Notifications
Clear all

அத்தியாயம் 2

 
Admin
(@ramya-devi)
Member Admin

சிறிது நேரம் கழித்து உண்டுவிட்டு மூவரும் படுக்க சென்றார்கள். படுத்த உடனே சதி தூங்கிவிட்டாள். அவ்வளவு களைப்பு அவளுக்கு...

அவள் தூங்கி சிறிது நேரத்திலே சேகர் வந்து அவளை எட்டி பார்த்தார்... மனமெல்லாம் கனத்து போனது...

‘உனக்கு நான் நியாயமே செய்யல டா கண்ணா... அப்பாவை நீ மன்னிச்சாலும் என்னால என்னை மன்னிக்க முடியாது டா...’ கலங்கி கரைந்தவரை தொட்டு இயல்புக்கு கொண்டுவர முனைந்தார் ஆனந்தி.

“என்னங்க இது நடந்து போனதையே நினைச்சுக்கிட்டு...”

“இல்ல ஆனந்தி, என் மக தனி கட்டையா நிக்கிறத பார்த்தா மனசுக்கு அவ்வளவு வேதனையா இருக்கு...”

“அதுக்குன்னு இப்படி அர்த்த சாமத்துல புலம்பிக்கிட்டு இருந்தா ஆச்சா...”

“வேற என்னை என்ன செய்ய சொல்ற... எது செஞ்சாலும் உன் மக குறுக்க நிக்கிறா... எதுவும் செய்ய கூடாதுன்னு...” பெருமூச்சு விட்டார்.

“ம்கும்... அவ தப்பு செய்யும் போது மட்டும் என் மக... மத்த நேரம் எல்லாம் உங்க மகளாக்கும்...” நொடித்துக்கொண்டவர்,

“அதது நடக்க வேண்டிய நேரத்துல கண்டிப்பா நடக்கும்... நீங்க எதுக்கும் புலம்பாம எல்லாத்தையும் கடவுள் மேல போட்டுட்டு தூங்க வாங்க...”

“என்னால இப்படி நிச்சந்தையா இருக்க முடியல ஆனந்தி...”

“ப்ச்... சொன்னா நீங்க எல்லாம் கேக்குற இனமே கிடையாது.. எப்படியோ போங்க... கால் வலிக்க நின்னுட்டு அப்புறம் வந்து தைலத்தை தேயி, ஒத்தடம் குடுன்னு வந்து நின்னீங்க நான் மனுசியா இருக்க மாட்டேன்...” சொல்லிவிட்டு தூங்க சென்றுவிட்டார் ஆனந்தி..

அவர் சொல்வதும் சரிதான்... கால் கடுக்க இரவு முழுவதும் அறைக்கு வெளியில் நின்றுக்கொண்டே தன் மகள் சதி தூங்குவதை பார்த்துக்கொண்டே இருப்பவர், விடிந்தவுடன் ஆனந்தியை படுத்தி எடுக்க ஆரம்பித்து விடுவார்..

கால் வலிக்குது பிடுச்சி விடு, தைலம் தேயி, ஒத்தடம குடு... ன்னு.

அதுக்காகவே ஒவ்வொரு இரவும் ஆனந்தி அவரை அழைப்பார். ஆனால் சேகர் வரவே மாட்டார்... ஆனாலும் விடிந்தவுடன் அவர் வந்து புலம்பினால் மறுக்காமல் ஒத்தடமோ தைலமோ போட்டு தேய்த்து விடுவார்.

இது ஒரு அழகான குடும்பம்...

அன்றைக்கும் அப்படி தான். விடியும் வரை நின்று தன் மகளை பார்த்துவிட்டு அவள் விழிக்கும் போது வேகமாய் அவரது அறைக்கு சென்று படுத்துவிட்டார்...

அதெதுவும் தெரியாமல் நன்றாக தூங்கி எழுந்த சதி குளித்துவிட்டு, நிதானமாக தன் அன்னைக்கு அடுப்படியில் உதவி செய்துவிட்டு கிளம்பி கலைக்கூடத்திற்கு சென்றாள்.

அங்கே குரு வந்து தன்னுடைய தனிப்பட்ட விசாலமான கூடத்தில் ஆடிக்கொண்டு இருந்தான்.

கதவை திறந்து உள்ளே வந்தாள் குரு இருக்கும் அரங்கிற்கு.. ஆம் அது மிக பெரிய அரங்கு தான்... அவனுடைய ஒத்திகைகள் எல்லாம் அவன் இங்கு தான் செய்வான். அவனையும் சதியையும் தவிர வேறு யாருக்கும் இங்கு அனுமதி கிடையாது.

அந்த அரங்கம் முழுவதும் வெறுமை தான்... மூன்று பக்கமும் சுவர் முழுக்க கண்ணாடி தான்... ஒரு பக்கம் மட்டும் அரையடிக்கு ஒரு பெரிய மேடை போட்டு அதில் இரு பக்கமும் தூண்கள் வைத்து நடுவில் மிக பெரிய நடராஜர் வெண்கல சிலை வீற்றிருந்தது...

அந்த நடராஜன் மிக பெரிய மாலை சூடி இருந்தார். அந்த மாலையை ஒண்ணு குரு போடுவான், இல்லையென்றால் சதி போடுவாள். அதை தவிர வேறு யாருக்கும் அதை செய்ய அனுமதி இல்லை...

குருவின் இருக்கமான குணத்துக்காகவே யாரும் அவனிடம் நெருங்கவே மாட்டார்கள். அவனிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் சதியின் மூலம் தான் தகவல் செல்லும்...

யாரிடமும் பேசவும் மாட்டான் குரு... முக்கியமாக சதியிடமே தேவையில்லாமல் ஒரு வார்த்தை கூட பேசமாட்டான்...

ஏனோ அவனுக்கு யாரிடமும் ஒன்று சேர முடியாது... அவனுக்கு எல்லாமே அவனது நடனம் தான்... அந்த நடனத்தில் முழுவதுமாக தன்னை இழந்து போவான்....

அவனது உயிர் மூச்சு நடனம் தான்... காலில் சலங்கை கட்டிவிட்டால் அவ்வளவு தான் அவனது இன்னொரு முகத்தை காணலாம்...

எல்லா நடனங்களும் அவனுக்கு அத்துபடி தான்... ஆனால் பாரத நாட்டியமும், ருத்திர தாண்டவமும் என்று வந்துவிட்டால் அந்த நடனம் முடிகிற வரை அவன் பார்க்கிறவர்களுக்கு சிவனாகவே தெரிவான்... நடனத்தையும் அவனையும் பிரிக்கவே முடியாது...

அந்த அளவு உணர்வு பூர்வமாக தன்னையே மறந்து இறையோடு ஒன்றி போய் ஆடுவான்... அவனது ருத்ர தாண்டவம் மிகவும் அரிது... அது காண கிடைத்தால் அவர்கள் தான் இவ்வுலகின் பாக்கியவான்கள் என்று கருதலாம்...

அந்த அளவுக்கு ஆடுவான்... காற்றும் நீரும் பறக்கும் பறவையும் கூட அப்படியே நின்றுவிடும் அவனது ஆட்டத்தில்...

இப்பொழுது ஆடும் ஆட்டம் வெஸ்டர்ன்.. அதை பார்த்த படியே வந்து அவன் முன் நின்றாள் சதி...

அவள் வந்தது தெரிந்தும் தன் ஆட்டத்தை நிறுத்தாமல்

“கேரளா ஆக்ட்டர் வெடிங் புக் ஆகி இருக்கு... கண்டிப்பா நான் தான் பண்ணனுமாம்... சோ நாளையில இருந்து ரிகசல் க்கு வருவாங்க... ரெண்டு செட்... நைட் ஒண்ணு, மார்னிங் ஒண்ணு. ரெண்டுக்கும் தீம் செட் பண்ணனும்... உன் கோச்சிங்கை ராக்கி கிட்ட மாத்தி குடுத்துட்டு வா...” என்றான்.

“அவனோட பாட்டி இறந்துட்டாங்க... பதினாறாம் காரியத்திற்கு...” சொல்லி முடிக்கும் முன்பே

“வாட் தெ ஹெல்... இதென்ன பள்ளிக்கூடமா...? சில்லியான ரீசென் சொல்லிட்டு இருக்க...” எரிந்து விழுந்தான்.

“முன்பே சொன்னது தான்...” தயக்கத்துடன் சொன்னவளை கோவமாக முறைத்தவன்,

“எனக்கு தெரியாது ஒழுங்கா டிஸ்கசன்க்கு வர்ற..” என்றவன் சட்டென்று முட்டியில் அமர்ந்து சுழன்று சுழன்று ஆட, வியந்து போனாள்.

பரதநாட்டியத்துக்கு தாவியவனிடமிருந்து கண்களை விலக்க முடியாமல் பே என்று பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவளின் அசையாத தன்மையை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவன் முகத்தில் எரிச்சல் மண்டியது...

“இங்க என்ன வாயை பிளந்து பார்த்துக்கிட்டு இருக்க... மூவ்...” என்று கத்தினான். அவனது அந்த கத்தலில் சட்டென்று கண்கள் கலங்கிவிட முகத்தை அவனுக்கு காட்டாமல் வேகமாய் நடரானின் முன் குனிந்து அவரின் காலை தொட்டு கும்பிட்டுவிட்டு ஓடிவிட்டாள்.

போகும் அவளை திரும்பி கூட பாராமல் தன் பயிற்ச்சியில் இருந்தான் குரு...

வெளியே வந்தவள் ஒரு கணம் மட்டுமே கலங்கி நின்றாள். அதன் பின் தன்னை சமாளித்துக்கொண்டு முதல் வகுப்பை மட்டும் அவளே முன் நின்று பயிற்சி கொடுத்தாள். அதன் பின்பு சீனியர் மாணவன் ஒருவனிடம் அடுத்த வகுப்புகளை எடுக்க சொல்லிவிட்டு குருவை தேடி சென்றாள்.

குரு இன்னும் அவனது பயிற்சி அரங்கில் தான் இருந்தான். இவள் வரும் நேரம் ஆடிக்கொண்டு தான் இருந்தான்.

வந்தவளை எதுவும் சொல்லாமல் தன் ஆட்டத்தில் சேர்த்து விட... ஒரு நொடி தடுமாற்றம் அடைந்தவள் அதன் பின் அவன் பிடிக்கும் முத்திரையை வைத்து அவளும் அவனோடு அபிநயம் பிடிக்க ஆரம்பித்தாள்... இருவரின் உருவமும் மூன்று பக்க கண்ணாடியில் பட்டு நிறைய பிம்பங்களை காட்டி கொடுத்தது... அதில் எல்லாம் மனம் செல்லாமல், அபிநய வகையிலே இருவரது கவனமும் குவிந்து இருந்தது...

குரு முருகனின் அபிநயத்தை எடுக்க, சதி வள்ளியின் அபிநயத்தை பிடித்தாள்.... யானை வந்து அவளை மிரட்டுவது போல குரு செய்துவிட்டு, கிழவனின் செயல் போலவும் உடனடியாக குரு செய்ய, வள்ளியின் அபிநயத்தை எடுத்து சதி அவனின் பின் பக்கம் வந்து ஒளிந்தாள்...

அவள் பின் பக்கம்வந்து ஒளிய, குரு அவனை தாவி அணைத்தான்... அதில் இருவரது நிலையம் சொல்லில் அடங்கா நிலையில் இருந்தது என்றாலும், அடுத்த நொடியில் மீட்டுக்கொண்டார்கள்.

இப்படியே அபிநய வகைகளை ஓரளவு ரிகசல் பார்த்தவர்கள், தீம் பற்றியும் யோசித்து இப்படி இருந்தா பெட்டரா இருக்கும் என்று ஆலோசித்து அதன் படி போக், வெஸ்டர்ன் இரண்டையும் கலந்து கொடுக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.

அதன் படி சில நடனங்களை மூன்று நிமிடம் ஆடுவது போல நான்கு செட் ரெடி பண்ணி வைத்தார்கள்.

“நாளைக்கு இது ரெடியனா ஓகே... இல்லன்னா வேற கொரிய பார்த்துக்க சொல்லிடு...” என்றான்..

“கேரளாவுல முன்னனியில இருக்குற நடிகர்...”

“சோ வாட்...”

“ப்ச்... ஒரு நண்பர் ன்ற முறையில நீங்க பண்ணலாமே...” என்றவளை முறைத்து பார்த்தான்.

“இதுவரை நண்பன்னு சொல்லி ஏமாத்துன வரை போதும்...” பட்டென்று வார்த்தையை விட்டுவிட்டான் குரு...

அதில் பலமாக அடிவாங்கியவள், சட்டென்று அங்கிருந்து செல்ல முயன்றாள்... வெறும் முயற்சி மட்டுமே... அதற்குள் அவளது கையை பற்றி நடனமாட தொடங்கினான்...

அதுவும் ருத்திர தாண்டவம்... வேகமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்...

“ம்ம்ம்ம்....” என்ற உறுமல் மட்டுமே அவனிடமிருந்து வெளிப்பட்டது... கூடவே சிவனின் உடுக்கை சத்தத்தை அவனது இன்னொரு கரம் இயக்க... அந்த அதித சத்தமும், அவனது ஆங்கார ஆட்டமும் சதிக்குள் பயத்தை கொடுக்க, அவளையும் அறியாமல் அவளது கால்கள் குருவின் முத்திரைக்குள் நுழைந்தது...

சிவனும் பார்வதியும் நேரடியாக ருத்ர தாண்டவம் ஆடினால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது... இன்று சதிக்கு பரதநாட்டிய வகுப்பு இருந்ததால் அவள் புடவையில் வந்து இருந்தாள்.. தலை குளித்து நீண்ட சடையாக கூந்தலை போட்டு இருந்தாள்...

குரு ஆடிக்கொண்டே அவளது கூந்தலை அவிழ்த்து விட, நாட்டியத்துக்கு ஏற்றவாறு அவளது கூந்தல் விரிந்து ஆட தொடங்கியது...

கூடவே காலில் இருந்த சலங்கை இன்னும் அழகை கூட்டி கொடுக்க... வாவ்... என்கிற நிலை தான்...

அதில் இன்னும் சிவனுக்கே உரிய தோரணையோடு, குரு முறுக்கு எரிய வெற்று உடம்போடு, காலில் கட்டிய சலங்கியுடன், கழுத்தில் எப்பொழுதும் அணியும் ரூதிராட்ச்சை இருந்தது பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது...

குருவும் தோள் வரை இருந்த கூந்தலை வாரி இருந்ததை அவிழ்துவிட்டு ஆடியபோது கண்களை அவர்களிடமிருந்து எடுக்கவே முடியாதது போல இருந்தது...

அவனுக்கு கோவம் வந்துவிட்டால் அது ருத்திர தாண்டவத்தில் தான் முடியும்...

இப்பொழுதும் அதே கோவம் பெருக்கெடுக்க தன் கைவளைவில் சதியை நிறுத்தி படாத பாடு படுத்தி எடுத்தான்...

இல்லாத முத்திரையை எல்லாம் எடுத்து அவளை சிரமப்பட வைத்தான்... கையில் அணிந்து இருந்த கண்ணாடி வளையல்களை நாட்டியத்தின் போது குரு வலுவாக பிடித்துவிட, அவனது கைபட்டு ஒரு கையிலிருந்த அத்தனை வளையல்களும் உடைந்து சிதறியது அந்த அரங்கம் முழுவதும்...

பரதநாட்டியம் ஆடுவதற்க்காவே அவள் அன்று கை நிறைய வளையல்களை போட்டுக்கொண்டு வந்து இருந்தாள். அது குருவின் பகைக்கு இலக்கு ஆக... மொத்தமும் உடைந்து போனது...

அதை கூட கண்டு கொள்ளாமல் குரு தொடர்ந்து ஆட, சதியால் ஆட முடியவில்லை... கால்களை உடைந்த கண்ணாடி வளையல் குத்தியிருந்தது..

அவளது தேக்கம் கண்டு இன்னும் முரண்டு பண்ணியவன், அவளை சுழற்றிக்கொண்டே,

“வலியை பார்த்தா நாட்டியம் கிடையாது... இது தான் நாட்டியத்தின் முதல் பாடம்...”

என்றவன் ‘நீயெல்லாம் என்ன நடன ஆசிரியர்...’ என்பதை சொல்லாமல் சொல்லி காட்டியவனை கண்டு வீம்பு வர, காலில் குத்திய கண்ணாடி வளையல்களை சிறிதும் கண்டு கொள்ளாமல் மனதை ஒரு முகப்படுத்திக்கொண்டு அவனுக்கு ஈடு கொடுத்து ஆட ஆரம்பித்தாள்.

காற்றில் சதியின் கூந்தல் அலை அலையாக பரவி சக்தி தேவியின் முழு அவதாரமாய் நின்றாள்...

குருவும் அந்த பரந்தாமன் பரமகுரு போலவே இருந்தான் உக்கிர மூர்த்தியாய்... காற்றில் அவன் குழல்கள் விரிந்து இருந்த தோற்றத்தில்.

கோவமாய் ருத்திர தாண்டவம் ஆடுகிரவனுக்கும், கடமையே என்று ருத்திர தாண்டவம் ஆடுகிரவளுக்கு ஏகப்பட்ட வித்யாசம் இருந்தது...

அதை சுவரில் பதித்த கண்ணாடி வழியே காட்டி சொன்னவன் ஏளனமாய் சிரித்தான்...

அவனது ஏளன சிரிப்பு எதுக்கு என்பது புரிய மல்லுக்கட்டிக்கொண்டு தன் மொத்த திறமையையும் அதில் காட்டி அவனுக்கு முழுதாக ஈடு கொடுத்து ஆட தொடங்கினாள்...

அதை உணர்ந்தவன் இன்னும் தன் வேகத்தை கூட்டி அவளை தன் கைப்பிடியில் சுழற்றி சிவமும் சக்தியும் ஒண்ணு என்பது போல ஒரு முத்திரை பிடித்தான்...

அதாவது சதியை தன் முழு அணைப்புக்குள் கொண்டுவந்து ஒருகையில் சூலமும், இன்னொரு கையில் சதியின் இடையும், ஒரு காலை தரையில் ஊன்றியபடி, இன்னொரு காலை சதியின் இடையில் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்....

ஒரு நிமிடம் இருவரும் அப்படியே நின்று இருந்தார்கள்...

அதுவரை உக்கிரமாய் ஆடிய ஆட்டத்தில் இருவரும் மூச்சு வாங்கி சிறிதே ஓய்வு போல எடுத்துக்கொண்டார்கள் அந்த ஒரு நிமிடத்தை...

இதற்கு அடுத்தும் நடனம் இருக்கிறது... சக்தி வேறு, சிவன் வேறு என்று சதி நடனம் ஆடனும்.. அதற்க்கு முன் பார்வையாளர்களுக்கு இவர்களது உடனாகி நின்ற தோற்றம் மனதை கவரனும்...

இது தான் கான்செப்ட்.. அதை போலவே இப்போது ரிகசல் போதும் அப்படியே நின்று இருந்தார்கள்...

நின்று இருந்த தோற்றத்தை எதிர் புறம் சுவரில் பதித்து இருந்த கண்ணாடியில் பார்த்தார்கள் இருவரும்...

ஒருவரின் பார்வை இன்னொருவரின் பார்வையை கவ்வி இருந்தது... விரிந்து இருந்த கூந்தலும், கட்டி இருந்த புடவையும், சதங்கையும், நெற்றியில் இருந்த சற்று பெரிய பொட்டும், கண்களுக்கு இட்டு இருந்த மையும் சதிக்கு பேரழகை கொடுத்தது என்றால், தோளை தொட்டு உறவாடிய சிகையும், பலம் பொருந்திய புஜத்தால் சதியை அனைத்து இருந்த தோற்றமும், முகத்தில் இருந்த திமிரும், காலில் இருந்த சதங்கையும், படிக்கட்டு போல இருந்த உடலும் பெரும் ஆணழகனாய் காட்டியது.

கூடவே குருவின் அழகனா கரிய நிறமும், ஆஜானுபாகுவான உடல் அமைப்பும், சதியின் மஞ்சள் நிறமும், வடிவான அளவான அவளுடைய தோற்றமும் இருவரையும் அழகோ அழகு என்று சொல்லாமல் சொல்லியது, மேலும் இது போல ஒரு இணை அமைவது கடினம் என்று கண்ணாடியே தனக்குள் புலம்பிக்கொண்டது...

Loading spinner
Quote
Topic starter Posted : May 28, 2025 10:13 am
(@gowri)
Estimable Member

நண்பனால துரோகமா????

யாரா இருக்கும்???

இவங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா என்ன????

அவ அப்பா புலம்பல் அப்படி தானே இருந்தது

Loading spinner
ReplyQuote
Posted : June 1, 2025 6:33 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top