Notifications
Clear all

அத்தியாயம் 18

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவளுக்கும் சூசை நீட்டினாள் வினோ. ஆனால் அவளை எறேடுத்துக் கூட பார்க்காமல் “தேங்க்ஸ் மா. நான் இப்போ டீ குடிச்சுட்டு வரேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்துக்குறேன்” என்றவனின் பார்வை ஒரு மரியாதைக்கு கூட அவளை பார்க்கவில்லை.

“ம்ம் இதே பிகேவியர்ர்ல தான்டா உன்கிட்ட விழுந்தேன்” என்று சொன்னவள், உள்ளே போக பார்க்க,

“சார் இன்னையோட மூணு மாசம் முடிஞ்சு போச்சு.. நான் என் வீட்டுக்கு போறேன். பிள்ளையை தூக்கிட்டு உங்க மகள் வந்தாலும் சரி இல்ல நீங்க யார் வந்தாலும் சரி எனக்கு ஓகே தான்” என்று அவன் சொன்னதை காதில் வாங்கிய தமிழுக்கு நெஞ்சின் ஓரம் வலி எழுந்தது.

கிளம்ப அவனது அறைக்கு உள்ளே நுழைந்தான். சிறிது நேரத்தில் பெட்டியில் தன் துணிகளை அடக்கி  எடுத்துக் கொண்டு வர, அவனுக்கு முன்னாடி தமிழ் கிளம்பி நின்று இருந்தாள் பிள்ளையோடு.

தமிழ் கிளம்பி நிற்பதை பார்த்த பானுமதியோ ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார்.

“எங்க கிளம்புற இனியா?”

“கோர்ட் ஆடர் மா குழந்தை மூணு மாசம் நம்ம வீட்டுல இருந்தா அடுத்த மூணு மாசம் தென்னவன் வீட்டுல இருக்கணுமாம்” என்றாள்.

அப்படி சொன்னவளை வெறித்துப் பார்த்த பானுமதி,

“அதுக்கு அவசியமே இல்லை நீ உள்ள போ” என்றார்.

“ம்மா..” என்றவளை கோவத்துடன் பார்த்தவர்,

“உன் மனசுல இருக்க கசடை தூக்கி எறிஞ்சுட்டு வேலையை பாரு. இன்னும் நாலு நாள்ல உனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ண மாப்பிள்ளை வீட்டு காரங்க வராங்க” என்றார்.

“ஏன் ம்மா எனக்கு தான் கல்யாணம் வேணான்னு சொன்னேனே.. ஏன் மறுபடி மறுபடி டார்ச்சர் பண்றீங்க? இவனுக்கு நான் வேற ஏதாவது காரணம் கண்டு பிடிச்சு விரட்டி விடன்னும்” என்றவளை அடிக்க கை ஓங்கினார்.

அவர் இப்படி செய்வார் என்று எதிர் பார்க்காத கிருஷ்ண மூர்த்தி,

“பானு..” என்று ஒரே ஒரு சத்தம் தான். அந்த சத்தத்தில் மோத்தா வீடும் அதிர்ந்துப் போனது. பானுமதிக்குமே கொஞ்சம் பயம் தான்.

என்றைக்கும் சத்தம் போட்டு கூட பேசாத மனிதன் மகளை அடிக்க கை ஓங்கிய மனைவியை ஒரே ஒர் அதட்டல் தான். அதிலே கலங்கி விட்டார் பானுமதி.

“எல்லாம் நீங்க குடுக்குற இடம். அதனால தான் இவ இப்படி ஆட்டம் காட்டிக்கிட்டு இருக்கா.. என்னைக்காவது என் சொல் பேச்சை கேட்டு இருக்காளா.. அவளுக்கு என்ன பிடிச்சு இருக்கோ அதை மட்டும் தான் செய்யிறா. அதுல என்ன நல்லது இருக்கு என்ன கெட்டது இருக்குன்னு ஒன்னும் தெரியாம எதையாவது செஞ்சு வச்சுடுறா.. இவ்வளவு நாள் தான் கண்ணுமுன்னாடி இல்லாம லண்டன்ல இருந்தா. சரி இங்க வந்தாவது என்னோட இருப்பான்னு பார்த்தேன். ஆனா இப்பவும் என்னோட இருக்கிறதை விட இப்ப வந்த இந்த மூணு மாசத்து குழந்தை பெருசா போயிட்டான். அவனுக்காக எவ்வளவோ செய்யிறா. ஆனா பெத்தவன்ற முறைக்கு இவ இன்ன வரை என்ன செஞ்சு இருக்கா...?”

“பெத்தவ எனக்கும் ஒரு ஆசை இருக்கும்ல.. பெரியவ தான் அள்ளி தெளிச்ச கோலம் மாதிரி வாழ்ந்ததும் தெரியல, போனாதும் தெரியில... நம்மளை விட்டுட்டு ஒரேடியா போயிட்டா.. இப்போ இருக்குறது இவ ஒருத்தி தான். நான் என்ன பத்து புள்ளையா பெத்து வச்சு இருக்கேன். பத்துல ஒன்னும் கல்யாணம் பண்ணாம இருன்னு விடுறதுக்கு” என்றவரின் உள்கிடங்கை கொட்ட, கிருஷ்ணமூர்த்திக்கு ஐயோ என்று ஆனது.

“பொறுமையா சொல்லி புரிய வைக்கலாம் பானு” என்றார் கெஞ்சலாக.

“உங்களுக்கு புரியலங்க.. இது பொறுமையா பேசுற விசயம் இல்ல.. அவ வாழ்க்கை போயிட்டு இருக்கு உங்களுக்கு தெரியுதா இல்லையா?” என்று கேட்டவரை பெருமூச்சு விட்டு பார்த்த அவரின் கணவன்,

“உன் அவசரத்துக்கு பிள்ளையை குடும்பம் நடத்த சொன்னா அவ எப்படி நடத்துவா பானு” என்றவரை வெறுத்துப் போய் பார்த்த பானு,

“சும்மா அவளுக்கு கொடி பிடிக்கிறதை முதல்ல நிறுத்துங்க கிருஷ்ணன்.. அவ வாழ்க்கையை வீணாக்கிக்கிட்டு இருக்கா.. அதை கண்டிங்கன்னு சொன்னா திருப்பிகிட்டு என்னக்கே அட்வைஸ் பண்றீங்க.. நீங்க புத்தி சொல்ல வேண்டியது அவளுக்கு தான். எனக்கு இல்ல” என்றவரை பாவமாய் பார்த்த கிருஷ்ணன்,

“கல்யாணம் ன்றது இனியாவோட விருப்பம் பானு. இதுல நீ தலையிடுறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கல. அவங்கங்கவங்க வாழ்க்கையை அவங்க அவங்க தான் தீர்மானிக்கணுமே தவிர நாம இல்ல” என்று உறுதியாக சொன்னவர்,

“இதுக்கு மேல இந்த விசயத்துல நீ பேச எதுவும் இல்ல.. இனியாவை போக விடு” என்றார்.

“உங்களுக்கு எல்லாம் இப்ப சொன்னா புரியாது. நாளைக்கு அவ வாழ்க்கை சீர் கெட்டு போன பிறகு தான் உங்களுக்கு புரியும்” என்றவரை அடிக்கவே கை ஓங்கி விட்டார் கிருஷ்ணன்.

“என்ன வார்த்தைடி பேசுற.. பிள்ளை வாழ்க்கை உனக்கு அவ்வளவு ஈசியா போயிடுச்சா? சாபம் குடுக்குற மாதிரி பேசுற..” என்று அவர் கண்டித்த பிறகே பானுமதி தான் பேசிய பேச்சை உணர்ந்தார். சடாரென்று அவரின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.

“சாரிடி” என்று வேகமாய் ஓடிப் போய் மகளை கட்டிக் கொண்டார். அவரின் அன்பில் நெகிழ்ந்த தமிழ்,

“ம்மா அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க எதுக்கும் பீல் பண்ணாதீங்க.. அப்பா பேசுனதை நினைச்சு வருத்தப்படாதீங்க” என்று தேற்றிய மகளை கண்டு உள்ளுக்குள் பொங்கியது அவருக்கு. ஆனால் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் விருட்டென்று தன் அறைக்குள் போய் நுழைந்துக் கொண்டார்.

பானுமதி பேசிவிட்டு கலங்கிப் போய் மகளை கட்டிக் கொண்ட பிறகு அறைக்குள் சென்றதை பார்த்த கிருஷ்ணமூர்த்திக்கு மனது கட்டலாய் போனது.

“ம்மா நீ அவ பேசுனதை” என்று தந்தை ஆரம்பிக்கும் முன்பே,

“எனக்கு எந்த வருத்தமும் இல்லப்பா... கோழி மிதிச்சு குஞ்சு சாகாது.. நீங்க அம்மாவை இனி இப்படி பேசாதீங்க ப்பா” என்று சொன்னவளுக்கு இப்பொழுது தென்னவனுடன் வீட்டுக்கு போவதா வேண்டாமா என்று புரியவில்லை.

பிள்ளையை வைத்துக் கொண்டு அவள் தடுமாற,

“இங்கயே இரு. அங்க வர வேண்டாம்” என்று சொல்லி விட்டு தென்னவன் மட்டும் அவனின் வீட்டுக்கு கிளம்பி போய் விட்டான்.

அவன் போவதை பார்த்தவள் குழந்தையோடு தன் அறைக்கு வந்து விட்டாள். முன்பு இருந்த அந்த கம்பீரமும் அவன் மீது இருந்த கோவமும் இப்பொழுது அவளிடம் இல்லை.

தென்னவன் மீது இப்பொழுது எல்லாம் பச்ச தாபம் தான் எழுகிறது. அதை அடக்கிக்கொண்டு இறுக்கமாக இருப்பது போல காட்டிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் உள்ளுக்குள் அவளிடம் தென்படும் இளக்கம் அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

பெருமூச்சு விட்டவள் மகனை மார்பில் போட்டு தட்டிக் கொடுக்க, அவன் தூங்காமல் அவளின் மாராப்பை பிடித்து இழுத்து விளையாட ஆராம்பித்தான்.

கிருஷ்ணனுக்கு நடந்து முடிந்த சம்பவங்களால் தலை வலி வர போய் படுத்து விட்டார். ஆனால் அவரின் தம்பி கேசவனின் குடும்பமோ அண்ணன் குடும்பம் சண்டை போட்டுக்கொண்டு மூவரும் மூன்று திசையில் போவதை பார்த்து மகிழ்ந்து சிரித்துக் கொண்டு இருந்தார்கள். ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே.. அது தான் இங்கும் அரங்கேறியது.

வீட்டுக்கு வந்த தென்னவன் தன்னோடு வீடு வர தயாராக இருந்த தமிழை எண்ணி சிரித்துக் கொண்டான்.

“கொஞ்சமே கொஞ்சம் மாற்றா தெரியுதுடி” என்று மகிழ்ந்தான். “என் பழைய பிரெண்ட் திரும்பி வந்திடுவா.. அவ கோவம் எல்லாம் போய் மீண்டும் என்னோட பேசுவா” என்று எண்ணினான்.

ஆனால் அவனின் மகிழ்ச்சிக்கு நீண்ட ஆயுள் இல்லை என்று அவன் அறியவில்லை. அடுத்த நாள் காலையில் அலுவலகம் வந்த தென்னவனும் தமிழும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சட்டென்று பார்வையை விலக்கிக்கொள்ள முடியவில்லை.

என்னவோ தென்னவனை பல நாள் கழித்து பார்ப்பது போல பார்த்தாள் தமிழ். அவளின் பார்வையை விலக்க முடியாமல் பதில் பார்வை பார்த்து நின்றான் தென்னவன்.

இருவரின் பார்வையையும் கலைத்தது என்னவோ அவர்களின் புதல்வன் தான்.

அவனின் சத்தத்தில் இயல்புக்கு வந்தவர்கள் அவசரமாக தங்களின் வேலையை பார்ப்பது போல குனிந்துக் கொண்டார்கள். இருவருக்குள் நடக்கும் மௌன நாடகத்தை பார்த்த மகனோ கிளுக்கி சிரித்தான்.

முன்பு போல அவனிடம் எரிந்து விழவில்லை. எடுத்து எரிந்தும் பேசவில்லை தமிழ். தமிழ் இப்படி மௌனமாக இருப்பதை பார்த்த தென்னவன்,

“சாமி மலை இறங்கிடுச்சா என்ன? ரொம்ப அமைதியா இருக்க?” கேலியாக கேட்டான்.

“அதுவா எரிஞ்சு விழுந்தா என்னோட ஆயுள் குறையுதாம். எனக்கு வேற ரொம்ப நாள் வாழணும்னு ஆசையா அது தான் வீணா போனவன் மேல எதுக்கு எரிஞ்சு விழுந்துக்கிட்டுன்னு அமைதியா இருக்கேன்” என்றாள். அதை கேட்டு சிரித்தவன்,

“மூவி போகலாமா?” என்று கேட்டான்.

“என்ன மூவி?”

“வேற என்ன உனக்கு பிடிச்ச ஹாலிவுட் மூவி தான். நியூ ரிலீஸ். ஒரிஜினால் வெர்சன். ரெண்டு டிக்கெட் புக் பண்ணி இருக்கேன். போகலாமா?”

“டைம்”

“மார்னிங் ஷோ”

“மீட்டிங் கேன்சல் பண்ணனுமா?”

“இன்னைக்கு அர்ஜென்ட் ஒர்க்எதுவும் இல்ல, மீட்டிங்கும் இல்ல” என்றான்.

“அப்போ டன்” என்றவள்

 

காலையில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து முடித்து விட்டு இருவரும் பிள்ளையை தூக்கிக்கொண்டு படத்துக்கு கிளம்பி விட்டார்கள். அதிசயமாக தென்னவனின் காரில் பயணித்தாள் தமிழ்.

இருவரும் ஒன்றாக பயணம் செய்தார்கள் நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு.. அவளுக்கு பிடித்த பாடலை ஒலிக்க விட்டான்.

அவனது கண்கள் எட்டி குழந்தையை பார்த்தது. தமிழ் கண்டுக் கொள்ளவில்லை. என்னிடம் குடு என்று அவன் கேட்கவில்லை.

“அற்றை திங்கள் வானிடம்..” என்ற பாடல் ஒலிக்க விட்டவனை திரும்பி பார்த்தவள்,

“இன்னுமா மறக்காம இருக்க?” கேட்டாள்.

“உன்னை சார்ந்த எதுவும் என் நினைவுகளை விட்டு என்றும் அகலாதுடி” என்று மனதுக்குள் சொல்லிக்  கொண்டவன்,

“சில விசயங்கள் அப்படி தான் ஏன் எதுக்குன்னு கேட்காம அனுபவிமா” என்றான்.

“ஓகே தட்ஸ் ரைட்” பிள்ளையோடு விளையாடிபடி பாட்டை இரசித்துக் கொண்டு வந்தாள். அடர் இருளில் இருவரும் அருகருகே உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்தார்கள்.

“ஸ்நேக்ஸ் வேணுமா?”

“ம்ம்” என்றவள் “கேரமேல் பாப்கான் பால்ஸ்” சொல்லும் முன்பே,

“கேரமேல் பாப்கான் பால்ஸ் தானே” கேட்டான் தென்னவன்.

“ம்ம்” என்று மட்டும் தலையை ஆட்டினாள். இவனும் போய் வாங்கிக்கொண்டு வந்து அவளுக்கு அருகில் அமர்ந்துக் கொண்டான்.

அமர்ந்தவனிடம் “இந்த பிள்ளையை வச்சு இரு.. சாப்பிட்டுட்டு வாங்கிக்கிறேன்” என்று சொன்னவளை அந்த இருளில் கண்கள் ஒளிர பார்த்தான்.

“ப்ச் பார்த்துக்கிட்டே இருக்காம முதல்ல வாங்கு” என்று ஒரு அதட்டல் போட்டாள். சட்டென்று குழந்தையை வாங்கிக் கொண்டான் தென்னவன். குழந்தையை தொட்ட உடனே அவனுக்கு உடலெல்லாம் புல்லரித்தது.. முதல் முதல் தொடுகை. பிள்ளைக்கு நோகாமல் வாங்கி நெஞ்சில் போட்டுக் கொள்ள அவன் தடுமாற, தமிழ் “இப்படி பிள்ளையை படி” என்று சொல்லிக் கொடுத்து அவனது நெஞ்சில் போட்டு விட்டாள். தென்னவனின் உடல் சிலிர்த்தது.. அதை பார்த்தவளுக்கு இதழ்களின் ஓரம் சின்ன புன்னகை எழுந்தது.

அடுத்த சில நாட்களில் குழந்தை காணமல் போனது...

 

தொடரும்..

Loading spinner
Quote
Topic starter Posted : June 24, 2025 10:36 am
(@gowri)
Estimable Member

அச்சோ...ஏன் இந்த கொலவெறி ரைட்டர் 🥺🥺🥺🥺

யார் காரணம்?????

அவ சித்தப்பா ஃபேமிலியா 

Loading spinner
ReplyQuote
Posted : June 24, 2025 1:46 pm
Admin
(@ramya-devi)
Member Admin

Posted by: @gowri

அச்சோ...ஏன் இந்த கொலவெறி ரைட்டர் 🥺🥺🥺🥺

யார் காரணம்?????

அவ சித்தப்பா ஃபேமிலியா 

அத சொன்னா என்னடா சுவாரசியம் சீக்கிரம் தெரியும்😉😉

 

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : June 24, 2025 10:19 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top