்பர்கள், சொந்தங்கள், பந்தங்கள் என எல்லோரும் அட்சதைப் போட்டு வாழ்த்துக் கூற பெண்ணவளின் கண்களை பார்க்காமலே அவளுக்கு தாலி கட்டினான் கடமைக்கு என்று.

நறுமுகை நிமிர்ந்து அவனது முகத்தை தான் பார்த்தாள். அவளின் பார்வையை உணர்ந்தும் கூட அவன் அவளது பக்கம் அசையக்கூட இல்லை. அவளை சுற்றி நெற்றி வகிட்டில் பொட்டு வைத்தவன் கடமை முடிந்தது போல விலகி அமர்ந்துக்கொண்டான்.

புகைப்படம் எடுக்கும் பொழுது கூட பெரிதாக எந்த ஒத்துழைப்பும் அவன் தரவில்லை. “மேடம் மேல கை போட்டு நில்லுங்க சார்.” என்று சொன்னது தான் கேமரா மேனின் முகத்தை உடைக்கும் அளவுக்கு அவனை முறைத்து பார்த்தான் விக்ரமசேனன்.

அதில் உஷாரான கேமரா மேன் தன் முகத்தை காப்பத்திக் கொள்ள எண்ணி விக்ரமசேனனின் போக்கிலே விட்டுவிட்டான்.

“டேய், இது உன்னோட கல்யாணம்டா. இதுக்காவது சிரிச்ச முகமா இருக்கலாம்ல” காதோரம் விக்ரமனின் உயிர் நண்பன் கெஞ்சிக்கொண்டு இருந்தான்.

அதற்கும் அவன் முறைக்க, “ராசா நீ சிரிக்கலன்னா உன் அப்பா என்னை தான்டா முறைக்கிறாரு. கல்யாணத்துக்கு கூட இப்படி சிரிக்க மாட்டேன்னு நீ அடம் பண்றது கொஞ்சம் கூட சரியில்ல. பாவம் பாரு சிஸ்டர் முகம் வாடி போயிடுச்சு. உங்கப்பா வேற கையில கட்டையோட என்னை துரத்தி துரத்தி அடிக்கிறாரு” என்று சொல்ல அதற்கும் அதே முறைப்பை தான் கொடுத்தான்.

“இல்ல மச்சான் நான் என்ன சொல்லவற்றேன்னா.” ஆரம்பிக்கும் போதே, “மூடிட்டு போடா” என்று அடி குரலில் உறுமினான். அவ்வளவு தான் தீபன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்துக்கொண்டான்.

அதற்கும் சேர்த்து விக்ரமனின் அப்பா மணியிடம் மாட்டி நொந்து நூடில்ஸ் ஆனான். அவர் விக்ரமனிடம் ஏதாவது பேச வேண்டும் என்றால் இவனிடம் தான் பேசுவார். இவன் மூலம் தான் தன் கோவத்தையும் விக்ரமனிடம் காட்டுவார்.

மணி சொல்வதை விக்ரமனிடம் சொல்லும் தூது புறாவாக தான் இவ்வளவு நாளும் தீபன் இருக்கிறான். இப்பொழுதும் அப்படி தான். அவர் சொன்னதை வந்து இங்கு சொல்ல அவரை விட அதிகம் முறைத்து வைத்தான் இவன். சில நேரம் சரமாரியாக அடிகளும் விழும். அப்பன் மகன் இருவரிடமும் மாட்டிக்கொண்டு முழிக்கிறான்.

விக்ரமன் பல்லைக்கடித்து உருமியனுப்ப தீபன் அவனது கண்ணில் படாமல் ஒளிந்துக் கொண்டான். இல்லை என்றால் இவனது கடவாய் பல் தான் உடையும். அதற்கு பெட்டர் முன்னெச்சரிக்கையாக யாரின் கண்ணிலும் படாமல் ஒளிந்துக்கொண்டான்.

மேற்கொண்டு சடங்குகள் ஆரம்பமாக அதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் கடுப்புடன் அமர்ந்து இருந்தான் விக்ரமசேனன். சடங்குகள் வேறு வகை வகையாக இழுத்துக்கொண்டே போக ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல்,

“ஜஸ்ட் ஸ்டாப். ஐ வான்ட் கோ.” என்று கிளம்பிவிட நறுமுகையின் தந்தைக்குப் பக்கென்று இருந்தது. “மாப்பிள்ளை...” என்று அவர் பதறிப்போக, அப்பொழுது தான், தான் திருமண மண்டப்பத்தில் இருப்பதையே விக்ரமசேனன் உணர்ந்தான்.

“சார்...” என்று தன் மாமனாரை அழைக்க அவர் பாவம் திருதிருத்தார். மணிக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

“மாமான்னு கூப்பிட சொல்லுடா” தீபனின் காதோரம் கத்தினார் மணி. அவரது பேச்சைக்கேட்டு அவனது காதோரம் தீபன் முணுமுணுக்க, அவனை முறைத்து பார்த்துவிட்டு,

“இந்த சம்பிரதாயத்தை இப்போ வச்சுக்க நேரமில்ல. எனக்கு டைம் ஆகிடுச்சு. நான் கிளம்புறேன். உங்க மகளுக்கு விருப்பம் இருந்தா என்னோட வர சொல்லுங்க. இல்லையா இந்த சடங்கு சம்பிரதாயத்தை எல்லாம் முடிச்சுட்டு மெதுவா கூட்டிட்டு வந்து விடுங்க” என்றவன் தன் காரை எடுத்துக்கொண்டு மணியும் தனமும் தடுக்க தடுக்க கிளம்பினான் அவ்விடத்தை விட்டு.

கழுத்தில் அணிந்து இருந்த மாலையை கையில் பிடித்துக்கொண்டு, கட்டியிருந்த தாலியின் ஈரம் காயாமல் பெருமூச்சுடன் அவனது கார் முன்னாடி வந்து நின்றாள் நறுமுகை.

“வாட்?” என்றான் அதிகாரமாக.

“நானும் வரேன்” என்றாள் அமைதியாக. ஒன்றும் சொல்லாமல் கார் கதவை திறந்து விட்டவன் அவள் ஏறியவுடன் சென்ட்ர் லாக்கை அமுக்கிவிட்டு வேகமாக கிளப்பி சென்றான் மாதரசை நோக்கி.

இங்கே இவனது பெற்றவர்கள் தங்களது சம்மந்தியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு சமந்தம் முதலிய நிகழ்வுகளை மணமக்கள் இல்லாமலே இவர்களின் திருப்திக்காக நடத்திக்கொண்டு வந்தவர்களுக்கு விருந்து போட்டு, இவர்களும் சம்மந்தி சாப்பாடு சாப்பிட்டு அவரவர் ஊர்களுக்கு கிளம்பினார்கள்.

விக்ரமசேனன் காவல்துறை அதிகாரி. எதற்கும் அடி பணிய மாட்டான். நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை அவனது சொத்து. எதையும் எளிதாக ஆராய்ந்து தீர்வு காணும் அவனது புத்தி கூர்மை. மிகவும் ஆசைப்பட்டு போட்ட காவல் சீருடை. அதில் கலங்கம் வரவிடமாட்டேன் என்று உறுதி பூண்டு இருக்கிறான்.

இப்போதும் சரி எப்போதும் சரி அவனது நடத்தையும் பேச்சும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதாகவே இருக்கும். அவனிடம் இருக்கும் நேர்மை அவனை யாரிடமும் தலை தாழ்ந்துப் போக விடாது மகுடமாய் அவனுக்கு ஒரு கர்வத்தையும் திமிரையும் கொடுத்து இருந்தது.

வந்தா வா. என்பது போல நறுமுகையை அவன் நடத்திய விதம் அங்கு இருந்த யாருக்கும் பிடிக்கவில்லை என்றாலும் காவல் அதிகாரி, அதுவும் குற்றவாளி யார் என்று கண்டு பிடிக்கவே முடியாத பல சிக்கலான வழக்குகளைக் கையில் எடுத்து ஒரு மாதத்திற்குள் கண்டுப்பிடித்து குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி குடுத்து இருக்கிறான்.

அப்படிப்பட்டவனுக்கு இயல்பிலே ஒரு திமிர் இருக்க தான் செய்தது. அந்த திமிர் கூட அவனுக்கு ஒரு கம்பீரத்தையே கொடுத்து இருந்தது இயற்கையாகவே.

அருகில் அமர்ந்து வந்தவளிடம் ஒரு வார்த்தைக் கூட  பேசவில்லை. அவனது கண் பார்வை எதிரில் இருந்த நெடுஞ்சாலையில் இருந்தாலும் சிந்தனையோ இரண்டு வாரமாய் அடுத்தடுத்து நடந்த கொலை வழக்கிலே இருந்தது.

அது இவனது ஏரியா வழக்கு இல்லை என்றாலும் ஏனோ மனசு அந்த தொடர் கொலை வழக்கிலேச் சிக்கிக்கொண்டு இருந்தது. இடையில் ஒரு காபி கூட வாங்கி தராமல் அவளை கூட்டிட்டு வந்தான்.

இவனுக்கு இது போல பழக்கம் தான். கேஸ் என்று வந்துவிட்டால் பாதி நேரம் உணவே கிடையாது அவனுக்கு. அதிக நாள் பட்டினி இருந்ததாலோ என்னவோ அவனுக்கு பசி என்ற உணர்வே இருந்தது இல்லை. இப்பொழுதும் அவனது வயிறு கத்தவில்லை. அதனால் அவன் உணவை பெரிய விசயமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நறுமுகை அப்படி இல்லையே.

இன்றைய நாளை தவிர பிறந்ததிலிருந்து பசி என்ற ஒன்றை அறிந்ததே இல்லை. கேட்கும் முன்பே அனைத்தும் அவளுக்கு வந்துவிடும். அவளது குடும்பம் அவளை அப்படி தான் தாங்கியது. ஆனால் தாலி கட்டின அன்றே அவளை கொலைப்பட்டினி போட்டான் விக்ரமசேனன்.

எழுந்ததில் இருந்து இன்னும் ஒரு பிடி சோறு கூட கண்ணில் காட்டவில்லை. அவனது வேலை பளு அவளின் தந்தை சொல்லி கேள்வி பட்டு இருந்தாள்.

“அம்மாடி நீ கட்டிக்க போறது ஒரு காவல் துறை அதிகாரியை. அவரோட வேலைக்கு நீ எப்பவும் இடைஞ்சலாக இருக்கக்கூடாது. ஏன்னா அவரு உத்தியோகத்துல ரொம்ப கறாரான ஆளு. அவர மாதிரி இந்த காலத்துல யாரும் நேர்மையா இல்ல. அதனால நீ அவரை எதுக்கும் தொல்லை குடுக்கக்கூடாது. எது வேணுமோ அப்பாக்கிட்ட சொல்லு. அப்பா உடனே செஞ்சு குடுப்பேன் சரியா?” என்று அவளின் தலையை வருடிய படியே விநாயகம் சொல்ல அவள் அதை நன்கு கேட்டுக்கொண்டாள்.

அது அவளது நெஞ்சில் நச்சென்று பதிந்து போனதோ என்னவோ. அதனால் தான் அவளாக அவனுக்கு போன் பேசவே இல்லை. அவன் கூப்பிட்ட பொழுது கூட பேச எதுவும் இல்லை என்று மறுத்துவிட்டாள். அதோடு தானாக என்ன பேசுவது என்று தயக்கம் வேறு இருக்க அவனோடு இயல்பாக ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் போனது.

வண்டி ஓட்டும் அவனை கலைக்கவும் மனசு வரவில்லை. போகிறப் போக்கில் போகலாம் என்று அமைதியாக விட்டுவிட்டாள். ஏனெனில் அவனது முகம் அவ்வளவு இறுக்கமாய் இருந்தது.

நீண்ட தூரம் சென்றுக்கொண்டே இருக்க ஒரு கட்டத்துக்கு மேல் அவளுக்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது. அப்படியே சீட்டில் சாய்ந்துவிட்டாள். முக்கால் வாசி தூரம் சென்ற பிறகு அவனது போன் அடிக்க முதலில் அதை அவன் கவனிக்கவே இல்லை. அவனது சிந்தனை எங்கும் அந்த கொலை வழக்கே பதிந்து போய் இருந்தது.

அடுத்த முறை போன் அடிக்க அதோடு அருகில் ஒரு லாரியின் ஹாரன் சத்தம் கேட்க அவனது கவனம் சட்டென்று கலைந்துப் போனது. அதன் பின்பே போனை எடுத்து பேசினான்.

தீபன் தான் அழைத்து இருந்தான். “மச்சான் தங்கச்சி காலையில இருந்து எதுவும் சாப்பிடலையாம். ஏதாவது வாங்கி குடுக்குறியா?” பயத்துடனே கேட்டான்.

“உன் தங்கச்சிக்கு இங்க இருந்து வாங்கி குடுக்க முடியாது. ஏதாவது புட் ஆப்ல ஆர்டர் பண்ணிவிடு” என்று வைத்துவிட, “அச்சோ டேய் நான் நறுமுகையை சொன்னேன்” என்றான் அவசரமாக.

“நறுமுகையா?” என்று நெற்றி சுருங்க ஒரு நொடி யோசித்தான். அவனது யோசனையே தீபனுக்கு பக்கென்று இருந்தது. “மச்சான் அது உன் பொண்டாட்டிடா. பொண்டாட்டி பேரை கூட மறந்துட்டியா?” உண்மையாகவே தீபனுக்கு பயமாய் போனது.

“ப்ச்...” என்று சலித்தவன் இட பக்கம் திரும்பி பார்த்தான். உடை சிறிது கூட விலகாமல் நேர்த்தியாக அமர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தாள்.

“அந்த பொண்ணுக்கு ஏதாவது வாங்கி குடு மச்சான். அவங்க அப்பா ரொம்ப தவிச்சி போறாரு. போகும் பொழுது போன் கூட எடுத்துட்டு போகல. கட்டுன புடைவயோட கிளம்பிடுச்சின்னு எல்லோருக்கும் வருத்தம்” என்று அவன் மேலும் சொல்ல எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டவன் எதுவும் பேசாமல் போனை கட் பண்ணிவிட்டான்.

வண்டியை எங்கும் நிறுத்தாமல் காவலர் குடியிருப்புக்கு விட்டான் முன்பை விட வேகமாக. அங்கு கொடுத்த வீட்டில் தான் அவன் வசித்து வந்தான். காரை நிறுத்திவிட்டு அவளை பார்க்க அவள் பசி மயக்கத்தில் நினைவு இழந்து இருக்க இவன் தூங்குகிறாள் என்று எண்ணி அவளை அழைக்க, அவளோ கொஞ்சமும் அசைவு இல்லாமல் இருந்தாள்.

அவனுக்கு அவ்வளவு தான் பொறுமை. உடனே காரிலிருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த நீரை எடுத்து அவள் மூஞ்சியில் விசிறி அடிக்க, அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு சுற்றம் உரைத்தது.

“சாரி, தூங்கிட்டேன்” என்றாள் முகத்தை துடைத்துக்கொண்டு. அவன் ஒன்றும் பேசாமல் கதவை திறந்துக்கொண்டு உள்ளே செல்ல இவளும் அவனை தொடர்ந்து உள்ளே நுழைந்தாள்.

Loading spinner
Quote
Topic starter Posted : March 13, 2025 1:30 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top