Notifications
Clear all

அத்தியாயம் 22

 
Admin
(@ramya-devi)
Member Admin

இத்தனை நாள் தன்னை கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாதவளை கண்டு எரிச்சல் தான் வந்தது குருவிற்கு... அதும் அவளது கண்ணீர் சுமந்த விழிகளை கண்ட பொழுது இன்னும் ஆத்திரம் தான் வந்தது...

“இவ்வளவு நாள் இல்லாத அக்கறை இன்னைக்கு என்ன புதுசா...? எப்பவும் போலவே இருங்க... எனக்காக யாரும் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை...” என்றவன் விருட்டென்று கிளம்பிவிட, கண்ணீருடன் அப்படியே அமர்ந்துவிட்டாள்..

‘என்னால முடியல மாமா... மசக்கை என்னை படுத்தி எடுத்தது... அதோட தீபாவை ஒதுக்கிட்டு உங்க கிட்ட வர முடியல...’ கண்ணீருடன் நினைத்தவள்,

அதன் பிறகு கிளம்பி கலைக்கூடத்திற்கு சென்றாள்.

போகும் போது தீபா வந்து தடுக்க,

“இல்லக்கா இன்னைக்கு ஒரு நாள் போய் பார்த்துட்டு வரேன்... வீட்டுலையே இருக்கிறது ரொம்ப போரடிக்குது...” என்றவள் கிளம்பி சென்றுவிட்டாள்.

இவள் சென்ற நேரம் அங்கு யாரும் வந்து இருக்கவில்லை. எட்டு மணிக்கெல்லாம் அங்கு சென்றவள் நேரே குருவின் அறைக்கு போனாள். ஆனால் அவன் அங்கு இல்லை.

அவனது தனிப்பட்ட நாட்டிய கூடத்திற்கு சென்றாள்.

அங்கு அவன் வெறுந்தரையில் படுத்து இருப்பதை கண்டவளுக்கு மனதில் பாரம் ஏறி அமர்ந்தது...

“மாமா...” என்று அழைத்து அவனை தன் புறம் திரும்பி பார்க்க செய்தாள்.

குருவால் ஒரு நிமிடம் தன் கண்களையே நம்ப முடியவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகி இருந்தது அவள் இந்த நாட்டிய அரங்கில் காலடி எடுத்து வைத்து... இதுவும் கனவு தானோ....? என்று மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

ஏனெனில் பல நாட்கள் அவன் இப்படி படுத்து கிடக்கும் பொழுது ‘மாமா’ என்ற அழைப்புடன் சதி நிற்பது போலவே தோன்றும். எழுந்து சென்று தொடும் பொழுது காற்றில் கரைந்து போனது போல யாரும் இல்லா வெற்றிடமே அங்கு இருக்கும்.

அது போலவே இன்றும் நினைத்தான். ஆனால் அது கற்பனை இல்லை நிஜம் என்பது போல சதி அவனருகில் வந்து அமர்ந்தாள்...

அவளின் நெருக்கத்தில் கண் விழித்தவன் கூர்ந்து பார்த்தான். அவனது பார்வை வீச்சை தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் திரண்டதை கண்டு அவனது இதழ்களில் ஏளன புன்னகை ஒன்று உதித்தது..

“ஏது மேடம் இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க... ஏதும் முக்கியமான விசயமா...?” என்று வார்த்தையாலே அவளை கொல்ல,

சதி பதிலே பேசவில்லை.

“இப்படி பேசாம இருந்து எதை சாதிக்க போறீங்க மேடம்...” என்று அதற்கும் பேசியவனை கண்டு ஆயாசமாய் இருந்தது... கூடவே கண்ணீரும் வர,

“இப்படி அழுது அழுது எதை என் கிட்ட நிருபிக்க போற... நீ என்ன சொன்னாலும் என்னால அவ்வளவு எளிதா சமாதானம் ஆக முடியாது... இங்க இருக்கிறது வேஸ்ட்... போ போய் உன் அக்கா மடியில படுத்துட்டு கொஞ்சிட்டு இரு...” என்றவன் எழுந்துக்கொள்ள, அவனது கரத்தை பிடித்து இழுத்தவள்,

அதுவரை இருந்த தயக்கத்தையும் குற்ற உணர்வையும் ஒதுக்கி தள்ளியவள்,

“என்னை மட்டும் சொல்றீங்களே... ஏன் நீங்க என்னை விட்டு போனீங்க... அக்கா ஒரு பக்கம் இருக்கட்டும் நீங்க ஒரு பக்கம் வந்து என் பக்கத்துல உட்கார வேண்டியது தானே.. நானே மசக்கையில எப்போ தூங்குறேன், எப்போ முழிச்சு இருக்கேன்னு தெரியாம கேரா சுத்துக்கிட்டு இருக்கேன். இதுல நீங்க வந்து என்கிட்டே கோவ படுறீங்க...”

“ஏன் நீங்களும் என்னை போட்டி போட்டுக்கிட்டு கவனிக்க வேண்டியது தானே... அதை செய்யாம இப்போ வந்து தைய தக்கன்னு குதிச்சா நான் என்ன பண்றது. உங்களுக்கு தான் என் மேல பாசமே இல்ல.. இல்லன்னா இப்படி மூணு மாசமும் கண்டுக்காம இருப்பீங்களா...?” ஆதங்கத்துடன் கேட்டவள் மேலும் தொடர்ந்து,

“செய்யிறதெல்லாம் நீங்க செஞ்சுட்டு என்னை வந்து குத்தம் சொன்னா ஆச்சா... இது நல்ல கதையா இருக்கே... ஏதோ என்னால உடம்புக்கு முடியல. அதனால போனா போகுதேன்னு விட்டா ரொம்பல்ல பண்ணிக்கிட்டு இருக்கீங்க...”

“மூணு மாசத்துல மூணு நாள் செக்கப்புக்கு கூட்டிட்டு போறதோட சரி... அதுக்கு பிறகு வேற ஒண்ணத்தையும் செய்யல... இதுல இவங்களுக்கு கோவம் வேற வருதாக்கும்... என் பொண்டாட்டிய நானே நல்லா கவனிச்சுக்குவேன்னு சொல்ல தெரியல... இதுல வெட்டி பந்தா மட்டும் காட்டுறது...” என்று மூச்சு விடாமல் பேசியவளை முறைத்து பார்த்தான்...

“என்ன முறைப்பு வேண்டி கிடக்கு... நிஜமா இந்த நேரம் தான் கணவனோட அருகாமை ரொம்ப தேடும் எல்லா பெண்களுக்கும். அது தெயரியுமா உங்களுக்கு...? ஆனா நீங்க என்னடான்னா என் கிட்டக்கயே வராமா நான் தான் குத்தம் செஞ்ச மாதிரி சீன போட்டுட்டு வர்றீங்க காலையில...”

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல... நானும் ஏதோ போனா போகுதேன்னு விட்டா ரொம்ப தான் பண்ணிக்கிட்டு இருக்கீங்க...” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக்கொண்டு பேசியவளின் பேச்சை கேட்டு அதுவரை இருந்த வலிகள் எல்லாம் காணமல் போனது போல இருந்தது அவனுக்கு.

அதில் லேசாய் உல்லாசம் வேறு பிறந்து தொலைந்தது குருவிற்கு...

அவளும் எழுந்து நின்றிருந்தாள் பேச்சு வாக்கில்... அப்பொழுது தான் முழுமையாக அவளைப் பார்த்தான்...

மேடிட்ட வயிறுடன் மெலிதான சிபான் புடைவையில் கைகளை ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டு இருந்தவளின் தோற்றம் கண்களை நிறைக்க வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

முன்பிருந்த அழகு இன்னும் ஒரு மடங்கு கூடி இருந்தது அவளிடம். சும்மாவே அவளிடமிருந்து கண்களை பிரிக்க முடியாமல் திணறுவான்... இன்று எல்லா நாளையும் விட அதிக அழகுடன் நின்று அதுவும் உரிமையாக சண்டை போட்டுக்கொண்டு இருப்பவளை காண காண உள்ளத்தில் ஆகாய கங்கை ஊற்றெடுத்து பொங்கியது..

அதை உணராமல், “எங்க இப்போ பதில் சொல்லுங்க பார்ப்போம்... இவ்வளவு நேரம் கடுகா பொறிஞ்சிங்கல்ல... நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுங்க... ஏன் என்னை இத்தனை நாள் தள்ளி வச்சீசீ....” முடிக்கும் முன்பே சதியின் இதழ்கள் குருவின் வசமாகி இருந்தது...

‘ஹக்....’ என்ற ஒலி தான் வந்தது அவளிடமிருந்து... எதிர்பாரா இந்த செயலில் ஒரு கணம் தடுமாறி போனவள் அடுத்த நொடி இத்தனை நாள் தன்னவனுக்காக அவள் எவ்வளவு ஏங்கி போய் இருந்தாள் என்பதை அவனுக்கு ஒரு வேகத்துடன் உணர்த்த....

உறைந்து போனான் குரு... தன் கண்களை நம்பவே முடியவில்லை...

“சதி....” என்ற உளறியவன் அவளுக்கு மேலாக தன் உணர்வுகளை அவளுக்கு கொடுக்க, இப்பொழுது சதி திண்டாடி போனாள்.

ஆம் ஒற்றை இதழ் முத்தத்தில் இருவரும் தங்களது மொத்த ஏக்கத்தையும். தேடலையும், ஒருவர் மற்றவரின்  அருகாமைக்கு ஏங்கியதையும் வெளிப்படுத்த அந்த கணம் தேவ கணமாய் மாறி போய் இருந்தது இவர்களுக்கு...

மெல்ல மெல்ல இருவரது உணர்வுகளையும் மற்றவருக்கு கடத்தி உள்ளத்து உணர்வுகளை ஒப்பித்து முடித்த நேரம் இருவரின் முகத்திலும் அவ்வளவு மகிழ்வு குடி வந்தது இருந்தது...

தன் கைவளைவுக்குள் சதியை இழுத்தவன்,

“என்னடி ரொம்ப தான் கோவம் வருது...” ஒற்றை புருவத்தை ஏற்றி கேட்டவனை ரசனையுடன் பார்த்தவள், அவனது முறுக்கு மீசையை இரு பக்கமும் பிடித்து திருகிவிட்டு,

“இதுக்கு மேலையும் கோவம் வரும்.... பார்க்குறீங்களா...?” கேட்டவள் நறுக்கென்று அவனது உதடுகளை கடித்து வைத்தாள்.

அதில் கிளர்ந்தவன்,

“ஹேய்....” கண்கள் மின்ன தன்னோடு இன்னும் நெருக்கியவன் ஆசையாய் அவளது கண்களை பார்த்தான்...

“ம்ம்ம்.... இப்படி உங்களோட என்னை இறுக்கி வச்சுக்குறத விட்டுட்டு சின்ன பிள்ளை மாதிரி கோவிச்சுக்கிட்டு இருந்தா நல்லாவே இல்ல மாமா...” என்று அவனது கண்களை நேருக்கு நேராக ஆழ்ந்து பார்த்து சொன்னவளை காதலுடன் பார்த்தான்.

“பேசுறது நீதான்னான்னு சந்தேகம் வருதுடி...” என்று சிரிப்புடன் சொன்னாலும் இறுக்கி அணைத்தவன்,

“நீ சொல்றதும் சரி தான் கண்ணம்மா... இனி பாரு ஐயாவோட ஆக்சன...” என்று அவளின் காதோரம் சரிந்து இருந்த கூந்தலை சரி செய்தவன், குனிந்து அவளின் காதோடு ஒரு சந்தேகம் கேட்க, அவளது முகம் சிவந்து போனது...

“ச்சீ போங்க மாமா... இப்படியா பேசி வைப்பீங்க...?” சிணுங்கியவள் அவன் கேட்டதை மறுபடி மறுபடி எண்ணி பார்த்து சிவந்து போய், அவனது பார்வையிலிருந்து தப்பிக்க அவனது மார்பிலே தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

ஆனால் அதற்கு அவன் விட வேண்டுமே... வேண்டுமென்றே அவளிடமிருந்து நிற்க, சதிக்கு தான் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நொடி திண்டாடி போனாள்.

அவளது தவிப்பையும் திண்டாட்டத்தையும் கண்டு குருவிற்கு உல்லாசமாய் போக... வாய் விட்டே சிரித்தான்...

“ப்ச்... சிரிக்காதீங்க மாமா... கேக்குறதையும் கேட்டுவிட்டு இப்படியா கேலி பண்ணி சிரிக்கிறது...” சிணுங்கலுடன் சொன்னவள், மறுபடியும் அவனிடம் ஒண்ட, இந்த முறை மறுக்காமல் அவளுக்கு தன் மார்பை கொடுத்தவன் இறுக்கி அணைத்துக்கொண்டான்.

அதன் பின்பே கொஞ்சம் வெட்கம் துறந்தாள். ஆனால் அடுத்து குரு மறுபடியும் இன்னொரு சந்தேகத்தை கேட்க,

“ஐயோ மாமா...” என்றவள் தன் கரம் கொண்டு அவனது இதழ்களை மூடியவள் அதித வெட்கத்தின் பிடியில் திளைத்தாள்.

“உங்க கிட்ட.... ச்சீ போங்க மாமா... நான் வீட்டுக்கு போறேன்...” என்று கிளம்ப பார்க்க,

“அது மட்டும் முடியவே முடியாது கண்ணம்மா... நீ இங்க என்னோட தினமும் இருந்தே ஆகணும்...” என்றான் உறுதியாக.

“அதுக்கு நீங்க இப்படி பேசாம இருக்கணும்...” இவள் கண்டிசன் போட்டாள்.

“தோடா... எனக்கே கண்டிசனா...? என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது... என்னோட எல்லா உணர்வுகளையும் நீ தாங்கி தான் ஆகணும்... இது உட்பட...” என்றவன் வலுக்கட்டாயமாக அவளது இதழ்களை சிறை செய்தான்.

அதில் சதியின் இதழ்களில் ஒரு சொட்டு குருதி துளிர்த்தது...

அதுவே சொன்னது குருவின் கோவத்தை...

“உனக்கு உன் வாய் தாண்டி சதி வேலை பாக்குது...” முணுமுணுத்தவள், குருதியை துடைத்துக்கொண்டு,

“எல்லாரும் வந்து இருப்பாங்க... வெளியே போகலாமா...?” என்று அவனை பார்க்காமல் கேட்டாள்.

அவளது முணுமுணுப்பை கேட்டவனுக்கு சட்டென்று சத்தமில்லாமல் ஒரு புன்னகை விரிந்தது...

“இனி இப்படி பேசி பாரு...” முடிக்கும் முன்பே

“அய்யா சாமி சத்தியமா உங்க நிழலை கூட பிரிய மாட்டேன் போதுமா...?” கடுப்புடன் மொழிந்தவள் முன்னாடி செல்ல, அவளின் அன்ன நடையை ரசித்துக்கொண்டே பின் வந்தான்...

தாய்மையின் பூரிப்பில், கருவை சுமந்து நின்ற எழிலில், நடை ஒரு விதமாக அசைந்து அசைந்து நடந்தாள். அதை கண்டவனுக்கு மனமெல்லாம் ரெக்கை கட்டி பறந்தது...

தன்னவளின் வயிற்றில் அவனது வாரிசு... நினைக்கும் போதே ஜிவ்வென்று இருந்தது... அந்த உணர்வை முழுவதுமாக அசைபோட்டு அசைப்போட்டு அனுபவித்துக்கொண்டு இருந்தான்.

அன்றைய நாள் முதல் கொண்டு தினமும் அவள் கலைக்கூடத்திற்கு வர, பெரியவர்களும் தீபாவும் தடை சொன்னார்கள்.

ஆனால் சதி “மாமா என்னை ரொம்ப பத்திரமா பார்த்துக்குவாங்க... நீங்க யாரும் பயப்படாம இருங்க.. மாமா பார்த்துக்குவார்...” என்று உறுதியாக சொன்னவள் குருவுடன் சென்றுவிட்டாள்.

சதியின் இந்த வாக்கு குருவிற்கு பெரும் நிம்மதியை கொடுக்க, அவளின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டான் அதித காதலுடன்..

கையின் இருக்கத்திலே அவனது உணர்வுகளை புரிந்துக்கொண்டவள்,

“நிஜம் தானே மாமா... உங்களை விட வேற யாரால என்னையும் நம்ம பிள்ளையையும் நல்லா பார்த்துக்க முடியும் சொல்லுங்க...” என்று காதலுடன் கேட்டவளை இறுக்கி அனைத்து அவளின் நெற்றியில் முட்டி முத்தம் கொடுத்தவன்,

“கண்டிப்பா டா... கண்ணம்மா...” என்றவனுக்கு மனமெல்லாம் அவ்வளவு நிறைவு...

ஏதோ ஜென்ம ஜென்மாய் வாழ்ந்த திருப்தி அவனிடம் வந்தது...

அதன் பின்பு தொடர்ந்து குருவே அவளை கூட்டிக்கொண்டு வருவதும் இரவு அவனே கூட்டிக்கொண்டு செல்வதுமாக இருந்தது... இவளுக்காவே பல ஷூட்டிங்கை கேன்சல் செய்தான்.

ஆனால் அப்படியும் சில பட இயக்குனர்கள் விடாமல் லோக்கேசனை கேன்சல் செய்துவிட்டு கலைக்கூடத்திலே செட் போட்டு பல பாடல்களை எடுத்துக்கொண்டார்கள்.

மிக தவிர்க்க முடியாததற்கு மட்டுமே வெளி இடத்தில் செட் போட்டு எடுக்க வேண்டி வந்தது... அப்பவும் சதி அவனுடன் தான் இருந்தாள்.

கலைக்கூடத்திலும் தன் கண்களுக்கு முன்னாடியே தான் அவளை வைத்துக்கொண்டான். அவ்வளவு உபசரிப்பு... நேரா நேரத்திற்கு அவளுக்கு பல வகைகள், ஜூஸ், மருந்து, உணவு என்று எல்லாம பார்த்து பார்த்து செய்தான்.

நடனம் சொல்லி தரும்பொழுது கூட வகுப்பறையின் ஓரத்தில் அவளுக்கு ஒரு இருக்கையை போட்டு அமரவைத்த பின்பே சொல்லி தருவான்.

அதனுடன் ஆசிய அளவில் குருவிற்கு நடன போட்டிக்கான அழைப்பு வந்து இருந்தது... அதற்கான ஒத்திகை வேறு பார்த்துக்கொண்டு இருந்தான்.

இதில் ஆசிய கண்டத்தில் உள்ள அத்தனை நாட்டினரின் நடனமும் அரங்கேறும்... அதில் வெற்றி பெறுவது மிகப்பெரிய சவால்... அதிலிருந்து அழைப்பு வருவதே பெரிது என்றால், அதில் வெற்றி பெற்றால் சொல்லவும் வேண்டுமா...? அதன் சிறப்பை.

முதலில் சதி தான் அவனுடன் ஆடுவது என்று தீர்மானித்து இருந்தார்கள். ஆனால் அவள் கருவுற்றதை அறிந்தவுடன் அவளுக்கு பதில் அந்த நாட்டிய அரங்கில் வேலை பார்க்கும் ஒருவரை போட்டு ரிகசல் பார்க்க ஆரம்பித்தார்கள்.

குரு ஒரு பக்கம் சதியை தாங்கினால் ராக்கி அதை விட ஒரு படி மேலே சென்று அவளை பார்த்துக்கொண்டான்.

ஒரு முறை முக்கிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.. புதிய சில நடன முறைகளை குரு எல்லோருக்கும் சொல்லி தருவது எப்பொழுதுமே வழக்கம்..

அந்த வழக்கத்தின் படி அவன் சொல்லி கொடுப்பதற்காக பெரிய அரங்கில் மாணவர்களை வர சொல்லி இருந்தார்கள். அதன் படி எல்லோருமே கூடி இருக்க, குரு தன் நடன யுக்த்தியை சொல்லி தர... எல்லோருமே அதை உன்னிப்பாக கவனித்தார்கள்.

அதன் பின் அவர்களை அதன் படி ஆட சொன்னான். எல்லோருமே ஆட, ஒரு மாணவன் மட்டும் ஆடவில்லை...

குரு கூர்ந்து கவனித்தான் அவனை... அவன் நின்று இருந்த தோரணையில் வேண்டுமென்றே அவன் ஆடவில்லை என்பதை உணர்ந்தவன்,

எல்லோரயும் நிறுத்த சொன்னவன், அந்த மாணவனை மட்டும் குறிப்பிட்டு

“ஏன் ஆடல...” என்றான்.

அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லாமல் தெனாவட்டாக நிற்க, குருவிற்கு லேசாய் கோவம் வந்தது.

“உன் கிட்ட தான் கேக்குறேன் யோகேஷ்... ஏன் ஆடல...” இந்த முறை அவனது பேரை சொல்லியே கேட்டான்.

அதற்க்கு அவன் உச்சு கொட்ட... இழுத்து பிடித்த கோவம் அப்பவோ இப்பவோ சிதற காத்திருந்தது...

“லுக் ஆட விருப்பம் இல்லன்னா கிளம்பி போய்க்கிட்டே இரு... இது ஒண்ணும் விளையாட்டு வேலை இல்ல... நடனம் என்பது கடவுளோட ஒன்ற ஒரு வகை வழி... எப்படி பாட்டு பாடி, பஜனை செய்து கடவுளோட ஐக்கியம் ஆகுறாங்கலோ அது மாதிரி தான் இதுவும்... இதுவும் கடவுளை அடைய ஒரு வழி. இதை அவமானப்படுத்துற மாதிரி நடந்துக்குறது சுத்தமா நல்லா இல்ல...” என்று சொன்னவன்,

“கெட் அவுட்...” என்றான் கம்பீரமாக.

அவனது நிமிர்வை பார்த்த யோகேஸ்க்கு அவ்வளவு கோவம் வந்தது...

“நடனத்தை நான் மதிக்கிறது இருக்கட்டும் நீங்க முதல்ல அதுக்கு மரியாதை குடுத்து இருக்கீங்களா...? என்னை சொல்றீங்களே... நீங்க என்ன யோக்கியம்... கடவுளா பார்க்கிற புனிதமா மதிக்கிற இந்த இடத்துல ஒரு தப்பு நடந்து இருக்கு.... அதுவும் சொல்லி குடுக்குற வாத்தியாரே அப்படி இருக்குறாரு... இதுல என்னை மட்டும் சொல்றீங்க...”

என்றவன் தொடர்ந்து, “நீங்க என்ன யோக்கியம்... அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களோட தங்கச்சியை கெடுத்து....” சொல்லி முடிக்கும் முன்பு

“யோக்கேஷ்...” என்று கர்ஜித்து இருந்தான் குரு...

 

Loading spinner
Quote
Topic starter Posted : June 13, 2025 2:52 pm
(@gowri)
Estimable Member

தேவையா இது எல்லாம்....

எல்லாம் சதி & அவ குடும்பம் பண்றது தான்🤦🤦🤦🤦🤦

Loading spinner
ReplyQuote
Posted : June 16, 2025 2:26 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top