Notifications
Clear all

அத்தியாயம் 17

 
Admin
(@ramya-devi)
Member Admin

தன் அக்காவை தன் மனம் கவர்ந்தவனின் அறைக்குள் அனுப்பி வைத்த பின் அறைக்கு திரும்பியவளின் நெஞ்சில் இமயத்தை சுமப்பது போல அவ்வளவு வேதனையாய் இருந்தது...

இவ்வளவு நாளில் பட்ட காயங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாய் இன்று அவளது நெஞ்சை ஆக்கிரமிக்க கண்களில் கண்ணீர் கோலம் நிறைந்தது...

சமன் படுத்த முடியா வேதனையை ஆற்ற வழி தெரியாமல் கண்ணீர் விட்டு ஆற்றிக்கொண்டு இருந்த நேரம் அவளின் கதவு தட்டப்பட்டது...

வேகமாய் தன் முகத்தில் இருந்த கண்ணீரை சுத்தமாக துடைத்து எறிந்தவள் கண்ணாடி பார்த்தாள். அதில் அழுத சுவடு அப்பட்டாமாக தெரிய, குளியல் அறைக்குள் சென்று முகத்தை நன்கு கழுவிய பின்பே கதவை திறந்தாள்.

கதவை திறந்து பார்த்தவள் திகைத்து போனாள்.

அங்கே தீபா புன்னகையுடன் நின்றிருந்தாள்.

“அக்கா இந்த நேரம் இங்க என்ன பண்ற... மாமா அறைக்கு போகலையா...?” என்று பதறிப்போய் கேட்டவளை அன்புடன் பார்த்தவள்,

“எனக்கு அங்க என்ன வேலை இருக்கு பாப்பா...”

அவளது பேச்சை கேட்ட சதி “அக்கா...” என்று தடுமாறினாள்.

“எனக்கு தாலி கட்டிக்க தான் ஆசையே தவிர உன் புருஷனை பங்கு போட இல்ல...” என்றாள் புன்னகையுடன்.

“அக்கா...” என்று இன்னும் அதிர்ந்து போனாள் சதி.

“அவ்வளவு ஒண்ணும் உன் அக்கா கொடுமை காரி இல்லை சதி...” என்றாள் சட்டென்று கண்கலங்க...

“அக்கா உன்னை ஒரு பொழுதும் நான் அப்படி எண்ணியதே இல்லை. ஏன் அக்கா இப்படியெல்லாம் பேசுற... நீ இப்படி பேசுறது என்னை ரொம்ப வருத்துது க்கா. உனக்கு முன்னாடி எனக்கு எதுவும் தேவையில்லை...” என்று தீபாவை கட்டிக்கொண்டு அழுதவளை கட்டிக்கொண்டவள், சிறிது நேரம் அழ விட்டாள்.

அதன் பின் அவளை நிமிர்த்தி கண்களை துடைத்துவிட்டவள்,

“ஆனா எனக்கு தேவை சதி...” என்றாள் தீபா.

“அக்கா...”

“ம்ம்ம்... உன்னையும் மாமாவையும் மாதிரி ஒரு குழந்தை வேணும்...” என்றாள்.

“அக்கா என்ன சொல்ற...” தீபா சொன்னதை கேட்டு முற்றிலும் அதிர்ந்து தான் போனாள்.

“பாப்பா உன் வாழ்க்கையை உன் கையில தான் இருக்கு... நான் இருக்குற இடம் உன்னுடையது... அதை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்... எனக்காக நீ எவ்வளவோ விட்டு குடுத்து இருக்க... இனிமேலும் நீ எனக்காக விட்டு குடுத்துட்டு தான் இருப்ப... ஆனா அதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்ய போறேன் சொல்லு... அதனால உன் மாமா உனக்கு மட்டும் தான்... உன்கிட்டயே முழுமையா ஒப்படைக்கிறேன் அவரை...” என்று சொல்ல, வார்த்தைகலற்று போய் தன் சகோதரியை பார்த்தாள் சதி...

“என்ன சதி அப்படி பார்க்கிற, இருக்குறதுலேயே கொடுமையானது தன் மனசுக்கு பிடிச்சவனை மற்றவருக்கு தூக்கி குடுக்குறது தான்... நீ அதையும் எனக்காக செஞ்ச... எனக்கு முன்னாடி அழுதா நான் கஸ்ட்டப்படுவேன்னு என் கண்ணுக்கு தெரியாம அழுவ. உன் கண்ணீர் எனக்கு தெரியலைனாலும் உன் வேதனை எனக்கு தெரியாம போய்டுமா பாப்பா...” என்று புன்னகைத்தவள்,

“இந்த தாலி மேல என்னவோ தெரியல ஒரு ஆசை... மணக்க மணக்க மஞ்சள் பூசி, தலை நிறைய பூவச்சி, பொட்டு வச்சி சுமங்கலியா போகணும்னு ஒரு ஆசை பாப்பா... வேற ஒண்ணும் எனக்கு வேணாம்...” என்றவளை இறுக்கி கட்டிக்கொண்டாள் சதி.

“ஏன் க்கா இப்படி எல்லாம் பேசுற...” கலங்கியவளை இவளும் அணைத்துக்கொண்டு,

“நிஜமாவே எனக்கு அது ஒரு ஆசை பாப்பா... அதே போல அம்மாவா ஆகணும்னு ஒரு ஆசை... அது கண்டிப்பா நிறைவேறாது... ஆனா என் தங்கை மூலியமா அது நிறைவேறும்...” என்று சொன்னவளை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன பாப்பா பார்க்கிற... மாமாவுக்கும் உனக்கும் தான் இன்னைக்கு சாந்தி முகுர்த்தம்...” என்று சதியின் தலையில் குண்டை போட்டாள்.

“அக்கா...” அலறியேவிட்டாள்.

“இவ்வளவு எனக்காக விட்டு குடுத்து இருக்கும் போது உன் மாமனை உன்கிட்ட குடுக்குறது தானே முறை... அவரு எப்பவும் உனக்கு மட்டும் தான்... அவரு மேல உரிமை கொண்டாட எனக்கு எந்த தகுதியும் இல்லை... இந்த தாலி கூட வேறு யாரையாவது கட்ட சொல்லலாம் தான். ஆனா வர்றவன் என் நோயை பார்த்து கேலி பண்ணுவான்...” என்று சொல்லும் போதே அவளது கண்கள் கலங்கியது...

“அக்கா...” என்று அதட்டினாள்.

“நிஜம் அது தானே பாப்பா... பாரு இப்பவே தோள் எல்லாம் சுருங்கி கிழவி மாதிரி ஆகிட்டேன்... கிழவிக்கு யாரு தாலி கட்டுவா பாப்பா..” என்றவளை ஆதுரத்துடன் அணைத்துக்கொண்டாள் சதி...

“அக்கா உனக்கு ஒண்ணும் இல்ல... நீ அழகு க்கா..” என்றவளிடம் சிரித்தவள், தன் இடுப்பில் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து காண்பித்தாள்.

அதில் மண கோலத்துடன் குருவும் தீபாவும் நின்று இருந்தார்கள்.

குரு முழு ஆண்மைக்குரிய கம்பீரத்துடன் நின்றிருந்தான். தீபாவோ தோள் சுருங்கி அறுபது வயது கிழவி போல இருந்தாள்... அதை காட்டி,

“மாமாவுக்கு பெரிய மனசு பாப்பா... அதே பெருந்தன்மையுடன் நானும் நடந்துக்கணும் இல்லையா...? போ போய் மாமா கூட சந்தோசமா இரு...” என்று சொல்ல,

“மாட்டேன்...” என்பது போல தலைஅசைத்தாள் சதி..

“பாப்பா... சொன்னா கேளு போ...”

“முடியாது க்கா... அது உன்னோட வாழ்க்கை உன் வாழ்க்கையை நான் வாழ முடியாது...” என்று முரண்டு பிடித்தாள்.

“சதி இது உன்னோட வாழ்க்கை...”

“அது தாலி கட்டுறதுக்கு முன்னாடி... எப்போ மாமா உனக்கு தாலி கட்டுனாரோ அப்பவே அவரோட தான் உன் வாழ்க்கைன்னு முடிவாயிடுச்சு... இப்போ நீ எல்லாத்தையும் மாத்த பார்க்காத...” உறுதியாக சொன்னாள்.

அவளது உறுதியை பார்த்து உள்ளே பதறிய தீபா ‘அய்யயோ இவளை எப்படி மாமாவோட வாழ வைக்கிறது... இப்போ எதுவும் செய்யலன்னா கடைசி வரை மாமாவோட வாழாம போயிடுவாளே...’ ஒரு நொடி கலங்கியவள்,

‘ம்ஹும் அதுக்கெல்லாம் விடவே கூடாது.. நான் சாகுறதுக்கு முன்னாடி இவங்க ரெண்டு பேரும் வாழ்ந்துடணும்... இல்லன்னா ரெண்டு பேரும் தனிக்கட்டையா தான் இருப்பாங்க... ஒரு நாளும் சேரவே மாட்டாங்க’ என்று ஒரு சிந்தித்தவள்,

“அப்போ என்னோட ஆசை...?” என்று நிறுத்தினாள் தீபா.

“என்னக்கா இன்னும் ஆசை...”

“நான் அம்மா ஆகுறது...”

“அக்கா...”

“நான் சாகுறதுக்கு முன்னாடி இந்த ஒரு ஆசையை மட்டும் நிறைவேற்றி குடு பாப்பா.. இதுக்கு மேல நான் எதுவம் உன் கிட்ட கேக்க மாட்டேன்...” என்று அவளின் கைகளை பிடித்துக்கொண்டு கேட்டாள்.

“அக்கா நான் எப்படி... என்னால முடியாதுக்கா... இது உன்னோட வாழ்க்கை... அந்த நினைப்பு என் மனசு முழுசும் நிறைஞ்சி இருக்கும் போது... என்னோட உணர்வுகளை புரிஞ்சுக்கோ க்கா... நான் வேணா டெஸ்ட் டியுப்...” என்று ஆரம்பிக்கிம் போதே,

“அதுக்கு நான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்குவனே பாப்பா... அதை எதுக்கு உன்கிட்ட கேட்டுக்கிட்டு...” என்று அவளை மடக்கினாள்.

“அக்கா...”

“உன் வயிற்றுல வளர்ற பிள்ளையை நான் ஒவ்வொரு அசைவிலும் உணரனும் டா... அதோட உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நான் சரி பண்ணனும்... என்னால பிரிஞ்ச நீங்க என்னாலையே ஒண்ணு சேரனும்... இல்லன்னா என்னோட ஆத்மா சாந்தி அடையவே அடையாது பாப்பா.. கடைசி நேர ஆசையை நிறைவேற்று டா.. உங்க வாழ்க்கையை கெடுத்த பாவத்தோட நான் போய் சேர்ந்தா கண்டிப்பா நான் அங்க நல்லாவே இருக்க மாட்டேன்...”

“எனக்கு மோட்சம் கிடைக்கணும்னா நீயும் மாமாவும் ஒண்ணு சேரனும்... எனக்கா நீ இதை பண்ணி தான் ஆகணும்...” என்றவள், சதியை அலங்காரம் பண்ணி முழு மனதோடு குருவின் அறைக்கு அனுப்பினாள் தீபா.

“அக்கா ப்ளீஸ்...” கெஞ்சிய கெஞ்சல்கள் எல்லாம் காற்றில் பறக்க விட்ட தீபா தன் தங்கையை தன் கணவனின் அறைக்குள் முழு திருப்தியுடன் அனுப்பி வைத்தாள்.

அவளது செயல்களை அவ்வளவு நேரமாக பார்த்துக்கொண்டு இருந்த வீட்டின் பெரியவர்களின் அனைவரின் மனதிலும் அவ்வளவு நிம்மதி நிரம்பியது....

பெரிய மகளுக்காக பார்த்தாலும் சின்ன மகள் படும் துயரம் அறிந்தே இருந்ததால் சேகருக்கும் ஆனந்திக்கும் தீபாவின் செயலில் சொல்லில் வடிக்க இயலா நிம்மதி பெருகியது...

அவளும் அவரது மகள் தானே... அதுவரை நெஞ்சை அடைத்துக்கொண்டு இருந்த பாரம் விலகி போனது போல உணர்ந்தார் சேகர்.

ராதிகாவுக்குமே மனம் நிறைந்து போய் தான் இருந்தது... ஏனெனில் குரு பெரிய மனது பண்ணி தீபாவை கட்டிக்கொண்டாலும் அவனது மனம் சதியிடம் தான் இருக்கிறது என்பதை அறிந்திருந்தாரே...

அதனால் தீபாவின் செயலில் மகிழ்ந்து தான் போனார்.

சதியை கொண்டு போய் விட்டுவிட்ட தீபா,

“என்னக்காக பார்க்காம சீக்கிரமா ரெண்டு பேரும் ஒண்ணா சேரனும்... அதுக்கு பிறகு குழந்தையை பெத்து என் கையில குடுக்கணும் சரியா...?” என்று அவளிடம் சொல்லிவிட்டு உள்ளே தள்ளி கதவை தாளிட்டுவிட்டு வந்தாள்.

வந்தவளை ஆனந்தியும் ராதிகாவும் எதிர்க்கொண்டு அணைத்துக்கொண்டார்கள் மன நிறைவுடன்.

“அம்மா அத்தை நான் பண்ணதுல எதுவும் தவறு இருக்கா...” என்று கேட்டவளை ஆதுரமாய் அனைத்துக்கொண்டவர்கள்,

“உனக்கு கஷ்டமா இல்லையா டா...”

“சத்தியமா இல்ல அத்தை... மாறா எனக்கு கில்ட்டியா தான் இருக்கு... இந்த தாலி அவ கழுத்துல ஏறணும்... ஆனா அதை தட்டி பறிச்ச மாதிரி ஒரு குற்ற உணர்வா இருக்கு... இதுல அவ வாழ வேண்டிய வாழ்க்கையும் நான் பறிச்சா நான் மனுசியே கிடையாது அத்தை... அதான் அவளுக்கு உரிமையான பொருளை அவக்கிட்டயே குடுத்துட்டேன்... இப்போ தான் எனக்கு முழு மனசா இருக்கு...” என்றாள் மன நிறைவுடன் புன்னகைத்து.

அவளது முகத்தை வாஞ்சையுடன் தடவிய ராதிகாவின் கண்களில் கண்ணீர் சூழ்ந்தது... இவ்வளவு நல்ல மனம் கொண்டவளுக்கு ஏன் இவ்வளவு வேதனையை குடுத்து இருக்க கடவுளே என்று வெடித்தார் மனதில்.

ஆனந்தி தன் மகளின் முகத்தையே பார்த்தார். தோள் சுருங்க ஆரம்பித்ததிலிருந்து அவளுக்கு அதிகமாய் உடலில் வலி எடுக்க தொடங்கியது.. அதை எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு இவ்வளவு நேரம் அழகாய் பேசிக்கொண்டு இருப்பவளை காண காண மனம் வேதனையில் சுழன்றது...

“கண்ணு போதும் முழித்து இருந்தது... மாத்திரை போட்டுட்டு வந்து தூங்கு..” என்று அவளுக்கு மாத்திரை கொடுத்து தட்டி தூங்க வைக்க ஆரம்பித்தார்.

ராதிகாவும் அவளின் உடன் இருந்து கவனித்துக்கொண்டார்.

அனைவரும் தூக்கத்தில் இருக்க, குருவின் அறைக்குள் நுழைந்த சதி தயக்கத்துடன் கதவின் ஓரம் நின்று இருந்தாள்.

அவள் வந்தது தெரிந்து நிமிர்ந்து பார்த்தான் குரு...

அவளிடம் இருந்த தயக்கத்தையும், ஒரு அடி கூட அறையின் உள் எடுத்து வைக்காத அவளது தடுமாற்றத்தையும் அறிந்தவன் ஒன்றும் பேசாமல் விளக்கை அணைத்துவிட்டு, விடிவிளக்கை போட்டுவிட்டு படுக்கையில் சென்று படுத்துக்கொண்டான்.

குரு ஒன்றுமே பேசாமல் அவன் பாட்டுக்கு படுத்துவிட்டதை கண்ட சதிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை..

ஒரு பக்கம் இது அக்காவின் வாழ்க்கை என்பது ஒரு தயக்கத்தை கொடுத்தது... இன்னொரு புறம் தாலி இல்லாமல் படுக்கையை எப்படி பகிர்ந்துக்கொள்ளுவது என்ற தயக்கம்... இந்த இரண்டையும் தாண்டி வருவதற்கு சதியின் இதயம் இடம் தர மறுக்கவே கதவின் மீது சாய்ந்து தன் கால்களை கட்டிக்கொண்டு தலையை அதில் புடைத்துக்கொண்டு அப்படியே விடியும் வரை அமர்ந்து இருந்தாள்.

குருவோ அவளின் செயல்களை பார்த்தவன் ஒன்றுமே சொல்லவில்லை. இதில் அவனுக்கு சொல்ல ஒன்றுமே தோன்றவில்லை.

சதி தாலி கட்ட சொன்னாள் இவன் தீபாவிற்கு தாலி கட்டினான். அதோடு தீபா சதியோடு தான் வாழணும் என்று சொல்லி வெளியே சென்று சதியை உள்ளே அழைத்து வந்து விட்டுவிட்டு சென்றாள்.

இந்த நிகழ்வுகளை குருவுக்கு எப்படி கடந்து செல்வது என்றே தெரியவில்லை... சதியை எப்படி ஏற்றுக்கொள்ளுவது என்றும் புரியவில்லை. அவளது மன நிலையை உணர்ந்தவனால் அவளை தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டுவிட்டான்.

அன்றைக்கு மட்டும் அல்லது அடுத்து வந்த நாட்கள் அனைத்துமே அப்படியே தான் சென்றது... தீபாவிற்கு தான் தான் சங்கடமாய் போனது..

பழைய படி இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள கூட இல்லாமல் கிழக்கும் மேற்குமாக இருந்தார்கள். அதை கண்ட தீபாவிற்கு இன்னும் உடல் நிலை மோசமாக உடனடியாக மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள்.

அவரோ மனது அலர்ச்சி தான் அவரது உடலை மிகவும் வருத்துகிறது என்று சொல்லிவிட, சதிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை...

தீபாவின் ஆசை ஒரு புறம் என்றாலும், குருவை முன்பு போல அவளால் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் சுயநலத்துக்காக அக்காவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லிய பின்பு எப்படி அவனை முன்பு போல அணுக முடியும் என்றே தெரியவில்லை...

மெல்லிய தயக்கம் இருந்துக்கொண்டே இருந்தது... அதும் கலைக்கூடத்தில் அவனுடன் சேர்ந்து ஆடவே பயந்து போனாள். எங்கே தான் முழுமையாக அவன் வசம் சென்று விடுவமோ என்று...

ஆம் இடை பட்ட நாளில் தீபா ஒவ்வொரு முறையும் குழந்தையை பற்றி பேசி பேசி சதியையும் அறியாமலே சதியின் மனதில் குழந்தை ஆசையை வளர்த்து விட்டு இருந்தாள் தீபா.. அதோடு சதியின் காதலை பலவாறு அவளுக்கே தீபா அறிமுகப்படுத்தி வைத்து இருந்ததில் குருவின் மூச்சுக்காற்று பாட்டாலே உடைந்து போய்விடும் நிலையில் இருந்தாள் சதி.

இதை அறியாமல் குரு அவனுடன் நடனமாட வரவில்லை என்று கடும் கோவத்தில் இருந்தான். கூர் விழிகளால் அவளை கிழித்து தோரணம் கட்டிக்கொண்டு இருந்தவனுக்கு சதியே ஒரு வாய்ப்பு தர நேர்ந்தால்....? என்ன ஆகுமோ...? ஏது ஆகுமோ...?

எல்லாமே சேர்ந்து ஒரு கட்டத்தில் ஒன்று கூடி சதியை ஒரு வழிப்பண்ண நேரம் காலம் பார்த்துக்கொண்டு இருந்தது...

Loading spinner
Quote
Topic starter Posted : June 13, 2025 2:46 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top