Notifications
Clear all

அத்தியாயம் 24

 
Admin
(@ramya-devi)
Member Admin

குரு ஊருக்கு கிளம்பும் நாளும் சதிக்கு வளையிடும் நாளும் ஒன்றாக அமைந்தது...

காலையில் எழுந்திரிக்கும் போதே மனமெல்லாம் பாரமாகி இருந்தது சதிக்கு.. குருவின் நெஞ்சில் தலை சாய்த்து படுத்து இருந்தவளுக்கு அவனை விடவே மனமில்லை... அவனது நெஞ்சு சூட்டிலே அவளது மொத்த காலங்களும் கழிந்துவிட வேண்டும் என்பது போல பேராசை எழுந்தது..

ஏனோ இந்த பிரிவு இருவருள்ளும் நிரந்தரமாய் போக போகிறது என்பது போல ஒரு தோற்ற மயக்கத்தை வருவித்தது..

அதனாலே அவனை விட்டு அவளால் விலகவே முடியாவில்லை.. குருவிற்கு எப்படி அவள் ஒரு போர்வை மடிக்கும் நேரம், இமைக்கும் நேரம் கூட அவள் அவனுடன் இருக்க வேண்டும் என்பது போல உணர்ந்தானோ அதே போல அதை விட அதிகமாகவே சதி அவனது நெருக்கத்தை வேண்டினாள்.

தன்னை விட்டு பிரிந்தால் அடுத்த நொடி இருவருள்ளும் சொல்ல முடியாத கொடூர விதி வந்து ஆட்க்கொண்டு விடுமோ என்று பயந்து போனாள்.

அவளது பயமே பின் வரும் நாட்களில் இருவருக்கும் பிரிவை விளைவிக்க போகிறது என்பதை அறியாமல் பேதையவள் தன் மன்னவனின் நெஞ்சு சூட்டில் அடைக்கலமாகி இருந்தாள்.

குருவிற்க்குமே இன்றைய நாளை எண்ணி மனமெல்லாம் கனமாகி போய் இருந்தது... வேறு வழியில்லை இருவரும் இன்றைய நாளில் பிரிந்து தான் ஆகவேண்டும்...

அதும் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இந்த பிரிவு இருக்கும்... முதல் சுற்று ஒரு வாரம் அரை இறுதி சுற்று அடுத்த வாரமும், கடைசி வாரம் இறுதி போட்டி என்று அறிவிப்பு வந்து இருந்தது...

அதனால் எப்படியும் ஒரு மாத காலம் அங்கே தான் இருந்தாகவேண்டும்... நினைத்தால் கூட வந்து பார்த்துவிட்டு செல்ல முடியாது... அந்த அளவு கால நெருக்கடி இருந்தது...

ஒரே மாதத்தில் இந்த போட்டியை முடித்தாகவேண்டும் என்று போட்டி நடத்தும் குழு திட்டமிட்டு இருந்தது...

அதனால் போய்விட்டு மறுபடியும் வருவது சாத்தியமாகாது... ரிகசல் பார்க்கவே சரியாய் இருக்கும்... குரு ஏற்கனவே மூன்று சுற்றுக்கும் தயாராகவே இருந்தான்.. எல்லாவற்றையும் முன் கூட்டியே தயார் செய்து வைத்து இருந்தான்.

இறுதி சுற்றுக்கு மட்டும் சிவனது ருத்திர தாண்டவமும், ஆனந்த தாண்டவமும் எடுத்து இருந்தான். முதல் இரு சுற்றிலும் கதக், போக், சதிர் என்று எடுத்து இருந்தான்.

கிட்டத்தட்ட பத்து மாதங்களாக நன்றாகவே பயிற்சி எடுத்திருந்தான். எப்படியும் இறுதி சுற்றுக்கு தேர்வாகி விடுவேன் என்ற நம்பிக்கை அவனுக்கு ஆழமாக ஊடுருவி வேரூன்றி இருந்தது.

நெஞ்சை விட்டு நீங்காமல் படுத்து இருந்தவளை மெல்ல மெல்ல சமாதானம் செய்து, தன் கைவளைவுக்குள் அவளை வைத்துக்கொண்டே தானும் கிளம்பி அவளையும் கிளப்பினான்.

குருவின் வீட்டிலே நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தார்கள். அவனுக்கு மிகவும் நெருக்கமான பல முன்னானி டைரக்டர்ஸ், ஆக்டர்ஸ், ப்ரொடியுசர்ஸ், மியூசிக் சைட் உள்ள பிரபலங்கள் என்று வருகை தந்து இருந்தார்கள். கூடவே மற்ற துறை பிரபலங்கள் கோ கொரியோக்ராபர்ஸ் அவனுடைய ஸ்டுடேன்ஸ் நண்பர்கள் என்று அவர்களே முன்னூறு ஆட்களுக்கு மேல் இருந்தார்கள்.

தன் கைப்பட தேர்ந்தெடுத்த புடவையை தன் மேல் ஒருமுறை சுற்றி கட்டிவிட்டு, அதை உப்பு நீரில் நனைத்து பதமாக அவளுக்கு அந்த புது புடவையை அணிவித்து விட்டான்.

பூ அலங்காரம் கூட அவனே பண்ணினான்... நடனம் ஆடும் கலையில் தன்னை அலங்காரம் செய்துக்கொள்ளுவது எப்படி என்பதையும் நன்கு கற்று இருந்ததால் குருவே அவளுக்கு முழு அலங்காரமும் செய்து விட்டான்.

கண்களுக்கு மை எழுதி பெரிய பொட்டை நெற்றியில் வைத்துவிட்டவன், குங்குமத்தை அள்ளி அவளது வகிட்டில் வைத்து விட்டான்.

அதை உணர்ந்தவளுக்கு உடலெல்லாம் சிலிர்த்து அடங்கியது...

திருமணமானவர்கள் மட்டும் தான் அங்கு வைக்க வேண்டும் என்பது நியதி... ஆனால் தனக்கு வைக்கிறானே என்று திகைத்து அவனை பார்த்தாள்.

“மாமா...”

“நீ என்னோட பொண்டாட்டி அவ்வளவு தான்...” என்றவன் அவளை மேற்கொண்டு பேசவே விடவில்லை...

இவர்கள் இருவருக்காகவும் மொத்த ஆட்களும் காத்துக்கொண்டு இருந்தார்கள். இடை இடையே சதி தயாராகியாச்சா என்று ஆனந்தி, தீபா, ராதிகா மூவரும் எட்டி எட்டி பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

தீபா இரு முறை வந்து பார்த்துவிட்டு சென்றாள். அதன் பிறகு அவளால் முடியவில்லை... உடல் மிகவும் நோக ஆரம்பிக்க தொடங்கியது.

“மாமா சீக்கிரமா சதியை கிளப்பி கூட்டிட்டு வாங்க...” என்று சொல்லிவிட்டு சென்று கீழே சென்று அமர்ந்துவிட்டாள்.

அவளுக்கு துணையாக சேகரும் அமர்ந்துக்கொண்டார். ராக்கியோடு குமாரும் நவீனும் வந்தவர்களை வரவேற்று அவர்களுக்குரிய இருக்கைக்கு சென்று அமரவைக்க சொல்லி விழா ஒருங்கிணைப்பாளர்களிடம் அறிவுருத்திக்கொண்டு இருந்தார்கள்.

கல்யாணத்திற்கு கூட இவ்வளவு பரபரப்பு யாரிடமும் இல்லை... ஆனால் இந்த வளைகாப்பிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நடத்திக்கொண்டு இருந்தார்கள்.

கூடவே குருவின் மாணவர்களும் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்ய மனம் நிறைந்து போனது குடும்பத்தவர்களுக்கு...

ப்ரெஸ் மட்டும் வர வேண்டாம் என்று சொல்லிவிட, அதை பற்றிய டென்சன் இல்லாமல் தன் ஆருயிர் மனைவியை அலங்காரம் செய்து முன் கூடத்தில் அலங்கார மனையில் அமர்த்தினான் குரு...

சதி பூரண அலங்காரத்துடன் தன் மேடிட்ட வயிறோடு சபையில் கூடி இருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு தன் கணவனை பெருமை பொங்க பார்த்தாள்.

குரு வந்தவர்களை தானும் ஒரு சுற்று சென்று வரவேற்றுவிட்டு சரியாக நலுங்கு வைக்கும் நேரம் வந்து அவளுக்கு எதிரில் நின்றுக்கொண்டான்.

தீபாவிற்கு மனமெல்லாம் உவகையாய் இருந்தது... இன்னும் சில நாட்களில் குட்டி குழந்தை தன் கைகளில் தவழ போகிறது என்று... அந்த எண்ணமே அவளை சற்று உற்ச்சாகமாக வைத்தது..

அவளது உற்ச்சாகம் மற்ற அனைவருக்குமே இருக்க... மகிழ்வு பரவியது அந்த இடத்தில்.

முதலில் ராதிகா சதிக்கு வளையல் போட்டு பொட்டு வைத்து ஆசிர்வாதம் செய்தார். அவரை தொடர்ந்து ஆனந்தியும் செய்ய, அவரை தொடர்ந்து குரு நலுங்கு வைக்க வந்தான்.

எல்லோரும் அவனையும் சதியோடு மனையில் அமர சொல்ல, மறுத்துவிட்டான்.

“ஏன்” என்று சதி பார்வையிலே கேட்டாள்.

“உன் பக்கத்துல வந்து உட்கார்ந்தா என் பார்வை உன் மேல முழுமையா வைக்க முடியாது செல்லம்மா அது தான்...” என்று சொல்லிவிட்டு அவளுக்கு எதிரில் நின்றுக்கொண்டான்.

அப்படி நின்றவனை நலுங்காவது வைக்க சொல்ல, கொஞ்சமும் மறுப்பு சொல்லாமல் வந்து நின்று தன்னவளுக்கு தன் கையாலே வளை பூட்டி விட்டான்...

கீழே தாம்பாளத்தில் இருந்த கண்ணாடி வளையல்களில் இரண்டை எடுத்து கைக்கு இரண்டாக மாட்டி விட, தீபாவிற்கு மனசு சுணங்கியது...

“என்ன மாமா நீங்க... சதிக்கு வெறும் கண்ணாடி வளையலை மாட்டி விடுறீங்க... வைரத்துல செஞ்சு இருக்காட்டியும் தங்கத்துலயாவது செஞ்சு இருந்து இருக்கலாம்ல...” குறை பட்டவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் வெறுமென சிரித்தவன், தன் மனம் கவர்ந்தவளை பார்த்தான்.

சதியின் முகத்தில் அதற்குரிய எந்த ஏமாற்றமும் இல்லாமல் அமைதியான புன்னகையை வீசிக்கொண்டு இருந்தாள்.

“என்னடி நீ எதுவும் கேக்கல...” அவளை வம்பிழுத்தான்.

“என் புருஷன் கையாள இந்த கண்ணாடி வளையல் மாட்டி விட்டதே எனக்கு போதும்...” என்று கண்ணடித்தவளை கண்டு தலையை இருபுறமும் ஆட்டி சிரித்தவன், அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு, தன் சட்டையில் இருந்த சில கண்ணாடி வளையல்களையும் சில வெள்ளி வளையல்களும் எடுத்து அவளது கையில் போட்டு,

“இது நம்ம பிள்ளையோட செவிகளுக்கு இசையாக கேட்க, அதோட உன் உடம்பு சூட்டை குறைக்க...” என்று சொன்னவன்... தொடர்ந்து, தங்க வளையல்களை அள்ளி அவளது கரங்களில் போட்டுவிட்டு

“நம் வாழ்க்கையில் மிக அழகான தருணங்களின் தொகுப்பின் நினைவுக்காக இந்த கண்ணாடி வளையல்களோடு தங்க வளையல்களும்...” என்றான்.

சதி அவன் பேசுவதை கண்கள் விரிய பார்த்தாள்.

அவளின் விழிகளில் விரிந்த வியப்பை பார்த்துக்கொண்டே தன் சட்டை பையில் இருந்து ஒரு டப்பாவை எடுத்து அதிலிருந்து ரூபி கற்கள் பதித்த தங்க வளையல்களை எடுத்து,

“இந்த வளையல் நீ என் மேல வச்ச காதலுக்கு...” என்று சொல்லி அணிவித்தான். அதை தீபா கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்லை...

“சூப்பர் மாமா..” என்று மகிழ்ந்தாள்.

குரு அதற்கும் ஒரு புன்னகையை மட்டும் கொடுத்தானே தவிர பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதன் பிறகு இன்னும் இரு கண்ணாடி வளையல்களை அணிவித்தவன்,

இன்னும் ஒரு டப்பாவை எடுத்து மரகதம் பதித்த தங்க வளையல்களை அவளது கையில் போட்டுவிட்டு,

“இது உன் மேல நான் வச்ச காதலுக்காக...” என்று சொன்னான். குரு சொல்ல சொல்ல சதியின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது...

அவளது வியப்பை பார்த்துக்கொண்டே,

மேலும் பல வளையல்களை அணிவித்தான்... நீல வளையல்களை அணிவிக்கும் போது, “இது நம் காதலுக்காக...” என்று சொன்னான்.

சிவப்பு நிற வளையல்களை அணிவித்து, “என்னை எப்பவும் சந்தோசமா வச்சி இருக்குறதுக்கு, என்னை விட்டு நிமிசமும் பிரியாம இருக்கிறதுக்கு...” என்று சொன்னான். அவன் சொல்ல சொல்ல சதிக்கு வியப்பு போய் அவனது காதலின் ஆழம் புரிய தொடங்கியது.

வெள்ளை நிற தங்க வளையல்களை அணிவித்து,

“இது நம்மோட எண்ணிக்கையில்லா முத்தங்களுக்கு” என்று சொல்லி அவளை சிவக்க வைத்தான்.

மஞ்சள் நிற கல் பதித்த வளையல்களை அணிவித்து,

“இது இனி வர போற நம் பிள்ளைகளுக்காக...” என்று சொல்லி கண் சிமிட்டினான்.

கருநீல நிற வளையல்களை அணிவித்து,

“இது இனி வர போற நம் வசந்தமான வருங்கால வாழ்க்கைக்கு...” என்று அணிவித்தான்.

கருப்பு வைரம் பதித்த தங்க வளையலை அணிவித்து, “இது இன்னும் வளர்ந்துகொண்டே போகும் நம்ம காதலுக்கு...” என்று சொன்னவன்,

நல்ல ஜாதி வைரம் பதித்த வளையலை இறுதியாக அவளது கையில் பதித்து, யார் காதிலும் கேட்காத வகையில் மிக அந்தரங்கமாக, 

“இந்த வளையல் எண்ணிக்கைக்கு அடங்காத நம் கூடலுக்கும், உன் மேல நானும் என் மேல நீயும் வச்சு இருக்க மோகத்துக்கும் அடையாளமாய்...” என்று சொல்லி அவளது நெற்றியில் முத்தமிட்டு குங்குமமிட்டு சந்தனம் வைத்து கழுத்துக்கு எல்லா வண்ணங்களும் சேர்ந்த நகையணியை அணிவித்து தன் உள்ளத்து மகிழ்வை முழுமையாக சொல்லி முடிக்க, ஒரே விசில் சத்தம் தான் அந்த வீடு முழுவதும்...

“அண்ணா கலக்கிட்ட ண்ணா... செம்ம..” ஓடி வந்து நவீன் தன் அண்ணனை கட்டி அனைத்து தன் மகிழ்ச்சியை தெரிவிக்க, ராக்கியும் கட்டிக்கொண்டான் நெகிழ்வுடன்...

மற்ற அனைவரும் “குரு செம்ம... ரொமான்ஸ் ஹீரோ நீங்க...” என்று ஆராவரம் செய்ய தீபாவிற்க்கே கொஞ்சம் பொறாமையாகிப் போனது...

சதிக்கு குரு தன் மேல் வைத்த அளவுக்கடந்த அன்பை எண்ணி எண்ணி இன்னும் அவன் மீது பைத்தியமாகி போனாள்.

அத்தனை பேரின் முன்னிலும் அவளின் முன் மண்டியிட்டு புடவைக்கு மேலே தன் வாரிசுக்கு முத்தம் கொடுத்தான்.. அதில் இன்னும் நெக்குருகி போனாள் சதி...

இனி வளையல் போடுறவங்க போடுங்க என்று சொல்லி குரு நகரந்துக்கொள்ள... ராக்கி அவனை முறைத்தான்.

“ஏண்டா....” என்றான்.

“ம்ம்ம் உன் பொண்டாட்டி கையை முதல்ல பாரு...” என்று சொல்ல கூடி இருந்த அத்தனை பேரின் பார்வையும் சதியின் கைகளில் தான் இருந்தது...

ஆரம்பம் முதல் இறுதி வரை கண்ணாடி வளையல்கள் அணிவகுக்க, முதலில் வெள்ளி வளையல், அதற்கு அடுத்து கண்ணாடி வளையல்கள் இரண்டு, அதற்கு அடுத்து தங்க வளையல்கள், அடுத்து கண்ணாடி வளையல்கள் என்று ஒரே சீராக குரு ஒவ்வொரு தங்க வளையல்களுக்கு இடையில் இரண்டு இரண்டு கண்ணாடி வளையல்களை அடுக்கி இறுதியாக வைரத்தில் நிறுத்தி அதோடு இறுதியாக இன்னும் இரண்டு கண்ணாடி வளையல்களை போட்டு முழுமையாக அவளது கரத்தை நிறைத்து இருந்தான்...

இதில் எங்கு மற்றவர்கள் போட... குருக்கு லேசாக வெட்கம் வந்தது... அதை கண்டவர்கள் அனைவரும் கொள்ளென்று சிரிக்க குருவின் முகம் அழகாய் சிவந்து போனது...

குருவே தன்னவளுக்கு வளையல்களை போட்டு வளை காப்பு வைபவத்தை நிறைவு செய்தான்... பொதுவாக எல்லோர் முன்னிலையிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டாள் சதி...

பூரண நிலவு போல அவளது வாழ்க்கை அழகாய் இருப்பது போல தோன்றியது தீபாவிற்கு... தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்திருக்க கூடாதா...? என்று பெண் உள்ளம் ஏக்கம் கொண்டது...

ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் புன்னகைத்து வைத்தாள். இனி ஆசை பட்டும் எதுவும் கிடைக்க போறதில்லையே.. அதுவும் தாய்மையின் இந்த நிலை...

“ம்ஹும்... வாய்க்க பெறாதே...” எண்ணியவளுக்கு குருவின் காதல் வேண்டும் போல இருந்தது...

தாலி கட்டிய அன்று கூட முழுமையாக தன் பக்கம் மனைவி என்ற உரிமை பார்வை பார்க்காதவனை கண்டு அவ்வளவு ஏக்கமாய் இருந்தது...

தன் இயலாமை ஒரு புறம் என்றாலும் மனைவி என்ற ஞாபகம் கொஞ்சம் கூடவா இருக்காது அவனிடம் என்று குருவையே பார்த்துக்கொண்டு இருந்தாள் தீபா..

அவனோ அவள் புறம் சிறிதும் கூட திரும்பி பார்க்கவில்லை. எப்பொழுது தாலி கட்டினானோ அப்போதிருந்து அவளுடைய முழு செலவையும் குரு தான் ஏற்றுக்கொண்டு இருக்கிறான்... அவளை மருத்துவமனைக்கு கூட்டி சென்று மருத்துவம் பார்க்கும் போதெல்லாம் முடிகிற நேரம் துணைக்கு இருந்து இருக்கிறான்... வெறும் அத்தை மகனாக மட்டுமே...

அதையும் சதியிடம் நடந்துக்கொள்ளும் முறையையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மனம் கனத்து போனது...

இது தவறு என்று அவளின் உள் மனம் சொன்னாலும், வெளி மனம் குருவின் பார்வைக்காக காதலுக்காக ஏங்கியது..

தான் இன்னொருத்தி விரும்பியவனை தான் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து இருக்கிறோம் என்பதை மறந்து போனவளாய் அவனை உரிமை கொண்டாட மனம் தவித்து போனது.

அதுவும் இன்று சதிக்கு நடத்திய விழா அவளை இன்னும் தவிக்க செய்தது... சதியின் அழகான முகம், அவளது முகத்தில் தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்த அழகு, கதாநாயகி போல அவளை தாங்கும் தன்னுடைய கணவன் என்று எல்லாமும் சேர்ந்து தீபாவை ஒரு வழிப்பண்ணியது...

ஆனால் அது அத்தனையையும் மனதுக்குள் போட்டு புதைத்துக்கொண்டவள் வெளியே மென்மையாக சிரித்துக்கொண்டு இருந்தாள்.

விழா இனிதாக முடிய... குரு சதியை தன் அறைக்கு அழைத்து சென்று அவளை ஒய்வு எடுக்க விட்டான்... மிக தளர்வான உடையை உடுத்தி விட்டவன் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்... அவளுக்கு அந்த அணைப்பு பல மடங்கு பலத்தை கொடுக்க நிம்மதியாய் விழிகளை மூடிக்கொண்டாள்.

சிறிது நேரம் அப்படியே இருந்தவள், மெல்ல நிமிர்ந்து தன்னவனை பார்த்தாள். அவளது அசைவில் கண் விழித்தவன்,

“என்னடி...” என்றான்.

“படுக்கையை ஒட்டி இருந்த மேசையின் கதவை திறந்து ஒரு பரிசு பொருளை எடுத்து குருவின் கையில் கொடுத்தாள்.

கண்கள் மின்ன அதை திறந்து பார்த்தவன் இனிதாக அதிர்ந்தான்...

அதில் தங்கத்தால் ஆன கால் சலங்கை உள்ளிருந்தது...

“ஹேய்... எப்படி வாங்குன... அதும் இது...” என்று அதை கைகளில் எடுத்து தொட்டு பார்த்தவன் தன் இதழ்களில் புதைத்துக்கொண்டான்...

“ப்ச்... பரிசு கொடுத்தது நானு...” சிணுங்கினாள்.

அவளது சிணுங்களை கண்டு உயிர்த்தவன்,

“அது ஜடப்பொருள் டி...” என்று வாய் விட்டு சிரித்தான்..

“அதெல்லாம் எனக்கு தெரியாது... என் மாமா உதடு படுற இடம் எல்லாமே நானா தான் இருக்கணும்..” என்று சொன்னவளை இறுக்கி அணைத்தவன்,

“அப்போ அதையே நானும் சொல்லலாம் தானே...” என்றவன் அவள் கேட்டதை பல மடங்கு செய்ய தொடங்க சதியின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது...

இருவரின் பிணைப்பையும் எதார்த்தமாக பார்த்த தீபாவிற்கு அனைத்து வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் வெடித்து கிளம்ப தொடங்கியது...

Loading spinner
Quote
Topic starter Posted : June 13, 2025 2:55 pm
(@gowri)
Estimable Member

போச்சி போச்சி....இது தான் கடைசில நடக்க போகுது🤦🤦🤦🤦🤦

Loading spinner
ReplyQuote
Posted : June 17, 2025 3:48 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top