Notifications
Clear all

அத்தியாயம் 25

 
Admin
(@ramya-devi)
Member Admin

தங்களுக்கு முன்பு வந்து நின்ற கடத்தல் கும்பலை பார்த்து மிரண்டுப் போன குழலி, வேகமாகவும் இறுக்கமாகவும் ஏகனின் கையை பற்றிக் கொண்டாள்.  

அதுவும் அவர்களில் உடம்பில் இருந்த காயங்களை பார்த்தவளுக்கு உமட்டிக் கொண்டு வந்தது. இரத்தம் சொட்ட, சொட்ட தோள் பெயர்ந்து ஆழாமான வெட்டு காயங்களோடு எலும்புகளும் சில அங்கும் இங்குமாய் தெரிய, கூடவே உதிர வாடை கவுச்சையாக வீச மூக்கை பொத்திக் கொண்டவளுக்கு வாந்தியே வந்து விடும் அளவுக்கு போனது நிலைமை.

தங்களை பார்த்து முகம் சுழித்தது மட்டும் இல்லாமல் ஏகனின் கையை மிக உரிமையோடு பிடித்துக் கொண்டு நின்றவளை பார்த்த அடியாட்களின் தலைவன், “என்ன சார் இது... நீங்க தான் இந்த பெண்ணை கடத்த சொன்னீங்க.. அதனால தான் கடத்துனோம். எங்க தலைவர் கிட்டையும் பெண்ணை காண்பிச்சுட்டோம். அவரு எங்களுக்கு சன்மானம் எல்லாம் தர தயாரா இருந்தாரு. நாங்களும் இந்த பெண்ணை கொல்ல தயார் ஆனோம். ஆனா இடையில புகுந்து நீங்க ஏன் சார் இந்த பெண்ணை காப்பாத்துனீங்க... அதோட எங்களுக்கே எங்களை அடையாளம் தெரியாத மாதிரி அடிச்சு போட்டுட்டு வந்து இருக்கீங்க.. உங்க ப்ளான் தான் என்ன சார்” என்று பேச முடியாமல் இழுத்து இழுத்து கேட்டவனை பார்த்து அழகாக புன்னகைத்தான் ஏகன்.

அடியாட்களின் தலைவன் பேசிய பேச்சை கேட்டு அதிர்ந்துப் போனவள் ஏகனை அடிபட்ட பார்வை பார்த்தாள். அவளின் விழிகளில் தேங்கி இருந்த பொருளை ஒரு கணம் ஆழ்ந்துப் பார்த்தான்.

“நீங்களா?” என்ற பொருளை படித்தவன், அதிர்வுடன் தன்னை பார்த்த குழலியின் கையை எடுத்தது விட்டான்.

அதில் குழலி சுக்கு நூறாய் உடைந்து சிதறிப் போனாள். சடுதியில் உள் இழுக்கும் மூச்சுக்காற்று விசமாய் மாறிப்போனது போல உணர்ந்தாள்.

இல்ல என்று அவளின் ஒரு மனம் கூப்பாடு போட்டாலும் அவன் தன் கையை எடுத்து விட்டதிலே சிதைந்துப் போனாள். விழிகளில் நீர் கோர்க்க தன்னவனை பார்த்து நின்றாள்.

அவளின் விழிகளில் கோர்த்த நீரை ஆழ்ந்துப் பார்த்தவன், அவளுக்கு எந்த சமாதானமும் சொல்லாமல்,  

“தம்பி...” என்று அடியாளின் தோள் மீது கையை போட்டுக் கொண்டு தனக்கு அருகாமையில் அவனை நிப்பாட்டி, விழிகளை மொத்தமும் குழலியிடம் வைத்து,

“இதுக்கு முன்னாடி ஒன்னு இல்ல... அதனால அவளை கொல்ல உங்களுக்கு ஐடியா குடுத்தேன். ஆனா இப்ப ஒன்னு வந்திடுச்சு. அதனால காப்பாத்திட்டேன்” என்றான்.

குழலி “ஞே” என்று முழித்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவனின் பார்வை அவளிடம் ஏதோ சொல்லியது.

விழி எடுக்காமல் அவனை பார்த்தாள். அவளின் மனம் அவனுக்கு சாதகமாக சாய்ந்தது.

“மானங்கெட்ட மனம்” என்று திட்டிக் கொண்டாலும், அவளின் அதிர்வு கொஞ்சம் லேசாக விலகத்தான் செய்தது.

“புரியலையே சார்” தலையை சொரிந்தான் அவன்.

“அது வந்து தம்பி” என்று ஏகன் விளக்கம் சொல்ல வரும் முன்பே,

“டேய் வெண்ணைங்களா...” ஒரு திமிரான குரல் கேட்க, எல்லோரும் திரும்பி பார்த்தார்கள்.

திடகாத்திரமான நாற்பது வயது மதிக்க தக்க ஒருவன் கையில் பளிச்சென்று மின்னும் வாளோடு கண்களில் கொலை வெறியோடு, முகத்தில் ஆக்ரோஷத்தோடு நின்றிருந்தான்.

அவனை கண்டவுடன் அடியாட்கள் எல்லோரும் பம்மி பயந்து நடுங்க, குழலியும் பயந்து நடுங்கிப் போய் ஏகனின் முதுகு புறம் பதுங்கினாள்.

அவன் தான் குழலியின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் காவு வாங்கிய அவளின் தாய் மாமன். சொத்து, பணம், பதவி, அந்தஸ்த்து, மோகம், என இவற்றில் வெறியோடு திரியும் மனித பிறவியில் இருக்கும் அரக்கன்.

“என்ன பண்ண சொன்னா என்னடா பண்ணிட்டு இருக்கீங்க.. இவனை அடிச்சு கொல்லாம வச்சு சம்மந்தம் பேசிட்டு இருக்கீங்க” என்று அந்த காடே அதிர கத்தியவனை பார்த்து,

“அண்ணே.. இவரை போய் கொல்ல சொல்றீங்க? இவரு தான் இந்தத் பெண்ணை கடத்த உதவி பண்ணாரு” என்று அடியாளின் தலைவன் சொல்ல,

“அட குமுட்ட முட்டா பசங்களா... அவளை காப்பத்த வந்தவனே அவன் தான்டா வெண்ணைங்களா.. முதல்ல அவனை போட்டு தள்ளுங்கடா...” என்று வாளை எடுத்து ஏகனின் கழுத்தில் சடுதியில் பாய்ச்சினான் அவன்.

“ஐயோ...” என்று அலறிய குழலியை பார்த்த கொடூரன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவளுக்கு குறி வைத்தான்.

இரண்டு கையிலும் ஆயுதம் ஏந்தி இருந்தவனை கண்டு கொஞ்சமும் பயம் கொள்ளாமல் தினவெடுத்துப் போய் நின்று இருந்த ஏகப்பனை கண்டு மிரண்டுப் போனாள்.

“என்ன பண்றீங்க ஏகா? முதலல் குனிங்க” என்று அவனை தன் புறமாக இழுத்து கீழே குனிய வைக்க முயன்றாள் குழலி.

ஆனால் அவனை அவ்வளவு எளிதாக வளைத்து விட முடியுமா என்ன?

அவள் இழுத்து இழுப்புக்கு போகாமல் வைரம் பாய்ந்த கட்டையாய் நெடு நெடுவென்று நின்றிருந்தான் ஏகப்பன்.

“ஐயோ ஏங்க இப்படி பண்றீங்க?” என்ற நேரம் அவள் மீது துப்பாக்கி குண்டு சர்ரென்று பாய, அவளை ஒரு சுழட்டு சுழற்றி தன் நெஞ்சுக்குள் பதுக்கி வைத்துக் கொண்டவன் அப்படியே தரையில் விழுந்து மிக கடினப்பட்டு ஏறி வந்த காட்டில் மீண்டும் சர்ரென்று உருண்டான்.

அதை எதிர் பார்க்காத அரக்கனின் வாள் மற்றும் துப்பாக்கியின் குறி இரண்டுமே தவறியது. மீண்டும் அவன் வாளை சுழற்றி குறி வைக்கும் முன்பே, இன்னொரு கையால் இருந்த துப்பாக்கியை இருவருக்கும் சேர்த்து குறி வைத்து சுட,

மிக எளிதாக அவனது குறியில் இருந்த நழுவி உருண்டுக் கொண்டு இருந்தான் ஏகன். தன் கைப்பிடியில் குழலியை வைத்துக் கொண்டே உருண்டான் அந்த சரிவில்.

அதுவரை அடியாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க கடுப்பான அவன்,

“டேய் என்ன ம... க்கு டா உங்களுக்கு காசு குடுத்து வளர்த்துட்டு இருக்கேன். இப்படி மரம் போல வேடிக்கை பார்க்கத்தானா.. போய் புடிங்கடா அவங்க ரெண்டு பேரையும்” கத்த,

“இல்லண்ணே ஏற்கனவே காயம் பலமா இருக்கு” என்று தயங்கி தயங்கி சொன்னவனை காலிலே எட்டி ஒரு உதை விட்டவன்,

“என்ன ம... டா மூட்டை மூட்டையா சோத்தை தின்னிங்க.. இப்படி அடி வாங்க தான் கொட்டிக்கிட்டீங்களா.. ஒரு பொட்டச்சியை பிடிக்க துப்பு இல்ல... உங்களுக்கு எதுக்குடா மூஞ்சில மயிறு வேண்டி கிடக்கு.. எல்லாரும் சிரச்சுட்டு வீட்டுக்கு வாங்க என் பொண்டாட்டியோட கிழிஞ்ச புடவை இருக்கு சுத்திட்டு திரிங்கடா” என்று ஆத்திரம் மிகுதியில் கத்தியவன்,

“போய் புடிங்கடான்னா இப்ப தான் வசனம் பேசிட்டு இருக்கீங்க.. அவங்க ரெண்டு பேரையும் புடிக்கலன்னா இங்க ஒருத்தனோட உயிரு கூட மிஞ்சாது.. அத்தனை பேரையும் போட்டு தள்ளி கொளுத்திட்டு போயிட்டே இருப்பேன்” என்று எச்சரித்தவனின் தொனியில் பயந்துப் போய் அனைத்து அடியாட்களும் சரிவில் பாய்ந்து உருண்டு ஏகனையும் குழலியும் தேட ஆரம்பித்தார்கள்.

“ரொம்ப பயமா இருக்குங்க” என்று ஏகனை கட்டிக் கொண்டு உருண்டவளின் முகத்தை தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டவன்,

“நான் இருக்கும் போது எதுக்குடி பயப்படுற?” சுல்லேன்று காய்ந்தான்.

அதில் கோவம் வர,

“அதனால தான் பயமே.. பிராடு ஏகா.. என்னை கடத்த சொல்லி ஐடியா கொடுத்தது இல்லாம இப்ப இவ்வளவு தூரம் அவனுங்களை வர வேற வச்சு இருக்கீங்க” கடுப்படித்தாள்.

“எல்லாம் காரணமா தான்டி.. நீ கொஞ்சம் வாயை மூடிட்டு இரு” என்றவன் அவளை கல் மண் படாதவாறு அணைத்துக் கொண்டு  உருண்டான்.

அவனது கை ஒன்று அவளின் பின்னந்தலையில் பதிந்து இருந்தது.

அவனது அக்கரையில் மனம் கரைந்தவள்,

“லவ் யூ” என்றாள்.

“போடி” என்றவன் ஒரு பெரிய மரத்தை குறி வைத்து உருண்டான்.

“உண்மையாவே லவ் யூ” என்றாள்.

உருண்டபடியே அவளை  பார்த்து முறைத்தவன்,

“அப்புறம் எதுக்குடி அவனை கல்யாணம் பண்ண அவ்வளவு வேகமா போன?” கடுப்படித்தவன் அதற்கு தண்டனையாக அவளின் இதழ்களை கடிக்க வந்தான்.

சட்டென்று தன் முகத்தை விலக்கிக் கொண்டவள்,

“நோ எதுவும் கிடையாது.. நேத்துல இருந்து என்னை தவிக்க விட்டீங்கள்ள.. அதனால உங்களுக்கு எதுவும் தரமாட்டேன். பட்டினியா கிடங்க” என்று சொன்னாள்.

“நான் ஏன்டி பட்டினியா கிடைக்கணும்...” என்றவன், மரத்தை பார்த்து குறி வைத்து உருண்டவன் தன் இலக்கை சரியாக அடைந்தான்.

மரத்தில் மோதி நின்றவன் அவளை அப்படியே அலேக்காக தூக்கி அந்த மரத்தின் பொந்தில் போட்டவன் தானும் உள்ளே ஏறி விழுந்தான்.

அது இருவருக்கும் போதுமானதாய் இருந்தாலும் இடித்து பிடித்துக் கொண்டு இருக்க வேண்டியதாகவே இருந்தது.

முதலில் அவளை நிற்கவைத்து விட்டு தான் முதலில் அமர்ந்தது அதன் பிறகு தன் மடிக்கு அவளை இழுத்துக் கொண்டான்.

அதில் தடுமாறி அவன் மீது பொத்தென்று விழுந்தவள் பின்னால் திரும்பி அவனை முறைத்தாள்.

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று அவன் முகம் பார்த்து கேட்டவளின் இதழ்களை பாராபட்சம் பார்க்காமல் இழுத்து கவ்விக் கொண்டான்.

அதிர்ந்துப் போய் அவனை பார்க்க,

“நான் ஏன்டி பட்டினியா இருக்கணும்” கண் சிமிட்டி சொன்னவன் தனக்கு உணவாக அவளின் இதழ்களை உண்ண ஆரம்பித்தான்.

சுற்றிலும் சூழ்ந்து இருந்த கலவரத்தை கருத்தில் கொள்ளாமல் இப்ப தான் சின்ன பிள்ளை போல மறுத்ததை செய்தே ஆகணும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்தவனை எதை கொண்டு அடிப்பது என்று தெரியாமல் தவித்துப் போனாள் பெண்ணவள்.

“நினைச்சா நினச்ச உடனே சாதிச்சிடனும்... எப்படி தான் இவரை வீட்டுல வச்சு இவரை பெத்தவங்க சமாளிச்சாங்களோ...” எண்ணியவளின் இடையை இறுக்கிப் பிடித்து அவளின் கவனத்தை தன் மீது வைக்க வைத்தான்.

அதில் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு. ஆனாலும் நேரம் காலம் பார்க்காமல் இப்படி இருப்பது உள்ளுக்குள் கொஞ்சம் கலவரம் மூலத்தான் செய்தது.

பெருமூச்சு விட்டு அவளிடம் இருந்து பிரிந்தவன், அவளின் முகத்தில் தேங்கி இருந்த கலவரத்தை பார்த்து,

“பயமா இருக்கா?” என்று கேட்டான். அவள் ஒன்றும் சொல்லமால் அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். அவன் தான் சகலம் என்று.

“பதில் சொல்லுடி” உலுக்கினான் அவளை.

“தெரியல.. நீங்க எல்லாத்தையும் பார்த்துப்பீங்கன்னு தோணுது” என்றாள். அதன் பிறகு அவன் எதுவும் கேட்கவில்லை.

அடியாட்களின் காலடி சத்தம் வெகு அருகில் கேட்க, பயத்துடன் அவனை பார்த்தாள் குழலி.

Loading spinner
Quote
Topic starter Posted : June 5, 2025 9:31 am
(@gowri)
Estimable Member

நா கூட ஷாக் ஆகிட்டேன்...

ஏகா ராக்ஸ் 

வில்லன் ஷாக்ஸ் 🤣🤣🤣🤣🤣🤣

Loading spinner
ReplyQuote
Posted : June 5, 2025 3:52 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top