Notifications
Clear all

அத்தியாயம் 29

 
Admin
(@ramya-devi)
Member Admin

சதியை மருத்துவமனையில் அனுமதித்த பின் அடுத்த ஒரு வாரம் கழிந்த பின்பே கண்விழித்தாள்... அதுவரை பொறுமையாக இருந்தவன், அதற்கு மேல் சிறிதும் தாமதிக்காமல் மேற்கொண்டு ஆகும் மருத்துவ செலவுக்காக தனது கிரிடிட் கார்டை கொடுத்துவிட்டு,

“என்னோட மகனை மட்டும் கூட்டிட்டு வாங்க...” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன் இந்தியாவுக்கு கிளம்பி வந்துவிட்டான்...

சதி கண்விழித்து குருவை தேட, அவனது பாரா முகம் கண்டு அவ்வளவு உடல் வேதனையிலும் கலங்காத அவளது மனம் அவனது புறக்கணிப்பில் கலங்கிப்போனது...

பிரசவம் ஆன உடன் பெண்கள் முதலில் காண விரும்புவது அவளுடைய கணவனை தான்.. ஆனால் இங்கு இருக்கும் பல ஆண்களுக்கு அவர்களின் மெல்லிய உணர்வுகளை ஏனோ புரிதுக்கொள்ளாமலே இருக்கிறார்கள்...

இங்கு குருவும் அதே தவறை செய்தான்... அதும் தன் மனதை அடக்கிக்கொண்டு... அவளது அன்பை முழுமையாக உணர்ந்துக்கொண்டான் ராக்கி மற்றும் நவீனின் மூலம்...

அதில் கலங்கி போனவன், என்ன செய்ய போகிறேன் அவளுக்கு... என்றே எண்ணினான்... ஆனால் இரத்த வெள்ளத்தில் அவள் இருந்த பொழுது அவனது நெஞ்சுக்கூடு என்ன பாடு பட்டு போனது என்பது அவன் மட்டும் தானே அறிந்து இருந்தான்.

அவளை உயிரோடு பார்ப்பேனா என்று தன் காதில் அலறிய மனதை அடக்க முடியாமல், தினம் தினம் கண் மூடும் போதெல்லாம் அவன் அனுபவித்த சித்தவதை இதெல்லாவற்றையும் எப்படி மறப்பது..

இதோ இப்பொழுது கூட கைகளை காணும் போது அதில் அவளது குருதி இருப்பது போலவே அல்லவா தோன்றுகிறது... இதை எல்லாவற்றையும் விட அவ்வளவு வலியையும் அதும் பிரசவ வலியை பொறுத்துக்கொண்டு அவள் மிக நளினமாக ஆடிய ஆட்டம்... அதும் தனக்காக என்று எண்ணும்பொழுது காதல் பெருக்கெடுத்து வழிகிறதே...

ஆனால் அதை தன்னிடம் சொல்லாமல் கடைசி வரை மறைத்து ஆடியதை அப்படி என்ன என் மீது கண் மூடி தனமான காதல் என்று என்நெஞ்சே என்னை கொல்லுகிறதே...

இதெல்லாம் ஒரு காரணமாக வைத்து இருந்தாலும், குழந்தையின் உயிரில் கொஞ்சம் கூட அக்கறை இல்லையா...? என்று என் மனம் கதறுகிறதே...? அதற்க்கு அவளால் என்ன பதில் சொல்ல முடியும்... இல்லை அவளை இந்த விசயத்தில் குற்றவாளியாய் என்னால் எப்படி நிறுத்த இயலும்...? என்று தனக்குள்ளே பல குழப்பங்களை வைத்துக்கொண்டு அதித காதலுக்கும் வெறுப்புக்கும் இடையில் நின்று தனக்கு தானே ஒரு வேலியை போட்டுக்கொண்டு சதியை விட்டு விலகி இருந்தான்...

ராக்கி, நவீன், மற்றும் ராதிகா மூவரும் குருவின் முடிவை சொல்ல ஓய்ந்து போனாள்... தன் குழந்தையை கையில் கூட வாங்க முடியாத அளவிற்கு அவள் தளர்ந்து போய் இருந்தாள்.

வயிற்றில் ஏற்பட்டு இருந்த கிழிசல் சற்று ஆழ கிழியாமல் இருந்ததால் அவளது உடல் சற்று விரைவாக தெரியாது... ஆனாலும் அந்த கிழிசலுக்கு தையல் போட வேண்டிய நிலை இருந்தது... பிள்ளை பெற்ற உடல்... வயிற்று உள் புண்ணோடு, இந்த வெளி புண்ணும் சேர தளர்ந்து போனாள்.

பத்தாதற்கு குருவின் பாரா முகம்... ஒரு வாரம் கடந்த பின்பே தீபாவின் நினைவு வர, சேகருக்கு அழைத்தாள்.

“நீ வருவன்னு நினைச்சேன் டா.. ஆனா உன் நிலைமை அதுக்கு மேல மோசமாக இருக்குறதா அக்கா சொன்னாங்க. அதான் மாமாவும் வேற ஊர்ல இருந்து வந்தாரா... அதனால இறுதி சடங்கு செஞ்சு முடிச்சுட்டோம்... நீ வந்ததுக்கு பிறகு பதினாறாவது நாள் காரியம் பண்ணிக்கலாம்...” என்று சொல்ல மனமெல்லாம் வலித்தது...

குழந்தை வேணும்னு கேட்டவள், அந்த குழந்தையை கூட பார்க்காமல் சென்ற துக்கம் அவளை பெரிதாக தாக்கியது...

இந்தியா வந்த சதி நேராக குருவை பார்க்க சென்றாள். ஆனால் குரு அவளை பார்க்க அனுமதிக்கவில்லை... கண்ணீரோடு திரும்பியவள், அவளது வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

கூடவே குழந்தையையும் அவன் தர மறுக்க, இன்னும் அதிக வேதனையில் அவள் சுழன்றாள்.

பிள்ளை பெற்றதே இங்கு சிக்கல். அதன் பின்பு மன ரீதியாக ஆயிரத்தெட்டு வேதனைகள்... அந்த நடனத்திற்கு பின் குருவை இன்னும் நேரடியாக பார்க்கவேயில்லை... காதல் கொண்டவனின் பாரா முகம். இதில் உடல் நோவு, அந்த நோவோடு குழந்தைக்கு பால் கொடுக்காமல் இருப்பது வேதனையின் உச்சம்...

அத்தனை சிக்கலையும் வேதனையையும் வலியையும் தாங்கிக்கொண்டவளின் மன வலிமை அங்கு யாருக்கும் புரியாமல் போனதோ... உற்றவனுக்கே அவளது வேதனை, வலி, எதுவும் புரியாமல் போக மற்றவர்களை நொந்து என்ன பயன் என்று அமைதியாக இருக்க ஆரம்பித்தாள்.

யாருக்காக இத்தனையையும் பண்ணினாளோ அவனே அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை... நெடுமூச்செறிந்தவள், தன்னுடைய நினைவளைகளில் இருந்து மீண்டாள்...

தன் அருகில் இருந்தவனை கண்ணீருடன் பார்த்தாள். அன்று விடாத கண்ணீர் இன்று ஊற்றெடுத்தது... எல்லோருக்கும் விட்டு கொடுத்து, எல்லோர் மீதும் அளவுக்கடந்த அன்பு வைத்து, எதை ஒரு பெண் விட்டு கொடுக்க கூடாதோ அதை கூட விட்டுக்கொடுத்து நின்றவளுக்கு வெறும் வேதனை மட்டுமே பரிசாய் போனது...

இன்று வரை தன் ஆத்திரத்தையும் சரி கோவத்தையும் அவள் யாரிடமும் காட்டவில்லை... குருவின் மீது அவ்வளவு கோவம் இருந்தது... அதை விட ஆதங்கம் அதிகமாக இருந்தது...

தன்னை ஒதுக்கி வைத்துவிட்டு அவனால் ஆறு மாத காலம் இருக்க முடிந்ததே என்று...! இவ்வளவு வேதனை படும் சதிக்கு தன் பக்கம் உள்ள தவறுகள் தெரியவே இல்லை...

அதுவும் அவள் பேசிய பேச்சுக்கள்... அதில் குருவின் மனதில் ஏற்ப்பட்ட காயங்கள் என்று எதுவும் தெயர்யாமலே போனது...

நான் செய்தது சரி என்ற நிலையிலே இப்பொழுது வரை நின்றுக்கொண்டு இருக்கிறாள். குருவின் வேதனையை பற்றி அவளுக்கு தெரிந்தால் இப்படியெல்லாம் நடந்துக்கொண்டு இருக்க மாட்டாளோ என்னவோ...? ஆனால் நடந்து முடிந்த பின் அதை ஆலோசித்து என்ன பயன்... என்ற நிலையில் இருக்கும் பொழுது எந்த உணர்வுகள் தான் புரிய போகிறது...

இரவு இருவருக்கும் அன்றைய இரவு முடியா இரவாக நீள, கண்களை மூடி இருந்தார்களே தவிர பொட்டு தூக்கம் வரவில்லை... குழந்தையின் தேவையை மட்டும் இடையில் எழுந்து கவனித்தவள் அவனின் புறம் திரும்பவே இல்லை..

இவளுக்கு மேல் அவன் இருந்தான்... இவளின் புறம் திரும்ப கூட இல்லை குரு...

இருவரும் இரு திசையில் இருந்தார்களே தவிர இருவரும் அருகருகே தான் இருந்தார்கள். கலைக்கூடத்திற்கு சென்றும் அப்படியே தான் இருந்தார்கள்.

விருது வாங்கும் நிகழ்ச்சிக்காக பல கொரியோ பண்ண வேண்டியது இருந்தது... அதனால் கொஞ்சம் பிசியாகவே அடுத்து வந்த நாட்கள் இருந்தது...

அதோடு அந்த மாவட்டத்தின் ஐஜி நேரடியாகவே வந்து குருவை வந்து சந்தித்தார்.

“வாங்க சார்... என்ன இவ்வளவு தூரம்... என்னால ஏதும் ஆகவேண்டியது இருக்கா...? தயங்காம சொல்லுங்க சார்...” என்று வரவேற்று அவரிடம் தன்னை தேடி வந்ததற்க்கான காரணத்தை கேட்டான்.

“ஒண்ணும் இல்ல குரு சார்... காவல் துறை சார்பா ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்னு இருக்கோம்... அது சம்மந்தமா தன் உங்களை பார்க்கலாம்னு வந்தேன்..” என்றார்.

“டான்ஸ் மூலமா பண்ண போறீங்களா சார்...” என்று புன்னகையுடன் கேட்டான்... அவன் சட்டென்று புரிந்துக்கொன்டதில், புன்னகை அரும்பியது அவருக்கு..

“ஆமா குரு சார்...” என்று அவர் சொன்னாலும் அவரின் வார்த்தையில் இருந்த தயக்கத்தை கண்ட குரு,

“அதுக்கு எதுக்கு சார் தயங்குறீங்க... நோ ப்ராப்ளம் பண்ணிடலாம்...”

“அது இல்ல சார்... எங்க போலீஸ் காரங்களுக்கு டான்ஸ் னா என்னன்னு கூட தெரியாது... அவங்க உடம்பை வளைக்கிறது கஷ்டம்...” என்றார்.

“எல்லாருக்கும் டான்ஸ் தெரிஞ்சி இருக்கணும்னு கட்டாயம் ஒண்ணும் கிடையாது சார்... பார்த்துக்கலாம்... எனக்கு இது சவால் தான்... அதை சிறப்ப செய்யலாம்... ஆமா எத்தனை பேருக்கு சார்...”

“ஒரு பத்தாயிரம் பேருக்கு சார்...” என்று சொல்ல அருகில் இருந்த ராக்கிக்கு தலையை சுற்றியது... ‘வேணாண்டா குரு... இதுக்கு மட்டும் ஒத்துக்காத டா... ஏற்கனவே அவார்ட் பங்கசன் வேற இருக்கு. இதுல இது வேறையா...? பாடி தாங்காது டா... அவனுங்க எல்லாம் முரட்டு பீசா இருப்பாங்கடா... கைய தூக்க சொன்னா காலை தூக்குவானுங்கடா...’ என்று அலறின ராக்கியின் தலையில் இடியை இறக்கியது போல குரு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டான்.

“கண்டிப்பா பண்ணலாம் சார்... எவ்வளவு நாள் டைம் இருக்கு...” என்று அதை பற்றிய சில டீடைல்சை வாங்கிக்கொண்டவன்,

அப்போதே செட்யூல் போட்டு பல பேச்சுகளை தயார் செய்து அவரிடம் கொடுத்தவன்,

“இது தான் டைம் சார்... யார் யாருக்கு எந்த எந்த டைம் ஒத்து வருதோ வர சொல்லிடுங்க... ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் வகுப்பு...” என்று இருபத்தி நாலு மணி நேரத்தில் பன்னிரண்டு வகுப்புகளாக பிரித்து இருந்தவன்,

அதற்க்கு தோதான ஆசிரியர்களையும் போட்டவன் தனக்கும் இரண்டு வகுப்புகளை எடுத்துக்கொண்டான். சதிக்கு ஒண்ணும், ராக்கிக்கு இரண்டும் கார்த்திக்கிடம் கேட்டு அவனுக்கு ஒரு வகுப்பையும் ஏற்பாடு செய்து மற்றவர்களுக்கு ஒரொரு வகுப்பு என்பது போல பிரித்துக்கொடுத்தான்...

அவார்ட் பங்கசன் இன்னும் ஒரு வாரத்தில் என்கிற நிலையில் இருந்ததால் வகுப்புகளில் கொஞ்சம் அதிக நேரம் நீடித்தது...

பல முன்னணி நடிகை நடிகர்கள் வந்து போய்க்கொண்டு இருப்பதால் செக்யூரிட்டியும் அதிகமாக இருந்தது... அந்த ஏரியாவே கொஞ்சம் பிசியாக இருந்தது...

இயல்பான நாட்களில் ஒரு நாளைக்கு எப்படியும் குறைந்தது பத்து பதினைந்து நடிகை நடிகர்களாவது வந்து குருவின் இடத்தில் நடனம் கற்றுக்கொள்ள வருவார்கள்.

ஆனால் இப்பொழுது அவார்ட் பங்சனுக்காக அதிக நடிக நடிகர்கள் வந்து செல்ல, எப்பொழுதுமே பரபரப்பாய் இருந்தது கலைக்கூடம்..

அதனால் இருவரும் ஒருவரது அருகாமையை இன்னொருவர் தவிர்க்க மிக எளிதாய் இருந்தது... வீட்டிலும் ஓய்வு எடுக்கும் நேரம் மிகவும் குறைந்து போனது...

முதல் ஒரு வாரம் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை... ஆனால் போக போக அடுத்தவரது நெருக்கம் இல்லாமல் போனதில் உள்ளுக்குள் ஏங்கி போனார்கள். கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் ஆகி இருந்தது ஒருவரை ஒருவர் நிதானமாக கண்டு...

கடந்து செல்லும் பொழுது நேரம் மட்டுமே இருவரது பார்வைக்கும் மோட்சம் கிடைத்தது... மற்றைய நேரம் எல்லாம் வாடி வதங்கி போனது..

அப்பொழுதும் வெளி காட்டிக்கொள்ளவில்லை... இருவருக்கும் வேறு வேறு செட்யுள்... இதற்கு இடையில் காவல் துறையில் மிக நன்றாக ஆடக்கூடிய வர்களை மட்டும் தனியே பிரித்து வைத்தான்.

அதற்கு அடுத்து விழிப்புணர்வு நடனம் எப்படி அமைய வேண்டும் என்று உள்ளுக்குள் வரையறுத்துக் கொண்டவன், அந்த விழிப்புணர்வு பாடலை ஓட விட்டு அதற்கு ஏற்றார் போல நடனத்தை வடிவமைத்தான்...

அவனது தனி அரங்கில் அவன் நடனமாடிக்கொண்டு இருக்க, சதி கலைக்கூடம் எங்கும் ஆட்களாக நிரம்பி இருந்ததில் தன் மகனை தூக்கிக்கொண்டு அவனது அரங்கிற்குள் நுழைந்தாள்.

அவன் அங்கு இருப்பது தெரியாமல்... வந்தவள் ஒரு கணம் தயங்கினாள். அவளது அந்த நொடி நேர தயக்கம் குருவிற்கு அவ்வளவு ஆத்திரத்தை கொடுத்தது... ஆனால் சதி வெளியே செல்லாமல், அரங்கின் ஓரத்திற்கு மகனோடு செல்ல, ஆடிக்கொண்டே அவளை முறைத்து பார்த்தான்.

அவனது பார்வையை உணர்ந்தாலும் கண்டுக்கொள்ளாமல், தன் மகனின் தேவையை கவனிக்க குருவிற்கு எப்பொழுது அவனது நடனம் ருத்திர தாண்டவமாக மாறியது என்று தெரியவில்லை...

அவனது தம் தம் என்கிற காலடி சத்தத்தில் சட்டென்று திரும்பி பார்த்தாள் அவனை... அவன் விழிப்புணர்வு பாடலுக்கு ருத்திர தாண்டவம் ஆடியதை கண்டு சிரிப்பு வந்துவிட்டது...

அப்பொழுதும் அவளது சிரிப்பை காணாததை கண்ட மாதிரி வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தானே தவிர தன் ஆட்டத்தை நிறுத்தவில்லை...

அதை உணர்ந்தவள் இன்னும் அதிகமாக சிரித்து, தன் புடவையில் ஒளிந்து இருந்த மகனை வெளியே தூக்கி,

குருவை ஓர பார்வை பார்த்துக்கொண்டே,

“டேய் குமரா உங்க அப்பாவுக்கு ரொம்ப ஆர்வ கோளாறாகிடுச்சு டா... ஏன்டா பாட்டுக்கு எந்த டான்ஸ் ஆடுறதுன்னு கூட தெரியல...” என்று அவனது முகத்தில் முகம் வைத்து சிரிக்க, அவள் சொன்ன பின்பே தன் தவறை உணர்ந்தவனின் முகம் அப்பட்டமாய் சிவந்து போனது...

அதை கண்டவளுக்கு இன்னும் சிரிப்பு வர,

“ம்ம்ம்... உங்க அப்பா ஓவரா வெட்க்கப்படுராருடா...” அதற்கும் அவள் கமென்ட் குடுக்க,

“ஏய்...” என்று மிரட்டினான்...

“ம்கும்... செய்யிறதையும் செஞ்சுட்டு மிரட்டுரதை பாருடா...” தன் மகனிடம் புகார் செய்தாள்.

“என்ன மகனோட கூட்டணியா...” என்றபடி அவளை நெருங்கி வந்தவன், அவளது முந்தானையை எடுத்து தன் வெற்று உடம்பில் வழிந்த வியர்வையை துடைக்க, சதிக்கு அடிவயிற்றில் ஜிவ்வென்ற உணர்வு வந்து தாக்கியது...

துடைக்கிறேன் என்கிற பெயரில் அவளது முந்தானையை இன்னும் இழுக்க, குத்தி இருந்த பின் தெரித்து விழ போகிறேன் என்று சதியை பயமுறுத்தியது...

சட்டென்று தன் புடவையை தன் தோளோடு சேர்த்து பிடித்தவள் அவனை முறைத்து பார்த்தாள்.

“நீங்க இழுக்குற இழுப்புல என் புடவை கிழிஞ்சிடும் போல..” என்று சொன்னவள் மகன் அழவும், குருவை ஒரு பார்வை பார்த்தாள்.

அவனோ நான் விலக மாட்டேன் என்கிற கணக்காய் இருக்க... சதிக்கு முகம் சிவந்து போனது வெட்கத்தில்.. இது அழகனா தருணம்... காமமில்லா ஒரு காதல்...

நீண்ட நாட்களுக்கு பின்னான இந்த நேரம் இருவரிடமும் ஆழ பதிய, அவனது நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள். குரு தன் மனைவியோடு தன் மகனையும் அணைத்துக்கொண்டு அந்த இனிய நேரத்தை கழித்தான்...

இருவருள்ளும் தீர்க்கப்படாத விசயங்கள் இருக்கிறது தான்... ஆனால் இந்த நிமிடம் சுவர்க்கம் அல்லவா...? இதை இழக்க இருவராலும் முடியவில்லை...

அதன் பின்பு குழந்தை தூங்கி விட, மடியில் போட்டு அவனை தட்டிக்கொடுத்துக்கொண்டு இருந்தவளின் தோளில் குருவும் சாய்ந்து தூங்க தொடங்கினான்..

இருவரையும் அணைத்தவள், அப்படியே சுவரில் சாய்ந்து தானும் கண்களை மூடிக்கொண்டாள்.

சதி குடுத்த இந்த நெருக்கம் குருவை சோர்ந்து போக விடாமல் இன்னும் அதிகமாக ஓட தெம்பை கொடுக்க, முழு மூச்சாக அவார்ட் பங்க்சனை சிறப்பாக செய்து முடித்தான்... அதோடு அந்த விருது வழங்கும் விழாவில் குரு கொரியோ பண்ண படமும் விருது பெற்றது... கூடவே அந்த நடனத்திற்காக குருவிற்கும் விருது வழங்கப்பட்டது.

 

Loading spinner
Quote
Topic starter Posted : June 13, 2025 3:01 pm
(@gowri)
Estimable Member

எப்ப நீங்கலாது சதி தப்புன்னு சொல்லிட்டீங்க....

சந்தோசம்....

Loading spinner
ReplyQuote
Posted : June 20, 2025 10:31 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top