Notifications
Clear all

அத்தியாயம் 4

 
Admin
(@ramya-devi)
Member Admin

இரவில் நடந்த கூடலில் சற்றே அசந்து வர, அதிகாலை மூன்று மணியளவில் அடித்து போட்டபடி இருவரும் தூங்கிப் போனார்கள் உமையும் உத்தமனும்.

ஐந்து மணி போல அலாரம் அடிக்க, அதில் துயில் கலைந்த உமை கண்களை அழுத்திக் கொண்டு இருந்த தூக்கத்தோடு எழுந்தாள். அவளை எழ விடாமல்,

“என்ன தங்கம் எதுக்கு இப்போ போய் அலாரம் வச்சு இருக்க...? தூங்கு... அப்புறம் எழுந்துக்கலாம்” என்று அவளை இழுத்துப் போட்டு மறுபடியும் தூங்க ஆரம்பித்தான்.

“இல்லங்க அத்தை சீக்கிரம் எழ சொன்னாங்க... யாரும் பார்க்கிறதுக்கு முன்னாடி வாசல் தெளிச்சி கோலம் போட்டு குளிச்சுட்டு வர சொன்னாங்க...” என்றவளை தூக்கம் விட்டு முறைத்துப் பார்த்தான்.

“ஏன்டி நீ இன்னும் எந்த காலத்துல இருக்க...? இப்போ தான் சடங்கு சம்பிரதாயம் எல்லாம் பார்த்துக்கிட்டு.. தூங்குடி” என்று சொன்னவனை பாவமாக பார்த்தவள்,

“ப்ளீஸ்ங்க... முதல் நாளே அவங்க கிட்ட கேட்ட பெயர் எடுக்க விரும்பல... என் பப்புக் குட்டி இல்ல..” என்று கெஞ்சியவள், புடவையை எடுத்துக் கட்டிக் கொண்டு, தலையில் வதங்கி இருந்த பூக்களை எடுத்து போட்டுவிட்டு, காற்றில் பறந்த முடிகளை அள்ளி கொண்டை போட்டுவிட்டு வெளியே சென்றாள். 

உமையின் அத்தை இரவே வாசலில் தண்ணீர் பிடித்து வைத்து இருக்க, கூட்டிவிட்டு, தண்ணீர் தெளித்து கொஞ்சம் காய விட்டவள், கோலமாவு தேடினாள்.

அந்த நேரம் பின்னாடி அரவம் கேட்க, நிமிர்ந்து பார்த்தாள். உத்தமன் தான் நின்றிருந்தான்... வெற்று மார்பில் அவள் இரவு வைத்த குங்குமம் ஒட்டி இருக்க அதை துடைக்க கூட இல்லாமல், தலை கலைந்து, சோம்பலாய் நின்று இருந்தான்.

“என்னடி தேடுற...?” என்று கேட்டவன் பின் பக்கம் வந்து அவளது கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.

“அச்சோ வாசல்ல நிக்கிறோம் சேட்டை பண்ணாதீங்கங்க... விலகி நில்லுங்க...” என்று தோளை அசைக்க, அவளது அசைவுக்கு ஏற்றபடி தன் முகத்தை விட்டவன், அவளது கழுத்தில் இருந்து விலக மட்டும் செய்யவில்லை.

“யாரும் பார்க்க கூடாது, நீயும் யாரையும் பார்க்க கூடாதுன்னு தானே வெளில விளக்கை கூட போடாம இருக்க.. பிறகு எப்படி நாம இங்க நிக்கிறது தெரியும். அதெல்லாம் இன்னும் யாரும் எழுந்திரிக்கல... நான் பார்த்துட்டேன்..” என்றவன் கோலமாவு எங்க இருக்கும் என்று காட்டிவிட்டு அவளது இடையில் கரத்தைக் கோர்த்துக் கொண்டு அவளின் கழுத்தில் தூங்கி வழிந்தான்.

முன்புறம் விரிந்த வாசல் கதவு... அதிலிருந்து உள்ளே வந்தால் அகண்ட உட்புற வாசல்... அதிலிருந்து இடப்பக்கம் சென்றால் தோட்டம், அதே போல வலப் பக்கம் சென்றால் அங்கும் தோட்டம் இருந்தது... நடுவில் இருந்த இடத்தில் நான்கு பைக், இரண்டு கார் என நின்றது... அதை தாண்டி போனால் முன் புற தாழ்வாரம்.. மூன்று புறமும் வெட்ட வெளியாய் விட்டு அதன் இரு பக்க கரையில் தொட்டி செடி வைத்திருந்தார்கள். அதை தொடர்ந்து ராசநிலைக் கதவு... அதிலிருந்து சென்றால் முன்புறம் பெரிய கூடம், தை தொடர்ந்து இன்னொரு பெரிய கூடம், அதிலிருந்து பூசை அறை, மாடிப்படி, மூன்று படுக்கை அறை, உணவு உண்ணும் கூடம், அடுப்படி, சேமித்து வைக்கும் அறை, சலவை அறை, பின் பக்க கதவு என நீண்டு இருந்தது.

மாடி ஏறி வந்தால் நீண்ட கூடம், அதன் இரு பக்கமும் இரண்டு இரண்டு அறைகள் பக்கம் பக்கம் இருந்தது. அதிலருந்து உத்தமனின் தனிப்பட்ட அலுவலக அறையும், சிறிய நூலக அறையும் வைத்திருந்தான். அதோடு உத்தமனுக்கு மட்டும் இட பக்கம் முழுவதும் அவனது பயன் பாட்டுக்கு வைத்துக் கொண்டான்.

அதனால் தன் படுக்கை அறையை பெரிதாக கட்டிக் கொண்டு அதனை ஒட்டி மிக அழகான உப்பரிகையும் கட்டிக் கொண்டான். இன்னொரு படுக்கை அறையை தன் விளையாட்டு, மற்றும் உடற்பயிற்சி கூடமாக மாற்றிக் கொண்டான்.

அதில் வீட்டில் இருந்த அனைவருக்கும் ஏகக் கடுப்பு. யாரும் இந்த வீட்டுக்கு ஒற்றை பைசா செலவழிக்கவில்லை. ஆனால் உரிமை மட்டும் வேணுமாம்...

உத்தமன் எல்லா விசயத்திலும் சரியாக தான் இருப்பான். அதே போல தனக்கு என்ன வேண்டுமோ அதை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டான். அது அவனது கல்யாண விசயத்துலையே நன்கு புரிந்தது.

அத்தனை பேர் உமை வேண்டாம் என்று சொன்னாலும் அவனுக்கு அவள் தான் வேண்டும் என்று பிடிவாதமாக நின்று இதோ திருமணமும் செய்து ஒரு இரசனையான கூடலையும் முடித்து விட்டு மனைவியின் முந்தானையில் முடிந்துக் கொண்டான் அவனை அவனே...

“கோலம் போடணுங்க...” என்று அவனை கலைக்க பார்த்தாள்.

“ப்ச்... சோதனை பண்ணதாடி” முகத்தை தூக்கிக் கொண்டான்.

“சரி சரி... கொஞ்சமே கொஞ்ச நேரம்... ப்ளீஸ் ங்க” என்றவள் அவனது கைவளைவை விட்டு கோலம் போட ஆரம்பித்தாள்.

பைக் மீது தாவி ஏறி அமர்ந்தவன், ரசனையாக அவளை பார்க்க ஆரம்பித்தான். புள்ளி இல்லாத பூக் கோலத்தை போட்டுக்கொண்டு இருந்தாள்.

அதை ஆசையுடன் பார்த்தவன், “ஹேய் இந்த டிசைன் போடுடி.. பார்க்க இன்னும் நல்லா இருக்கும்” என்று அவனும் அவளின் அருகில் அமர்ந்து, ஐடியா குடுக்க பக்கென்று சிரித்து விட்டாள்.

“என்ன சிரிப்பு, இல்ல என்ன சிரிப்புன்னு கேக்குறேன்... எங்கம்மா பொங்கல் தீபாவளின்னா பெரிய கோலம் போடுவாங்க, அப்போ நான் தான் அதுக்கு கலர் எல்லாம் கொடுப்பேன் தெரியுமா?” என்று மீசையை முறுக்கினான்.

“எத்தனை வருடத்துக்கு முந்தி சார்...” என்று விரிந்த சிரிப்புடன் கேட்டாள்.

“என்ன ஒரு இருபது பதினைஞ்சி வருசத்துக்கு முன்னாடி இருக்கும்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

“பார்ரா... இத்தனை வருசம் கழிச்சி மறுபடியும் சாருக்கு கோலம் போடணும்னு புத்தி வந்து இருக்கு...” என்று வாரினாள் அவனை.

“போடி... உனக்கு போய் யோசனை சொன்னேன் பாரு... என்னை சொல்லணும்” என்று அவன் எழுந்து போக பார்க்க, அவனது கையை பிடித்து இழுத்து தனக்கு அருகில் முன்பு போலவே அமரவைத்தவள், அவன் சொன்ன வடிவிலே கோலம் போட்டாள்.

அவன் இன்னும் சொல்ல, அவளும் கொஞ்சமும் அலுக்காமல் போட்டாள். அப்பொழுது தான் அவள் கால் நடுங்குவதை பார்த்தான்.

“ஹேய்... கால் இப்படி நிற்கவே முடியாத அளவுக்கு நடந்குது... நீ என்னன்னா இப்போ தான் இன்னும் கோலம் போட்டுக்கிட்டு இருக்க, இதெல்லாம் சொல்ல மாட்டியா தங்கம்” கடிந்தவன்,

“போதும் நீ கோலம் போட்டது...” என்று அவளின் கரத்தில் இருந்து கோல மாவை பிடுங்கி முன்பிருந்த இடத்திலே வைத்து விட்டு அவளை கை பிடித்து கூட்டிக் கொண்டு போய் விட்டான்.

அறைக்குள் உள்ளே வந்து அவளை படுக்க வைக்க, அவளோ படுக்கையில் படுக்காமல் படுக்கை விரிப்பை எடுத்து அலசிப் போட போனாள். அவன் முறைத்தான்.

“நம்ம அந்தரங்கத்தை யாரும் பார்க்க கூடாதுங்க..” முகச் சிவப்புடன் சொல்ல, அவளது கையில் இருந்த விரிப்பை அவனே வாங்கி அலசிப் போட்டான். அதன் பிறகு படுக்கையில் நேற்றிரவு உமையின் அத்தை வைத்திருந்த பணத்தை எடுத்தாள்.

அலசிப் உப்பரிகையில் காயப் போட்டவன் உள்ளே வர, அவள் கையில் வைத்திருந்த பணத்தை பார்த்தான்.

“இது அத்தை நேத்து நம்ம படுக்கையை தயார் செய்யும் பொழுது வச்சது...! இதை யாரு முதல்ல எடுக்குறாங்கன்றது தான் நமக்குள்ள போட்டியாம்...” என்றாள்.

“பாரேன் இதுல இவ்வளவு சமாச்சாரம் இருக்கா..?” என்று அவன் வியப்பாக, அவனது கையில் எடுத்த பணங்களை கொடுத்தவள்,

“நான் போய் குளிச்சுட்டு வரேன்” என்று உள்ளே போக,

“நீ தானே எடுத்த... இந்தாடி நீயே வச்சுக்கோ..” அவளிடம் கொடுக்க,

“நான் வேற நீங்க வேறயாக்கும்...” சொன்னவள் மாற்று உடை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். அவளின் பின்னோடு போக ஆசை பட்ட மனதை அடக்கிக்கொண்டு கட்டிலில் வேறு ஒரு விரிப்பை எடுத்து போட்டவன் அதிலே படுத்துவிட்டான்.

படுத்தது தான் தெரியும், எவ்வளவு நேரம் தூங்கினானோ தெரியவில்லை... அப்படி ஒரு தூக்கம்... கண் விழித்து சோம்பல் முறித்தவன் குறுங்கண் வழியே உள்ளே வந்த வெளிச்சத்தில் கண்கள் கூச, இரு கையையும் மேலே தூக்கி சோம்பல் முறித்தவன் மணியை பார்க்க, அது காலை பத்து மணி என்று காட்டியது...! இவ்வளவு நேரம் தூங்கிட்டனா என்று எண்ணிக் கொண்டே எழுந்தவனுக்கு பக்கென்று இருந்தது.

“இவ எங்க போனா...? ஒரு வேளை கீழே போயிட்டாளா?” யோசித்தபடியே கீழே போக பார்த்தவன், கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து முகம் சிவந்து ஓடி போய் குளிக்க சென்றான்.

அவசர அவசரமாய் குளித்துவிட்டு கீழே வந்தான். அங்கே உட்புற கூடத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்க, அனைவருக்கும் பரிமாறிக் கொண்டு இருந்தாள் உமையவள்.

அதை பார்த்தவனுக்கு ஏனோ சுல்லேன்று கோவம் வந்தது. முகமும் சற்றே வாடி போய் இருந்தது. நேற்றிலிருந்து அவள் ஒன்று கூட சாப்பிடவில்லை. அப்படி இருக்கும் பொழுது இப்பொழுது அவளை சாப்பிட வைக்காமல், ஓய்வெடுக்கவும் விடாமல் செய்துக் கொண்டு இருந்த தன் அம்மாவை பார்த்தான்.

அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்,

“இனி சீக்கிரமா எழுந்து பழகு உமை... உன் கணவன் சீக்கிரமாகவே அலுவலகம் போகணும். அதோட உன் மாமனாருக்கு சுகர் இருக்கு. அதனால காலையில சீக்கிரமே அவருக்கு சாப்பாடு குடுக்கணும்” என்று சாப்பிட்டுக் கொண்டே கட்டளை போல சொன்னவர்,

அவரின் மாப்பிள்ளை, ராஜியின் கணவன் வரதன்,

“வாங்க மச்சான்..” என்று உத்தமனை பார்த்து கூப்பிட்டான். அவனுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தான். அப்பொழுது தான் தன் பெரிய மகன் அங்கு வந்து நிற்பதை பார்த்தார்.

“வா உத்தமா... உமை நீயும் அவனோட உட்கார்ந்து சாப்பிடு...” என்று பெரிய மனதுடன் சொன்னவரை ஒன்றும் செய்ய இயலாமல் பார்த்தான்.

யாரும் பரிமாறவில்லை அவர்களுக்கு... உத்தமனுக்கு தட்டு வைத்து அதில் உணவை எடுத்து வைத்தாள். அதன் பிறகு தனக்கு தட்டு எடுத்து வைத்து சாப்பிட அமந்து உணவை எடுத்து வைக்க வர, அவளை தடுத்து விட்டு அவனே அவளுக்கு எடுத்து வைத்தான்.

அதை அனைத்து கண்களும் நோட்டம் விட்டது என்றாலும் யாரும் வாயை திறக்கவில்லை. இருவரும் சத்தமில்லாமல் சாப்பிட்டார்கள். மற்றவர்களின் பார்வையில் அவளால் இரண்டு வாய்க்கு மேல் சாப்பிடவே முடியவில்லை.

பசி அவ்வளவு எடுத்தது... ஆனால் குத்தும் பார்வையில் எங்கு இருந்து தொண்டைக்குள் உணவு இறங்கும்... அதனால் உத்தமன் சாப்பிடும் வரை அவனுக்கு போக்கு காட்டியபடி அமர்ந்து இருந்தாள். அவன் எழவும் இவளும் எழுந்துக் கொண்டாள்.

கைக்கழுவி வந்தவன் உமையின் முந்தானையில் துடைத்துக் கொண்டு மெத்திருகையில் வந்து அமர்ந்தான். அவனின் அருகில் உமையையும் அமர வைத்துக் கொண்டவன் உமையிடம் பேச வந்த அவளின் அத்தையின் பேச்சை கவனித்தான்.

“பொறுத்துக்கோடா... ரொம்ப டையர்டா இருக்கா?” அவளின் கையை பிடித்து குரலை தாழ்த்தி கேட்டார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை அத்தை.. அப்பாவும் அம்மாவும் எப்போ வர்றாங்க..” என்று பேச்சை மாற்றினாள்.

அவள் பேச்சை மாற்றுவதை நன்றாகவே உணர்ந்தவன் எதுவும் பேசவில்லை. அப்படியே அவளின் அருகில் அமர்ந்து இருந்தான்.

“புறப்பட்டுட்டேன்னு சொன்னாங்க டா... எனக்கு தேஞ்சி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்கன்னு நினைக்கிறேன்”

“சரிங்க அத்தை... அப்போ நான் இவரோட துணிகளை எல்லாம் எடுத்து வைக்கிறேன்” என்று சொன்னாள்.

“எதுக்கு துணியெல்லாம். போன உடனே விருந்து சாப்பிட்டுட்டு ராவுக்குள்ள வந்திடுங்க...” என்றார் ஈஸ்வரி.

“இல்லங்க அக்கா.. மாப்பிள்ளை தான் அலுவலகத்துக்கு இன்னும் ஒருவாரம் லீவு போட்டு இருக்காரில்லையா அது தான். அங்க ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு வருவாருன்னு எங்க அண்ணன் சொன்னாரு. மாப்பிள்ளைக்கிட்டையும் பேசிட்டதா சொன்னாரு...” என்று தயக்கத்துடன் சொன்னார் ஜெயம்.

“அது எப்படி நீங்களே பேசி ஒரு முடிவு எடுப்பீங்களா அப்போ பெரியவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்...” என்று சத்தம் போட்டவர் எழுந்து உள்ளே போய் விட்டார்.

உத்தமன் திரும்பி தன் தந்தை மணிகண்டனை பார்த்தான். அவர் கண் மூடி சம்மதம் கொடுத்தார் யாரும் அறியாமல். அவன் தலையை கோதுவது போல தலையாட்டியவன்,

“நான் போய் கிளம்பி வரேன்... உமை வா” என்று அறைக்குள் அவளையும் அழைத்துக் கொண்டு சோர்ந்து இருந்த அவளின் முகத்தை பார்த்தான்.

“என்ன ஆச்சு?” கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க... நான் தலையை தட்டுறேன்” என்படி உப்பரிகைக்கு சென்றாள். சென்றவளின் கரத்தை பிடித்து இழுத்து நிறுத்தியவன், அவளின் கண்களை அழுத்தமாக பார்த்தான்.

அவனது பார்வையில் இருந்த கோவத்தைக் கண்டு மிடறு விழுங்கியவள்,

“அது நான் காலையில் குளிச்சுட்டு வந்து மறுபடியும் படுத்துக்கிட்டேன். அப்படியே தூங்கியும் போயிட்டேங்க... எழுந்து பார்த்தா மணி எட்டு. அதனால அவசர அவசரமா கிளம்பி கீழே போனேன். பசிச்சதா அத்தைக்கிட்ட கேட்டு சாப்பிட போனேன். அப்போ உங்க அம்மா வந்து உங்களோட தான் சேர்ந்து சாப்பிடணும்னு சொன்னாங்க... மத்தபடி வேற எதுவும் இல்லைங்க..” என்றாள்.

அவளின் முகத்தை நிமிர்த்தியவனின் கண்கள் லேசாக கலங்கி இருந்தது...!

“இதுக்கு தான் நான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்...” என்றவள்,

“எனக்கு ஒண்ணும் இல்லை... நான் வயிறார சாப்பிட்டுட்டேன்... அப்பாவும் அம்மாவும் வந்திடுவாங்க.. நான் கிளம்புறேன்” என்றவள் அவனை தாண்டிப் போனாள்.

தன்னவள் தன்னிடம் வந்த நொடியிலிருந்து அவளுக்கு எதிலும் குறை வைக்க கூடாது, தடுமாற கூடாது, நிறைவாக செய்ய எண்ணியவன் அதனால் தான் அவள் வைக்கும் குங்குமம் முதற்கொண்டு எல்லாமே முதலே வாங்கி வைத்து இருந்தான்.

ஒரு பொட்டுக்கே அவளை தவிக்க வைக்க கூடாது என்று எண்ணியவன், வந்த முதல் நாளே அவள் கேட்கும் பொழுது சாப்பாடு கொடுக்க முடியாமல் போனதை எண்ணி வருந்தினான். வாய் விட்டு கேட்டும் குடுக்காதவர்களை எண்ணி நொந்தவன், அப்படியும் சாப்பிட வந்தவளை முழுமையாக சாப்பிட விடாமல் பார்த்துக்கொண்டே அவளை அரைவயிறு கால்வயிறாக உணவு சாப்பிட வைத்தவர்களின் மீது கோவம் வந்தது.

ஒன்றும் சொல்லாமல் அடுப்படிக்கு சென்றான். அங்கே மத்திய விருந்து தடா புடாலாக நடை பெற்றுக் கொண்டு இருந்தது. ஒரு அடுப்பை பற்ற வைத்து அதில் தனக்கு வேண்டிய சிலதை செய்துக் கொண்டு இருந்தான்.

அதை பார்த்த பெண்கள் மூவருக்கும் காதில் புகை வராதது தான் குறை. எப்பொழுதும் அலுவலகம் முடிந்து இரவு இவன் வரும் பொழுது யாரும் காத்திருக்க மாட்டார்கள். இவன் தான் தோசை வார்த்து சாப்பிடுவான். இல்லை என்றால் மத்தியம் இருக்கும் உணவை எடுத்து வைத்து இருப்பார்கள். அப்பொழுது எல்லாம் அவனுக்கு என்ன வேண்டுமோ அதை செய்து சாப்பிட்டுக் கொள்வான். அதனால் அவனுக்கு அடுப்படி புதிது இல்லை.

அதனால் அவர்கள் எதுவும் கண்டுக் கொள்ளவில்லை. என்னவோ செய்யட்டும் என்று விட்டுவிட்டார்கள். ஆனால்  முட்டை போட வந்தவனிடம்

“அண்ணா முதல் முதலா முட்டை போடத... வேற ஏதாவது செய்..” என்று முட்டையை எடுத்து வைக்க வந்தாள்.

அந்த பக்கம் ஆட்டுக்கறி வேக இந்த பக்கம் கோழிக்கறி வேக அதை ஒரு பார்வை பார்த்தவன், ராஜி எடுத்துக் கொண்டு போன முட்டையை வாங்கி, அதோடு இன்னொன்னையும் சேர்த்து முட்டை பொடிமாஸ் செய்தவன், அவித்து வைத்திருந்த இட்லியை பொடி இட்லியாக தாளித்து எடுத்துக் கொண்டவன், இன்னொரு பக்கம் இஞ்சி தட்டிப் போட்ட டீயை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அந்த நேரம் உமையவளின் அப்பா ஆகமநாதனும் அம்மா ரூபாவதியும் உள்ளே நுழைந்தார்கள்.

“வாங்க மாமா வாங்க அத்தை... ரெண்டு பேரும் உட்காருங்க... நான் கொஞ்ச நேரத்துல உமையை கூட்டிட்டு வரேன்..” என்று சொன்னவன்,

“ராஜி மதிலா உமையின் அப்பா அம்மா வந்து இருக்காங்க... ரெண்டு பேரும் குடிக்க ஏதாவது குடுத்து சாப்பிட வைங்க...” என்று விட்டு மேலே ஏறினான்.

அவனது கையில் இருந்த பதார்த்தை பார்த்த உமையின் பெற்றவர்கள் ஜெயத்தை என்ன என்பது போல பார்த்தார்கள்.

“எல்லாம் உங்க மகளுக்கு தான்...” என்று சுறுக்கமாக சொல்லிவிட்டு அவர்களோடு அமர்ந்துக் கொண்டார். வந்தவர்களை ஈஸ்வரியும் மணிகண்டனும் வரவேற்றார்கள்.

இங்கே அறைக்குள் உள்ளே நுழைந்தவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

“வா வந்து சாப்பிடு...” என்று கூப்பிட்டான்.

“நான் தான் கீழயே சாப்பிட்டுட்டனே...”

அவன் முறைக்க, வேகமாய் வந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டாள். அந்த அளவுக்கு பசி எடுத்தது...! அதனால் எந்த பிகுவும் செய்யாமல் அவள் பாட்டுக்கு சாப்பிட ஆரம்பித்தாள்.

ஒரு வாய் மட்டும் அவனுக்கு ஊட்டி விட்டாள். அதுக்கு பிறகு தலையை நிமிர்த்தவே இல்லை... முழுவதும் சாப்பிட்டு முடித்தவள் சூடாக இருந்த டீயை குடித்து முடித்தவள் அதே சூட்டோடு கொதிக்க கொதிக்க அவனை இழுத்து அவனின் இதழ்களில் முத்தம் கொடுத்தவள்,

வலிக்க வலிக்க அவனது முரட்டு இதழ்களை கடித்து வைத்தாள்.... அவளது இந்த வன்முறையில் நெஞ்சம் நெகிழ்ந்து குறும்பு முகிழ்த்தது உத்தமனுக்கு.

Loading spinner
Quote
Topic starter Posted : June 25, 2025 11:25 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top