Notifications
Clear all

அத்தியாயம் 1

 
Admin
(@ramya-devi)
Member Admin

புடவை முந்தானையை எடுத்து மடி மீது போட்டு நீவி விட்டுக்கொண்டு இருந்தவளை விழி அகலாது பார்த்தான் உத்தமன். அவனது பார்வையில் வெட்கம் பூக்க,

“ப்ச்... ஏன் இப்படியே பார்த்துக்கிட்டே இருக்கீங்க...?” என்று சங்கோசமாக கேட்டவளை பார்த்து உல்லாசமாக சிரித்தவன்,

“ஏன் இப்படி பார்த்ததுனால மேடம் எங்க கொறைஞ்சி போனீங்கலாம்...?” என்றவனின் குரலில் இருந்த உல்லாசம் கண்டு மனம் பொங்கியவள்,

“எங்கயும் குறையல... ஆனா இந்த சாப்பிடுற மாதிரி பார்வை தான்...” என்று இழுத்தாள்.

“ஏன்டி என் பார்வைக்கு என்னவாம்...?” பேச்சிலே அவளை சீண்டினான்.

“ம்ம்ம் பார்வை இங்க குத்துது...” என்று தன் நெஞ்சை சுட்டிக் காட்டினாள். அவளது கை போன திசையில் அவனது கண்களும் போக முகம் சிவந்துப் போனாள் உமையவள்.  

அதோடு அவனது பார்வை அங்கேயே நிலைக் கொள்ள,

“ப்ச்... பார்வையை திருப்புங்க ங்க...” என்றவளுக்கு வாய் வார்த்தையே வெளிவரவில்லை.

“அப்படியெல்லாம் திருப்ப முடியாது... என்னோட சொத்து... ஏக போக உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு...” என்று மீசையை முறுக்கினான்.

“அடேயப்பா... இன்னும் கல்யாணம் ஆகல... நினைவு இருக்கட்டும்” என்றாள் குறும்பாக..

“இன்னும் ஒரு வாரம் தானேடி... அதுக்கு பிறகு இருக்கு உனக்கு... என் தாலி மட்டும் உன் கழுத்துல ஏறட்டும். பொறவு இருக்கு இந்த மேடம்க்கு” என்று அவன் வில்லங்கமாக சிரித்தான். அவனது முகத்தில் தெரிந்த பொலிவில் மனம் மயங்கியவள்,

தானாக அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். சாய்ந்தவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன்,

“என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு முழு சம்மதமா உமை...” சற்று கலக்கமாக கேட்டான்.

“ஏங்க இப்படி கேக்குறீங்க... அப்பா உங்க படத்தை காண்பிச்ச உடனே எனக்கு பிடிச்சி போச்சு... நீங்க தான் எனக்கு ஏத்தவருன்னு உள் மனசு சொன்னுச்சு. அதனால முழு மனசோட தான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்” என்றவளை ஆசையுடன் பார்த்தான் உத்தமன்.

“இல்லடி உனக்கும் எனக்கும் வயசு அதிகமா அது தான் யோசிக்கிறேன்...”

“பார்றா.. இவ்வளவு நாள் இது தோணலையாக்கும். அதுவும் என் பிறந்த தேதிய பார்க்கமலா உங்க சாதகத்தை எங்க அப்பாவுக்கு அனுப்பி வச்சீங்க...” என்று நக்கலாக கேட்டாள்.

“ஹேய் கிண்டல் பண்ணாதடி...” என்றான் தலைக் கோதிக் கொண்டு. அதில் அவன் அவ்வளவு அழகாக தெரிந்தான். வயசு பார்த்தால் எல்லாம் தெரியவில்லை. ஒரு இருபத்தி ஒன்பது இல்லை முப்பது என்பது போல தான் அவனது தோற்றம் இருந்தது. அவனது மாநிறத்தையும் அடர் மீசையையும் ரசித்தவளின் கண்களுக்கு அவன் பேரழகாய் தெரிந்தான்.

“கிண்டல் பண்ணலங்க... கல்யாணம் பேசி நிச்சையம் முடிஞ்சி, பத்திரிக்கை வச்சி, முகூர்த்த புடவையும் எடுத்து தைக்க குடுத்தாச்சு... இப்போ போய் இப்படி சொன்னா அது தான்...” என்று சிரித்தாள்.

“இல்லடி... எனக்கு ஓகே தான் ஆனா அம்மா எப்போ பாரு நீ சின்ன பிள்ளை சின்ன பிள்ளைன்னு சொல்லி உனக்கு நான் மேட்ச் இல்லன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்கடி...” என்றான் சற்றே வருத்தமாக..

“அம்மா மட்டும் இல்ல என் தம்பியும் சொன்னான்...” என்று உத்தமன் சொல்ல,

“உங்க தம்பி என்ன சொன்னாப்ல...” என்றவள் அவனது நெஞ்சில் இருந்து நீங்கி எழுந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“அது எனக்கு முன்னாடியே அவனுக்கும் தங்கச்சிக்கும் கல்யாணம் நடந்துடுச்சு இல்லையா?”

“ஆமாம்... அதுக்கு என்ன?”

“தம்பியும் தம்பி பொண்டாட்டியும் எப்போ பாரு சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்களாம். இத்தனைக்கும் அவங்களுக்கு இடையே உள்ள இடைவெளி இரண்டு மூன்று வருடம் தான். அதுக்கே அவங்களுக்குள்ள அவ்வளவு சண்டை வருமாம்... இதுல உனக்கும் எனக்கும் பத்து வருட இடைவெளி இல்லையா அதனால சண்டை ரொம்ப அதிகம் வரும். இந்த கல்யாணம் வேணான்னு சொன்னான்” என்றான். அவனது முகத்தில் தெரிந்த வருத்தம் அவளை வேதனைக் கொள்ள செய்ய,

தன்னை நிதானமாக்கிக் கொண்டு “அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க...” என்றாள்.

“எவ்வளவு சண்டை வந்தாலும் பரவாயில்லை எனக்கு என் உமை தான் வேணும்னு சொல்லிட்டு வந்துட்டேன்டி” என்றவனை பார்க்க ஏனோ மனசுக்கு அவ்வளவு நெகிழ்வா இருந்தது... அவனது கையை இறுக்கிப் பிடித்தாள்.

“பரவாயில்லை நான் அப்படிங்கிற சுயம் கொஞ்சமாச்சும் சாருக்கு இருக்கு..” என்று கிண்டல் பண்ணினாள். அதில் அவன அவளை முறைத்துப் பார்க்க, தன் மன நிலையை சற்று இலகுவாக்கியவள்,

“யார் என்ன வேணாலும் சொல்லட்டும்ங்க... எனக்கு நீங்க தான். உங்களுக்கு நான் தான்... நாம வாழ்ந்து அவங்க கருத்து தவறுன்னு நிரூபிக்கலாம் சரியா?” என்றவளை இருக்கிற இடம் மறந்து கட்டிக் கொண்டான்.

ஏனெனில் அவனது எண்ணமும் அதே தான்... அதனால் அவளை இறுக கட்டிக் கொண்டான். அவனது அணைப்பில் உருகி நின்றவள்,

“நாம வாழலாமா?” என்று கேட்டவளின் கண்களில் இருந்த காதலை பார்த்தவனுக்கு நெஞ்சுக் கொள்ளா பெருமையாக இருந்தது. அவளது நெற்றியில் முத்தம் கொடுத்தவன்,

“அப்படி என்ன தான் ஆகுதுன்னு பார்த்துடலாம்டி... உனக்கு நான் எனக்கு நீ...” என்று அவளின் நெற்றியோடு முட்டி உறுதிக் கொடுத்தான் உத்தமன்...

அதன் பிறகு அவளுக்காக என்று பார்த்து பார்த்து கழுத்தை ஒட்டி போடுவது போல வெள்ளை கற்கள் வைத்த சின்ன குட்டி நெக்லஸ் வாங்கிக் கொடுத்தான் ஆசையாக.

“அதென்ன இப்படி பார்த்து பார்த்து செலெக்ட் பண்றீங்க...? அதுவும் பர்ட்டிக்குலரா இந்த டிசைன்.. என்ன விசயம்ங்க?” கேட்டுக்கொண்டே அதை எடுத்து கழுத்தில் வைத்து அவனுக்கு போட்டுக் காட்டினாள்.

“அதுவா இந்த வெள்ளை கல் கழுத்தை ஒட்டி போட்டா அவ்வளவு அழகா இருக்கும்டி. அதுவும் எந்த உடை போட்டாலும் மேட்ச்சா இருக்கும். அது தான் எடுத்தேன். உனக்கு பிடிச்சி இருக்கா?” என்று அவளது விருப்பத்தையும் கேட்டான்.

“ரொம்ப பிடிச்சி இருக்குங்க..” என்றவள் அதையே வாங்கிக் கொண்டாள்.

அதன் பிறகு இருவரும் வெளியே சாப்பிட்டுவிட்டு அவளை கொண்டு வந்து வீட்டில் விட்டான். அவளது தம்பி வெளியே வந்து அவனை வீட்டுக்குள் அழைக்க,

“இல்ல மாப்பிள்ளை அத்தையும் மாமாவும் பத்திரிக்கை வைக்க வெளிய போயிருக்கிற சமயம் வீட்டுக்குள்ள வர்றது தவறு... அது தான் மாமா இன்னைக்கு இவளை வெளியே கூட்டிட்டு போக அனுமதி குடுத்தாங்கள்ள அதுவே போதும்.” என்றவன் அவனது கையில் ஒரு ஸ்வீட் மற்றும் ஸ்நேக்ஸ் பார்சலை கொடுத்துவிட்டு தன் வருங்கால மனைவியிடம் கண்களாலே விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டான்.

இதோ அதோ என்று திருமண நாளும் வந்தது.

அரக்கு நிற பட்டுப் புடவையில் தேவதையாக வந்து உத்தமன் அருகில் அமர்ந்தாள் உமையவள். அவளை தாரை வார்த்து கொடுத்து முறைப்படி சண்டங்குகள் எல்லாம் செய்து தாலி கொடியை அவளது கண் பார்த்து கட்டினான் உத்தமன். அவன் அணிவித்த தாலியை அவனது கண் பார்த்து வாங்கிக்கொண்டாள்.

தலையை கீழ குனி என்று அனைவரும் சொல்ல, உத்தமன் மட்டும் வேண்டாம் என்பது போல தலையசைத்து அவளின் கண்களை பார்த்துக் கொண்டே தாலியோடு பிணைத்து இருந்த மஞ்சள் கையிற்றையும் கட்டி விட்டான்.

மூன்று முடிச்சி போட்டு உமையவளை தன் பாதியாக ஏற்றுக் கொண்டவன், அக்னியை தாங்கள் வாழும் வாழ்க்கைக்கு சாட்சியாக வைத்து அவளின் கரத்தை பிடித்துக்கொண்டே அக்னியை சுற்றி வளம் வந்தான்.

அவனது முகத்தில் இருந்த கல்யாண கலையை அவரின் அன்னை பார்த்து ரசித்தாலும் ஏனோ இனி இவன் என் கைகளுக்குள் இருக்க மாட்டான் என்ற எண்ணம் வந்தது. அது உமையை வெறுப்பாக பார்க்க வைத்தது.

அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவரின் கணவன் மணமக்கள் இருவரையும் மனமார வாழ்த்தினார்.

திருமணத்தின் அடுத்த சடங்கான மெட்டி போடும் வைபவத்துக்கு தயாரானார்கள். கேமராக்கள் சுற்றிலும் சூழ, உமையவளின் மருதாணி இட்ட காலை பிடித்து அம்மியில் வைத்து, அவளின் பிஞ்சு கால் விரல்களை பிடித்து அதில் மெட்டியை மாட்டி விட்டான்.

இப்பொழுது அவனது முகத்தை குனிய விடாமல் அவள் அவனது காதில் சொல்ல, சிரிப்புடன் அவனும் மெட்டியை அவளது விரலில் மாட்டியபடி அவளின் முகத்தை நிமிர்ந்து நோக்கினான். இருவரின் பார்வையிலும் காதல் கரைபுரண்டு ஓடியது...!

அதை சுற்றி இருந்த கேமராக்கள் அனைத்தும் தத்ரூபமா படம் பிடித்துக் கொண்டன... அதன் பிறகு உணவு உண்ணுவது, ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டுக்கொண்டு, கலாட்டா பண்ணி அந்த நேரத்தை இனிமை செய்து, பிறகு  ரிஷப்ஷன், சம்மந்தி விருந்து, என எல்லாம் இனிதாக நடைபெற்றது...

பெண்ணின் வீட்டுக்கு முதலில் செல்வது வழக்கம். இங்கே உத்தமனின் அம்மா அதெல்லாம் முடியாது. முதல்ல மாப்பிள்ளை வீட்டுக்கு போய் விளக்கேற்றி விட்டு தான் பிறகு போகணும் என்று ஒரே ஆர்பாட்டம்.

வேறு வழியில்லாமல் உத்தமன் வீட்டுக்கு போய் விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு உமையின் வீட்டுக்கு சென்றார்கள். செல்லும் தூரம் அதிகம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகும். எனவே அவனது தோளில் படுத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

அவளின் சுமையை சுகமாக சுமந்தவன் அவளின் இடையில் கைப்போட்டுக் கொண்டு, அவளின் தலையோடு சாய்ந்துக் கொண்டு அவனும் விழி மூடினான். அவர்களோடு உத்தமனின் தங்கையும் அவளது கணவரும் உடன் வந்தார்கள்.

யார் கூட இருந்தால் எங்களுக்கு என்ன என்பது போல அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்த படி தூங்கிப் போனார்கள்.

அதை பார்த்துக் கொண்டு வந்த உத்தமனின் தங்கைக்கு பற்றிக்கொண்டு வந்தது. இதுங்களை விட சின்ன பெண் நான். நான் இருக்கேன்ற எண்ணம் இல்லாம எப்படி ரெண்டும் உரசிக்கிட்டு வருதுங்க பாரு...” என்று தன் கணவனிடம் சொல்லிக்கொண்டு முணுமுணுத்துக் கொண்டே வந்தாள். அவன் நீ பாட்டுக்கு சொல்லு என்பது போல அவனும் இருக்கையில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தான்.

உமையின் வீடு வர, இருவருக்கும் ஆராத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்று பாலும் பழமும் கொடுத்து உபசரித்து மாற்றுப்புடவை கட்ட சொன்னார் உமையின் தாய்.

“இல்ல அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... பொண்ணு கல்யாண புடவையோடு தான் எங்க வீட்டுக்கு வரணும்...  அது தான் சம்பிரதாயம்..” என்று உத்தமனின் தங்கை சொல்லிவிட,

உத்தமன் கண்களாலே உமையிடம் கேட்டான்.

“எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லைங்க. நான் மேனேஜ் பண்ணிக்குவேன். நீங்க கவலை படமா இருங்க..” என்றவள் பிறகு அங்கே இரவு உணவு சாப்பிட்டுவிட்டு நால்வரும் கிளம்பி உத்தமன் வீட்டுக்கு சென்றார்கள்.

வந்தவர்களுக்கு ஆராத்தி எடுத்து உள்ளே வர செய்தவர்கள் பெண்ணை தனியாக அழைத்து இரவு சடங்குக்கு குளித்து வர சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

போகும் அவளை சற்று வேட்கையுடன் தொடர்ந்தன உத்தமனின் கண்கள். அதிலே கால்கள் இரண்டும் பின்னிக்கொள்ள சற்றே நடுங்கியபடி போனாள் உமை.

Loading spinner
Quote
Topic starter Posted : June 25, 2025 11:22 am
(@gowri)
Estimable Member

வாவ், complete ஃபேமிலி டிராமா வா இருக்க போகுது.....

லேட் மேரேஜ்?????

ஏன், உத்து மிலிட்டரில இருந்தான?????

தம்பி, தங்கைக்கு எல்லாம் கல்யாணம் ஆகிட்டு....

இவங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல understanding இருக்கு....

அது போதும் தான்....

Loading spinner
ReplyQuote
Posted : June 25, 2025 10:54 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top