Notifications
Clear all

அத்தியாயம் 10

 
Admin
(@ramya-devi)
Member Admin

அன்றைக்கு அலுவலகம் அப்படி இப்படி என்று போனது தமிழுக்கு. வேலையில் கவனம் பதியவே இல்லை. எங்கோ தோற்றுப் போன ஒரு வலி. அது இதயத்தை முற்றிலும் சூழ்ந்துக் கொள்ள, அவளால் இயல்பாக மூச்சு விட முடியவில்லை. எழுந்து குறுங்கண் ஓரம் நின்றுக் கொண்டவள் தன் எதிரில் இருந்தவனை வெறித்துப் பார்த்தாள்.

தென்னவன் வேலையை கருமமே கண்ணாக பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது இந்த செயலில் இவளுக்கு பத்திக் கொண்டு வந்தது.

வாய்க்குள்ளே அவனை திட்டி தீர்த்துக் கொண்டவளுக்கு மனம் ஆறவே இல்லை. இன்றைக்கும் அவளுக்கு பியர் அடிக்க தோன்றியது. முயன்று கட்டுப் படுத்திக் கொண்டு வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.

வீட்டுக்கு வந்தவளுக்கு ஏன்டா வீட்டுக்கு வந்தோம் என்று தோன்றியது.

அவளின் சித்தப்பா குடும்பம் வந்து இருந்தது. கூடவே வினோதினியும். இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் நிச்சயம் நடந்து முடிந்து இருக்கும். அதுக்குள்ள இப்ப என்னவாம்... என்று மனதுக்குள் பொருமிக் கொண்டவள் வந்தவர்களுக்கு ஒரு புன்னகையை மட்டும் கொடுத்து விட்டு தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

நுழைந்த அடுத்த நிமிடமே “அக்கா உனக்கு ஏன் சிரமம்... தம்பியை நான் பார்த்துக்குறேன். நீ கம்பெனியையும் பார்த்துட்டு இவனையும் பார்த்துகுறது எல்லாம் ரொம்ப சிரமம். அதனால இவனை வளர்க்கிற பொறுப்பை நானே எடுத்துக்குறேன். நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க” என்று குழந்தையை அவள் தூக்கப் போக, தமிழுக்கு அடிப்படை நாகரீகம் கூட மறந்து போய் விட்ட நிலையில், அதிக கொதி நிலையில் இருந்தாள்.

“தம்பி பய அப்படியே அவங்க அப்பாவை போல இல்ல க்கா” என்று குழந்தையை தூக்கி முத்தம் வைக்கப் போக, வெடுக்கென்று அவனை தன் கைகளில் தூக்கிக் கொண்ட தமிழ்,

“நீ உன் புருசனை மட்டும் பார்த்தா போதும். அதை விட்டுட்டு இந்த தேவை இல்லாத வேலையெல்லாம் நீ பார்க்க வேண்டாம். அதோட இது தான் கடைசி நீ என் அறைக்குள்ள வர்றது... இன்னொரு முறை என் அறைக்குள்ள வர்ற வேலை வச்சுக்கிட்ட அவ்வளவு தான்” என்று எச்சரித்தவள்,

“இந்த குழந்தை என் குழந்தை மட்டும் தான். இவனை வேற யாரோடவும் ஒப்பிட்டு பேசுற வேலை வச்சுக்காத.. இவன் என் மகன். இவனோட நிழலை கூட மத்தவங்க தொட நான் அனுமதிக்க மாட்டேன். இன்க்ளூடிங் யூ.. இவனை இன்னொரு முறை டச் பண்ற வேலை வச்சுக்காத.. இதே போல அமைதியா பேசிட்டு இருக்கா மாட்டேன். கன்னம் பழுத்திடும்” என்றாள் கர்ஜனையாக.

தமிழின் இந்த அவதாரத்தில் பயந்துப் போனவள்,

“ஆனா அக்கா” என்று அவள் ஏதோ சொல்ல வர,

“உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது இன்னொரு பிள்ளையை பெத்துக்க தான். இந்த பிள்ளையை வளர்க்க உன்னை கல்யாணம் பண்ணல.. அதை முதல்ல தெரிஞ்சுக்க. அதோட உன் சங்காத்தம் எல்லாம் மிஸ்டர் தென்னவனோட நிறுத்திக்கணும். அதை விட்டுட்டு என் பக்கமோ என் மகன் பக்கமோ உன் பாசத்தையும் அன்பையும் காண்பிக்கணும்னு நினைக்காத. எனக்கோ என் மகனுக்கோ யாருடைய அன்பும் பரிதாவிப்பும் தேவை இல்லை” என்று எச்சரித்தவள் அவளை அறையை விட்டு துரத்தியும் விட்டு விட்டாள்.

அதை வெளியே இருந்து கேட்டுக் கொண்டு இருந்த பானுமதிக்கு சுருக்கென்று இருந்தது.

“இந்த பொண்ணு ஏன் தான் இந்த குட்டியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாளோ... இந்த குழந்தையை விட்டா தானே இவளுக்கும் ஒரு கல்யாணத்தை ஏற்பாடு செய்ய முடியும். ஆனா அதை புரிஞ்சுக்காம இப்ப தான் ஆயா வேலை பார்த்துட்டு இருக்கா” மனதுக்குள் புலம்பியவர் வெளியே வந்த வினோதினியிடம்,

“அவ பேசுனதை மனசுல வச்சுக்காதம்மா... குழந்தை மேல இருக்குற பாசத்துல அப்படி பேசிட்டா” என்று ஒப்புக்காக சொன்னவர் போய் விட்டார்.

வினோதினியிடம் வந்த அவளின் தாய் தேவி,

“என்னடி ஆச்சு? குழந்தையை உன் கிட்ட குடுத்தாளா இல்லையா அந்த மேனா மினுக்கி?” கேட்டார்.

“எங்கம்மா குடுக்கவே இல்ல... என்னவோ அவ சொத்தை கேட்ட மாதிரி ரொம்ப பண்றா” என்றாள் கடுப்பாக.

“இந்த நிச்சையம் நடந்து இருந்தா பாதி சொத்து உன் கையில இருந்து இருக்கும். இந்த பாவி தென்னவன் வேற நிச்சயத்துக்கு ஒத்துக்கல. சரி அவன் பெத்த பிள்ளையை வச்சாவது அவனை மடக்கி போடலாம்னு பார்த்தா அதுக்கும் இந்த தமிழ் விட மாட்டிக்கிறா... இப்படியே போனா நாம என்னைக்கு தான்டி பணக்காரங்களா ஆகுறது. நம்ம கனவு எல்லாம் எப்ப பலிக்கிறது” என்று கருவினார்.

“விடும்மா.. புள்ள இல்லன்னா என்ன... பிள்ளையோட அப்பனை நேரடியாவே மயக்கி போட்டர்றேன்” என்று சிலுப்பிக் கொண்டாள்.

“இப்ப சொன்னியே அதை முதல்ல செய் வினோ.. அப்ப தான் நாம இங்க வந்த நோக்கம் நிறைவேறும்.. நீ மட்டும் எப்படியாவது அவனை மயக்கி போட்டுட்டன்னா..” என்று சொல்லும் பொழுதே அவரது முகம் பேராசையில் மின்னியது.

“நம்ம வாழ்நாள் முழுக்க பணத்துல மிதக்கலாம்” என்று அவர் மேலும் சொல்ல, அந்த எண்ணம் வினோவுக்கும் இருந்தது. அதனால தான் கிருஷ்ண மூர்த்தி தென்னவனுக்கு கல்யாணம் பேச வரும் பொழுது சம்மதம் சொல்லி இரண்டாந்தாரமாக வர முடிவும் எடுத்து இருந்தாள். அவளின் கண்களிலும் பேராசை மின்னியது.

தாயும் மகளும் பேசிக் கொண்டு இருப்பதை எதார்த்தமாக கேட்ட தமிழுக்கு ஏளனத்தில் உதடுகள் வளைந்தது. அந்த நேரம் தென்னவனும் அங்கே வர அவனை பார்த்து இன்னும் அவளது ஏளனம் அதிகமானது.

அதுவரை தங்களது பேச்சில் கவனமாக இருந்த தாயும் மகளும் தென்னவன் வருவதை பார்த்து விழுந்து விழுந்து உபசரிக்க தொடங்க, தமிழ் உதட்டை பிதுக்கி செம்ம.. என்று கமென்ட் பண்ணி இன்னும் சுவரில் நன்றாக சாய்ந்து நின்ன்றுக் கொண்டாள் கைகளை கட்டிக் கொண்டு.

அவளது பார்வையில் தென்னவனுக்கு எரிச்சல் வந்தது. அடக்கிக்கொண்டு அவளை முறைத்தான்.

“மாமா உங்களுக்காக பாதம் கீர் செஞ்சு வச்சு இருக்கேன். ஜில்லுன்னு குடிச்சா ரொம்ப நல்லா இருக்கும். இருங்க எடுத்துட்டு வரேன்” என்று அவள் கீழே இறங்கி ஓட,

“ஆமா மாப்பிள்ளை உங்களுக்காகவே அவ சமைக்க கத்துக்கிட்டா... இப்ப பார்த்தா என்னை விட புதுசு புதுசா செஞ்சு அசத்துறா.. நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க” என்று அவரின் மகளை அவரே சிலாகித்தவர்,

“உங்களுக்காக நானும் ஜவ்வரிசி பக்கோடா போட்டு இருக்கேன். இருங்க எடுத்துட்டு வரேன்” என்று அவரும் போக,

இவனுக்கு தலை வலியே வந்து விட்டது. அவர்கள் போனதை எரிச்சலுடன் பார்த்தவன், திரும்ப அவனை இடிப்பது போல வந்து நின்ற தமிழ்,

தன் குரலை ஏகத்துக்கும் குறைத்து, ஹஸ்க்கி வாய்சில்,

“சீக்கிரம் நிச்சயத்துக்கு ஒத்துக்கோங்க மிஸ்டர் தென்னவன்.. உங்களை கவனிச்சுக்க உங்க வருங்கால பொண்டாட்டி ரொம்ப துடியா துடிச்சுட்டு இருக்காங்க.. உங்க மாமியார் அதுக்கும் மேல. வருங்கால மருமகனுக்கு விட்டா கோயிலே கட்டிடுவாங்க போல” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவனின் காதோரம் சரிந்து சொன்னவளின் வார்த்தைகளில் அவனுக்கு நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டு வந்தது.

“என்னை சின்ன பிள்ளைன்னு சொல்லிட்டு, பொண்டாட்டி செத்த மூணாவது மாசத்துலையே புது மாப்பிள்ளை ஆகிட்டீங்களே தென்னவன் சார்... வாழ்த்துக்கள். உங்க சாமார்த்தியம் யாருக்கும் வராது... சூப்பர்” என்று கமென்ட் பண்ணியவளை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தான்.

“இப்படி பார்த்தா நீங்க பெரிய உத்தம புத்திரானா தென்னவன் சார்...” இன்னும் நக்கல் பண்ணினாள் அவள்.

“ஏய்..” என்று அவன் கோவப்பட,

“உங்களுக்கு கோவப்பட அருகதையே இல்ல தென்னவன் சார்” என்று அவனை மேலும் சீண்டினாள்.

“ப்ச் இந்த சாரை முதல்ல விட்டு தொலைடி.. கடுப்பா இருக்கு” என்று தலையை அழுந்த கோதிக் கொண்டான்.

“நீங்க தானே சார் உங்களை சார்னு கூப்பிட சொல்லி சொல்லி இருக்கீங்க”

“ப்ச்..” என்று அலுத்துக் கொண்டவன்,

“இப்ப உனக்கு என்னடி பிரச்சனை.. ஏன் இப்படி என்னை துரத்திட்டே இருக்க?” கடுப்படித்தான். அவனும் எவ்வளவோ கட்டுப்படுத்திப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. அவளிடமே வெடித்து நின்றான்.

அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள், “உன்கிட்ட இருந்து எனக்கு என்ன வேணும்..” ஏளனம் செய்தவள்,

“நீ எது குடுத்தாலும் அது குப்பைக்கு தான் போகும் மிஸ்டர் தென்னவன்” அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

“அப்போ என் மகனுக்கு மட்டும் எதுக்குடி உன் நெஞ்சுல மார்புல இடம் குடுத்து இருக்க.. அவனையும் குப்பையில வீச வேண்டியது தானே.. அவனும் என் கிட்ட இருந்து வந்தவன் தான்...” என்றான் உச்ச கடுப்பில்.

அவன் அப்படி சொல்லவும் கட்டுப்பானவள்,

“தென்னவன்” என்று விரலை நீட்டி எச்சரித்தாள்.

அவள் நீட்டிய ஒற்றை விரலை தன் கையிக்குள் வைத்து நெரித்தவன் அவள் மீது இருந்த கோவத்தில் அதை அப்படியே பின்னால் வளைத்து பிடித்தான். அதில் வலி எடுத்த பொழுதும் அசராமல் அப்படியே நின்று இருந்தாள் தமிழ்.

அவளின் நிலையை பார்த்தவன்,

“வலிக்கவே வலிக்கதாடி உனக்கு?” கேட்ட நேரம் அவள் பதில் சொல்ல வரும் முன்பே வினோதினி கையில் பாதம் பாலுடன் வர,

“என் வலியை பத்தி உங்களுக்கு என்ன மிஸ்டர் கவலை” என்று சொன்னவள் அவனது கையில் இருந்து தன் விரலை உருவிக் கொண்டவள்,

“போங்க சார் உங்கா வருங்கால மனைவி பாதாம் பாலுடன் வர்றா... என்ஜாய் பண்ணுங்க” என்று விட்டு தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள் தமிழ்.

அவள் அப்படி சொல்லி விட்டு போகவும் தென்னவனுக்கு ஏகத்துக்கும் கடுப்பு வந்தது.

“மாமா இந்தாங்க... உங்களுக்காக நானே போட்டுட்டு வந்தது. குடிச்சு பாருங்க” என்று நீட்டினாள்.

அதை கையில் கூட வாங்காமல்,

“சாரி வினோ எனக்கு ஏற்கனவே தலை வலிக்கிறது. இதுல ஜில்லுன்னு இதை குடிச்சா இன்னும் தலைவலி எடுக்கும். இன்னொரு நாள் போட்டு குடு நான் குடிக்கிறேன். வெரி சாரி” என்று தன் அறைக்குள் போய் விட்டான்.

Loading spinner
Quote
Topic starter Posted : June 14, 2025 10:57 am
(@gowri)
Estimable Member

அச்சோ இந்த தமிழை பார்த்தா பாவமா இருக்கு....

 

Loading spinner
ReplyQuote
Posted : June 14, 2025 10:14 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top