அடுத்து அவள் ஊருக்கு போனது அவளின் அக்கா திருமணத்துக்கு தான். அதுவும் அங்க போய் தான் தெரிந்தது தென்னவன் தான் மாப்பிள்ளை என்று.
“யாரை கேட்டு இந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்தீங்க.. முதல்ல இந்த கல்யாணத்தை நிறுத்துங்க..” என்று கத்தியவள்,
“அவன் நான் விரும்புன பையன்” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
“அபப்டி எல்லாம் நிறுத்த முடியாதும்மா” என்று கிருஷ்ணன் சொல்ல,
“அந்த ஆளுக்கு என்ன தகுதி இருக்கு... நம்ம அந்தஸ்த்து என்ன அந்த ஆளு அந்தஸ்த்து என்ன.. ஏணி வச்சா கூடா எட்டாது.. மாப்பிள்ளை பார்த்து இருக்கீங்க பாருங்க.. நல்ல மாப்பிள்ளை” என்று அவள் ஏற்ற தாழ்வை சுட்டிக் காட்டி பேச,
“அப்படி சொல்லுடி.. உனக்கவாது தராதரம் தெரியுதே... உன் அப்பாவுக்கும் அக்காவுக்கும் சொல்லி சொல்லி என் தொண்டை புண்ணானது தான் மிச்சம். அவன் அனாதை. அவனை போய் மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்து நிக்கிறாரு..” என்று பொருமினார் பானுமதி.
“நான் இருக்கும் போதே என் தென்னவானை அனாதைன்னு சொல்லுவீங்களா மாம். அவனுக்கு எல்லாமுமா நான் இருக்கேன். இன்னொரு முறை உங்க சின்ன மாப்பிள்ளையை அப்படி சொல்லாதீங்க. பிறகு நான் பொல்லதவள் ஆகிடுவேன்” இதையும் மனதுக்குள்ளே சொன்னவள்,
வெளியே வேறு வழியில்லாமல், இந்த கல்யாணத்தை நிறுத்தினால் மட்டும் போதும் என்று தாயோடு ஒத்துப் போனாள்.
ஆனால் சினேகா வந்து,
“அம்மா தான் அந்த காலத்து ஆள். நீ கூடவாடி” என்று கடிந்துக் கொண்டவள்,
“அவரு உன் மாமா.. உன் மாமாவை பத்தி அப்படி பேசாத.. நானும் அவரும் இரண்டு வருடமா காதலிச்சுட்டு இருக்கோம். இது அப்பா பார்த்து வச்ச கல்யாணம் இல்லடி. காதல் கல்யாணம்” என்று வெட்கத்துடன் சொன்னவளை பார்த்த தமிழினியாள் உள்ளுக்குள்ளே சுக்கு நூறாய் உடைந்து சிதறிப் போனாள்.
விழிகளில் நீர் நிறைந்துப் போனது சடுதியில்... அதை யாரும் பார்க்கும் முன்பு தனக்குள் போட்டு புதைத்துக் கொண்டவள் இயல்பாய் முகத்தை மாற்றிக் கொண்டு வளைய வந்தாள்.
அதுவும் இது காதல் திருமணம் என்று அவளின் தந்தையும் தமக்கையும் சொன்ன பொழுது என்ன முயன்றும் அவளது கண்ணீருக்கு அணை போட முடியவில்லை. இரும்பாய் தன் மனதை மாற்றிக் கொண்டவள் திருமண சடங்கில் பங்கேற்றாள்.
முதல் நாளே ரிஷப்ஷன் மாதிரி ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கலை கட்டியது வரவேற்பு. சினேகா மணமகளுக்கான கொண்டாட்டத்துடன் ஆடியபடி வந்தது தென்னவன் கழுத்தில் மாலை போட்டு அவனையும் கை பிடித்து ஆட அழைக்க, அவனும் ஆடினான்.
அவனது விழிகள் கூட்டத்தில் யாரையோ தேடியது. அவனின் தேடலுக்கு உரிய பெண்ணவளோ மண்டபத்தின் இருளில் யாருக்கும் தெரியாமல் தனித்து நின்று இருந்தாள்.
அவளால் மண்டபத்தின் உள்ளே நுழையவே முடியவில்லை. பெருமுயற்சியும் எடுத்து பார்த்து விட்டாள். ஆனால் கொஞ்சமும் முடியவில்லை. தென்னவனை போல ஒருவனை இழக்க அவளால் முடியவில்லை. அது தன் சொந்த அக்கா என்ற பொழுதும் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. பதினைந்து நாள் தான் அவனோடு ஒன்றாக இருந்தாள். ஆனாலும் ஆனந்த நாட்களில் அவனது கண்ணியமும் நட்பும் அவளை வெகுவாக ஈர்த்து இருந்தது. அதுவும் அவனது நல் நடத்தையே அதிகம் அவளை கவர்ந்தது.
அதுவும் அவன் ஊருக்கு போகும் நேரம் சொன்ன சொல் அவளை இன்னும் அலைக்கழித்துக் கொண்டு இருந்தது. அவளை மிகவும் உறுத்திய வார்த்தை அது. அவளை அளவுக்கு அதிகமாக இளக வைத்த வார்த்தைகள் அவை.
தமிழ் இயல்பிலே இரும்பு மனுசி... அவளை யாராலும் எதையாலும் அவ்வளவு எளிதாக வீழ்த்தி விடவே முடியாது. அவளை வீழ்த்தனும் என்று எண்ணினால் முதலில் அதற்கு அவள் அனுமதி வேண்டும். அவள் அனுமதித்தால் மட்டுமே அவளை நெகிழ்த்த முடியும். அப்படியாப்பட்ட உறுதி மிக்கவள் அவள்.
அவளின் இறுக்கத்தையும் உறுதியையும் தன் சின்ன சின்ன செயல்களால் குலைத்துப் போட்டவன், அது போதாது என்று,
“உன்கூட இருந்த இந்த நாள்கள் தான் என் வாழ்கையின் மிக மகிழ்ச்சியாக இருந்த நாள்கள் தமிழி. இந்த நாட்களை என்னைக்கும் நான் மறக்க மாட்டேன்..” என்று சொன்ன சொல்லில் அவளை அடியோடு வீழ்த்தியே போட்டு விட்டான் தென்னவன்.
அவாள் உருகிப் போவாள் என்று அவனுக்கும் தெரியாது. அவனது உணர்வுகளை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கொட்டி விட்டான். அவனது உணர்வுகளை உள் வாங்கியவளுக்கு கண்கள் கலங்கி விட்டது. இதோ இப்பொழுது கூட அவளின் கண்களில் ஈரம் மினுமினுத்தது.
“நீ என்கூடவே இருடா... உன்னை நான் இன்னும் மகிழ்ச்சியா சந்தோஷமா உன்னை வச்சுக்குறேன்.. இதை விட அதிக அன்பை காட்டுறேன்” என்று ஒவ்வொரு இரவும் தன்னுள் சொல்லிக் கொண்டே இருக்கிறாள் அவன் ஊருக்கு போன நாள்களில் இருந்து.
ஆனால் அது உரியவனை போய் சேரத்தான் வழி இல்லை.
தான் காதலை சொல்லியும் அவன் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எல்லாம் அந்த அளவுக்கு வலிக்கவில்லை தமிழுக்கு. ஆனால் மாப்பிள்ளையாக அதுவும் அவளின் அக்காவுக்கே இப்படி வந்து உட்காருவான் என்று கொஞ்சமும் எண்ணி பார்க்கவில்லை. அதோடு அது காதல் திருமணம் என்று அறியும் பொழுது தமிழ் கொண்ட வலியை வரையருக்கவே முடியவில்லை.
நெஞ்செல்லாம் அப்படி ஒரு வலி எடுத்தது. நட்பாக பழகிய இந்த பதினைந்து நாளில் ஏதோ ஒரு நேரத்தில் எதோ ஒரு நொடியில் நான் உன் அக்காவை தான் காதலிக்கிறேன் என்று சொல்லி இருந்து இருக்கலாம். இவளும் ஆசையை மனதில் சுமந்து இருந்து இருக்க மாட்டாள்.
இப்பொழுது உண்மை அறியும் பொழுது மிகவும் வலித்தது. மூச்சு எடுக்கவே முடியவில்லை. கண்கள் அது பாட்டுக்க கண்ணீர் சுரந்தது.
அழகாக கிளம்பி மண்டபத்துக்கு வந்தாள். தோற்றத்தில் எந்த பழுதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில் இது மிக முக்கிய விழா அல்லவா.. அதோடு பல முக்கிய பிரமுகர்கள் எல்லோரும் வருவார்கள். அந்த நேரம் இப்படி ஏனோ தானோ என்று நிற்க முடியாதே..
மனதுக்கு தானே வலி. அதனால் முகத்துக்கு அரிதாரத்தை பூசி எல்லாவற்றையும் அதிலே மறைத்துக்கொண்டு வந்து விட்டாள்.
இங்கு வந்த பிறகும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. ஆனால் இன்னும் சிறிது நேரம் ஒதுங்கி இருந்தாலும் அவளின் அக்காவே மணமேடையை விட்டு இறங்கி வந்தாலும் இறங்கி வந்து விடுவாள் இவளை தேடி.
எனவே தனக்குள் எல்லாவற்றையும் போட்டு புதைத்துக் கொண்டு சிரித்த முகமாய் மண்டபத்துக்குள் நுழைந்தாள். நுழைந்த உடனே அவளின் பார்வை மேடைக்கு தான் சென்றது.
அதுவரை அவளையே தேடிக் கொண்டு இருந்தவனின் பார்வை அவளின் வரவை ஒட்டி அவளின் பார்வையை கவ்விப் பற்றிக் கொண்டான். அவனை தீர்க்கமாக பார்த்து, அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக தன் பார்வையை பிடுங்கிக்கொண்டவள் அதன் பிறகு எக்காரணம் கொண்டும் அவனை பார்ப்பதை தவிர்த்து விட்டாள்.
மணமேடையில் தனக்கு அருகில் தங்கையை நிறுத்திக் கொண்டாள் சினேகா.
“அக்கா இதெல்லாம் வேணாமே.. நான் கீழ போறேன்” என்று எவ்வளவு சொல்லி பார்த்தும் சினேகா கேட்கவில்லை.
“உன்னை தவிர வேற யாருடி மேடையில இருப்பா... நீ தான் நிற்கணும். இது உன் அக்கா கல்யாணம்” என்று சொல்ல, அதன் பிறகு எங்கிருந்து விலகிச் செல்ல..
மண மேடையில் நிற்கும் ஒவ்வொரு நொடியும் நெருப்பில் நிற்பது போல தான் இருந்தது அவளுக்கு. அக்காவுக்காக பல்லைக் கடித்துக் கொண்டு நின்றாள்.
தென்னவனும் அதன் பிறகு தமிழை தேடவில்லை. அவள் தான் மேடையில் இருக்கிறாளே.. அதனால் அவளை தேடவில்லை.
ஒரு வழியாக வரவேற்பு முடிந்து இரவும் நகர்ந்து திருமண நாள் விடிந்தது மகிழ்ச்சியாக.
திருமணம் சடங்கு அரங்கேறியது. தமிழ் நேற்றைக்கு போலவே எல்லாவற்றிலும் தள்ளியே இருந்துக் கொண்டாள். எதிலும் கலந்துக் கொள்ளவில்லை. தாலி கட்டும் பொழுது மட்டும் பானுமதி அவளை அழைத்து சினேகாவின் பின் புறம் நிற்க சொன்னார்.
இவளும் வந்து நின்றாள் வேறு வழியில்லாது. தாலியை தென்னவனிடம் நீட்ட, அதை எடுத்தவன் சினேகாவின் பின் பக்கம் பார்த்து கட்ட வர,
அருகில் அமர்ந்து இருந்தவளை பார்த்தான். தென்னவனின் விழிகள் முழுவதும் தமிழ் தான் நிறைந்து இருந்தாள். அவளை பார்த்துக் கொண்டே சினேகாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்.
அவனது பார்வை தன் மீது இருக்கிறது என்பதை உணர்ந்துக் கொண்டவள், அவனை பார்ப்பதை கவனமாக தவிர்த்தவள் ஏளனமாக முகத்தை வைத்துக் கொண்டு அலட்சியம் காட்டினாள்.
அவளின் அலட்சியத்தை பார்த்து பெருமூச்சு விட்டவன் அதன் பிறகு அவளை பார்க்கவே இல்லை. இருவருக்கும் இடையே நடக்கும் மௌன நாடகம் அங்கிருந்த ஒருவருக்கு கூட தெரியவில்லை.
பட்டென்று மேடையை விட்டு கீழே இறங்கி விட்டாள்.
தாலி கட்டி முடித்த கையுடன் மச்சினன் முறை மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டும். இங்கு தமிழ் வீட்டில் இருவரும் பெண் பிள்ளைகள் என்பதால் தமிழை விட்டே முறையை செய்ய வைத்தார் கிருஷ்ணமூர்த்தி.
“அப்பா என்ன இதெல்லாம்.. என்னால எல்லாம் செய்ய முடியாது. நான் வீட்டுக்கு போறேன்” என்று அவள் சொல்ல,
“உன் அக்கா கணவன் உனக்கு மாமா முறை. உன் மாமாவுக்கு நீ செய்யாம வேற யார் செய்வா... நீ தான் செய்யணும். அவர் முறைக்கு உனக்கு நீ கட்டுற மாதிரி புடவை எடுத்து குடுத்து இருக்காரு.. நீ லட்சத்துல இல்ல புடவை கட்டுவ. உனக்காக அவர் பார்த்து பார்த்து எடுத்து இருந்தாரு. உன் அக்காவுக்கு கூட அவர் இந்த அளவுக்கு பார்த்து பார்த்து எடுக்கல தெரியுமா? ஏன்னா நீ அவரோட ஒரே மச்சினிச்சின்னு உனக்கு அவ்வளவு முக்கியத்துவம் குடுத்தாரு” என்று சொன்னவரின் பேச்சை கேட்டு முறைத்தாள்.
“என்ன பார்க்கிற இனியா நீ கட்டிட்டு இருக்குறது அவர் எடுத்த புடவை தான். சூப்பெரா இருக்குல்ல.. உன் நிறத்துக்கு தகுந்த மாதிரி கொஞ்சமும் உறுத்தாத மாதிரி தான் எடுத்தாரு. சும்மா சொல்லக் கூடாது அவர் செலெக்ஷன் சூப்பர்” என்று சொன்ன தந்தையை எதை கொண்டு அடிப்பது என்று தெரியவில்லை.
தான் கட்டி இருக்கும் புடவை அவன் வாங்கிக் கொடுத்தது தான் என்று தெரிந்த மறு கணமே இப்பொழுதே இந்த நிமிடமே அதை தன் உடம்பில் இருந்து உருவி எரிந்து தீ வைத்து கொழுத்தி விட வெறி வந்தது. தேகம் மொத்தமும் பற்றி எரிந்த உணர்வை கொடுத்தது.
தொடரும்...
இவனும் இவளை காதலிப்பான் போலவே....
நடுவில் இந்த கௌசிக் வந்த மாறி சினேகா வந்துட்டா போலவே🤣