Notifications
Clear all

அத்தியாயம் 20

 
Admin
(@ramya-devi)
Member Admin

குருவின் உணர்வுகள் அனைத்தும் வெளிப்பாடும் இடம் அவனது தனிப்பட்ட நடன கூடம் தான்... அதில் அவனது முதல் கூடல் அரங்கேறியதில் அவ்வளவு நிறைவாய் உணர்ந்தான்...

அது போலவே சதி உணர்வாளா என்று தயங்கியவன் அவளிடம் அதை கேட்க...

“உங்களுக்கு அதிகமா பிடிச்ச இடம் இந்த கலை கூடம் தான். அதை விட அதிகமா பிடிச்சது உங்க தனிப்பட்ட நடன கூடம்... அதுல தான் உங்களோட எல்லா உணர்வுகளும் வெளிப்பட்டு அரங்கேறும்... அந்த மாதிரி இடத்துல நம்ம முதல் கூடல் அரங்கேற்றம் ஆனது எனக்கு மகிழ்ச்சி தான்... உங்க அறையை விட இந்த இடம் இன்னும் ஒரு நிறைவை தருதுங்க...” என்றவளை கட்டிக்கொண்டான்.

“நன்றிடி...” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

அதிலே அவனது உணர்வு நிலையை புரிந்துக்கொண்டவள் அவனது நெஞ்சில் சாய்ந்துக்கொண்டு முழு நிலவை பார்த்தாள்.

ஏனோ மனமெங்கும் அவ்வளவு மகிழ்ச்சி பொங்கி ததும்பிக்கொண்டு இருந்தது... அதை அவனிடம் சொல்லவும் செய்தாள்.

“எனக்கும் அப்படி தான்டி இருக்கு... எங்க நீ என் கைவசம் வராம போய்விடுவியோன்னு எனக்குள்ள அவ்வளவு பயம் இருந்தது... ஆனா அதையெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு ஓடி வந்து முத்தம் குடுத்த பாரு... இட்ஸ் ரியலி அமேசிங் டி...” என்று சிலாகித்தான்.

அவன் சொன்னதை கேட்டு முகம் சிவந்து போனாள்.

“என்ன சத்தத்தையே காணோம்...”

“ம்ம்... இப்படி கிண்டல் பண்ணா என்னால எப்படி பேச முடியுமாம்...?” சிணுங்கினாள்.

“ஹே இது கிண்டல் இல்லடி... நீ மட்டும் அப்படி முத்தம் குடுக்காம போய் இருந்தா...” என்று சொல்லி முடிக்கும் முன்பே அவனது வாயை பொத்தினாள்.

“ப்ச்... அதையே ஏன் மறுபடியும் மறுபடியும் சொல்லிட்டு இருக்கீங்க...” என்று இன்னும் சிவந்தாள்... அந்த சிவப்பில் லேசான செல்ல கோவமும் இருந்தது..

அதை ரசித்தவன், அவளது கரத்தை எடுத்துவிட்டு,

“அப்படி இல்லடி... நீ முதல் அடி எடுத்து வைக்கலன்னா கண்டிப்பா இப்படி ரெண்டு பேரும் உட்கார்ந்து கதை பேசிட்டு இருக்க முடியாது...” என்றான்.

“இவ்வளவு நாளா நான் இதுக்கு தான் பயந்தேன்...” என்று முணகினாள்.

அதில் முகத்தை சுருக்கியவன் “எதுக்குடி...” என்றான்.

“ம்ம்ம்... முதல்ல நான் அப்ரோச் பண்ண கூடாதுன்னு தான்...” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.

அதில் புன்னகைத்தவன், “முழுசா சொல்லுடி...” என்று அதட்டினான்.

அதில் சின்ன கோவம் கொண்டவள்,

“நீங்க பக்கத்துல வந்தாலே என்னால என்னை... எங்க நானே உங்க நெஞ்சுல சாஞ்சிடுவனோன்னு பயந்து போய் தான் பக்கத்துல வரல... நீங்க பார்வையாலே ஆளை முழுங்குற மாதிரி பார்க்குறீங்க... ஏன் இன்னைக்கு கூட அப்படி தான் ஏதோ காணாததை கண்ட மாதிரி வெறிச்சி வெறிச்சி பார்த்துட்டு இருந்தீங்க... நீங்க வெறும் பார்வையோட நிறுத்திட்டீங்க... ஆனா என்னால தான் என்னை அடக்க முடியாம எங்க நானே உங்க கிட்ட வந்துடுவனோன்னு பயந்து போய் தான் நான் லீவ் கேக்க வந்தேன்... ஆனா நீங்க அதையெல்லாம் புரிஞ்சுக்காம காலுல சலங்கை கட்டாத குறையா ஆடி தீர்த்துட்டீங்க...” என்று சிவந்த முகத்தை அவனது நெஞ்சிலே மறைத்துக்கொண்டாள்.

அவள் சொன்ன செய்தி குருவிற்கு புதிது...

“ஹேய் என்னடி சொல்ற...” என்று வியந்து போனான்.

“அப்போ... நீ என்னோட பார்வையை தாங்க முடியாம தான் லீவ் போட்டியா...?” என்றான்.

முகத்தை நிமிர்த்தாமல் அவனது நெஞ்சிலே சாய்ந்துக்கொண்டு “ஆமாம்...” என்பது போல தலை அசைத்தாள். அதை பார்த்து அவளது முகத்தை நிமிர்த்த பார்த்தான். அவளோ இன்னும் அவனது நெஞ்சிலே முகத்தை புதைத்துக்கொள்ள, வலுக்கட்டாயமாக அவளது முகத்தை நிமிர்த்தி “நிஜமா...?” என்று கேட்டான். 

“ம்ம்ம்...” என்றாள் அவனுக்கும் மட்டும் கேட்கும் குரலில்... சுற்றி இருந்த காற்றுக்கு கூட கேட்டு இருக்குமோ என்னவோ அவ்வளவு மிருதுவாக சொன்னாள்.

அதை கேட்டு “வாவ்...” என்று உற்ச்சாகத்தில் கத்தியேவிட்டான்...

சிறுபிள்ளை போல அவனது செயலை கண்டு திகைத்து போனவள், அவனை வியந்து பார்த்தாள்.

“என்ன ஆச்சு மாமா...? இந்த சின்ன விசயத்துக்கு போய் இவ்வளவு சந்தோஷம் படுறீங்க...”

“எது இது சின்ன விசயமே... போடி....” என்று இன்னும் உல்லாசத்துக்கு சென்றவன் அவளை தூக்கி சுற்றினான்.... அவனது இந்த பரிமாணத்தில் “ஆஆ....” என்று வாயை பிளந்தாள். பிளந்த வாயில் நச்சென்று ஒரு முத்தத்தை கிக்காக கொடுத்தவன் பின் நிதானித்து,

“உனக்கு தெரியாது செல்லம்மா.. உன் அக்காவோட கல்யாண பேச்சு வந்ததுல இருந்து நீ என்னை விட்டு ரொம்ப தூரம் விலகி போன மாதிரி இருந்தது... அதை எப்படி சரி பண்றதுன்னு எனக்கு புரியல... உன்கிட்ட நெருங்குனா வீட்டு ஆளுங்க என்ன சொல்லுவாங்கன்னு ஒரு பக்கம் யோசனையா இருந்தது...”

“அதை விட உன் பாரா முகம்.... அது என்னை கொன்னு போட்டுச்சு.. அன்னைக்கு நகை எடுக்கும் போது உன் கண்ணுல பார்த்த கண்ணீர் தான் என் கண்ணு முன்னாடி வந்து நின்னது ஒவ்வொரு நாளும்... உனக்கு முழுசா ஆறுதல் கூட சொல்ல முடியாம நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான்டி தெரியும்.”

“அதும் கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நீ வருத்தப்பட்டியே... செத்துட்டேண்டி... அவ்வளவு கஷ்டமா போச்சு...”

“உன்னோட கண்ணீர் என்னை அவ்வளவு கஷ்ட்டப்படுத்துனுச்சு... உன்னை நெருங்கவும் முடியாம, உனக்கு ஆறுதலும் குடுக்கவும் முடியாம சத்தியமா நரக வேதனைடி அது... ஆனா கல்யாணத்துக்கு பிறகு உன் அக்கா உன்னை என்கிட்டே விட்டுட்டு போனதுக்கு பிறகு தான் எனக்கு நான் தொலைச்ச நிம்மதி என்கிட்டே மறுபடியும் வந்து சேர்ந்த மாதிரி இருந்தது...” என்றவன், சட்டென்று முறைத்தான்.

அதில் “என்னாச்சு மாமா ஏன் இப்போ முறைக்கிறீங்க...” என்று கேட்டாள் அவனது திடிர் கோவத்தை பார்த்து.

“பின்ன நீ செஞ்ச காரியத்துக்கு முறைக்காம கொஞ்ச சொல்றீயாடி...?”

“மாமா...” என்றாள் பாவமாக.

“அன்னைக்கு கொஞ்சம் சந்தோசமா இருந்தேன்டி... ரொம்ப நாளைக்கு பிறகு உன்னை என் அறையில பார்த்த போது... ஆனா நீ ஏதோ உனக்கும் கதவுக்கும் தான் உறவுன்ற மாதிரி கதவை கட்டி பிடிச்சுக்கிட்டு ராத்திரி முழுசும் உக்கார்ந்து இருக்க... பின்ன கோவ படமா கொஞ்ச சொல்றீயா...?” அடமாய் கேட்டவனை நெருங்கி வந்து, அவனது முகத்தை தன் இரு கையாளும் ஏந்தி,

“எனக்கு என் மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனா சாக கிடக்குற ஒருத்திய வச்சுக்கிட்டு என்னால எப்படி என் மாமா கூட சந்தோசமா இருக்க முடியும் சொல்லுங்க மாமா... அதும் அவளோட வாழ்க்கையை பறிச்சுக்கிட்டு...” கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“நானும் அன்னைக்கே பாய்ஞ்சிருக்க மாட்டேன்டி... நானும் மனுஷன் தான்.. எனக்கு அவளை மனைவியா ஏத்துக்க முடியலையே தவிர, என் மாமன் பொண்ணா அவ மேல எனக்கு அன்பும் சரி பாசமும் சரி அதிகமா இருக்கு...” என்றான்.

“அதனால தான் மாமா உன்னை அவளுக்கு தாலி கட்ட சொன்னேன்...” என்று சிரித்தாள் சதி...

அந்த இரவு நேரத்தில் அவளது உள்ளம் போலவே அவளது புன்னகையும் அவ்வளவு பிரகாசமாய் இருந்தது...

“உன் மனசுக்கு நீ ரொம்ப நல்லா வாழுவடி....” என்று அணைத்துக்கொண்டான்.

“கண்டிப்பா வாழுவேன் மாமா... ஏன்னா நான் கட்டியிருக்குறது என் மாமானாச்சே...” என்று அவனது அணைப்பை தன் அணைப்பாக்கிக்கொண்டு அவனை நெருக்கிக்கொண்டாள்.  

இப்படியே அவர்களது நாட்கள் மிக அழகாக சென்றது... கலைக்கூடத்தில் எப்பொழுதும் போல இருந்தாலும் தனி கவனிப்பு அவள் மீது இருந்துக்கொண்டே இருந்தது சதிக்கு..

அதை உள்ளுக்குள் ரசித்தவள் வேண்டுமென்றே அவனை அவ்வப்பொழுது டெம்ப்ட் பண்ணிவிடுவாள்.

அதில் குரு தான் கொஞ்சம் திணறி போவான்.

கலைக்கூடத்தில் குரு ரவுன்ஸ் போகும் போதும் சரி, இல்ல சினிமா ஷூட்டிங் பண்ணும் போதும் சரி ஏதாவது சில்மிசமாக செய்வாள்.

கண்ணடிப்பது, இதழ் குவித்து முத்தமிடுவது, யாருமறியாமல் அவனது கையை உரசிக்கொண்டு செல்வது, கொஞ்ச தூரம் அவனை தாண்டி சென்ற பின்பு திரும்பி பார்த்து உதட்டை கடித்துக்கொண்டு அவனை சீண்டுவது என்று பல அளப்பரைகளை செய்துக்கொண்டு இருந்தாள்.

ராக்கிக்கு தான் இவளது செயல்களை கண்டு காண்டானது...

“ஒரு சின்ன பையனை பக்கத்துல வச்சுக்கிட்டு நீங்க ரெண்டு பேரும் பண்ற வேலை இருக்கே...” என்று அவன் ஆரம்பிக்கும் போதே,

“சப்பா... இந்த கிழட்டு தொல்ல தாங்க முடியல... வயசான காலத்துல புலம்பி தள்ளுது...” என்று நக்கலாக கமென்ட் பண்ணிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுவாள் சதி.

“எதே கிழடா...” என்று திரும்பி பார்க்கும் முன் அவள் ஓடியே போய் இருப்பாள்.

அதில் இன்னும் காண்டாவான் ராக்கி..

ஏனோ குரு உள்ளுக்குள் இறுகி இருப்பதாலோ என்னவோ சதியின் இந்த பரிமாணம் ஒருவித ரசனையையே கொடுத்தது அவனுக்கு...

அதுவும் அவள் சினிமா சூட்டிங் என்றால் அவ்வளவு தான் உதவி இயக்குனர்களுடன் தான் அதிக நேரம் இருப்பாள். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதாகட்டும் அவர்களை வம்பிலுப்பதாகட்டும் ஏதாவது ஒன்று செய்துக்கொண்டே இருப்பாள்.

அதை குரு கண்டுக்கொள்ள மாட்டான். இது அவளுக்கு பிடித்தமானது என்று எண்ணத்துடன் ஒதுங்கி கொள்ளுவான். அதிலே சதிக்கு இன்னும் அதிகமாக அவன் மீது காதல் வளர்ந்தது...

ராக்கியும் அவளுடன் பெரும்பான்மையான நேரம் இருப்பதால் குரு அவளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தன்.

அடுத்து வந்த ஒவ்வொரு இரவும் சதிக்கு தூங்கா இரவாகவே இருந்தது... குரு தன் காதலை அவளுள் வன்மையான தேடலாக தொடங்க சதிக்கு அவனது மோகமும் காதலும் சிலிர்ப்பை தந்தது... அதும் அவனது வன்மை காயம் கொண்ட இதயத்துக்கு மருந்தாகவே அமைந்தது...

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குருவை மிக தீவிரமாக எழுப்பிக்கொண்டு இருந்தாள் சதி...

“ப்ச் தொந்தரவு பண்ணாதடி... தூக்கம் வருது...” என்றவன் அவளை இழுத்துக்கொண்டு மேலும் தன் தூக்கத்தை தொடர, அவனது முகத்தில் மிக மென்மையாக தன் மூச்சுக்காற்றை வைத்து ஊத்தி விட, அந்த மென்மையில் தூக்கம் கலைந்து,

“சதி... ப்ளீஸ்டி...” என்று அவளது கழுத்தில் முகத்தை புதைத்துக்கொண்டு தூங்க, சில நொடிகள் அப்படியே இருந்தவள் மீண்டும் அவனை அப்படியே எழுப்பி விட,

“உன்னை இப்படியே விட்டா சுத்தப்பட்டு வரமாட்ட டி... என்ன பண்றேன்னு பாரு உன்னை...” என்ற குரு கண்களை திறக்காமல் சற்று எம்பி அவளது இதழ்களை தன்னுள் இழுத்துக்கொண்டான்...

அதன் பிறகு எங்கிருந்து அவள் ஊதுவது... காலை நேர விடியல் இருவரது ஆலிங்கனத்திலும் கரைந்து போனது.

அவனது தேடலில் தொலைந்து போனவள் நிறைவாய் அவன் அவளது நெற்றியில் முத்தமிட்ட பொழுது தலையணைக்கு அடியில் இருந்ததை எடுத்து காண்பித்தாள்.

அதை கண்டவனுக்கு உடலெல்லாம் சிலிர்த்து அடங்கியது... கண்கள் கலங்கி விடுமோ என்ற நிலையில்  இருந்தது... அதையெல்லாம் சிறிதும் கண்டுக்கொள்ளாமல் வேகமாய் அவளது கண்களை பார்த்து,

“உண்மையாவாடி...?” என்று கேட்டான்.

அவள் உள்ளார்ந்த புன்னகையுடன் தன்னவனை ஆழ பார்த்து, “ஆமாம்...” என்றாள்...

 

Loading spinner
Quote
Topic starter Posted : June 13, 2025 2:49 pm
(@gowri)
Estimable Member

அப்பா அம்மா ஆகிட்டிங்களா🤩

Loading spinner
ReplyQuote
Posted : June 16, 2025 2:08 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top