Notifications
Clear all

அத்தியாயம் 1

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என்ன தான் பண்றீங்க இவ்வளவு நாளா...? ஒருத்தர் கூடவா சரியா பண்ண மாட்டீங்க. இவ்வளவு நாள் உங்களுக்கு தெண்டத்துக்கு சம்பளம் குடுத்துக்கிட்டு இருக்கேன்...” என்று குதி குதி என்று குத்தித்துக்கொண்டு இருந்தான் குரு...

“ஒருத்தருக்கு கூட உடம்பு வளைய மாட்டிக்கிது..” என்று திட்டியவன் தன் அருகில் நின்றிருந்த சதியின் கையை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் சட்டென்று இழுத்து தன் போக்கில் ஆட ஆரம்பித்தான்.

அவ்வளவு நேரம் தலையை தொங்க போட்டுக்கொண்டு இருந்த அத்தனை பேரும் வியந்து போய் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் குரு சதியின் நடனத்தை...

புழுதி பறக்க வில்லையே தவிர மற்ற படி ஆட்டம் அவ்வளவு வேகமாக இருந்தது... கண் இமைக்கும் நொடியில் கூட ஒரு முத்திரையை பிடித்து பார்ப்பவர்களை வியக்க வைத்தான்...

இமைத்தால் எங்கே நடன அசைவுகள் தொலைந்து விடுமோ என்று எண்ணி, கூடி இருந்த அத்தனை பேரும் விழிகளை சிமிட்ட கூட இல்லாமல் வியந்து போய் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

ஒரு வினாடிக்குள் நூறு அசைவுகளை கொடுத்த குரு தன் வேகத்துக்கு சதியையும் ஆட்டி வைத்தான்...

குரு இழுத்த அந்த ஒரு நொடி மட்டுமே தடுமாறினாள் சதி... அதன் பிறகு அவன் எதற்கு தன்னை இழுக்கிறான் என்பதை புரிந்துக்கொண்டவள் அவனுக்கு ஈடு கொடுத்து ஆட தொடங்கினாள்...

கெண்டகாலை தொடும் ஒரு பேண்ட், இடை வரை இருந்த ஒரு டிசர்ட், தூக்கி வாரிப்போட்ட ஒரு கொண்டை இடை தவிர அலங்காரம் என்று எதுவும் இல்லை சதியிடம். அதே போல தான் குருவும்...

தோள்களை தொடும் சிகையை ஒரு பேண்டில் அடக்கி குதிரை வால் போட்டு இருந்தான். நடனம் ஆடுவதற்கு ஏற்றார் போல லூசான ஒரு பேண்ட், ரவுன்ட் நெக் வைத்த, அவனுடைய ஆம்ஸ் வெளியே தெரியும் படி இறுக்கமான ஒரு டிசர்ட்...

எந்த அலங்காரமும் இல்லையென்றாலும் இருவரிடமும் ஒரு லட்சணம் இருந்தது...

ஆணுக்குரிய முறுக்கு குருவிடம் இருந்தது என்றால், சதியிடம் பெண்ணுக்கே உரிய ஒரு மிளிர்வு இருந்தது..

இவர்களை சுற்றி இருந்தவர்களும் இவர்களை போலவே உடை அணிந்து இருந்தார்கள்.

அதில் பத்து பேர் அங்கு நடன இயக்குனராகவும், நடனம் சொல்லி கொடுப்பவர்களாகவும் இருந்தார்கள். மீதம் இருந்த நூறு பேரும் நடனம் பயில வந்த மாணவர்களாக இருந்தார்கள்.

இதை தவிர இந்த பெரிய அரங்கத்தை சுற்றி இருந்த வகுப்புகளில் இன்னும் பல நூறு மாணவர்கள் நடனம் பயின்றுக்கொண்டு இருந்தார்கள்...

குருவோடது தான் அந்த கலைக்கூடம்.. அதில் நடனம் சொல்லி கொடுப்பவள் தான் சதி... இருவரது நடனமும் புயல் வேகத்தில் இருந்தது.

உனக்கு நான் சளைக்கமாட்டேன் என்று சதி தன் வேகத்தை குருவின் வேகத்துக்கு இணை கொடுத்து ஆடினாள்.

அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் மேலும் மேலும் குரு தன் கோவம் முழுவதையும் அந்த நடனத்தில் காட்டிக்கொண்டு இருந்தான்.

அவனது வேகம் அங்கு சுற்றி இருந்த பயில்விக்கும் ஆசிரியர்களுக்கு பயத்தை கொடுத்தது.. சரியான நேரத்தில் மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிக்க வில்லை எனில் குரு தன்னுடைய மோசமான முகத்தை காட்டுவான் என்று அறிந்ததினாலே இந்த அச்சம் அவர்களுக்குள் முகிழ்த்தது...

அதையும் தாண்டி இருவரது ஆட்டமும் கண்டு மெய் மறந்து போய் நின்றார்கள். குரு ஆட ஆரம்பித்தாலே கண்களை அங்கு இங்கு நகர்த்த முடியாது... இதில் சதியும் உடன் சேர்ந்து ஆடினால் சொல்லவும் வேண்டுமா...? அந்த கண் கொள்ளா காட்சியை...

கண்களோடு கண்கள் வைத்து நேர்கொண்டு அவன் ஆட, சதியும் அவனது குத்தும் பார்வையை தாங்கி கொண்டே அவனது அசைவுக்கு ஏற்றார் போல ஒவ்வொரு அசைவையும் கொடுத்துக்கொண்டு இருந்தாள்...

இது அவளுக்கு முதல் முறை இல்லை... பல முறை அவனுடன் ஆடி இருக்கிறான்... இது தான் அசைவு என்று ஒரு சிறு கோடு கூட காண்பிக்க மாட்டான்... சட்டென்று ஆட தொடங்கி விடுவான்...

கூட நடனம் ஆடுகிறவர்களுக்கு தான் சிரமமாய் போகும்... அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், அவனது அசைவுகளை உள் வாங்கி ஆடுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்... அதனாலே குருவோடு ஆட எல்லாருமே பயப்படுவார்கள்.

ஆனால் அவனோடு ஒரு முறையாவது ஆடி விட வேண்டும் என்று பலரும் ஆசை படுவார்கள். ஆனால் இயல்பில் அது மிகப்பெரிய சிரமம் என்று எண்ணி ஒதுங்கி போவார்கள்...

சதிக்கு இவனுடன் ஆடி ஆடி பழக்கமாகி இருக்க அவனுடன் ஆடுவதில் பெரிதாக சிரமம் இருக்காது.. ஆனால் சதியிடம் மட்டும் குரு தன்னுடைய வேகத்தை இன்னும் இன்னும் கூட்டி கூட்டியே ஆடுவான்...

அவள் ஒரு முறையாவாது திணறி நிற்க வேண்டும் என்று எண்ணியே மிக வேகமாக ஆடுவான்.. அவனது வேகம் அவளுக்கு பெரும் சிரமத்தை தான் கொடுக்கும். ஆனால் அதை ஒரு பொழுதும் அவனிடம் காட்டிக்கொள்ளவே மாட்டாள்.

எவ்வளவு சிரமமாக இருந்தாலும் அதை முயற்சி செய்து அவனுடன் இணையாக ஆடி விடுவாள்.

அவ்வளவு சிரமப்பட்டு ஆடினாலும் குருவிடமிருந்து ஒரு சின்ன பாராட்டு கூட வராது அவளுக்கு... சிறு வயதில் அவனது பாராட்டுக்கு ஏங்கி போய் காத்திருப்பாள்... அது அவளுக்கு கிடைக்கவே கிடைக்காது என்று உணர்ந்த பின் அதை எதிர்பார்க்கவே இல்லை அவனிடமிருந்து...

உன்கிட்ட எதிர் பார்த்தா தானே எனக்கு வலிக்கும். நான் தான் உன்னிடம் எதிர் பார்க்கவே இல்லையே...? என்று தன்னையே மாற்றிக்கொண்டு இறுகி நின்றாள் சதி..

மாணவர்களுக்கு சொல்லி கொடுத்துக்கொண்டு இருக்கும் போதே சேர்ந்து ஆடும் ஆடல் பகுதி வந்தால் சதி தான் அவனுடன் ஆடுவாள்...

அவனது தேர்வு சதியாக தன இருக்கும்... இப்பவும் அப்படி தான்... இன்னும் ஒரு மாதத்தில் இந்த மாணவர்களின் பயிற்ச்சி காலம் முடிவதால் அதை பரிசோதிக்கவே இங்கு வந்தான் குரு...

வந்த இடத்தில் மாணவர்கள் சொதப்பிக்கொண்டு இருந்ததை பார்த்து அவ்வளவு கோவம் வந்துவிட்டது.. “இதுல நான் யாரை குற்றம் சொல்வது... சொல்லி தந்தவர்களையா...? இல்லை கற்றுக்கொள்பவர்களையா...? இருவரை சொன்னாலும் தகும் போல... ஏனெனில் இரு பக்கமும் குறைகள் அவ்வளவு இருக்கு... ஒழுங்காக இடுப்பை வளைத்து ஆடனும். அதை விட்டுட்டு சும்மா ஜங்கு ஜங்குன்னு குதிச்சா நடனம் வந்துடாது....”

என்றவன் சட்டென்று சதியை பிடித்து ஆட ஆரம்பித்துவிட்டான்...

“நடனம் இப்படி இருக்கணும்... எந்த நிமிடமும் ஆட தயாரா இருக்கணும்... அவன் தான் நடன கலைஞன்.” என்று கோவமாக கத்தியவன்,

“இன்னும் பதினைந்து நாட்களுக்குள் அனைவரும் ஒழுங்காக நடனம் கற்று இருக்க வேண்டும்... இரவு நேரம் வந்து கூட ஆடலாம்... ஆனா இங்க இருந்து போகும் போது அத்தனை பேரும் நடனம் கற்றுக்கொண்டு தான் வெளியே போகணும்... எனக்கு என்னோட பேர் ரொம்ப முக்கியம்... டைம் பாஸ் பண்ண வந்தா இப்பொழுதே வெளியே போகலாம்... அடுத்த பதினாறாவது நாள் மறுபடியும் எல்லாரும் இங்க வந்து இருக்கணும்.. நான் யாரை கூப்பிடுவேன்னு எனக்கே தெரியாது... கூப்பிடுறவங்க வந்து என்னோட ஆடனும்... சரியா ஆடலன்னா அப்புறம் இருக்கு...” என்று சொல்லியவன் நடனம் பயில்விக்கும் ஆசிரியர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே கிளம்பிவிட்டான்...

அவன் வெளியே சென்றவுடன் தான் நிறுத்தி வைத்து இருந்த மூச்சுகளை அனைவரும் இழுத்து விட்டார்கள்.

“சதி சூப்பர் டான்சிங்... எப்படி தான் குருவோட சேர்ந்து ஆடுறீங்களோ...? ப்பா அவரோட சேர்ந்து ஆடுறது ஒரு வரம்னா... அவருக்கு ஈக்குவலா ஆடுறது தனி திறமை தான்...” என்று சதியை அனைவரும் பாராட்ட, எல்லாத்தையும் ஒரு சின்ன புன்னகையில் அங்கிகரித்தவள்,

“இன்னும் கொஞ்ச நேரம் நாம இப்படியே பேசிக்கிட்டு இருந்தோம்னா போன குரு மறுபடியும் வந்து கத்த ஆரம்பிச்சுடுவாரு...” சொல்லி முடிக்கும் முன்பே அத்தனை பேரும் காக்கை கூட்டத்தில் கல் வீசியது போல சிதறி ஓடினார்கள் அடுத்த நொடியில்.

அவர்கள் சென்றவுடன் கலைக்கூடத்தின் அலுவலகத்திற்க்கு சென்று அங்கு இன்றைக்கு எத்தனை பேர் புது வரவு என்று பார்த்து, அவர்களுக்கு எந்த எந்த நேரம் என்று பட்டியல் போட்டு, கூடவே எந்த நடன இயக்குனரை போடுவது என்று எல்லாவற்றையும் சரி செய்துக்கொண்டு இருந்த நேரம் அவளின் மீது ஒரு நிழல் படிந்தது...

நிமிர்ந்து பார்த்தாள்... குரு தான் நின்றிருந்தான்.

கண்கள் கோவத்தில் சிவந்து இருந்தது... அவன் நின்றிருந்த தோற்றம் அவளுக்குள் பயத்தை கொடுத்தது என்றாலும் “என்ன ஆச்சு...” தைரியமாகவேக் கேட்டாள்.

“இன்னும் என்ன ஆகணும்... இந்த அக்கடமியே உன்ன நம்பி தான் இருக்குற மாதிரி வெளிய சொல்லிக்கிட்டு திரியிறியாமே... கொஞ்சம் இடம் கொடுத்தா ரொம்ப தான் பண்ற... இங்க பாரு என் கிட்ட உன் வாலை ஆட்டாத ஒட்ட நறுக்கிருவேன்... இன்னொரு முறை இது மாதிரி என் காதுல விழுந்தது உன் சீட்ட கிளிச்சுடுவேன்...” முறைத்துக்கொண்டே சென்றுவிட்டான்.

அவன் போன பின் மீண்டும் தன் வேலையை பார்க்க தொடங்கினாள் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.

‘எனக்கு இங்க வேலை பாக்குறதுக்கே நேரம் சரியா இருக்கு. இதுல நான் போய் வேலை மெனக்கெட்டு இதை சொல்லிக்கிட்டு இருக்கனாக்கும்...’ முனகியவள் மேற்கொண்டு தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

குரு எப்பொழுதுமே இப்படி தான் என்று தெரிந்தவளால் அவனது பேச்சை எப்பொழுதும் பெரிய காரணமாக எடுத்துக்கொள்ள மாட்டாள். அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று சரியாக நடந்துக்கொள்ளுவாள்.

குருவுக்கும் அவளது நடவடிக்கை பிடிக்கும் என்றாலும் வெளியே சொல்லாமல் எரிந்து எரிந்து விழுவான்... சதி எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டாள்...

‘நீ பாட்டுக்கு கத்திக்கிட்டே இரு... நான் பாட்டுக்கு என் வேலையை செய்யிறேன்...’ என்று நடந்துக்கொள்ளுவாள்.

அங்கு எல்லா வேலையும் சதி தான் பார்ப்பாள்... அதனாலே பலரும் அவளை அந்த கலை கூடத்தின் பில்லர் என்று தான் சொல்லுவார்கள்..

அதில் சதிக்கு நெருக்கமானவர்கள் அவளை பில்லர் பில்லர் என்றும், தூண் என்றும் தான் அழைப்பார்கள்.

அவள் ஆரம்பத்தில் அவர்களை முறைத்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் புன்னகைக்க ஆரம்பித்தாள்...

அது கிட்ட தட்ட பல வருடங்களாக அங்கு நடந்துக்கொண்டு தான் இருந்தது... இதென்னவோ புதிதாய் நடந்த நிகழ்வு போல சொல்லிக்கொண்டு சென்றவனை என்ன செய்வது... நொந்ததவள் தன்னுடைய வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்...

காலையிலிருந்து தொடர்ந்து இரண்டு மணி நேரம் அவளுக்கு வகுப்புகள் இருக்கும்... அதன் பின்பு பன்னிரண்டு மணி போல அட்மிசன் செக்சன் போய் அமர்வாள்... அங்கு பீஸ் செக்சன், சம்பளம், ஈபி, டே எக்ச்பென்சிவ், அட்டனென்ஸ், வவுச்சர், டேக்ஸ் என்று எல்லாமே ஒரு பார்வை பார்ப்பாள்.

அதன் பின் அங்கிருந்து  கேண்டீன் சென்று அன்றைக்கு தயாராகி இருக்கும் உணவுகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் சகாக்களோடு உணவு உண்டுவிட்டு கலைக்கூடம் முழுவதும் ரவுன்ஸ் போவாள்...

அதன் பின்பு தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் அவளுக்கு ப்ரேக் டைம்...

மாலை நான்கு மணி போல ஆரம்பிக்கும் அவளது நாட்டிய பயிற்சி ஏழு மணி வரை தொடரும்...

ஆரம்ப நிலை, மேல் நிலை எல்லாமே மற்றவர்கள் தான் எடுப்பார்கள். இதில் சதி சில ஸ்பெசல் பயிர்ச்சிகளுக்கு மட்டுமே எடுப்பாள்..

குரு பல படங்களுக்கு கொரியாக்ராப் பண்ண, கூடவே சதியும் கூடவே செல்வாள். கதையின் நாயகிகளுக்கு இவள் தான் சொல்லி தர வேண்டும்.

குரு எப்படி நடனம் புரிகிரானோ அதை போலவே அந்த பாடலுக்கு ஏற்ற வாறு சதியம் குரு சொல்லும் சில வகைகளுடன் சொல்லி தர வேண்டும்...

அதை மிக சிறப்பாக சொல்லி தந்து ஆட விடுவாள். அதற்க்கு கூட அவனிடமிருந்து பாராட்டு பத்திரம் எதுவும் கிடைக்காது...

ஒரு சில நாட்களில் சதி வர முடியாத சூழலில் வேறு யாராவது லோக்கேசனுக்கு சென்று ஆடல் சொல்லி தர நேரும் போது குருவுக்கு அவர்களுக்கு புரிய வைத்து, அதன் பின்பு நடிகர்களுக்கு சொல்லி தருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்...

அதனால் சதி எப்பொழுதும் விடுப்பே எடுப்பது கிடையாது... கலைக்கூடம் தான் அவளது பெரும்பானமையான வசிப்பிடம். படங்களுக்கு ஆடல் சொல்லி தருவதற்கு முன் குரு தனியாக ஒரு முறை ரிகசல் பார்ப்பான். அப்பொழுது விளக்கை கையில் பிடித்துக்கொண்டு தேவுடு காப்பது இவளது வேலையாகும்...

அதற்க்கெல்லாம் அலுத்துக்கொள்ளவே மாட்டாள். அதென்னவோ அவளுக்கு நடனத்தின் மீது அவ்வளவு ஈடு பாடு...

அன்றைய தினம் ஓரளவு கழிந்துவிட, வீட்டிற்கு திரும்பினாள் சதி...

கலைத்து போய் வந்த மகளை வாஞ்சையுடன் வரவேற்று அமரவைத்தார் அவளது அன்னை...

“என்னடா ரொம்ப புளிஞ்சிட்டானா...”

“உன் மருமகனாச்சே பின்ன சும்மாவா விடுவான்... வச்சு செஞ்சாச்சு...” என்றவள் அவரின் மடியில் படுத்துக்கொண்டாள்.

“அப்பா வந்துட்டாரா செல்லோ...”

“ம்ம் வந்து உனக்கா ஸ்பெஷலா மசாலா டீ போட்டுக்கிட்டு இருக்காரு...”

“அதான் வாசனையே தூக்குது செல்லோ... இரு நான் போய் பார்த்துட்டு வரேன்...” என்றவள் அடுப்படிக்கு ஓடினாள்.

“வாடா குட்டி, இந்தாங்க உங்க ஸ்பெஷல் டீ...” என்று குடிக்கும் பதத்தோடு நீட்டினார் சேகர்...

“வாவ் ஒன்டர்புல் நானா... செம்ம” என்றவள் அதன் மனத்தை ஆழ்ந்து சுவாசித்து தன் நெஞ்சு பைக்குள் நிரப்பிக்கொண்டாள்..

லேசான தலை வலி கூட ஓடி போனது...

“மாப்பிள்ளை என்ன சொன்னாரு...” என்று எப்பொழுதும் கேட்கும் வசனத்தை இப்பொழுதும் கேட்டார்.

“எப்பொழுதும் போல தான் ப்பா... புளிஞ்சி எடுத்துட்டாரு... என்ன கோவமோ தெரியல... பசங்களுக்கு இன்னும் பதினைந்து நாள் இருக்கு கோச்சிங்.. அதுக்குள்ள இடையில வந்து அவங்களை ஆட சொல்லி சொன்னாரு... பதட்டத்துல ஒருத்தரும் ஒழுங்கா ஆடல... உடனே டான்ஸ் பெர்பாமுக்கு கைய பிடுச்சி ஆட ஆரம்பிச்சுட்டாரு...”

“ஹஹஹா... உனக்கு இடுப்பு வலி வந்துடுச்சு... ரைட்டா...” என்று சேகர் சிரிக்க

“அட போங்க ப்பா... உங்களுக்கு எப்போ பாரு உங்க மருமகனை உயர்த்தி சொல்லாட்டி தூக்கமே வராது...” என்றவள் குளித்துவிட்டு இடுப்பு ஓடிய காலையிலிருந்து ஆடிய ஆட்டத்துக்கு சுகமாய் படுத்துவிட்டாள் மெத்தையில்.

அவளது காலை இதமாய் ஒரு கரம் பிடித்து விட,

“ப்ச் வேணாம் ப்பா... என் காலை நீங்க பிடிக்க கூடாது...” என்றாள் கண்களை மூடியபடியே.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல... நீ கொஞ்ச நேரம் நல்லா ஓய்வு எடு..” என்று பதமாக அவளுக்கு காலை பிடித்து விட்டார் சேகர்.

தொடரும்..

Loading spinner
Quote
Topic starter Posted : May 28, 2025 10:07 am
(@gowri)
Estimable Member

குரு - சதி நல்ல ஜோடி🥰

என்ன கோவம் உன் மேல இருக்க போகுது சதி.... எல்லாம் possessiveness தான் 

Loading spinner
ReplyQuote
Posted : June 1, 2025 6:23 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top