Notifications
Clear all

அத்தியாயம் 2

 
Admin
(@ramya-devi)
Member Admin

உத்தமனின் அம்மா ஈஸ்வரி உமையை குளித்து விட்டு வர சொல்ல, மாற்று புடவையுடன் உத்தமனின் அறைக்குள் நுழைந்து குளிக்க வந்தாள்.

அங்கே படுக்கையில் வெற்று மார்புடன் அமர்ந்து அறைக்குள் நுழைந்தவளை வேட்கையுடன் பார்த்தான் உத்தமன். அவனது பார்வையில் கால்கள் இரண்டும் பின்னிக் கொள்ள பெரும் அவஸ்தைப் பட்டுப் போனாள். “இப்படி பார்த்து வச்சா நான் எப்படி இயல்பா இருப்பேன்...” என்று முணகியவள், தன் உடன் கூட வந்த தன் அத்தையை அவஸ்தையுடன் பார்த்தாள். அவர் அவளுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து அந்த அறையில் வைத்துக் கொண்டு இருந்தார்.

தன்னவனின் பார்வையில் இருந்த குறும்பும் மோகமும் அவளை மூச்சு முட்ட வைத்தது...! கைக்கால்கள் லேசாக நடுங்கவே ஆரம்பித்தது...! புது பெண்ணுக்கு உரிய அத்தனை உணர்வுகளும் அவளை ஆட்டிப் படைக்க, உதடு கடித்து தன் உணர்வுகளை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. படுக்கைக்கு எதிரில் தான் நிலை கண்ணாடி இருந்தது...!

அங்கு தான் டேபிளும் இருந்தது. எனவே அங்கு நின்று தான் தலை அலங்காரம், மற்றும் நகைகளை கழட்ட முடியும்... அது அப்படியே அவனது கண் பார்வைக்கு படும். அதை நினைக்கும் பொழுதே உமைக்கு அடி வயிற்றில் ஒருவித பிரளயம் எழுந்தது.

இரு கரங்களையும் தூக்கி தலையில் இருந்த பின்களை எல்லாம் கழட்ட தொடங்க, கை தூக்கும் பொழுது இடையில் இருந்த புடவை சற்றே விலகி அவளின் இடைப் பகுதி அவனுக்கு தரிசனம் கொடுக்க முகம் சிவந்துப் போனாள்.

ஓரளவு பூக்களை எல்லாம் அகற்றியவள், தலையில் குத்தி இருந்த சில பின்களை அவளால் எடுக்க முடியவில்லை. தன் அத்தையை கூப்பிட்டாள்.

“இதோ வரேன் பாப்பா...” என்றவர் அவளுடைய பொருட்களை எடுத்து வைப்பதிலே இருக்க, கண்ணாடி வழியாக தன்னவளை பார்த்துக் கொண்டே வந்தவன், அவளது அனுமதி இன்றி அவளுடைய தேவையை செய்ய மனம் சிலிர்த்துப் போனாள்.

அதோடு அவன் விடுவான் என்று பார்க்க, அவள் கழுத்தில் இருந்த நகைகளை எல்லாம் அவளுக்கு நோகாமல் கழட்டி விட,

“எங்கே ஒரு சத்தத்தையுமே காணோம்..” என்பது போல அவளின் அத்தை திரும்பி பார்க்க, உமைக்கு அவன் நகைகளை கழட்டி விட்டுக்கொண்டு இருந்தான். அதை பார்த்தவருக்கு முகம் சிவக்க, அறையை விட்டு போக பார்க்க, அவரின் மீது ஒரு கண்ணை வைத்திருந்தவன், சட்டென்று அவளை விட்டு விலகி,

“நீங்க இருங்க ம்மா... அவ உங்களை தான் கூப்பிட்டா நீங்க கொஞ்சம் வேலையா இருக்கவும் நான் உதவி பண்ணினேன்.. இனி நீங்களே அவளை கேர் பண்ணிக்கோங்க...” என்றவன் மீண்டும் படுக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

அவன் அவளை விட்டு நீங்கிய பிறகே மூச்சு வந்தது.. அத்தை இருக்கிறார்கள் என்று கூட பாராமல் நகையை கழட்டுகிறேன் என்று பேர் பண்ணிக்கொண்டு அவனின் இதழ்களால் கொக்கி கழட்டி விடுகிறேன் என்று சொல்லி, கழுத்தில் உள்ள முடிகள் எல்லாம் சிலிர்க்கும் வண்ணம் முத்தம் வைத்து லேசாக கடித்தும் வைத்தவனின் சேட்டையில் உச்சி முதல் பாதம் வரை கூசி சிலிர்த்தாள்.

அதோடு அத்தை எங்கே பார்த்து விடுவாரோ என்று பயம் வேறு அவளை ஆட்டிப் படைத்தது..! கிடைக்கும் இந்த சின்ன கேப்பில் கூட உத்தமன் அவளை விட்டு நீங்காமல் சேட்டை செய்ய உதடு கடித்து கன்னம் சிவந்தாள்.

அவிழ்ந்த கூந்தலை அவளின் இட பக்கமாய் போட்டுவிட்டு வலக் கழுத்தில் முகம் புதைத்து அவளின் வாசனையை நுகர்ந்தவனின் கரம் அவளின் இடையை இறுக்கிப் பிடித்து அவளின் அவஸ்த்தையை கூட்ட, அதற்கு மேல் தாங்க மாட்டேன் என்பது போல அவளின் நிலை இருக்க நல்ல வேளை அவளின் அத்தை அவள் அருகில் வந்தார்.

அதுவரை இழுத்து வைத்த மூச்சுக் காற்றை வெளியே விட்டவள் தன்னவனை முறைத்துப் பார்த்தாள் ஆடி வழியாக. கட்டிலில் போய் அமர்ந்தவன் குறும்புடன் கண்ணடித்து “எப்படி...?” என்பது போல சீண்டல் பண்ண,

“அடி விழும்...” என்று ஒற்றை விரல் காட்டி அவனை எச்சரித்தாள் உமை. அவளுக்கு மீதமிருந்த நகைகளை கழட்டி விட்டவர்,

“நீ போய் குளி பாப்பா...” என்று அவளை குளியல் அறைக்குள் விட, அவரை சங்கடமாக பார்த்தாள். ஏனெனில் புடவை கொடுத்து இருந்தார். அதை எப்படி குளியல் அறையில் கட்ட முடியும். அதுவும் அறையில் வேறு உத்தமன் இருக்க... கைகளை பிசைந்துக் கொண்டு இருந்தாள்.

அவளின் அவஸ்த்தையை புரிந்துக் கொண்டவர், உத்தமனுக்கு கேட்காமல் அவளின் காதோடு நெருங்கி,

“நீ குளிச்சுட்டு வரும் போது மாப்பிள்ளை இங்க இருக்க மட்டாருடி... போ தைரியமா குளிச்சுட்டு வா... நல்ல நேரம் வர போகுது..” என்று அவளின் சங்கடம் புரிந்தவராய் சொல்ல அதன் பிறகே மூச்சு வந்தது...!

அவளை குளியல் அறைக்குள் விட்டவர், உத்தமனிடம் கைகளை பிசைந்துக் கொண்டு நிற்க,

“ஒண்ணும் பிரச்சனை இல்லை... நான் வெளில இருக்கேன்” என்றான். அவனது இந்த புரிந்துணர்வில் மனம் நெகிழ்ந்தவர் அந்த அறையை தயார் செய்ய ஆரம்பித்தார். அவரின் உதவிக்கு உத்தமனின் தங்கை ராஜியும், தம்பி மனைவி மதிலாவும் வந்தார்கள்.

ஓரளவு எல்லாம் தயார் செய்து முடித்தவர்கள் நிமிர, குளியல் அறையை திறந்துக் கொண்டு உமையவள் வர அவளை கிளம்ப ஆயத்தப் படுத்தினார்கள்.

அவர்களின் முன்பு புடவை கட்ட சங்கடப் பட்டவள்,

“ப்ளீஸ் நானே கட்டிக்கிறேனே...!” என்று பணிவாக கேட்டாள்.

“எங்களுக்கு எல்லாம் பத்து பேர் கூடி நின்னு எல்லாம் செய்து விட்டாங்க... நீ என்னடான்னா மூணு பேருக்கே இந்த நெளி நெளியிற... அதெல்லாம் இன்னைக்கு ஒரு நாள் தான் இந்த கவனிப்பு... மத்த நாள் எல்லாம் எப்படியோ போன்னு போவாங்க.. அதனால வா...” என்று ராஜி அவளுக்கு புடவை கட்டி விட வர, புடவையை மொத்தமும் தன் மீது போட்டு போத்திக் கொண்டவள்,

“ப்ளீஸ் அண்ணி... எனக்கே புடவை கட்ட தெரியும். நானே கட்டிக்கிறேன்... அதோட இப்படி மத்தவங்க முன்னாடி நிக்கிறது எனக்கு கூச்சமா இருக்கு...” என்றவள் யாரையும் சட்டை செய்யாமல் அங்கு உடை மாற்ற போட்டு இருந்த தடுப்புக்கு பின் பக்கம் சென்று சேலையை உடுத்த ஆரம்பித்தாள்.

அவளின் இந்த செயலில் ராஜிக்கு கோவம் வர,

“என்ன ராஜி வந்த உடனே உன்னை நோஸ் கட் பண்றா... பார்த்துக்க உன் நாத்தனார் பதவி காலியாகமா...” என்று நக்கல் பண்ணினாள் மதிலா யார் காதுக்கும் கேட்காத வண்ணம்..

மதிலாவை திரும்பி ஒரு முறை முறைத்தவள் அங்கிருந்து விருட்டென்று போக போனவளை நக்கலுடன் பார்த்தாள் மதிலா... “இவ்வளவு நாள் எவ்வளவு ஆட்டம் போட்டு இருப்ப... இனி நீ அடங்குற காலம் வரப் போகுதுடி...” என்று மனதுக்குள் கருவிக் கொண்டவள் சத்தம் கேட்க திரும்பி பார்த்தாள்.

உமை தான் புடவை கட்டி முடித்து வெளியே வந்தாள். சும்மா சொல்லக் கூடாது.. சர்வ லட்சணமும் பொருந்தி இருந்தாள். நேர்த்தியாக புடவை அணிந்து இருந்தவள் அதன் முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு ஈரமான நீள முடியை துண்டிலிருந்து எடுத்து உதறி தட்டினாள்.

“எதுக்கு பாப்பா இந்நேரத்துக்கு தலைக்கு ஊத்தின..” என்று கேட்டுக் கொண்டே அவளின் தலை முடியை தட்டி விட்டார்.

“இல்ல அத்தை காலையில இருந்து ஒரே அலைச்சல்... உடம்பு ரொம்ப சூடா இருக்கிற மாதிரி இருந்தது... அப்படியே மேலுக்கும் மட்டும் ஊத்தினா களைப்பு தீராது.. அது தான்..” என்றாள்.

“அது சரி... இப்போ காயலன்னா என்ன பண்றது... ஏற்கனவே உங்க மாமியார் நேரம் ஆச்சுன்னு நிறைய முறை சொல்லிட்டாங்க..” என்றவர், ஓரளவு அவளின் தலையை தட்டி விட்டு ஈரத்தை குறைத்தவராள் முழுமையாக ஈரத்தை போக்க முடியவில்லை.

அந்த ஈர முடியை இரு பக்கமும் எடுத்து கிளிப் மாட்டி விட்டு பிச்சி பூவையும், முல்லை பூவையும் அவளின் கூந்தலில் வைத்து விட்டார்.

முகத்தை அழுந்த துடைத்தவள், பொட்டு வைக்க தேட, அவளின் பெட்டியில் எடுத்து வைத்த நினைவு இல்லை. அதோடு இது நாள் வரை ஒரு ஆண் மட்டுமே வசித்த அறை என்பதால் அங்கு பெண்களுக்கு உண்டான ஒன்றுமே இல்லை...

சரி ஓரகத்தி கேட்கலாம் என்று மதிலாவை கூப்பிடும் நேரம், உத்தமன் உள்ளே வந்தான். வந்தவன் எதுவும் பேசாமல் ஒரு அலமாரியை திறந்து அவளின் கண்களை பார்த்துக் கொண்டே ஒரு டப்பாவை அவளிடம் நீட்டிவிட்டு வெளியே போய் விட்டான்.

அது என்ன என்பது போல அவளின் அத்தையும் மதிலாவும் எட்டிப் பார்க்க, அவர்களின் ஆர்வத்துக்கு கொஞ்சமும் குறையவில்லை இவளின் ஆர்வம்...

நிதானமாக அந்த டப்பாவை பிரித்துப் பார்த்தாள். பார்த்தவுடனே அது அலங்கார செட் என்பது புரிந்தது... அதிலே அவளுக்கு தேவைனான அனைத்தும் இருந்தது. அதோடு வெள்ளி குங்குமச்சிமிழ் இருந்தது...

அதில் சிவப்பு வண்ண குங்குமமும் நிரம்பி இருக்க ஏனோ சொல்லொண்ணாத ஒரு உணர்வு அவளை ஆக்கிரமிப்பு செய்தது.

வந்தவுடனே பொட்டை கடன் கேட்க வேண்டுமா என்று அவள் சங்கடப்பட்டு தான் போனாள். ஆனால் அவளை கொஞ்சமும் சங்கடப் பட விடாமல் முன் யோசனையாக அவன் வாங்கி வைத்திருந்தது அவளை பெரிதாக அசைத்துப் போட்டது...!

“ஓஹோ...! மாப்பிள்ளை உனக்கு ஏற்கனவே வாங்கி வச்சுட்டாரா?” என்று கேட்ட அத்தைக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மதிலாவுக்கு அந்த மகிழ்ச்சி கொஞ்சமும் இல்லை. அதுவும் வெள்ளி சிமிழை பார்த்த உடன் அவளுக்கு முகம் சுண்டிப் போனது.

அதை யாரும் கவனிக்கவும் இல்லை. அதற்கான நேரமும் இல்லை...!

ஆசையாக அவன் வாங்கி வைத்திருந்த சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து உச்சி வகிட்டில் வைத்து தன் அலங்காரத்தை ஆரம்பித்தாள். அதன் பிறகு கண்களுக்கு மை தீட்டி, நெற்றியில் அவன் வாங்கி வைத்திருந்த வட்ட பொட்டை ஓட்டியவள், இதழ்களுக்கு எதுவும் பூசவில்லை.

அதிலே அவள் பேரழகியாக மின்னினாள். அவளின் கழுத்தில் நகைகளை மாட்ட வர,

“இவ்வளவு எல்லாமா... கொஞ்சமா போட்டுக்குறேன் ப்ளீஸ்...” என்றபடி சிறிய வகை நகைகளை மட்டும் அணிந்துக் கொண்டாள். அதோடு முதல் முதலாக உத்தமன் வாங்கி தந்த வெள்ளை நிற கல் ஒற்றை வரிசையில் வைத்திருந்த அந்த சின்ன ஆரத்தை போட்டுக் கொண்டாள். அந்த நேரம் ஈஸ்வரி உள்ளே வந்தார்.

“என்ன இப்படி கிளம்பி இருக்க.. இப்படி தான் ஒண்ணுமே இல்லாம இருப்பியா... கழுத்து நிறைய எடுத்து போடு...” என்று அவர் சொல்ல, சங்கடமாய் தன் அத்தையை பார்த்தாள்.

“இப்போதைக்கு போட்டுக்க, பிறகு கழட்டிக்கோ...”  அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னவர், ஈஸ்வரியின் ஆணை படி போட்டுவிட்டார்.

“இதையே தான் நானும் சொன்னேன்... எங்க என் பேச்சை கேட்டா தானே...” என்று நொடித்துக் கொண்டவள் வெளியே போய் விட்டாள் மதிலா.

திரும்பி தன் அத்தையை பார்த்தாள்.

“இதெல்லாம் பொறுத்து தான் போகணும் பாப்பா... இதுக்கு மேல எல்லாம் பிரச்சனை வரும். உடனே கண்ணை கசக்கிக்கிட்டு நிக்க கூடாது.. ஓரளவு எதிர்த்து பேசலாம். ஆனா அதுக்காக மத்தவங்க மனதை உடைத்துப் போட கூடாது சரியா? இதெல்லாம் கல்யாணம் ஆகும் போது உங்க அம்மா எனக்கு சொன்னது. அதையே தான் நான் உனக்கும் சொல்லுவேன். குடும்பம்னா ஆயிரம் இருக்கும். எல்லாரையும் அனுசரிச்சு போகனும். அதுவே உன் தன்மானத்துக்கு ஒண்ணுன்னா நீ தாழ்ந்து போகணும்னு எந்த அவசியமும் இல்லை. இதோ இப்போ நீ புடவை கட்டுன இல்லையா அது மாதிரி..” என்றார்.

“என் எல்லை கோடு எதுன்னு எனக்கு தெரியும் அத்தை. அதே போல அவங்களை எந்த அளவுக்கு என் எல்லை கோட்டுக்குள்ள வரை அனுமதிக்கிறதுன்னு தெரியும் அத்தை. நீங்க கவலை படாதீங்க. எல்லாம் உங்க அண்ணி சொல்லிக் கொடுத்தது தான்... நிச்சையம் உங்களை எல்லாம் எந்த சூழ்நிலையிலும் தலை குனிய விட மாட்டேன்...” என்று தன் அத்தையிடம் சொன்னாள்.

“நல்லது கண்ணு... வா போய் பெரியவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கலாம்” என்று கூட்டிக்கொண்டு வந்தவர், முதலில் சாப்பிட சொல்ல, உத்தமனின் அருகில் அமர்ந்து சாப்பிட வைத்தார்கள்.

நடக்க போகும் நிகழ்வுகளை எண்ணி சாப்பாடு தொண்டைக் குழிக்குள் போவேனா என்று அடம் பிடித்தது...! சாப்பாட்டை வைத்து அலைந்துக் கொண்டு இருந்தவளை பார்க்கும் பொழுது கொஞ்சம் பாவமாக இருந்தாலும் சற்றே உல்லாசமாகவும் இருந்தது அவனுக்கு.

“வேணான்னா என்கிட்டே எடுத்து போட்டுட்டு போய் கைக் கழுவுடி” என்றான்.

“இல்ல நீங்களும் வாங்க...” என்றவள் தன் இலையில் இருந்ததை எடுத்து அவனது இலையில் எடுத்து வைத்துவிட்டு அவன் சாப்பிடும் வரை அவன் அருகில் அமர்ந்து இருந்தாள்.

அதன் பிறகு இருவரும் கைக்கழுவி விட்டு வர, இருவரையும் சாமி கும்பிட வைத்து அவர்களின் அறைக்குள் போக சொன்னார்கள். பெற்றவர்களின் காலில் விழுந்து ஆசிவாதாம் வாங்கிக் கொண்டு இருவரும் அவர்களின் அறைக்கு சென்றார்கள்.

அறைக்குள் வந்தவளின் கரத்தில் இருந்த பால் செம்பை வாங்கி மேசை மீது வைத்தவன் அவளின் கரத்தை பிடித்து படுக்கையில் அமரவைத்தான்.

Loading spinner
Quote
Topic starter Posted : June 25, 2025 11:23 am
(@gowri)
Estimable Member

Aww உத்து எவளோ understanding ஆ இருக்கான், சோ ஸ்வீட் 🤩 🤩 🤩 🤩 

Loading spinner
ReplyQuote
Posted : June 25, 2025 11:05 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top