Notifications
Clear all

அத்தியாயம் 30

 
Admin
(@ramya-devi)
Member Admin

குரு விருது வாங்குவதை பெருமையுடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் சதி... இது ஒவ்வொரு வருடமும் வாங்கும் விருது தான் என்றாலும் குரு ஒவ்வொரு முறையும் மேடை ஏறி வாங்கும் தருணங்கள் அவளுக்கு பொக்கிஷம் வாய்ந்தவை...

இந்த தருணத்தையும் அவள் பொக்கிசமாய் தனக்குள் பொத்தி வைத்துக்கொண்டாள். அவளோடு கூடவே அவனது குடும்பமும் அமர்ந்து இருந்தது...

விழா சிறப்பாக முடிய, அனைவரும் கலைந்து சென்றார்கள்.

அந்த நேரம் வளர்ந்து வரும் ஒரு இயக்குனர் அவளை தனியாக அணுகினார்.

“லேடிஸ் கான்சப்ட்ல ஒரு படம் பண்ண போறேன்... நடிக்கிறீங்களா...?” என்று எடுத்த எடுப்பிலே கேட்க, அவள் மறுத்துவிட்டாள்.

“இல்ல சார் எனக்கு அதுல விருப்பம் இல்ல...” மறுத்தாள்.

“மேம் கதை என்னன்னு கூட கேட்காம...” அவன் கேட்க,

“ப்ளீஸ் சார் எனக்கு நடிக்கல்லாம் வராது... ப்ளீஸ் டோன்ட் டிஸ்டப் மீ...” நாசுக்காக விலகிக்கொண்டவள், குடும்பத்தினரோடு சேர்ந்துக்கொண்டாள்.

பின்னாடி வந்த குருவிடம் அந்த இயக்குனர் இதையே சொல்ல,

“இல்ல ஆகாஷ் இதெல்லாம் ஒத்து வராது..” என்று அவனும் உறுதியாக சொல்லிவிட்டு இவர்களோடு சேர்ந்துக்கொண்டான்.

அடுத்து வந்த நாட்கள் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு டான்ஸ் பழக்கி கொடுப்பதிலே நேரம் முழுவதும் சென்றது... கூடவே நவீன் ரேக்கா கல்யாண வேலையும் சேர்ந்துக்கொள்ள, குரு சதியின் நேரமும் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது..

இருவரின் மன தாங்களும் அப்படியே தான் இருந்தது... ஆனால் ரேக்காவிற்க்கு புடவை எடுக்கும் போது மட்டும் குரு சதிக்கு அவனே புடவை எடுத்து கொடுத்தான்.

அதில் கொஞ்சம் சமாதானம் ஆனவள் அவனை பார்த்தாள். ஆனால் அவனோ அவளது பக்கம் கூட திரும்பவே இல்லை...

“போ மாமா ரொம்ப தான் பண்ற...” நொடித்துக்கொண்டவள், அதன் பின் அவனது பக்கம் திரும்பவே இல்லை... பத்திரிக்கை வைக்க ஆளாளுக்கு ஒரு புறம் அலைந்துக்கொண்டு இருந்தார்கள். மிக பெரிதாக செய்ய திட்டமிட்டார்கள் குருவும், கார்த்தியும்.

நவீனை அதிகம் அலைய விடாமல் ராக்கியை உடன் வைத்துக்கொண்டு குருவே முன்னின்று செய்ய நவீனுக்குள் தன் அண்ணனின் மீது அன்பு அதிகரித்தது...

பிசினெஸ் வட்டாரம், சினிமா வட்டாரம், சொந்த பந்தம், கலைக்கூடம் என்று திருமணத்திற்கு கிட்டத்தட்ட ஐய்யாயிரம் பேருக்கு மேலே வந்து இருந்தார்கள்.

ஒரு குறையும் இல்லாமல் திருமணம் சிறப்பாக நடந்துக்கொண்டு இருந்தது... மேடையில் இருந்த குரு சதியை தேட, அவளை எங்கும் காணவில்லை...

சட்டென்று இதயத்தில் ஒரு வலி, வேகமாய் அவளை தேடினான் எங்கு இருக்கிறாள் என்று... விழிகளை சுழற்றி அவளை தேடினான்... அவளோ அங்கு எங்குமே இல்லை...

வேகமாய் மணமகன் அறைக்குள் சென்று பார்த்தவன் அங்கு கண்கள் சிவக்க ஓய்ந்து போய் அமர்ந்து இருந்தவளை கண்டு குருவிற்கு இதயமே மரணித்து போனது போல இருந்தது...

“ஏய் என்னடி ஆச்சு... ஏன் இங்க வந்து இப்படி உட்கார்ந்து இருக்க... வா, அங்க உன்னை தான் எல்லாரும் தேடுறாங்க...” என்று அவளை எழுப்பி நிற்க வைத்தான்.

அவனது கரத்தை விலக்க முடியாமல்,

“இல்ல மாமா அங்க வளர்க்கிற ஓம புகை கண்ணெல்லாம் பட்டு எரியுது.. அந்த எரிச்சல் தாங்காம தான் இங்க வந்து இருக்கேன்... நீங்க போங்க... அதோட குழந்தைக்கு வேற இதெல்லாம் சேராது... அதான் அவனையும் கூட்டிட்டு வந்துட்டேன்...” என்று சொன்னவளை கூர்ந்து பார்த்தவனுக்கு லேசாய் பொறி தட்டியது...

“என்ன உனக்கு இப்படியெல்லாம் நடக்கலன்னு ஆத்திரமா வருதா...? அதான் இங்க வந்து இருக்கியா...?” என்று அவனை அறியாமலே அவளது இதயத்தில் வேலை பாய்ச்சினான்...

அதை கேட்டவளுக்கு மனம் உடைந்து போய் உடலெல்லாம் பதறிப்போனது. ஆனாலும் அதை அவனிடம் சிறிதும் காட்டிக்கொள்ளாமல் இதழ்களை காதுவரை இழுத்து,

“ஏன் எனக்கு அந்த ஆசை வரக்கூடாதா...? ஆமா எனக்கு ஆத்திரமா தான் வருது... எங்க என் கண்ணே பட்டு அவங்களுக்கு திருஷ்ட்டி விழுந்திடுமொன்னு தான் இங்க இருக்கேன் போதுமா...?” என்று சொன்னவள், சட்டென்று திரும்பிக்கொண்டாள். வேதனையில் கசங்கிய முகத்தை அவனிடம் காட்டாமால்.

அவளது பேச்சை கேட்ட குருவிற்கு கோவம் தான் வந்தது.. கிடைக்கும் போது அதன் அருமை தெரியாம காலால் எட்டி உதைச்சுட்டு இப்போ வந்துட்டு ஐயோ அம்மான்னா உடனே கிடைச்சிடுமா...? கோவப்பட்டவன் கிளம்பிவிட்டான்.

அவளை விட்டு இரண்டடி எடுத்து வைத்தவன் சட்டென்று அவளின் புறம் திரும்பி,

“உன்னை யாருடி என்ன சொன்னா... சொல்லு...” கர்ஜனையாக கேட்டவனது குரலில் தூக்கிவாரிப்போட அவனை பார்த்தாள்.

“மாமா...?”

“யாரு அது...?” என்றான் ஆத்திரத்தை அடக்கிய குரலில்...

“அப்படி எல்லாம் எதுவும் இல்லங்க.. எனக்கு தான் பொறாமையா இருக்கு... அவங்க கல்யாணம் மட்டும் இப்படி இவ்வளவு சிறப்பா நடக்குதேன்னு... அந்த ஆத்திரத்தை எப்படி காட்டுறதுன்னு தெரியாம தான் இங்க வந்து உட்க்கார்ந்துக்கிட்டேன்...” என்றாள்.

“என்னோட சதிய பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்... அவளுக்கு ஆசை இருக்குமே தவிர இப்படி ஒண்ணு ஒண்ணுத்துக்கும் சோர்ந்து போய் மூலையில முடங்க மாட்டா...”

“இல்ல அது... அன்னைக்கு நகை எடுக்க போய் இருந்தமே அப்பவும் என்னால அதை பார்க்க முடியாம தானே நான் பாதியில வந்துட்டேன்... இப்பவும் அதே மாதிரி தான்...” என்று தன் செயலுக்கு விளக்கம் கொடுத்தவளை கூர்ந்து பார்த்தவன்,

“அப்போ என் சதிக்கிட்ட ஒரு நேர்மை இருந்தது... ஆனா இப்போ அது இல்ல...” என்றவன்,

“அதோட... முதல் முறை மட்டுமே நீ அப்படி பீல் பண்ணின.. அதுக்கு பிறகு முழு மூச்சா இந்த கல்யாணத்துல எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சது நீ தான்... அப்படி இருக்கும் போது இப்போ நீ இப்படி ஓரமா வந்து உட்கார்ந்து இருக்கண்ணா இதுக்கு பின்னாடி கண்டிப்பா யாரோ இருக்காங்க...”

“சொல்லு யாரு அது...” என்று அவன் கேட்க, அவனது உறுதியான குரலில் அவளது உடல் உதறல் எடுத்தது...

ஏனெனில் குருவிற்கு கோவம் வந்தால் அவன் யாரு என்ன என்பதையெல்லாம் வைத்து கூட பார்க்க மாட்டான்... சொல் அம்பினால் விட்டு விளாசி தள்ளிவிட்டு தான் மறுவேலை பார்ப்பான்.

அதுவும் சதிக்கு ஒன்று என்றால் சொல்லவும் வேண்டுமா அவனது கோவத்தை...

“இல்லங்க... அப்படியெல்லாம் யாரும் எதும் என்னை சொல்லல... நீங்க அங்க போங்க.. எல்லோரும் தேட போறாங்க...” என்று அவனை சமாதானம் செய்ய,

“அப்போ நீ அங்க வா.. அப்போ தான் நான் அங்க போவேன்... இல்லன்னா ரெண்டு பெரும் இங்கயே இருக்கலாம்...” என்று சொல்லி அவன் பாட்டுக்கு அங்கு இருந்த படுக்கையில் படுத்துவிட்டான்..

அவனது இந்த அழிச்சாட்டியத்தை கண்டவளுக்கு திக்கென்று இருந்தது... இந்த விஷயம் குருவிற்கு தெரிந்தே இந்த பாடு படுத்துகிறான். இதில் மொத்த குடும்பத்திற்கும் தெரிந்தால் அவ்வளவு தான் என்று கலவரமானவள்,

வேகமாய் குருவின் கையை பிடித்து எழுந்து அமரவைத்தவள்,

“சரி வாங்க போகலாம்... ஆனா மேடை ஏற மாட்டேன்...” என்று சொன்னவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“சரி வா..” என்று மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு மண்டபத்தினுள் நுழைந்தவன், வரிசையாக போட்டு இருந்த சோபாவில் மேடைக்கு நேராக சென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்துக்கொண்டான்.

அவனது இந்த செயலை சற்றும் எதிர் பார்க்காதவள்,

“என்ன மாமா இது... நீங்க இங்க உட்கார்ந்து இருந்தா எப்படி...? பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க...”

“பார்க்கிறவங்க என்ன நினைச்சா எனக்கென்ன...? என் பொண்டாட்டி எங்க இருக்காளோ அங்க தான் நான் இருப்பேன்...” என்று சொன்னவன் அருகில் இருந்த விஐபி இடம் பேச ஆரம்பித்தான்.

சதிக்கு வேறு வழியில்லாமல் குழந்தையோடு அமர்ந்துக்கொண்டாள். ஆனால் மனதில் ஒரு வித இதம் இருந்தது என்னவோ உண்மை..

ஆனாலும் மனது கேட்காமல்,

“மாமா...” என்று அவனை சுரண்டினாள்.

“ப்ச் என்னடி...” என்று கடுப்படித்தான்.

“ப்ளீஸ் மாமா...” கெஞ்சியவளை அழுத்தமாக பார்த்து,

“உன்னை வேணான்னு சொல்லி தானே ஒதுக்கி வச்சாங்க...?” என்று அவன் கேட்க, பதில் சொல்லாமல் தலை குனிந்துக்கொண்டாள்.

அவளது குனிந்த முகத்தை ஒற்றை விரலால் பற்றி தூக்கியவன், அவளை ஆழ பார்த்து,

“உன்னை ஒதுக்கி வச்சா அது என்னையும் ஒதுக்கி வச்சது போல தான்.. நான் வேற நீ வேற இல்ல... அதனால நான் வேணும்னு நினைச்சா உன்னை முதல்ல ஏத்துக்கட்டும்... உன்னை வேணான்னு ஒதுக்கி வச்ச இடத்துல என்னால முதல் மரியாதை வாங்க முடியாது... நீ தான் நான்... நான் தான் நீ... அதை அவங்க புரிஞ்சுக்கட்டும்...” என்று சொன்னவனின் மீது காதல் வெள்ளம் இன்னும் கரைபுரண்டு ஓடியது... 

“மாமா...” என்று நெகிழ்ந்து போனாள்.

அவளை தோளோடு சாய்த்துக்கொண்டவன், கம்பீரமாக அமர்ந்து தன் எதிரில் இருந்த மேடையை பார்க்க தொடங்கினான்.

அங்கு நவீனும் ரேக்காவும் முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் தங்களது திருமண சடங்குகளை செய்துக்கொண்டு இருந்தார்கள்.

ராதிகாவும் குமாரும் குரு அங்கு போய் அமர்ந்து இருந்ததை பார்த்தவர்களுக்கு யோசனையாய் போக, ராக்கியிடம் என்ன என்று கேட்டார்கள்.

அவனுக்கு தெரியாது என்று சொல்ல, கல்யாண பரபரப்பில் அந்த விசயத்தை அப்படியே விட்டுவிட்டனர்.

நவீனின் தாய் மாமா என்கிற முறையில் சேகரும் ஆனந்தியும் அனைத்து சடங்குகளும் செய்தார்கள்.

நல்ல நேரம் கூடி வர, நவீன் ரேக்காவின் கழுத்தில் தாலியை கட்டி தன் மனைவியாக ஏற்றுக்கொண்டான்... அதன் பின் இருவரது பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டவர்கள், கீழிறங்கி குரு சதி காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, இருவரையும் வாழ்த்தி தங்களுடைய பரிசு பொருளை இருவரது கரத்திலும் கொடுத்தார்கள்.

இருவரது பெயரிலும் வாங்கிய ஒரு ஹோட்டல், அதுவும் இந்தோனேசியாவில்... கூடவே ஒரு கார்... அதுவும் வெளிநாட்டு இறக்குமதி... சொல்லவே வேண்டாம் இரண்டையும் பார்த்து அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது நவீனுக்கு.

ஏனெனில் நவீனுக்கு இந்தோனேசியாவில் தன் ஹோட்டல் பிசிநேசை நிறுவ ஆசை. அதை குமார் தடுத்துக்கொண்டே வந்தார்.

ஆனால் இன்று குரு அந்த ஆசைக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட, தன் தமையனை தாவி வந்து அணைத்துக்கொண்டான்.

“தேங்க்ஸ் அண்ணா...” என்று மகிழ்ந்தான்...

“டேய்...” என்று சொல்லி தன்னோடு இறுக்கிக்கொண்டான் நவீனை.

அதன் பின் சடங்குகள் அனைத்தும் முறையாக நடை பெற, மணமக்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். இங்கு சடங்கு முடித்து பெண் வீட்டுக்கு அனுப்பி வைத்தவர்கள், அங்கும் உடனடியாக சடங்கு முடித்து மறுபடியம் மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

குருவையும் சதியையும் மணமக்களோடு போக சொல்ல,

“இல்லம்மா சின்னவனை வச்சுக்கிட்டு அங்கயும் இங்கயும் அலையை முடியாது... ஏற்கனவே மண்டபத்துல நிறைய பேர்க்கிட்ட கை மாறவும் குழந்தை அழுதுக்கிட்டே இருக்கான்... இதுல மறுபடியும் அலைஞ்சா அவனுக்கு ஏதாவது வந்துட போகுது... அத்தையையும் மாமாவையும் கூட போக சொல்லுங்க... இது முறை தானே...? அதனால் ஒண்ணும் இல்ல...” என்று நாசுக்காக மறுத்துவிட்டான்.

அவன் சொல்லும் காரணம் சரியாக இருக்க, மேற்கொண்டு யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் நவீனுக்கு மட்டும் மனதின் ஓரத்தில் ஏதோ இருக்கிறது என்று தோன்றியது..

ரேக்காவின் வீட்டிற்கு போகும் முன்பு சதியிடம் வந்தவன்,

“அண்ணி நான் இன்னைக்கு காலையில இருந்து உங்களை பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்... நீங்க சரியே இல்ல... யாரு உங்களை என்ன சொன்னா...? நீங்க இப்படி ஒதுங்கி போற ஆளே இல்ல.. அதுவும் இந்த கல்யாணத்துல நீங்க தான் முன்னாடி நின்னு எல்லாமே பார்த்துக்கிட்டு இருக்கீங்க... அப்படி இருக்கும் போது நீங்க இப்படி ஒதுங்கி ஒதுங்கி போறது மனதுக்கு கஷ்டமா இருக்கு... யாரோ போல என் கல்யாணத்தை கீழ நின்னு பார்த்துட்டு இருக்கீங்க...?” என்று குரல் அடைக்க சொன்னவன்,

“யார் என்ன சொன்னாலும் நீங்க இப்படி இருந்து இருக்கலாமா...? அப்போ நான் யாரோன்னு தானே நீங்க இந்த அளவுக்கு இருக்கீங்க..” சொன்னவனின் கண்கள் கலங்கி விட, அதை அவளுக்கு காட்டாமல் விருட்டென்று விலகிச் சென்றுவிட்டான்...

அவனது இந்த கண்ணீர் சதியை வேதனை படுத்த, தரையில் அமர்ந்து கதறிவிட்டாள்.

எல்லாமே கொஞ்ச நேரம் தான்... வேக வேகமாய் தன் முகத்தை அலம்பி சிறிதாய் ஒப்பனை செய்துக்கொண்டவள், தன் குழந்தையை தூக்கிக்கொண்டு கீழே வந்தாள்.

குரு என்ன என்பதாய் பார்க்க, அவனை அருகில் அழைத்து கிளம்ப சொன்னாள்.

“எதுக்குடி...”

“நவீனுக்கு நம்ம ஒதுக்கம் தெரிஞ்சி போச்சுங்க... பாவம் ரொம்ப பீல் பண்ணிட்டான்... எனக்கும் ரொம்ப கஷ்டமா போச்சு...” சொல்லும் போதே நவீனின் அன்பை கண்டு கண்கள் கலங்கியது...

“அண்ணியும் கொழுந்தனும் சேர்ந்துக்கிட்டு என்னை போட்டு பாடா படுத்தி எடுங்க..” அவளின் காதில் கர்ஜித்தவன், கிளம்பி வந்தான் சிறிது நேரத்தில்.

நவீனும் ரேக்காவும் ஒரு காரில் கிளம்ப, அடுத்த காரில் ஏறப்போன தன் பெற்றவர்களை தடுத்துவிட்டு, குருவின் காரில் ஏறி அமர்ந்தாள் தன் குழந்தையோடு...

அதன் பிறகே ராதிகாவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவரும் காலையிலிருந்து இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார் ஒதுங்கி ஒதுங்கி போனதை. இப்பொழுது கிளம்பி சென்றதை பார்த்தவுடன் தான் மனது நிறைந்து போனது...

கலங்கிய கண்ணீரை சீலையின் தலைப்பில் துடைத்துக்கொண்டவர் வந்தவர்களை கவனிக்க தொடங்கினார்..

ரேக்கா வீடு காரில் சென்றால் ஒரு முக்கால் மணிநேரத்தில் வந்துவிடும் தூரம் தான் என்பதால் அங்கு போய் முறைப்படி செய்துவிட்டு இரவுக்கு நவீன் வீட்டிற்கு வந்து சடங்குகளை செய்து கொள்ளல்லாம் என்று முடிவு செய்து இருந்தனர்.

அடுத்த முக்கால் மணி நேரத்தில் ரேக்காவின் வீட்டிற்கு வந்து இருந்தார்கள் இருவரும்...

நவீனும் ரேக்காவும் காரை விட்டு இறங்கி பின்னாடி பார்க்க, அங்கே தன் அண்ணனும் அண்ணியும் நின்றிருப்பதை பார்த்தான்.

அவர்களை அங்கு சிறிது கூட எதிர் பார்க்கவில்லை... எங்கே கண்கள் கலங்கிவிடுமோ என்று பயந்து தான் போனான் நவீன். கண்களை சிமிட்டி தன்னை நிலை நிறுத்திக்கொண்டவனை பார்த்து மென்மையாக சிரித்தவர்கள், அவனையும் ‘சிரி’ என்பது போல கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் விரித்து காண்பித்தார்கள்.

அதை பார்த்தவன் வழுக்கட்டாயமாக தன் இதழ்களை இழுத்து சிரிப்பது போல செய்தான். குருவும் சதியும் முறைக்க இயல்பாக சிரித்தான்.

அதற்குள் உள்ளிருந்து ஆராத்தி கரைத்துக்கொண்டு ரேக்காவின் உறவினர்கள் வந்துவிட, அங்கு இருக்கும் சடங்கை முடித்துவிட்டு இரவு உணவையும் உண்டுவிட்டு வீடு திரும்பினர்.

இங்கு வந்த பின்பும் சதி தன் அறைக்குள் நுழைய பார்த்தாள். ஆனால் குரு விடவில்லை..

“போ... நீ தான் ரேக்காவை தயார் பண்ணனும்... அம்மா நீ ஒதுங்கி போறதை பார்த்துட்டு என்னவோ ஏதோன்னு பதறிக்கிட்டு இருக்காங்க... நவீன் வேற ரொம்ப நேரம் காத்துக்கிட்டு இருக்க போறான்... சீக்கிரம் தயார் பண்ணி அனுப்பிட்டு வா...” என்று கட்டளையாக சொல்ல, சதிக்கு பெரும் தயக்கத்துடன் அவனது பேச்சை தட்டாமல் ரேக்காவிற்க்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்.

ரேக்காவும் அவளுடன் சகஜமாக பேச, சதி சட்டென்று இயல்புக்கு வந்தாள். பின் சின்ன சின்ன கேலி பேசி அவளை தயார் செய்தவள், ரேக்காவை அழைத்துக்கொண்டு நவீனின் அறைக்கு அனுப்பிவிட்டு, தன் அறைக்கு திரும்பினாள்.

தன் அறைக்குள் நுழைந்தவளுக்கு காலையில் நடந்த சம்பவம் வந்து வேதனை படுத்த குழந்தையை கூட கவனிக்காமல் வேகமாய் குளியல் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

Loading spinner
Quote
Topic starter Posted : June 13, 2025 3:02 pm
(@gowri)
Estimable Member

என்னவாம் இப்ப????

Loading spinner
ReplyQuote
Posted : June 20, 2025 10:40 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top