Notifications
Clear all

அத்தியாயம் 14

 
Admin
(@ramya-devi)
Member Admin

தீபா “எனக்கும் கல்யாணம் செய்யணும்” என்று சொன்னதில் அனைவருமே திகைத்து தான் பார்த்தார்கள். அவர்களது திகைப்பையும் தன் அப்பாவின் கேள்வியிலும் கண்கள் கலங்கியவள்,

“புரியுது ப்பா... ஆனா எனக்கு குரு மாமாவோட கல்யாணம் நடக்கணும்...” என்று உறுதியாக சொன்னாள்...

அவள் அப்படி சொல்லவும் அங்கிருந்த அனைவருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை... எல்லோரும் மௌனமாக இருப்பதை கண்டவள்,

“ஏன் ப்பா எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும் ஆசை இருக்க கூடாதா...? இல்ல அதுக்கெல்லாம் ஆசை படுற தகுதி இல்லன்னு நினைக்கிறீங்களா...?” வேதனையுடன் கேட்டவளை ஓடி வந்து அணைத்துக்கொண்டாள் சதி...

அவளது அணைப்பிலிருந்து வெளி வந்த தீபா அவளை பார்த்து “நீயும் அப்படி தான் நினைக்கிறியா குட்டிமா...” என்று கேட்டவளை தன்னோடு இறுக அணைத்துக்கொண்டவள்,

“ஏன் க்கா இப்படியெல்லாம் பேசுற... எனக்கு இருக்கறதை விட மாமா மேல உனக்கு தான் அதிக உரிமை இருக்கு... இப்ப என்ன நீ மாமாவை கல்யாணம் பண்ணிக்கணும் அது தானே... பண்ணிக்கோ யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க... உனக்கு துணையா நான் இருக்கேன் க்கா...” என்று சொன்னவளை அன்புடன் பார்த்தவள்,

“எனக்கு உன் மனசு தெரியும் டா குட்டிமா...” அணைத்துக்கொண்டாள்...

ஆனால் சதியின் முடிவை பெரியவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை...

“சதி இது விளையாட்டு வேலை இல்ல.. எடுத்தோம் கவிழ்த்தோம்னு  செய்ய... எது செஞ்சாலும் ஒரு முறைக்கு பல முறை யோசிச்சு தான் செய்யணும்...” கண்டிப்புடன் சேகர் சொல்ல,

“அப்பா இது அவளோட கடைசி ஆசை.. இதை கூட நிறைவேற்றி வைக்கலன்னா அக்காவ சுத்தி இத்தனை உறவுகளாக நாம இருந்தும் வீண் தான் ப்பா...”

“இனி ஒரு முறை அவள் பிறந்து வளர்ந்து கல்யாணம் செய்வான்னு தெரியாது... ஆனா இந்த பிறப்புல அவ ஆசை படுவதை நிறைவேத்தி தான் குடுப்போமே... இன்னும் எத்தனை காலம் அவ வாழ்ந்துட போறா சொல்லுங்க...” என்ற போதே சதியின் கண்கள் கண்ணீரில் மிதந்தது...

“சதி...” ஆனந்தி அவளை அணைத்துக்கொள்ள,

“இல்லம்மா... அவ ஏதோ வெளிப்படையா சொன்னதுனால நமக்கு தெருஞ்சது... இல்லன்னா இந்த ஆசையோட அவ செ..... போயிருந்தா என்ன பண்ணியிருப்போம் சொல்லுங்க... அவளும் பொண்ணு தானே ம்மா... அவளுக்கும் அந்த ஆசை இருக்கும் தானே...” என்று தீபாவுக்காக அவள் பேசிய பேச்சுக்களை கேட்ட குருவுக்கு தான் இதயத்தில் பாரம் ஏறி போனது...

விளையாட்டுக்கு கூட அவனால் தீபாவை தன் மனைவியாக பார்க்கமுடியவில்லை.. அப்படி இருக்கும் போது சதி இப்படி பேசியதை கேட்டு திகைத்து தான் போனான்... அதுவும் கோவமே மிஞ்சியது அவனிடம்...

ஆனால் தீபாவின் கடைசி ஆசை என்கையில் அவனால் அந்த கோவத்தை சதியிடம் காட்டவும் முடியவில்லை..

ஆமாம் தீபா தன் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் தான் இருக்கிறாள்... சிறுவயதிலிருந்தே அவளுக்கு அவ்வப்பொழுது காய்ச்சல் வந்த வண்ணமாகவே இருக்கும்.

மருத்துவர்களிடம் முழுவதும் பரிசோதனை செய்தும் அவர்களால் அது என்ன பிரச்சனை என்று கண்டு பிடிக்கவே முடியவில்லை...

அதை தொடர்ந்து சதியே பருவம் எய்தினாள். ஆனால் தீபாவால் பருவம் ஏய்த முடியவில்லை... அதையும் கேட்ட பொழுது ஏதோ சத்து குறைவு என்று டானிக்கை மட்டுமே குடுத்து அனுப்பினார்கள்...

அதையே தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு வந்தாள் தீபா... அப்படியிருந்தும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லாமல் போக மறுபடியும் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள்.

அங்கு சென்று மறுபடியும் அனைத்து பரிசோதனைகளும் செய்து பார்த்த பொழுது அவளது யூட்ரஸ் சரியாக வளரவே இல்லை என்பதை சொன்னார்கள்...

அதை கேட்டு இடிந்து போனது அந்த குடும்பம்... பெண்மைக்கு இலக்கணமாய் இருக்கும் பெண்ணின் கற்ப பை வளரவே இல்லை என்றால் எந்த பெற்றவர்களால் தான் தாங்கிக்கொள்ள முடியும்...

கல்யாண சந்தையில் முதல் தகுதியே பிள்ளை பெத்து போடுவது தான்... அதற்க்கு தகுதியாய் இருப்பது இந்த கற்ப பை... அதுவே பழுது என்றால்...

கல்யாண சந்தையில் எப்படி விலை போவாள்... பெண்களை எல்லோரும் குழந்தை பெற்று எடுக்கும் மிசினாக தானே பார்க்கிறார்கள்...

கல்யாணம் பண்ணி மூன்றே மாதத்தில் கரு தங்கிவிட வேண்டும்... இல்லையென்றால் அவளுக்கு தான் குறை என்று அவளை மட்டுமே பல மருந்துக்களை உண்ண வைத்து, காலை மாலை இரவு என பல விரதங்களை இருக்க வைத்து உடலளவில் அவளை எவ்வளவு படுத்தி எடுக்க முடியுமோ அவ்வளவும் செய்ய வேண்டியது..

அப்படியும் அவளுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் நீ வாழ தகுதியற்றவள் என்று முத்திரை குத்தி, அவளுடைய கணவன் அடுத்த நாளே புது மாப்பிள்ளையாகி போகிற கொடுமை இன்னும் நடந்துக்கொண்டு தானே இருக்கிறது...

பெண்ணின் முழுமை அவள் குழந்தையை பெற்று எடுப்பது மட்டுமே... இல்லையென்றால் கணவனோடு தாம்பத்தியம் செய்தல் இதுக்கு மட்டும் தான் பெண்ணவள் தகுதியாய் இருக்க வேண்டும்.. அதில் தான் அவளது வாழ்வை முழுமை பெறுகிறது என்கிற மாயை...

இது இரண்டும் இல்லையென்றால் அவள் பெண் கிடையாது... என்பதே இங்கு இலக்கணமாகி இருக்கிறது...

என்ன மாதிரியான சமுக கட்டமைப்பு இது என்று புரியவில்லை... ஒவ்வொரு பெண்ணிலும் இருக்கும் வல்லமையை எப்பொழுது முழுமையாக அங்கீகரிக்க போகிறதோ இந்த சமுதாயம்...

ஆங்கங்கே சிலர் சாதனை படைத்தாலும் இன்னும் பல பெண்கள் இது இரண்டுக்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்...

என்ற சிந்தனையை கலைத்த சதி தீபாவிற்கு முழுமையாக ஆதரவாக இருந்தாள்.

தீபா தனக்கு இந்த குறை பாடு இருப்பதை உணர்ந்து தன்னுள்ளே குறுகி போனாள். ஆனால் அவளை அப்படியே விடாமல் சதி தன்னோடு நாட்டிய கலைக்கூடத்திற்கு அழைத்து வந்து அவளுக்கும் நடனம் ஆட சொல்லிக்கொடுத்தாள்.

“அக்கா பாட்டும் சரி நடனமும் சரி மிக பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர்... நீ ஆடு... உனக்கு தெரிஞ்சதை ஆடு முதல்ல... அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நான் கத்து தரேன்...” என்று சொல்லி அவளை அந்த கவலையிலிருந்து வெளியே வர அதிக முயற்சி செய்தாள்.

அவளது முயற்ச்சியை கண்ட நவீனும் சரி குருவும் சரி அவளுடன் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்தனர்...

இது ஒரு பக்கம் இருக்க... தீபாவிற்கு இன்னும் அடிக்கடி காய்ச்சல் வர ஆரம்பித்தது... அதையும் பார்த்து செக் பண்ண மருத்துவர்கள் மாசம் மாசம் இரத்தம் மாத்தணும்... இவங்க இரத்தம் இவங்களுக்கே அலர்ஜியாகி இருக்கு.. அப்படின்னு சொல்ல.. மாசம் மாசம் இரத்தம் மாற்றினார்கள்.

அப்படி மாற்றி சில வருடம் அவளுக்கு காய்ச்சல் வராமல் இருந்தது...

ஆனால் கடைசி மூணு வருசமாக காய்ச்சல் மறுபடியும் வர ஆரம்பித்தது... எந்த மருந்துக்கும் அது குறையவே இல்லை... வரும்... வந்த மூன்று நாளிலே அது போய்விடும்... அதனால் மருத்துவர்களும் அதை பெரிது படுத்தவில்லை...

அதோடு பக்க விளைவுகளும் எதுவும் இல்லாமல் போக அவர்களுக்கு அதன் வீரியம் புரிவில்லை... ஆனால் ஒரு கட்டத்தில் அவளது உடலெல்லாம் நிறமாறி அதிகமாக வெளிறிப்போய் இருந்தது, அதோடு அவளுடைய தோளும் கொஞ்ச கொஞ்சமாய் சுருங்க ஆரம்பித்தது....

அதை கண்டு அவளுக்கு உடனடியாக மருத்துவம் பார்க்க, அவள் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருப்பதாக சொல்ல தலையில் முன்பை விட பெரிய இடி விழுந்தது அவர்களுக்கு.

வேண்டாத தெய்வம் இல்லை... கும்பிடாதா சாமி இல்லை... அத்தனை விரதமும் இருந்தார்கள் ஆனந்தியும் சதியும்.. ஆனால் தீபாவின் உடலில் எந்த மாற்றமும் இல்லை... முன்பை விட இப்பொழுது வெளிப்படையாகவே அவளது தோள் சுருங்க கண்டு வாயை பொத்திக்கொண்டு அழுது மாய்ந்தார்கள்.

தீபாவின் முன் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் தனியாக அவளுக்கு தெரியாமல் குடும்பமே நிலை குலைந்து தன் போனது...

கரு பை வளரவில்லை என்றாலும் தன் மகள் தங்களுடன் இருப்பாள் என்ற நம்பிக்கையும் பொய்யாய் போனது...

கணவன் மனைவியாய் இருந்தவர்களை அப்பா அம்மா என்று அழைத்து அடுத்தகட்ட தலைமுறைக்கு வித்திட்ட குழந்தை இன்று நாளை என்று நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் நிலை எந்த பெற்றோருக்கும் வந்துவிட கூடாது இறைவா... என்று நிலை குலைந்து போய் கலங்கி நின்றார்கள்.

அவர்கள் அப்படி இருக்கும் நேரமெல்லாம் சேகரின் அக்கா குடும்பம் தான் பெரிதும் உதவியாய் அனைத்தையும் தாங்கி நின்றார்கள்.

ராதிகாவும் சரி, குமாரும் சரி பண விஷயம் வரை எதுக்குமே கணக்கு பார்த்ததே இல்லை...  ஏன் குருவும் அப்படி தான்... தன் நடனத்தின் மூலம் வரும் வருமானத்தில் பாதியை தீபாவின் மருத்துவ செலவுக்கு தான் கொடுத்தான்...

அப்படி ஒரு சிக்கலில் இருக்கும் தீபாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்று சதி முனைப்புடன் இருப்பதை கண்ட அனைவருக்குமே அவளின் அக்கா மீது வைத்திருக்கும் அன்பை கண் கூடாக உணர்த்தியது...

சதி ஒரு வகை அழகு என்றால் தீபா இன்னொரு வகை அழகு... ஆனால் இன்று அந்த அழகு கொஞ்ச கொஞ்சமாய் சுருங்கிக்கொண்டு வருவதை கண்ட சதியால் தாங்கவே முடியவில்லை...

தீபா கண்ணாடியை பார்த்து பார்த்து வெக்ஸ் ஆவதை உணர்ந்து வீட்டில் ஒரு கண்ணாடியை கூட விட்டு வைக்கவில்லை... அத்தனையையும் கீழே போட்டு உடைத்து எறிந்தாள்.

“குட்டிமா...” என்று அதிர்வுடன் தீபா திகைக்க

“நமக்கு கண்ணாடி வேணாம் க்கா...” என்று சொன்னவள் உடைந்த கண்ணாடி துண்டுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

எந்த பெண்ணுக்குமே அதிகம் பிடிப்பது கண்ணாடியை தான்... அதில் தன் உருவம் பார்த்து ரசிப்பது என்றால் அவ்வளவு விருப்பம்... தான் அழகாக இருந்தால் அடிக்கடி கண்ணாடி பார்ப்பார்கள்.

இல்லையென்றால் அதையும் இதையும் போட்டுக்கொண்டு அழகாக இருக்கிறமா என்று அடிக்கடி கண்ணாடி பார்ப்பார்கள்... சோ மொபைல் போன் போல தான் பெண்களுக்கு கண்ணாடி...

அதையே போட்டு உடைத்த தன் தங்கையின் அன்பை கண்டு கண்ணீர் விட்டாள் தீபா. “உன்னோட அன்பு மட்டும் போதும் குட்டி மா...” தன்னோடு அணைத்துக்கொண்டாள்.

தீபாவினுள்ளும் பல ஆசைகள், பல ஏக்கங்கள் இருக்கத்தான் செய்தன... ஆனாலும் அதையெல்லாம் அடக்கிக்கொண்டாள் தன் வீட்டில் ஏற்க்கனவே இருக்கும் கஷ்ட்டங்களை உணர்ந்து.

பல ஆசைகளை வெளியே சொல்லாமல் அடக்கி அடக்கி வைத்து அது சதியின் திருமண பேச்சின் போது வெடித்து வெளியே வர, தீபாவே இதை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.

ஆனால் வெளியே சொன்ன பின்பு தான் தன் தவறு புரிந்தது... சட்டென்று கலங்கி போனவள்,

“எனக்கு தகுதி இல்லன்னு நினைக்கிறீங்களா...?” என்று வீரியமான வார்த்தையை விட்டுவிட்டாள்.

அதிலே மொத்த குடும்பமும் கலங்கி தான் போனது.

குருவிடம் சென்று கேட்க, தன் தோளோடு அவளை அணைத்துக்கொண்டவன் சதியை ஒரு பார்வை பார்த்தான்.

அவள் தலை அசைக்க திருமண ஏற்பாடுகள் நடக்க தொடங்கியது வெகு விமர்சையாக... பருவம் ஏய்த பொழுது சதிக்கு அதிக விமர்சையாக செய்து இருந்ததால் அதை செய்து பார்க்க தீபாவிற்கு கொடுத்து வைக்காததால் திருமணத்தை சிறப்பாக செய்ய ஆசை பட்டார்கள் ஆனந்தியும் ராதிகாவும். அதோடு இது தான் குடும்பத்தின் முதல் திருமணம் என்பதால் விரிவாகவே செய்ய திட்ட மிட்டர்கள்.

இது ஒரு புறம் என்றாலும், ஜாதகம் பார்த்து முறையாக செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டார்கள். ஏனெனில் ஒரு குழந்தையின் இறப்பு நிச்சையமாக ப்பட்டது... அதோடு குருவின் வாழ்வும் முடிய கூடாது என்று எண்ணி ஜாதகம் பார்த்து நல்ல படியாக செய்ய திட்டமிட்டு, இருவருக்கும் பொருத்தம் பார்க்க சென்றார்கள்.

Loading spinner
Quote
Topic starter Posted : June 1, 2025 9:28 am
(@gowri)
Estimable Member

தீபாக்காக செய்யறது எல்லாம் ஓகே தான்....

ஆன குரு மனசில் என்ன இருக்குனு ketkkanum இல்ல....

இது தான் சதி உன்னோட உண்மை காதலா????

 

Loading spinner
ReplyQuote
Posted : June 13, 2025 2:14 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top