Notifications
Clear all

அத்தியாயம் 14

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவளின் அலட்சியத்தை பார்த்து பெருமூச்சு விட்டவன் அதன் பிறகு அவளை பார்க்கவே இல்லை. இருவருக்கும் இடையே நடக்கும் மௌன நாடகம் அங்கிருந்த ஒருவருக்கு கூட தெரியவில்லை.

பட்டென்று மேடையை விட்டு கீழே இறங்கி விட்டாள்.

தாலி கட்டி முடித்த கையுடன் மச்சினன் முறை மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டும். இங்கு தமிழ் வீட்டில் இருவரும் பெண் பிள்ளைகள் என்பதால் தமிழை விட்டே முறையை செய்ய வைத்தார் கிருஷ்ணமூர்த்தி.

“அப்பா என்ன இதெல்லாம்.. என்னால எல்லாம் செய்ய முடியாது. நான் வீட்டுக்கு போறேன்” என்று அவள் சொல்ல,

“உன் அக்கா கணவன் உனக்கு மாமா முறை. உன் மாமாவுக்கு நீ செய்யாம வேற யார் செய்வா... நீ தான் செய்யணும். அவர் முறைக்கு உனக்கு நீ கட்டுற மாதிரி புடவை எடுத்து குடுத்து இருக்காரு.. நீ லட்சத்துல இல்ல புடவை கட்டுவ. உனக்காக அவர் பார்த்து பார்த்து எடுத்து இருந்தாரு. உன் அக்காவுக்கு கூட அவர் இந்த அளவுக்கு பார்த்து பார்த்து எடுக்கல தெரியுமா? ஏன்னா நீ அவரோட ஒரே மச்சினிச்சின்னு உனக்கு அவ்வளவு முக்கியத்துவம் குடுத்தாரு” என்று சொன்னவரின் பேச்சை கேட்டு முறைத்தாள்.

“என்ன பார்க்கிற இனியா நீ கட்டிட்டு இருக்குறது அவர் எடுத்த புடவை தான். சூப்பெரா இருக்குல்ல.. உன் நிறத்துக்கு தகுந்த மாதிரி கொஞ்சமும் உறுத்தாத மாதிரி தான் எடுத்தாரு. சும்மா சொல்லக் கூடாது அவர் செலெக்ஷன் சூப்பர்” என்று சொன்ன தந்தையை எதை கொண்டு அடிப்பது என்று தெரியவில்லை.

தான் கட்டி இருக்கும் புடவை அவன் வாங்கிக் கொடுத்தது தான் என்று தெரிந்த மறு கணமே இப்பொழுதே இந்த நிமிடமே அதை தன் உடம்பில் இருந்து உருவி எரிந்து தீ வைத்து கொழுத்தி விட வெறி வந்தது. தேகம் மொத்தமும் பற்றி எரிந்த உணர்வை கொடுத்தது.

அவன் பணத்திலா என் மானம் காப்பாற்றப் பட்டு இருக்கணும். இதுக்கு நான் இந்த சேலை இல்லாமலே இருப்பேனே.. அவளின் மனம் குமைந்துப் போனது.

உரிமையாக நினைத்தவன், அவளுக்கு உரிமை இல்லாமல் போனதில், உரிமையாக அவன் வாங்கி தந்த புடவை அவளுக்கு இனிக்குமா என்ன...? வேப்பங்காயாய் கசந்ததுப் போனது.

அவளின் உள்ள கிடங்கை பற்றி அறியாமல், “இந்தா இதை மச்சினிச்சி சீரா மாப்பிள்ளைக்கு குடு” என்று ஒரு தாம்பாளத்தை குடுத்தார்.

அதில் சினேகாவின் பெயரில் இருக்கும் நிருவனங்கள் சொத்துக்கள் எல்லாம் அடங்கி இருந்தது. அதோடு முக்கிய நிறுவங்களில் இருக்கும் பங்கில் சில விகிதங்களை அவனது பெயரில் மாற்றி எழுதி இருந்த பத்திரமும் இருந்தது.

தலைமை பொறுப்பை அவனுக்கு பாத்திரம் செய்து இருந்தார். அதை தான் மகள் மூலம் குடுக்க சொன்னார். அதை பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் மேடை ஏறினாள்.

இந்த முறை பின் பக்கமாக போகாமல் மணமக்களின் முன் பக்கமாக வந்து நின்றாள். அப்படி வந்து நின்றவளை தலை நிமிர்த்தி பார்த்தான் தென்னவன்.

அவன் வாங்கி குடுத்த புடவையில் மிக மிக அம்சமாக இருந்தாள். அவன் இதுவரை அவளை புடவையில் பார்த்ததே இல்லை. முதல் முறை அதுவும் அவன் வாங்கி தந்த புடவையில் பார்த்தான்.

அவனை அடிக் கண்களால் முறைத்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்தாள். அவளுக்கு என்று அவனுக்கு இடப்பக்கமாக எதிராக போட்டு இருந்த மனையில் அமர சொல்ல அமர்ந்தாள்.

“ம்ம்.. மச்சினிச்சி சீர் வருது” என்று ஐயர் வேறு சொல்ல, எல்லோருக்கும் சின்ன சிரிப்பு வேறு. ஏக கடுப்பில் இருந்தது என்னவோ தமிழ் தான்.

அவனை முறைத்துக் கொண்டே கொடுக்க,

“மேடம் முகத்தை சிரித்த மாதிரி வச்சு குடுங்க” என்று போட்டோ கிராபர் வேறு அவளின் உயிரை எடுத்தான்.

“மேடம் இந்த பக்கம் பாருங்க... தலையை குனியாதீங்க.. கீழ பார்க்காதீங்க.. மாப்பிள்ளை முகத்தை பாருங்க, சார் நீங்களும் மேடமை பாருங்க” என்று இருவரையும் ஒரு வழி செய்தான்.

தமிழ் குடுத்த தட்டை வாங்கியவன், பதிலுக்கு மாமன் சீர் செய்யணுமே..

அவனும் ஒரு தட்டை தயார் செய்து வைத்து இருந்தான்.

அதை அவளுக்கு குடுக்க, அவள் வாங்க மறுக்க, எல்லோரும் சொல்லி வாங்கியவளை மீண்டும் போட்டோ கிராபர் உயிரை எடுத்தான் போஸ் குடுக்க சொல்லி..

அந்த நிமிடங்கள் எல்லாம் அமிலத்தின் கரைசலில் நின்றது போலவே இருந்தது அவளுக்கு. அவன் நீட்டியதை வாங்கிக் கொண்டவளுக்கு அதன் பிறகு ஒரு நிமிடம் கூட அங்கு இருக்க முடியவில்லை.

வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பி வந்தவள், தன் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றியவள் அடுத்த நிமிடம் கட்டி இருந்த புடவையை கிழித்து எடுத்தாள் தன் மேனி மீதிருந்து.

குத்தி இருந்த ஒரு பின்னை கூட கழட்டவில்லை. பார்த்து பார்த்து இரவிக்கை தைத்து இருந்தாள் அந்த புடவைக்கு. ஆனால் ஒரே இழுப்பில் ஊக்குகள் எல்லாம் புடவையையும் இரவிக்கையையும் கிழித்து போட்டது. நேர்த்தியாக மடிப்பு எடுத்து கட்டி இருந்த புடவையை ஒரே மோடியில் நாசமாக்கினாள் தமிழ்.

அவ்வளவு ஆத்திரம் வந்தது அவளுக்கு.

தென்னவனிடம் காட்ட முடியாத கோவத்தை அவன் வாங்கி தந்த புடவையிடம் காட்டினாள். அதுவும் அவன் வாங்கி தந்த பரிசை பார்த்தவளுக்கு இன்னும் கோவம் வந்தது.

ஏனெனில் அதிலும் ஒரு புடவை இருந்தது. அதை தூக்கி கடாசி எறிந்தாள். போட்டு மிதித்தாள். ஆத்திரம் ஆத்திரம்... தமிழை கோவம் மட்டுமே சூழ்ந்து இருந்தது அந்த நிமிடம்.

உரியவனாய் இருந்து அவளுக்கு இந்த புடவைகளை எல்லாம் வாங்கி தந்து இருந்தால் நிலையே வேறு...

ஆனால் உரிமையில்லாமல் வாங்கி தந்ததால் அவளிடம் அவனுடைய பொருளுக்கு இவ்வளவு தான் மதிப்பு...

அவனது பரிசுகளை ஒன்றுமில்லாமல் செய்த பிறகே அவளுக்கு கொஞ்சம் ஆத்திரம் மட்டுப்பட்டது.

ஆனால் திருமணம் முடிந்து கிருஷ்ணன் தமிழை லண்டனுக்கு அனுப்ப மறுத்தார். “உடம்பு முடியல.. மூன்று மாதம் மட்டும் இங்க இருந்து பார்த்துக்க” என்று சொல்லி அலுவலக பொறுப்பை அவள் தலையில் கட்டி விட,

தினமும் தென்னவனின் முகத்தில் முழிக்க வேண்டிய சூழல். கொதிநீரில் இறக்கி விட்ட நிலை தான் அவளுக்கு. தென்னவன் அவளிடம் பேச முயற்சிக்கும் பொழுது எல்லாம் அவனை திட்டி காயப்படுத்தி தன்னை தனிமை படுத்திக் கொள்வாள்.

அப்பொழுது தான் அடுத்த முறை தன்னிடம் அவன் வர மாட்டான் என்று. இருந்தாலும் அக்கா வாழ்க்கை அல்லவா... அதனால் அவனை பார்க்கும் பொழுது எல்லாம் தன் மீது தவறான இம்ப்ரெஷன் ஒன்றை உருவாக்கினாள் தமிழ்.

அவள் எரிந்து விழ ஆரம்பிக்கவும் தென்னவனும் அதன் பிறகு அவளிடம் பேச வருவதை குறைத்துக் கொண்டான். ஏன் முற்றிலும் தவிர்த்து விட்டான் என்றே சொல்ல வேண்டும்.

மூன்று மாதத்தில் சினேகா கரு உருவாகி விட, அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் கிளம்பி லண்டன் போய் விட்டாள்.

அதன் பிறகு வளைகாப்புக்கு தான் வந்தாள். வந்தவள் அக்காவுக்கு வளையலை அணிவித்து விட்டு கிளம்பி விட்டாள்.

போகும் முன்பு, கம்பெனியே கதியாய் இருக்கும் அக்கா கணவன் தென்னவனை எச்சரித்து விட்டு தான் சென்றாள்.

“மிஸ்டர் கம்பெனி எங்கும் ஓடிடாது.. அது எப்பொழுதும் இங்க தான் இருக்கும். முதல்ல குடும்பத்துக்கு முக்கியத்துவம் குடுங்க. அக்கா நீங்க சரியா கூட அவக்கிட்ட நேரம் ஸ்பென்ட் பண்ண முடியலன்னு புலம்புற.. காதலிச்சு கல்யாணம் பண்ணா மட்டும் போதாது. காதல் மனைவியை நல்லா பார்த்துக்கவும் தெரியனும்” என்று விட்டு போய் விட்டாள்.

தென்னவன் எதுவும் பேசவில்லை. தமிழ் பேச அனுமதிக்கவில்லை என்று சொல்லலாம். அவள் மனதில் உள்ளதை மட்டும் சொல்லி விட்டு அடுத்த ஒரு நொடி கூட தாமதிக்காமல் கிளம்பி விட்டாள். பிறகு எங்கு இருந்து தென்னவன் மறுமொழி பேச...

பெருமூச்சு விட்டவன் தன் வேலையில் கவனத்தை வைத்தான். அவனால் முடிந்த வரை சினேகாவோடு நேரம் செலவு செய்கிறான் தான். ஆனால் கிருஷ்ணனும் சரி சினேகாவும் சரி முன்பு போல நிறுவனத்துக்கு வராததால் மொத்த வேலை பளுவும் அவன் தலையில் விழுந்தது.

அதனால் அவன் இருவருக்கும் சேர்த்து ஓட வேண்டி இருந்தது. அப்படி அவன் ஓடியதை பார்த்து தான் தமிழ் அவனை திட்டிவிட்டு சென்றாள்.

சினேகாவுக்கு பிரசவ நாள் நெருங்கும் சமயம் அவளோடு இருக்க வேண்டும் என்று தன்னை கொஞ்சமாச்சும் ப்ரீயாக வைத்துக் கொள்ள எண்ணியவன் முன்கூட்டியே  எல்லா வேலைகளையும் முன்பை விட ஓடி ஓடி செய்தான்.

ஆனால் பிரசவத்தின் போது அவளுக்கு அருகில் இருக்க முடியாமல் முன் கூட்டியே அவளுக்கு பிரசவலி எடுத்து விட்டது. தென்னவன் இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டான். ஆயிரம் கோடி பாட்ஜெட்.. அதற்கான மீட்டிங்கில் இருந்த பொழுது தான் சினேகாவுக்கு வலி எடுத்தது.

கிருஷ்ண மூர்த்தியோ “நான் பார்த்துக்குறேன் மாப்பிள்ளை. நீங்க டீலிங்கை முடிங்க” என்று சொல்லி விட, அவரின் பேச்சை மீற முடியாமல் மீட்டிங்கில் இருந்தான்.

அதற்குள் இங்கு சினேகாவுக்கு பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு, தன் மகனை மட்டும் பெற்று எடுத்து விட்டு உயிர் துறந்து இருந்தாள்.

தமிழோ அவன் கூட இருந்து இருதால் தன் அக்காவுக்கு இப்படி ஆகி இருந்து இருக்காது... ஸ்ட்ரெஸ் மட்டும் தான் காரணம் அவள் உயிர் போக என்று மருத்துவர் காரணம் சொல்ல, தென்னவனின் மீது அவளின் ஒட்டு மொத்த கோவமும் வெடிக்க ஆரம்பித்து விட்டது.

இதோ இந்த நொடி வரை அவன் மீதுள்ள கோவம் கொஞ்சமும் குறையவில்லை தமிழுக்கு. தென்னவனின் மீதும் தவறில்லை. ஆனால் அவனது சூழலை தமிழ் புரிந்துக் கொள்ளவே இல்லை. தன் அக்காவை கொன்னது நீ தான் என்கிற அளவுக்கு பேசிக்கொண்டு இருக்கிறாள்.

இனி என்ன ஆகுமோ...

 

முன்கதை முழுவதும் முடிந்து விட்டது தோழமைகளே.. அதனால இரண்டு யூடியா போட்டுட்டேன். மின்சார முத்தங்கள் நாளைக்கு தான் வரும்..

Loading spinner
Quote
Topic starter Posted : June 18, 2025 3:44 pm
(@gowri)
Estimable Member

சினேகா தான் அவனை விடாபிடியா நின்னு கல்யாணம் பண்ணி இருக்கணும்னு நினைக்கறேன்....

அவளோட stress அவன் மனம் அறிந்ததால் வந்து இருக்கலாம்

Loading spinner
ReplyQuote
Posted : June 18, 2025 5:31 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top