“கோவத்தை காட்டாதீங்க... நான் ஒரு முறை முயற்சி செய்யிறேன்...” என்றவள் கதையின் நாயகனுக்கு சதியே சொல்லி தர முயன்றாள். அவனோடு ஆடும் நாயகி சரியாக புரிந்துக்கொண்டு ஆடிவிட்டாள். இவன் தான் படுத்தி எடுத்தான்.
அசிஸ்டென்ட்டை விலக்கி நிறுத்திவிட்டு தானே களத்தில் இறங்கினாள்.
அவள் வந்தவுடன் “ஹாய் பியூட்டி...” என்று அவன் கைகுலுக்க வர, சதி திரும்பி குருவை பார்த்தாள்.
ஏற்கனவே அவன் கொதித்துக்கொண்டு இருந்தான். இதுல இது வேறையா... நினைத்தவள்
“காலை கொஞ்சமா பெண்ட் பண்ணி இடுப்பை லேசா அசைக்க்கணும்... உங்க அசைவுக்கு ஏத்த மாதிரி தான் ஹீரோயின் பண்ண முடியும். சோ நீங்க கவனமா ஆடனும்.” என்று விளக்கம் சொல்லியபடியே அவனுடைய ஸ்டெப்பை இவள் அவனுக்கு ஆடி காட்ட,
“எப்படி இப்படி ஹிப்பை வளைக்கிற பியூட்டி...” என்று அவளது இடையை தொட வந்தான். அதற்குள் சட்டென்று குரு வந்து அவனது கையை பிடித்துவிட்டான் மிக அழுத்தமாக.
சதிக்கே இது ஷாக் தான். பெரும்பாலும் அவளை யாரும் தொட மாட்டார்கள். தொட விட்டது இல்லை குரு. அப்படி இருக்கும் போது இவனது இந்த செயல் சட்டென்று ஒரு பதட்டத்தை கொடுத்தது...
சினி பீல்டில் கிட்டத்தட்ட குரு பத்து வருடங்களாக இருக்கிறான்... அவனுக்கு அசிஸ்ட்டேன்ட்டாக சதியும் ஏழு வருடங்களாக இருக்கிறாள்.
அதனால் சினி வேல்டில் ஓரளவு அனைத்து முன்னணி நடிகை நடிகர்களுக்கும் கோரியோ பண்ணி நல்ல பழக்கத்தில் இருந்தார்கள்.
அதனாலே சதிக்கு எப்பொழுதும் எங்கு சென்றாலும் பாதுகாப்பு தான். ஏன் பல ப்ரொடியுசர் டைரெக்டர் என எல்லாருமே அவளுக்கு தெரிந்தவர்கள் தான். அதனால் இன்று வரை அவளது பாதுகாப்புக்கு பங்கம் வந்தது கிடையாது.
இவளே பல பேருக்கு சொல்லி கொடுத்து இருக்கிறாள் தான்.. தொட்டு ஆடி இருக்கிறாள் தான் ஆனால் இப்படி உள் நோக்கம் வைத்து யாரும் அவளை தொட்டது கிடையாது.
அப்படி இருக்கும் போது இவன் பண்ணிய செயலை கண்டு விருட்டென்று குருவை தான் பார்த்தாள்.
குருவின் கண்களில் அவ்வளவு கோவம் மிளிர்ந்தது... அங்கு சூட் செய்துக்கொண்டு இருந்த அத்தனை பேருக்குமே அங்கு நடந்த இந்த சின்ன விஷயம் கண்ணில் பட்டது. அடுத்து குரு என்ன செய்வானோ என்று ப்ரடியுசருக்கே பயம் வந்தது...
ஏனெனில் அவருக்கு குருவின் இன்னொரு முகம் நன்கு தெரியும். அதனாலே தானே இடையிட்டு இரு பக்கமும் சரி செய்ய முன்வந்தார்.
“என்ன சார் நீங்க இத்தனை டேக் எடுத்தும் ஒழுங்கா ஆடாம சொல்லி குடுக்க வந்த மேடம் கிட்ட இப்படி நடந்துக்குறீங்க... ஒழுங்கா ஆட்டத்துல கவனம் வைங்க.. அதை விட்டுட்டு சும்மா பொம்பளை பிள்ளைய வம்பு இழுத்துக்கிட்டு...” என்று நடிகரை திட்டியவர்,
“குரு சார் நீங்க சதியை கூட்டிட்டு கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடுங்க. உங்க அசிஸ்ட்டேன்டை வச்சு முதல்ல இவருக்கு ஸ்டேப் சொல்லி குடுக்க சொல்றேன்... ஒழுங்கா போட்டத்துக்கு பிறகு நீங்க வாங்க... அப்போ இன்னொரு முறை சரி செய்துடலாம்..” என்று சொல்ல, டெரைக்டரும் அடித்து பிடித்துக்கொண்டு வந்து,
“குரு நீ போ நான் பார்த்துக்குறேன்...” என்று சொல்லி அவனை சதியோடு அனுப்பி வைத்துவிட்டு நடிகரிடம் எரிந்து விழுந்தார்.
“இது தான் உனக்கு அஞ்சாவது ஹிட் படம்... அதும் தமிழ்ல மட்டும் தான். ஆனா குரு அப்படி கிடையாது... இந்தியா முழுவதும், ஏன் ஆசிய கண்டத்தின் மிக பெரிய கொரியோக்ராபர் அவரு. அவருக்கிட்ட போய் உன் சில்லி தனமான வேலையை காண்பிக்கத... எத்தனை ரியாலிட்டி சோவோட ஹெட் தெரியுமா அவரு... இது டான்ஸ் சம்மந்தப்பட்ட படம்... முழுக்க முழுக்க இதுல அவர் உதவி இல்லன்னா படம் இந்த அளவுக்கு வந்து இருக்க முடியாது... அதனால் யாருக்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு புரிஞ்சிக்கிட்டு நடந்துக்க அசோக்... அது தான் உன் எதிர் காலத்துக்கு நல்லது... அதோட இல்லாம இவரோட எனக்கு இது இருபதாவது படம்... சோ...” என்றவர், மேலும்
“இது தான் கடைசி முறை... ஒழுங்கா கவனமா ஆட பாரு... இல்லன்னா உன்னை தூக்கிட்டு இன்னொரு ஆளை போட்டு படம் பண்ற மாதிரி ஆயிடும்...” சுல்லேன்று பேசிவிட்டு அவனது ரிகசலை கவனிக்க ஆரம்பித்தார் அந்த படத்தின் டைரெக்டர்.
இதற்க்கு பின் இப்படி ஒரு பின்புலம் இருக்கும் என்று எண்ணியிராதவன் திகைத்து தான் போனான். மிக பெரிய லெஜென்ட் குருவே வந்து அவனுக்கு டான்ஸ் மாஸ்டராய் வர அவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஒரு மாதிரி பரவசமாய் இருந்தது.
ஆனால் அடுத்த கொஞ்ச நேரத்திலே அது மமதையாகி போனது அவனுக்கு. அதனால் வேண்டுமென்றே தன்னுடைய ஆட்டிட்யூடை காட்ட ஆரம்பித்தான்.
குரு அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நிதானமாக சொல்லி தர சொல்லி தர, அசோக்கிருக்கு கர்வமாய் இருந்தது..
மிக பெரிய டான்ஸ் மாஸ்டர் எனக்கு கொரியோக்ராபர். ஆஹா என்ன ஒரு வாய்ப்பு... இதை பயன் படுத்திக்கணுமே என்று யோசித்தவன் குருவை தனக்கு கீழாக எண்ண தொடங்கினான். அதன் படி அவன் நடந்துக்கொள்ளவும் அனைவரும் டென்சன் ஆகிவிட்டார்கள்.
கூட இருந்த உதவி டெரைக்டர்களுக்கு கூட அவனது செயல் கோவத்தை கொடுத்தது... சதி அவர்களுக்கு எல்லாம் தங்கை மாதிரி... அவர்களுக்கு பல உதவிகளை செய்துக்கொண்டு இருப்பாள்.
அதுவும் வெளிநாட்டு படபிடிப்பு என்றால் குறிப்பிட்ட மெம்பர்ஸ் தான் போவார்கள். அந்த சமயம் அதிக உதவி தேவைப்படும் உதவி இயக்குனர்களுக்கு. அப்பொழுது இன்முகத்தோடு உதவி செய்வாள்.
பெரும்பாலும் குருவே டான்ஸ் சொல்லி தந்து விடுவான் ஹீரோ ஹீரோயின்களுக்கு... ஜோடியாக ஆடும்பொழுது மட்டும் தான் குருவுக்கு இவள் தேவை படுவாள்.
மற்றைய நேரம் பொழுது போக்குவது எல்லாமே இந்த உதவி இயக்குனர்கலோடு தான். கிட்டத்தட்ட இவர்களோடு பல படம் பண்ணியிருந்ததால் பெரும்பாலும் நண்பர்களாகி விட்டார்கள் அனைவரும்.
அப்படி பட்டவர்களின் மத்தியில் சதியிடம் சேட்டை செய்தால் அனைவரும் சும்மாவா விடுவார்கள். தங்களது நேரம் வரும் வரை காத்திருந்து செய்ய ஆரம்பித்தார்கள்.
அதென்னவோ சதியின் மீது அவ்வளவு பிரியம் அவர்களுக்கு...
குரு எதிலும் கலந்துக்கொள்ள மாட்டான் என்றாலும் சதிக்கு தடை விதிக்க மாட்டான். ஆனால் கண் பார்வையை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டான்.
குருவின் கோவமான நேரங்களில் பல நேரம் டெரைக்டர், ப்ரோடியுசருக்கு இவள் தான் பாலமாய் இருந்து குருவிடம் விசயத்தை சொல்லி செயல்களை சரிவர செய்யுமாறு நடத்திக்காட்டுவாள்.
அதனாலே குருவின் அளவுக்கு சதியை அனைவருமே மதிப்பார்கள்.
சதிக்கே தனியாக பல படவாய்ப்புகள் வந்து இருக்கிறது... ஆனால் அவள் குரு வந்தாள் தான் வருவேன் என்று சொல்லிவிட்டுவாள். அதென்னவோ அவனை விடுத்து அவளுக்கான ஒரு அங்கீகாரம் அவள் விரும்பியதே இல்லை.
எப்பொழுதும் அவன் பின்னாடி தான் நிற்பாள். அவனை முன்னாள் விட்டு பின்னிருந்து ரசிப்பாள். ஆனால் அவளுக்கு தெரியாமலே அவளின் பின் புறமிருந்து இயக்குவது குரு தான்.
எந்த செயலாக இருந்தாலும் சதியின் பின்னாடி குரு தான் நிற்பான். இருவரிடையே ஒரு கெமிஸ்ட்ரி எப்பொழுதும் இருக்கும். அதும் நடனத்தை பொறுத்த வரை அது இன்னும் ஒரு படி மேலே தான்.
எந்த முன்னறிவிப்பு இல்லாமல் அவன் கண்ணாலே பாடம் எடுப்பான். அதை தவற விடாமல் பற்றி அழகாக அவனுக்கு ஈடு கொடுத்து ஆடுவாள். எத்தனையோ மேடைகளில் இருவரும் ஆடி இருக்கிறார்கள்.. உடல் இருவருக்கும் ரப்பராய் வளையும். சில கடினமான நடனங்களை கூட மிக எளிதாக ஆடிவிடுவாள் சதி... அதனாலே குருவின் தேர்வு எப்பொழுதும் சதி தான்.
எங்கு சென்றாலும் உடன் போயே ஆகவேண்டும் சதி. இல்லையென்றால் அத்தனையும் அவனுக்கு சொதப்பும்... அதென்னவோ அப்படியே பழகிவிட்டது.
இன்று அந்த நடிகரின் கையை வலிக்க பிடித்து அனல் கக்கும் விழிகளால் அவனை ஒரு பார்வை பார்த்த குருவின் சினத்தில் உயிரின் அடிவரை பயம் வேர்விட்டது அவனுக்கு..
‘தெரியாமல் காலை விட்டுவிட்டமோ’ என்று அஞ்சி நடுங்கியே போனான் ஏனெனில் மொத்த யூனிட்டும் அவனை வில்லனை பார்த்து வைப்பது போல பார்த்து வைத்தது... கூடவே எப்பொழுது அடிக்கலாம் என்ற எண்ணத்திலே பார்த்து வைக்க பயந்து தான் வந்தது அவனுக்கு.
குரு சதியை அழைத்து சென்ற நேரம் அவளது குழந்தையும் வர சட்டென்று அவளது மனம் மாற தொடங்கியது...
அதை பெரிய விசயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவளை சுற்றி இருந்தவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொண்டு அவளுக்காக நின்றதை கண்ட குருவுக்கு மனம் நிம்மதி அடைந்தது... அதனாலே குழந்தையை அவளிடமிருந்து அவன் பறிக்கவில்லை.
அசோக் ஓரளவு சரியாக ஆட தொடங்கினான் ஒரு மணி நேர பயிற்சிக்கு பிறகு.. அதன் பின் குரு மட்டுமே அவனுக்கு சொல்லி தர நொந்தே போனான். அதுவும் குருவின் தீ விழியில் எறிந்த சினத்தில் வெந்து தான் போனான்.
ஒருவழியாய் அன்றைய பொழுதும் நகர.. இரவு வெள்ளி முளைத்த பின்பே அனைவரும் வீடு திரும்பினார்கள்.
குழந்தை மெல்ல மெல்ல தாயின் நறுமணத்திற்கு தோற்றத்திற்கு பழக தொடங்கியது...
அதனாலே அடுத்து வந்த இரவு பொழுதுகள் குருவிற்கு சோதனையாய் மாறியது...
அவனது மார்பில் படுத்து துயில் கொண்ட சின்ன குமரன் தந்தையின் முரட்டு நெஞ்சில் படர்ந்து இருந்த குத்தும் மயிரையிலையில் தூக்கம் கேட்டான்.
அவனுக்கு தன் தாயின் மிருதுவான பட்டு போல இருக்கும் நெஞ்சனை வேண்டும் என்பது போல இரவு நேரம் நெடுங்குரலேடுத்து அழ தொடங்கினான்...
அவனது அழுகையில் திகைத்து எழுந்தவன் பசிக்கு தான் அழுகிறான் என்று சதியிடம் கொடுத்தான் பிள்ளையை...
அவளும் வாங்கி கொண்டு பசியாற்ற, அவனோ குடிக்காமல் வீரிட்டு அழ தொடங்கினான்...
அவளுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே நின்ற குருவை பார்த்தாள்.
“ஏன் என்ன ஆச்சு...” என்று பதட்டத்துடன் உள்ளே வந்தான்.
“குடிக்க மாட்டிக்கிறான்...” சொல்லும் போதே கண்கள் இரண்டும் கலங்கிக்கொண்டு வந்தது அவளுக்கு.
“அதுக்கெதுக்கு அழற...” என்றவன் தன் மகனை போட்டு தட்டி கொடுக்க, மேலும் அழ தொடங்கினான்.
“என்ன டா ராஜா... என்ன செய்யிது... அப்பாடா... பாரு அப்பா தான் உன்னை தூக்கி வச்சு இருக்கேன்... அழாதடா தங்கம்...” என்று மாறி மாறி அவன் சமாதனம் செய்ததை கண்ட சதிக்கு கண்கள் இரண்டும் இன்னும் கலங்கிக்கொண்டு வந்தது...
அதை அவனறியாமல் துடைத்து விட, குருவின் கண்களுக்கு எதுவும் தப்பவில்லை. ஆனாலும் அதை ஒரு பொருட்டாக கூட அவன் எடுத்துக்கொள்ளவில்லை...
அது இன்னும் சதிக்கு வலியை கொடுத்தது.
அதன் பின் குழந்தை இன்னும் அழ, அவனுக்கு அப்பொழுது தான் உறைத்தது...
“நீ உன் தோள்ள தூக்கி போட்டு பாரு..” என்று அவளிடம் குடுக்க, கை மாறியவுடன் தாயின் தோளில் கிடைத்த மென்மையை உணர்ந்தவுடன் சத்தமில்லாமல் அப்படியே தூங்க தொடங்கினான்.
அவனது இந்த செயலில் மிகவும் அடிபட்டு போனான் குரு... இத்தனை நாள் காணாத தாயை வந்த இரண்டு நாட்களுக்குள் தன்னிடம் இழுத்து வைக்க முனையும் குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினான்.
பெரியவர்கள் என்றால் இழுத்து சண்டை போடலாம். ஆனால் கை பிள்ளையிடம் என்னத்தை செய்வது... என்று வேதனை கொண்டவன் விருட்டென்று அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான்.
‘உனக்கும் நான் வேண்டாமாடா...’ எண்ணியபடியே படுக்கையில் வந்து விழுந்தவனுக்கு விழியோரம் துளி நீர் கசிந்ததோ என்னவோ... மனம் முழுக்க அவ்வளவு வேதனையாய் இருந்தது.
‘இனி உன்கிட்டயும் தள்ளியே இருக்க பழகிக்கிறேன்... அப்போ தான் நீ பிரியும் போது கூட எனக்கு அதிகமா வலிக்காது...’ எண்ணியவன் இரவு முழுக்க தூங்காமல் கிடந்தான்.
குழந்தை நன்கு தூங்கியவுடன் மெல்ல எழுந்து அவனது அறைக்குள் நுழைந்தாள் சதி... அவனது ஏமாற்றம் புரிய அவளுக்கும் கண்களில் கண்ணீர் சூழ்ந்தது...
அதனால் குழந்தையை அவனிடமே விட முடிவெடுத்தவள் அவனது அறைக்குள் நுழைந்து அவனருகில் குழந்தையை போட வர,
“வேண்டாம்.. இனி அவன நீயே பாத்துக்க...” என்றவன் போர்வையை கொண்டு முகத்தை மூடிக்கொண்டான் இருவரையும் பார்க்க பிடிக்காமல்....
அச்சோ....யாரு குழந்தைனே தெரியல