Notifications
Clear all

அத்தியாயம் 29

 
Admin
(@ramya-devi)
Member Admin

இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு குழலிக்கும் ஏகனுக்கும் கல்யாணம் ஆன ரெஜிஸ்டர் பத்திரம் வேறு..

மெய்மறந்து போய் போய் பார்த்துக் கொண்டு இருந்தவனை தலையை திருப்பி ஒரே ஒரு பார்வை தான் பார்த்தான் ஏகன். அதில் அடித்து பிடித்துக் கொண்டு சுதாரித்தவன், தான் அணிந்து இருந்த கோட்டை சரி செய்துக் கொண்டான்.

“கணம் நீதிபதி அவர்களே” என்று ஆரம்பித்தான்.

அவன் அப்படி ஆரம்பிக்கவும் சட்டென்று அங்கிருந்த சலசலப்பு கொஞ்சம் அடங்கியது.

“இதோ என் கட்சி காரரின் கணவன் வந்து விட்டார். இருவருக்கும் திருமணம் ஆகி இதோடு ஒரு மாத காலம் ஆகி விட்டது...” என்று அவன் ரெஜிஸ்டர் பத்திரத்தை நீதிபதியிடம் நீட்டினான்.

அதை வாங்கி படித்துப் பார்த்தார் சீதாராமன்.

“எதிர் தரப்பு வக்கீல் என் கட்சி காரர் மீது வைத்த குற்றங்களை எல்லாம் இல்லை என்று நிருபணம் செய்து விட்டார். இப்பொழுது அவர் அவதூறாக பேசிய பேச்சுக்களை திருப்பி வாங்கிக்கொள்ள சொல்லுங்கள் நீதிபதி அவர்களே...”

“பெண் என்பதால் மிக எளிதாக அவர் மீது தகாத குற்றங்களை அடுக்கிய இந்த மெத்த படித்த வக்கீலுக்கு என்ன தண்டனை தரப்போகிறீர்கள். இவர் பேசிய பேச்சால் என் கட்சி காரர் மிக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அதற்கு இவர் என்ன பதில் சொல்ல போகிறார். இல்லை இந்த நீதி மன்றம் தான் என்ன பதில் சொல்லப்போகிறது” என்று அசோக் அடித்து விட,

எதிர் தரப்பு வக்கீல் முன்பை  விட  இன்னும் உள்ளுக்குள் பதுங்கினான். அதுவும் ஏகன் அவனை பார்த்த பார்வையில் வெந்து நொந்துப் போனான்.

“இதுல இருக்கிறது எல்லாம் உண்மையா மிஸ்டர் ஏகன்” என்று நீதிபதி கேட்க,

“சாட்சி கையெழுத்து போட்டவங்களை கேளுங்க” என்று நான்கு பேரை உள்ளே வர வைத்தான் ஏகன்.

அவர்களும் தலையை ஆட்டி விட்டு எங்கு நடந்தது திருமணம். எப்படி நடந்தது என எல்லாவற்றையும் குறுக்கு விசாரணை செய்து நிரூபித்து விட சீதாராமன் தன் மகனை ஒரு பார்வை பார்த்தார்.

“கேடி பய...” என்று சிரித்துக் கொண்டார்.

அது ஜோடனை என்று அவருக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது. அவரது மகனாவாது அவருக்கு தெரியாம கல்யாணம் செய்யிறதாவது...

ஏகன் தன் தந்தையை தான் பார்த்தான். அவனது விழிகளில் சின்னதாய் ஒரு சிரிப்பு தென்பட்டது. இருவரையும் சேர்த்து வைத்து பார்த்தவருக்கு கண்னுக்கு நிறைவாக இருந்தது இருவரின் உருவ பொருத்தம்.

சைலன்ட்டாக தன் மனைவிக்கு போனை போட்டு வீடியோ காலில் வரவைத்து விட்டு வழக்கில் கவனம் வைத்தார்.

ஜானகி போன் வழியாக மகனையும் மருமகளையும் பார்த்து கண்கள் கலங்கிப் போனவர், உருகி தான் போனார் தன் மகனை பார்த்து.

எவ்வளவு கம்பீரமாக ஊரையே தன் கைக்குள் வைத்து இருந்தவன். இன்று உருமாறி போய் அடையாளமே தெரியாமல் நின்று இருந்தவனை காண காண உள்ளுக்குள் வலி எடுத்தது.

 ஆனாலும் அவனது கம்பீரம் இன்னும் குறையாமல் அப்படியே இருப்பதை பார்த்து வாஞ்சை பெருகியது. சிங்கம் எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் சிங்கம் தான் என்று எண்ணிக் கொண்டார்.

அதன் பிறகு வழக்கு சூடு பிடித்தது. எதிர் தரப்பு வக்கீல் மீது மான நட்ட வழக்கு, தேவையில்லாமல் ஜோடனை செய்து ஒரு பெண்ணின் கற்பை இழிவு படுத்தியது என நான்கு ஐந்து வழக்கில் அவனை எச்சரித்து அபராதம் கட்ட வைத்து, ஆறு மாத காலம் அவனை வக்கீல் கோட் போட முடியாத அளவுக்கு செய்து விட்டார் ஜட்ஜ் சீதாராமன்.

அவரது இந்த அதிரடியில் எதிர்தரப்பு வக்கீல் தலை குப்புற விழுந்தது. நெடுங்குழலியின் மானம் காப்பாற்றப்பட்டது ஏகனால். அதை இன்னும் ஒரு பங்குக்கு கூட்டி சென்றார் மாமனராய்.

அதோடு குழலியின் குடும்பத்தை கொலை செய்த அவளின் தாய் மாமாவுக்கு நிரந்தர ஆயுள் தண்டனையும், இரட்டை தூக்கு தண்டனையும் கூடவே அபராதமும் வித்தார் சீதாராமன்.

அதற்கே அன்றைய நாள் முடிந்துப் போக, வீட்டுக்கு கிளம்பினார்கள் எல்லோரும்.

ஜட்ஜ் வேகமாய் தன் மகனிடம் வந்து அவன் வேறு எங்கும் கிளம்பும் முன்பு அவனை பிடித்துக் கொண்டவர் கூடவே குழலியையும் கூட்டிக்கொண்டு அவரின் வீட்டுக்கு வந்தார்.

“விடுங்கப்பா நான் எங்கும் வரல” என்று முரண்டு பண்ணியவனை மிரட்டி உருட்டி அழைத்துக் கொண்டு சென்றார் அவர்.

“இது வரை நீ என்ன காரணம் சொல்லி வெளியே இருந்த வரைக்கும் போதும். இனி உன்னை அப்படி விட முடியாது. அதுவும் மருமக வந்த பிறகு உன்னை அப்படி எல்லாம் விட முடியாது” என்றார்.

“எனக்கு வர விருப்பம் இல்ல.. வேணும்னா உங்கா மருமகளை உங்களோட கூட்டிட்டு போங்க” என்றான்.

“அது எனக்கு தெரியும்.. நீ இப்போ என்னோட வர்ற.. இல்லன்னா உன் அம்மா அடுத்த பத்து நிமிடத்துல உன் முன்னாடி இருப்பா.. ஏற்கனவே போன்ல உன்னை தான்  பார்த்துட்டு இருக்கா...” என்று போனை தூக்கி காட்ட,

அங்கு ஜானகி அவனை தான் முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். அதுவும் கையில் கத்தியோடு.

“இப்ப மட்டும் நீ வீட்டுக்கு வரல.. கத்தியை என் கையில அறுத்துட்டு இப்பவே செத்து போயிடுவேன் கண்ணா” என்று அவர் அவர் பங்குக்கு மிரட்ட, பல்லைக் கடித்தான் ஏகன்.

“எல்லோரும் ஒண்ணா சேர்ந்து படுத்துறீங்க” கடுப்படித்தான்.

அவர் அப்படி மிரட்டவும் குழலிக்கு சிரிப்பாய் வந்தது. ஆனாலும் ஏகனின் கோபத்தை எண்ணி தனக்குள் புதைத்துக் கொண்டாள்.

அமைதியாக அவனுக்கு அருகில் அமர்ந்து வந்தாள். வீட்டுக்குள் நுழைய இருந்த சமயம் ஜானகி வேகமாய் ஓடி வந்து இருவருக்கும் ஆராத்தி எடுக்க, அவரை முறைத்துப் பார்த்தான் ஏகன்.

“இங்க கோவமா இருக்க வேண்டியது நான்... நீ இல்ல..  பெத்தவ நான் உயிரோட இருக்கும் போது எனக்கு தெரியாம நீ எப்படிடா கல்யாணம் கட்டிட்டு வரலாம். அதுவும் இவ்வளவு அழகான பொண்ணை. உன் கல்யாணத்தை பார்க்க தான் நான் இவ்வளவு நாளும் உயிரோடவே இருக்கேன்” என்று திட்டிக் கொண்டே ஆராத்தி சுற்றியவரை இதழ்களில் புன்னகை தாங்கியபடி பார்த்துக் கொண்டு இருந்தாள் குழலி.

ஜானகிக்கு கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது. ஆனால் தான் அழுதால் மகன் வருந்துவான் என்பதால் தன் அழுகையை அதைக்கொண்டு கோவமாக இருப்பதை போல காட்டிக் கொண்டார் அவர்.

அதை குழலிக்கு சீதாராமன் சொன்னார்.

“நீ எதுவும் தப்பா எடுத்துக்காதம்மா” என்று அவர் சொல்ல,

“எனக்கு உங்க குடும்பத்தை ரொம்ப பிடிக்கும் மாமா... அவர் உங்களை எல்லாம் விட்டு தள்ளி இருந்தாலும் அவரோட மொத்த நினைப்பும் உங்க மேல மட்டும் தான். அவரோட போன் ஸ்க்ரீன் சேவர்ல உங்க குடும்ப புகைப்படம் தான் இருக்கும். அதை பார்த்து தான் உங்களை அடையாளம் கண்டு பிடிச்சேன்” என்றாள்.

“பாசக்காரன் தான்... ஆனா என்ன எல்லாம் எங்க நேரம்” என்று அவர் வருத்தமாக கூற,

“மாமா” என்றாள் அதிர்வாக.

“இனி இங்க தானே இருக்க போற பொறுமையா உனக்கு எல்லாவற்றையும் சொல்றேன்” என்று அவர் சொல்லி அவளை வீட்டுக்குள் மகனோடு அழைத்துக் கொண்டு வந்தார்.

வந்தவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு கதறினார் அவனின் தாய். அவர் சத்தம் கேட்டு உள்ளுக்குள் இருந்த ஆட்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.

குழலி எல்லோரையும் பார்த்தாள். அவனின் தங்கை பூவிதா, பாட்டி செண்பகம் இருவரும் ஓடி வந்து அவானை கட்டிக் கொள்ள, பெண்களின் அழுகையில் தவித்துப் போனான் அந்த முரட்டு ஆடவன்.

“இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி அழறீங்க?” கடுப்படித்தான்.

“இன்னும் என்ன ஆகல... ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு கருவேப்பில்லை கொத்து மாதிரி பெத்து வச்சு இருக்கேன். ஆனா அவனை கண்ணார என்னால பார்த்து ரசிக்க முடியல. எங்கோ கண் காணாத ஊர்ல இருந்துக்கிட்டு என்னை போட்டு வாட்டி வதைக்கிறடா..” என்று தாய் அழுகை,

“இதுக்கு முன்னாடி தான் பட்டாளத்துல இருந்த பார்க்க முடியாம போச்சு. ஆனா இப்போ பக்கத்துலையே இருந்தும் பார்க்க முடியாம போயிடுச்சே என் ராசாவ... உன்னை பார்க்க தான் நான் இவ்வளவு நாளும் என் உயிரை  பிடிச்சு வச்சு இருக்கேன்டா கண்ணா.. உன் புள்ளையை பார்க்காம எங்க என் உசிரு போயிடுமோன்னு பயமா இருந்துச்சு...” என்று கலங்கினார் பாட்டி.

“அண்ணா... ஏண்ணா எங்களை எல்லாம் விட்டுட்டு இருந்த... உன்னை விட்டுட்டு எங்களால இருக்க முடியல. இனி இன்னொரு முறை எங்களை விட்டு எல்லாம் போகாதண்ணா. எங்களால தாங்கிக்கவே முடியல” என்று கலங்கினாள் தங்கை. மூன்று பெண்களின் பாசத்தில் திளைத்தவனுக்கு மனதில் இருந்த பாரம் சற்றே விலகியது.

“நான் எங்கும் போகல போதுமா? இப்பவாவது விடுவீங்களா மாட்டீங்களா?” கடுப்பாகவே கேட்டான்.

அவனது குணமே இது தான். அதுவும் ராணுவத்தில் சேர்ந்த பிறகு அவனது கொஞ்ச நஞ்ச குணமும் இறுக்கமாகிப் போனது. அவனிடம் நெகிழ்வு மருந்துக்கு கூட இருக்காது. ஆனால் அதெல்லாம் மூன்று பெண்களுக்கு பெரிய விசயமே இல்லை.

அவர்களை பொறுத்தவரை ஏகன் அவர்களோடு இருக்கிறான் என்பது மட்டுமே போதுமானது. அவனை ஆசை தீர கொஞ்சி தீர்த்தவர்கள்,

அதன் பிறகு தான் குழலியை பார்த்தார்கள். அவளின் பாங்கான தோற்றத்தை கண்டு பாட்டி உதட்டை சுளித்தார்.

“இது தான் நீ கல்யாணம் கட்டி கூட்டிட்டு வந்த பொண்ணா... அவ்வளவு ஒன்னும் பிரம்மாதம இல்லையே...” என்று சொல்ல, குழலி அதிர்ந்ந்துப் போனாள்.

வெடுக்கென்று ஏகனை பார்த்தாள். அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்து விட்டான்.

Loading spinner
Quote
Topic starter Posted : June 13, 2025 2:40 pm
(@gowri)
Estimable Member

🤣🤣🤣🤣, சூப்பர் சூப்பர் பாட்டி & குழலி பைட் வருமோ 

Loading spinner
ReplyQuote
Posted : June 13, 2025 11:34 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top