வரவேற்பு முடிந்து மண்டபம் முழுவதும் சந்தடி அடங்கிய பின் சதி மெல்ல மாடி ஏறினாள். ஏனோ அவளால் படுக்கவே முடியவில்லை.. கண்களை மூடினாலே குரு தான் வந்து நின்றான்.
அவன் இனி தனக்கு சொந்தமில்லை என்று தெரிந்த பின்பு எப்படி துயில் கொள்ள முடியும் அவளால்... வாழ்வின் ஆதராமாய் இருந்தவனை விட்டுக்கொடுத்துவிட்டு அவ்வளவு எளிதாக தூங்கி விட இயலுமா என்ன...
தீபா, ராதிகா, ஆனந்தி மூவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டு சத்தம் செய்யாமல் மெல்ல காலடி எடுத்துவைத்து மாடிக்கு சென்றாள்.
கீழே மண்டபத்தின் அலங்கார வேலைகள் மட்டும் எந்த சத்தமும் இன்றி அமைதியாக செய்துக்கொண்டு இருந்தார்கள். அதை ஒரு பார்வை பார்த்துவிட்டே போனாள்.
குளிர்ந்த காற்று அவளை வருடி செல்ல, அந்த இதத்தில் கண்களை மூடி கைகளை கட்டிக்கொண்டு நின்றாள். அவளை சுற்றி ஏகாந்த பெரு வெளி நிறைந்து இருப்பதை போல இருந்தது... அந்த ஏகாந்த நேரத்தை கிழித்துக்கொண்டு அவளது எண்ண அலைகள் ஆர்பரித்துக்கொண்டு எழுந்தது...
கொஞ்ச நாளுக்கு முன் சேகர் வந்து அவளிடம் பேசி போனது மனதில் எழ, கண்களை நிறைத்துக்கொண்டு வந்தது கண்ணீர்.
“பாப்பா... நான் உனக்கு துரோகம் பண்றேன்னு என்னை தவற நினைக்காதடா... எனக்கு நீங்க ரெண்டு பேரும் சமம் தான்... உனக்கு எல்லாமே இருக்கு. ஆனா அவளுக்கு எதுவுமே இல்லடா... வாழ்க்கையில பாதி நாள் மருத்துவமனையிலேயே கழிச்சுட்டா...”
“இன்னும் கொஞ்ச நாள் தான் அவ உயிரோடவே இருப்பான்னு சொல்றாங்க. அப்படி இருக்கும் போது அவளுக்கு இந்த கல்யாணத்தையாவது நல்லபடியா செஞ்சு வைக்கணும்னு ஆசையா இருக்குடா... நான் செய்யிறது தவறுன்னு எனக்கு புரியிது... உன் வாழ்க்கையை பறிச்சு நான் அவக்கிட்ட குடுக்குறேன்னு உன் கிட்ட வந்தே கேக்குறேன்...” என்று கலங்கி போய் கண்ணீர் விட்டவரின் கைகளை பற்றிக்கொண்டவள்,
“அப்பா நானே தான் ஒத்துக்கிட்டனே.. நீங்க ஏன் அதை பெரிய விசயமா பேசிட்டு இருக்கீங்க... எனக்கு என் அக்காவோட ஆசை தான் முக்கியம்... நீங்க கவலை படாதீங்க... நான் எப்பவும் அவளுக்கு எதிரா நிக்க மாட்டேன்.” என்று சொன்னவளை இழுத்து அணைத்துக்கொண்டவர்,
“நான் அதுக்காக மட்டும் உன்கிட்ட பேச வரலடா...” என்றவர் துக்கம் பொங்கிய குரலுடன் ஜாதகம் பார்த்த விசயத்தை முழுவதும் சொன்னார்...
அதை கேட்டு திகைத்த சதி “அப்பா...” என்றாள் கண்ணீருடன்.
“எனக்கும் வேற வழி தெரியல டா... தீபாவுக்கு பிறகு எப்படியும் உனக்கும் குருவுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம்னு தான் தீபாவின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்தேன்.. ஆனா பெரியவர் இப்படி சொல்லுவாருன்னு கொஞ்சம் கூட நினைக்கல டா...” என்று குலுங்கி அழுதவரை என்ன செய்து தேற்றுவது என்று தெரியாமல் சிலையென நின்றாள் சதி...
அப்பா அழுவது கொஞ்சம் தாமதமாகவே உரைத்தது அவளுக்கு..
“அப்பா, அதுக்கென்ன விடுங்க... அதையெல்லாம் பிறகு பார்த்துக்கலாம் முதல்ல தீபா கல்யாணத்தை சிறப்பா செய்வோம்...” என்று அவருக்கு ஆறுதல் சொன்னாள்.
“பாப்பா உனக்கு நான்...” என்று மேலும் பேச வந்தவரை தடுத்துவிட்டு,
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் ப்பா... ஒண்ணும் பிரச்சனை இல்லை... மாமா மனசுல நான் இருக்கேன். என் மனசுல மாமா இருக்காங்க.. எங்க ரெண்டு பேத்துக்கும் அது போதும்...” என்று அவரை அனுப்பிவிட்டு குளியலறைக்கு சென்று வெடித்து வந்த அழுகையை அடக்கியும் முடியாமல் அலை, சீற்றம் கொண்டு பொங்குவது அழுது கரைந்தாள் யாருமறியாமல்.
அதை இப்பொழுது எண்ணி பார்த்தவளுக்கு விரக்தியில் இன்னும் கண்ணீர் பெருகியது...
எல்லாமே கைவிட்டு போவது போல அப்படி ஒரு வலி எழுந்தது அவளது உள்ளத்தில்... அக்கா தான் என்றாலும் வாழ்க்கையில் இனி தனக்கு தாலியே கிடைக்காது என்றால் எந்த பெண்ணால் அதை ஏற்றுக்கொள்ள முடியும்...
நெஞ்சை அடைக்கும் துக்கத்தை முழுவதும் ஒழித்திட முடியாமல் தினறிக்கொண்டு இருந்தாள். காற்றின் மெல்லிய தீண்டலால் கூட அவளை சமாதனம் செய்ய முடியாமல் போனது...
மூச்சை அடைக்கும் நிலையில் இருந்தாள் சதி... அவ்வளவு துக்கமும் வேதனையும் நெஞ்சை நிறைத்து இருந்தது..
அதிலிருந்து வெளி வர முடியாமல் சுழன்றுக்கொண்டு இருந்த போது அவளையும் அறியாமல் அவளது முந்தானையை இடுப்பில் சொருகி, செல்லில் பாட்டை போட்டுவிட்டு, முத்திரை பிடித்தது அவளது இரு கைகளும்...
அதன் பின் அப்படி ஒரு நடனம் ஆடினாள் சதி... அந்த நடனத்திலே அவளது துக்கம் முழுவதும் கரைந்து விடுவது போல ஆடினாள்..
எல்லாமே வேகமான பீட்ஸ்... நொடியில் அவ்வளவு முத்திரை பிடித்தாள்... அது எல்லாமே குருவின் பயிற்ச்சியால் மட்டுமே சாத்தியம்..
பாடலில் வந்த இறைவனை தன்னவனாய் எண்ணிக்கொண்டு ஆட ஆரம்பித்தாள்.
இறைவனே இறைவனே
உந்தன் அருள் பொழிவாயா...?
இதயத்தில் நிறைந்தே வழிவாயா...?
என்னுள் நீ நிறைந்தால்
அதை விட
எதை எதை நான் கேட்பேன்...
நீ வருவாயா...?
வாராயோ வாராயோ....
எனக்கொரு கரம் தர வாராயோ...
பாராயோ பாராயோ
உனக்கென விழும் துளி பாராயோ...
தீராயோ தீராயோ நொடியினில் தீராயோ
தாராயோ தாராயோ
இதயத்தில் எரிபொருள் தாராயோ..?
ஆடை நீதானே...
என் மேடை நீ தானே...
என்னுள் என்னுள்ளே ஆடும் ஆட்டம் நீதானே...
என்னுள்ளே என்னுள்ளே ஓடும் ஓட்டம் நீதானே...
என்று தன்னவனை மனதில் எண்ணிக்கொண்டு ஆடியபடி இருந்தவளை ஒரு கரம் தொட்டு திருப்ப, சட்டென்று திகைத்து திரும்பினாள்.
அங்கே வேதனை தாங்கிய முகத்துடன் குரு நின்று இருந்தான்...
முத்திரை பிடித்த கைகளை கீழே இறக்கிவிட்டு இடுப்பில் சொருகிய முந்தானையை எடுத்துவிட்டு, பாடிக்கொண்டு இருந்த போனை அணைத்துவிட்டு தவறு செய்த பிள்ளை போல நின்றிருந்தவளை காண காண மனம் கனத்து போனது குருவுக்கு...
அவனுக்கு முன் தன் துக்கத்தை காட்டிவிட கூடாது என்று இவ்வளவு நாளும் வைராக்கியத்துடனும், கவனமுடனும் இருந்தாள். ஆனால் இன்று ஒரே ஒரு பாட்டில் தன் துக்கத்தை கட்டிக்கொடுத்து விட்டோமே என்று தலை குனிந்து நின்றாள் விழிகளில் தேங்கிய கண்ணீருடன்.
காற்றில் படர்ந்த முடிகளை ஒதுக்கிவிட்டவன், எதுவும் பேசாமல் இரு கரம் விரித்து நின்றான்... அதுவரை கலங்கி இருந்தவள் சட்டென்று அவனது கரங்களுக்குள் புகுந்துக்கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். அவளது அழுகை பார்த்து மனம் கனத்து போனது குருவிற்கு...
ஆனாலும் எதுவும் பேசாமல் அவளின் முதுகை தடவி கொடுத்தவன், தன்னுள் இன்னும் அவளை இறுக்கி கட்டிக்கொண்டான்...
அவனது அணைப்பில் கட்டுண்டு இருந்தாள் கொஞ்ச நேரம்.. அதன் பின் அவனிடமிருந்து விலகி கொள்ள பார்க்க, அதற்கு அவன் விடாமல் தன் கையணைப்பிலே வைத்து இருந்தான்...
“வேணாம் மாமா யாராவது வந்தா தவறா நினைப்பாங்க...” தயக்கத்துடன் பேசியவளுக்கு,
“நவீன் கீழ தான் இருக்கான்... யாராவது வந்தா போன் பண்றேன்னு சொல்லியிருக்கான். அதனால கவலை படாத..” என்றவன் கை பிடி சுவரில் எம்பி அமர்ந்தான்...
அவனை ஒட்டிக்கொண்டு சதியும் நின்றுக்கொண்டாள். ஏனோ இருவரும் அதற்கு மேல் அதுவும் பேசிக்கொள்ளவே இல்லை... நீண்ட மௌனம் அங்கு நிலவிக்கொண்டு இருந்தது... இருவருமே அதை கலைக்கவில்லை... விடிந்தால் இன்னொரு பெண்ணுடன் கல்யாணம்.. நினைக்கும் போதே இருவருள்ளும் வேதனை ஊற்றெடுத்தது..
அதை இந்த நிமிடம் கொண்டு வர வேணாமே என்ற எண்ணமும் பிறந்தது... அவனது கையணைப்பிலே இருந்தவளுக்கு கால் வலித்தது... ஆனாலும் அவனிடம் எதுவும் சொல்லாமல் அப்படியே நிற்க,
அவள் கால் மாற்றி நிற்பதிலே வலியை உணர்ந்துக்கொண்டவன், அவளை விலக்கிவிட்டு கீழே குதித்து இறங்கியவன், கை பிடி சுவரில் சாய்ந்து கீழே கால் நீட்டி அமர்ந்தான்.
அவளையும் கை பிடித்து இழுத்தவன் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்... அவனது இதய துடிப்பை கேட்டுக்கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் அப்படியே துயில் கொள்ள ஆரம்பித்தாள். அவள் தூங்குவதை பார்த்தவன் தானும் அவள் மீது சாய்ந்து துயில் கொண்டான்...
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளுக்கு சட்டென்று விழிப்பு வர, எழ முயன்றாள். அவளால் எழ முடியவில்லை. அவளை மடியில் கிடத்தி அவள் மீது சாய்ந்து தூங்கிக்கொண்டு இருந்தான் குரு...
அதை உணர்ந்தவள் மீண்டும் அவனது மடியிலே படுத்துக்கொண்டாள். அதன் பின்பு தான் நினைவுக்கு வந்தது... இன்று கல்யாணம் என்று...
சட்டென்று அருகில் இருந்த போனை எடுத்து பார்த்தாள். மணி மூன்று முப்பது என்று காட்டியது... அச்சோ எவ்வளவு நேரம் ஆயிடுச்சு என்று பதறியவள் அவனது பிடியிலிருந்து வெளியே வர, அவளது அசைவை உணர்ந்து குருவும் முழித்துக்கொண்டான்.
“என்ன ஆச்சு...” என்றபடி இரு கரம் தூக்கி சோம்பல் முறித்தான்...
“கல்யாணம்...” என்று தயங்கி இழுத்தாள்.
“அதுக்கென்ன...” என்றவன் மீண்டும் அவனிடம் இழுத்துக்கொண்டான் அவளை...
“அச்சோ நேரமாச்சு... போய் சீக்கிரம் கிளம்புங்க...” என்று அவனை கீழே அனுப்ப முனைந்தாள்.
“முகுர்த்தம் பத்து மணிக்கு தான் வச்சிருக்கு... எப்படியும் நாலு நாலரைக்கு தான் எல்லோரும் முழிப்பாங்க... அதனால பதட்ட படாம இரு...” என்றவன் அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தான்.
அவனது பார்வையில் தலை கவிழ்ந்தவள்,
வாயோடு ஏதோ முணுமுணுத்தாள்.
“வாய்க்குள்ள பேசுறத கொஞ்சம் என் காது படவும் பேசலாம்...” என்று அவளின் காதோரம் சரிந்து சொன்னான்.
அதில் முகம் சிவந்தவள்,
“ப்ச்...” என்று அவனை விட்டு விலக பார்க்க, தன்னோடு நெருக்கி கட்டிக்கொண்டான்.
“மாமா...” என்றாள் தவிப்பாக..
“கொஞ்ச நேரமடி...” என்றவன் இன்னும் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.. அதன் பின் சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள் ஆங்காங்கே விளக்கை போட, நவீன் போன் பண்ணினான்.
அதில் இருவரும் கலைந்தார்கள். அட்டென் பண்ணி பேசிய குரு,
“டேய் நீ தூங்க போகலையா...?”
“இப்ப அது ஒண்ணு தான் குறை... சதி எப்படி அண்ணா இருக்கா...?” என்றான்.
அவனது குரலில் தெரிந்த நேசத்தில் மனம் கரைந்தவன், “ம்ம்ம்... ஓகே தான்..” என்றான்.
“சரி சீக்கிரம் கிளம்பி வாங்க... எல்லோரும் முழிக்க ஆரம்பிச்சு, அவங்கவங்க வேலையை ஆரம்பிக்க போறாங்க...” என்றான்.
“இதோ வரோம்..” என்ற குரு,
தன்னவளை பார்த்து, “அழாதடி... நீ கண்ணு கலங்குனா என்னால தாங்க முடியாது... இந்த நிமிடத்தை நாம கடந்து தான் ஆகணும்... வேற வழியே இல்ல...” என்று ஆறுதல் சொன்னவனை புன்னகையுடன் ஏறிட்டவள்,
“அது தான் நீங்க சமாதனம் செஞ்சுட்டீங்களே... இனி அழ மாட்டேன்...” என்று மன நிறைவுடன் சொன்னாள். அவளது முகத்தில் இருந்த புன்னகையை கண்டு மனம் நிறைந்தவன்,
“சரி வா கீழே போகலாம்...” என்று அழைத்துக்கொண்டு கீழே செல்ல போக, இரண்டடி எடுத்து வைத்தவனை,
“மாமா” என்று தடுத்தாள்.
“என்னடி...”
“அது...” என்று வெகுவாக தயங்கியவள், பின் ஓரளவு தன்னை திடப்படுத்திக்கொண்டு, அவனது கண்களை நேருக்கு நேராக பார்த்து, கலங்கிய கண்களுடன்,
“உங்க கழுத்துல இருக்குற சங்கிலிய தர்றீங்களா...?” என்று கேட்டாள். அதில் உடைந்து போன குரு... சட்டென்று தன் நெஞ்சோடு அவளின் முகத்தை இழுத்து கட்டிக்கொண்டவன், அவளது முகம் முழுவதும் தன் ஈர இதழ்கொண்டு முத்தம் கொடுத்தவன், முகத்தோடு முகம் வைத்து அவளது கண்ணீரையும் தன் முகத்தில் வைத்து தேய்த்துக்கொண்டான்.
ஒரே நிமிடம் தான்... அதன் பின் அவளிடமிருந்து விலகி ஓரடி தள்ளி நின்றவன், தன் கழுத்தில் கிடந்த சங்கிலியை அவளது கழுத்தில், அவளது முகம் பார்த்துக்கொண்டே போட்டுவிட்டான்...
அவனது சங்கிலி அவளது மார்பில் விழ, வேகமாய் அதை தன் கரத்தில் எடுத்தவள், தாலி போலவே அதை எண்ணி அதில் தன் இதழை பதித்தவள், பளிச்சென்று புன்னகைத்தாள்.
அவளது அந்த பளிரென புன்னகையில் மனம் நிறைந்தவன் அவளது நெற்றியில் முட்டி அழுத்தமாக முத்தம் கொடுத்தான்
“வா போகலாம்...” என்று அவளை கூட்டிக்கொண்டு கீழேயும் வந்தான்.
அதன் பின் கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது...
கல்யாணம் முடிந்து அதற்கு அடுத்த சம்பிரதாயங்களை எல்லாம் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்... அங்கும் சில சம்பிரதாயங்களை செய்துவிட்டு ஓய்வெடுக்க, மாலை முற்றி இரவு கவிழ்ந்தது...
இரவு சடங்குக்காக தீபாவை அழகாக அலங்கரித்தாள் சதி... பெரியவர்களுக்கே கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது... ஆனால் வேறு வழியில்லையே...
பெண் தோழியாக சதியே தீபாவிற்கு எல்லாமும் செய்தாள். முழு அலங்காரத்தில் இருந்தவளுக்கு திருஷ்ட்டி எடுத்தவள், அவளின் கைகளில் பால் செம்பை கொடுத்து,
குருவின் அறைக்குள் அழைத்து சென்று விட்டாள்.
“மகிழ்வான வாழ்க்கை வாழணும் அக்கா நீ...” என்று கட்டி பிடித்து அவளின் நெற்றியில் முத்தமும் கொடுத்தவள், வெளியே வந்து தன்னுடைய அறைக்கு சென்று அழுது தீர்த்தாள் சதி...
அவ்வளவு எளிதாக ஆற்றிவிட முடியுமா இந்த துக்கத்தை...
ஒருத்திக்குகாக????
இது எல்லாம்.....தேவையா