குருவுக்கும் தீபாவுக்கும் பொருத்தம் பார்க்க இரு வீட்டு பெரியவர்களும் சென்றார்கள். அங்கு சென்று பெரியவரை பார்த்த போது,
“தீபான்ற பொண்ணுக்கு கல்யாணம் செய்ய கூடாது... அப்படி செஞ்சா அந்த பொண்ணோட வாழ் நாள் குறைவாகிடும்... அதோட அடுத்த தலைமுறையில சில சிக்கல் வரும்...” என்று சொல்ல பயம் வந்தது நால்வருக்கும்.
“என்ன அய்யா சொல்றீங்க... கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்களேன்...” திகைத்து போய் கேட்டார்கள்.
“இதுல நான் சொல்றது எதுவும் இல்ல... தீபாவ பத்தி எனக்கு நல்லா தெரியும்.. போறவங்களை நிறுத்தி வைக்க முடியாது... அதுக்காக இருக்க போறவங்களை துன்பப்படுத்த கூடாது... இதுக்கு மேல என்னால உடைச்சி பேச முடியாது....”
“எல்லாமே கட்டம் சொல்றது தான்... இத்தனை நாள் என்கிட்டே நேரம் பார்த்து தான் எல்லாமே செஞ்சிங்க... எல்லாமே நல்லது தான் நடந்து இருக்கு... அதே போல இதுலயும் என் பேச்சை கேட்டு நடங்க...”
“எனக்கு தெரிஞ்சு இந்த கல்யாணத்தை நடத்தாதீங்க... அப்படி மீறி பண்ணீங்கன்னா குருவுக்கு ஒரு தாரத்தோட நின்னுடும் வாழ்க்கை...” என்று முடித்தார்.
“அய்யா புரியலங்க...” ராதிகாவும் ஆனந்தியும் வேதனையுடன் கேட்டார்கள்.
“அம்மா குருவுக்கு வேற ஒரு ஜாதகம் பாருங்க... இல்லையா தீபா தங்கச்சி சதியையாவது பார்த்து கட்டி வைங்க... ஆனா தீபா மட்டும் வேணாம்... அவ்வளவு தான் சொல்லுவேன்... இல்லன்னா குருவுக்கு ஒரு தாரம் தான்... அதை மீறி அடுத்தது பண்ணி வச்சா குருவின் உயிருக்கு ஆபத்து... அவ்வளவு தான் சொல்லுவேன்...” என்று எழுந்து சென்றுவிட்டார்.
அவர் சென்ற பின்பும் அனைவரும் அப்படியே இருந்தார்கள். அவர்களால் அவ்வளவு எளிதாக அவர் சொன்ன விசயத்திலிருந்து வெளி வரவே முடியவில்லை.
தீபா இறந்து போன பிறகு சதியை இரண்டாந்தாரமாக கட்டி வைக்க அப்பொழுதே முடிவு எடுத்தார்கள். அதனாலே தீபாவின் ஆசைக்கு யாரும் முட்டுக்கட்டை போடா வில்லை. ஆனால் இப்பொழுது பெரியவர் இப்படி சொல்லவும் திகைத்து தான் போனார்கள்.
அவ்வளவு எளிதாக இந்த செய்தியை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை...
இதுக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவித்து போனார்கள். ஆனந்தி அழுதே விட்டார்.
“என் மகளுக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை மேல சோதனையா வருதுன்னு தெரியலையே... எந்த நேரத்துல வந்து பிறந்தாளோ... அவளுக்குன்னு ஒரு நல்லதை கூட என்னால பண்ணி பார்க்க முடியலையே....! கடவுளே இதெல்லாம் நீ பார்த்துக்கிட்டு தானே இருக்க...” என்று கண்ணீர் விட்டு கதறி அழுதவரை தேற்ற முடியாமல் ராதிகாவும் கண்ணீர் விட்டார்.
அவருக்கும் தீபா மகள் தானே... அந்த தாயின் மனமும் தவித்து கதறி கொண்டு இருந்தது... நால்வராலும் பெரியவர் சொன்ன செய்தியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை... அவ்வளவு வேதனையாக இருந்தது...
முதல் முறையாக தீபா ஒன்றை கேட்டாள். அதற்கு கூட கடவுள் வழி விடாமல் முட்டுக்கட்டை போட்டு விட்டாரே என்று துடித்து போனார்கள்.
பொருத்தம் பார்த்துவிட்டு சோர்ந்து போய் வீடு திரும்பியவர்களை ஆவலுடன் எதிர் கொண்டாள் தீபா...
அவர்களின் முக வாட்டம் கண்டு திகைத்து போனாலும் என்னவானது என்று அறிந்துக்கொள்ள பெரிதும் தவித்து போனாள்.
அவளது தவிப்பை கண்டவர்கள் கலங்கிய கண்ணீரை அவளுக்கு தெரியாமல் துடைத்துக்கொண்டு முயன்று புன்னகையை வரவழைத்துக்கொண்டு அவளின் எதிரில் அமர்ந்தார்கள்.
சோர்ந்து வந்தவர்களுக்கு குடிக்க இதமாய் குளிர்பானத்தை நீட்டினாள் பொறுப்பாக. அதை வாங்கி மடக்கென்று மருந்தை விழுங்குவது போல விழுங்கினார்கள் நால்வரும்...
அவர்களே சொல்லுவார்கள் என்று தீபா பொறுமையாய் அமர்ந்து இருந்தாள். ஆனால் அவர்களில் ஒருவரும் வாயை திறப்பது போல தெரியவில்லை என்றவுடன்,
“என்னாச்சுப்பா.... பெரியவர் என்ன சொன்னங்க...” தன் தந்தையை ஆசையுடன் பார்த்து கேட்டவளை கண்டு அழுதுவிடுவமோ என்று பயந்து போன சேகர்,
அடைத்த தொண்டையை சரி செய்துக்கொண்டு,
“குருவும் சதியும் வரட்டும் ம்மா... எல்லாருக்கும் சேர்த்து சொல்றேன்... நீ எதுக்கும் கவலை படதாடா... அப்பா எப்பவும் உனக்கு பேவர் தான் பண்ணுவேன்...” என்று அவளது தலையை கலைத்துவிட்டு அதற்க்கு மேல் தாங்க மாட்டேன் என்பது போல விரைந்து அவரது அறைக்கு சென்று குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.
அவர் அழுதுக்கொண்டு தான் இருப்பார் என்பதை அறிந்த ராதிகா வேகமாய் தன் தம்பியிடம் விரைந்தார்.
அவரின் கணிப்பு படியே சேகர் அறையின் உள்ளே அழுதுக்கொண்டு தான் இருந்தார்.
“தம்பி நீயே இப்படி அழுதா பொம்பளைங்க நாங்கல்லாம் என்னடா பண்ணுவோம்... அழுகாதாடா... அழுகை எதுக்கும் தீர்வாகாது...” என்று ஆறுதல் சொன்னவரின் கையை பிடித்துக்கொண்டு,
“அக்கா எனக்கு உன்னை விட்டா வேற யாரும் கிடையாது... உனக்கு என்ன வேணாலும் செய்யிறேன்... ஏன் என் உயிரை கூட உனக்கு தரேன் க்கா... என் பொண்ணை நான் சிரிச்ச முகமா வழியனுப்பி வைக்கணும்.. எனக்கு அந்த பாக்கியத்தை மட்டும் குடு... உன் கால்ல வேணாலும் விழறேன்...” என்று ராதிகாவின் காலில் விழ இருந்தவரை தடுத்து,
“டேய் என்னடா நீ இப்படி பண்ற... இதுல நான் எந்த முடிவை எடுக்குறதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல... அதுக்கு முன்னாடி உன் மாமாக்கிட்ட ஒரு வார்த்தை கேக்கணும்... அவர் என்ன சொல்றாருன்னு தெரியல...” என்று அவர் நடப்பை சொல்ல... சேகரின் பரிதவிப்பு அதிகமானது...
“அக்கா....” என்றார் கண்ணீருடன்.
“தம்பி நீ இரு... நான் மாமாவை கூட்டிட்டு வரேன்... ரெண்டு பேரும் அவருக்கிட்ட பேசலாம்...” என்றவர் வெளியே சென்று தன் கணவரை அழைத்து வந்தார்.
வந்தவுடனே அவரது காலில் நெடுஞ்சான் கிடையாக விழுந்தார் சேகர்...
அதை கொஞ்சமும் எதிர் பார்க்காத குமார் வேகமாய் அவரை எழுப்பி நிறுத்தினார்.
“என்னடா சேகரு இப்படி பண்ற...” பதறி போனார்.
“எனக்கு இதை தவிர வேற வழி தெரியல மாமா... என் பொண்ணை சந்தோசமா அனுப்பி வைக்கணும்னு நினைக்கிறேன்.. நான் செத்து என் பிள்ளைங்க வாழுவாங்கன்னு நினைச்சேன்... ஆனா இங்க எனக்கு முன்னாடி என் பிள்ளை...” மேற்கொண்டு சொல்ல முடியாமல் முகத்தில் அடித்துக்கொண்டு கதறி அழுது துடித்து போனார்...
அவரது வேதனை குமாரும் உணர்ந்தே இருந்ததால் அவரால் எதுவும் சொல்ல முடியாமல் சேகரின் கையை எடுத்துவிட்டு தன்னுடன் அணைத்துக்கொண்டார்.
அவரின் தோளில் சாய்ந்த சேகருக்கு கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை... அவ்வளவு வேதனையையும் கொட்டி தீர்த்தார்.
அழுதாலும் ஆற்ற முடியாத சோகம் அல்லவா அவரது... எல்லா சோகத்தை விட புத்திர சோகம் உயிரையே குடித்துவிடும் அல்லவா...? இன்று அந்த நிலையில் தான் இருந்தார் சேகர்...
அவரை தேற்ற முடியாமல் ராதிகாவை ஒரு பார்வை பார்த்தார். அவர் ‘ம்ம்ம்ம்...’ என்று தலையசைக்க பெரு மூச்சை விட்டு சேகருக்கு சம்மதம் கொடுத்தார்.
அதன் பின் குருவுக்கும் தீபாவிற்கும் திருமண ஏற்பாடுகள் விரைந்து நடந்தது... அதும் வெகு விமர்சையாக...
குரு சதியின் முகத்தில் வேதனையின் சாயலை தேடுவான். ஆனால் சதி தன் முகத்தில் அப்படி எதையும் காண்பித்துக்கொள்ளவே மாட்டாள்.
ஒரு நாள் தாங்கவே மாட்டாமல் ரிகசல் அறையிலிருந்து அவனுடைய தனிப்பட்ட ரிகசல் கூடத்திற்கு அழைத்து சென்றான் அவளை.
“என்ன ஆச்சு மாமா... எதுக்கு இவ்வளவு வேகமாக இழுத்துக்கிட்டு வர்றீங்க...” என்று அவனிடம் கேட்டாள்.
“ம்ம்ம்... உனக்கு கொஞ்சம் கூட பீளிங்ஸ்சே இல்லையாடி... இப்படி ரொம்ப சுலபமா எப்படி என்னை தூக்கி குடுக்க மனசு வந்துச்சு... அப்போ உன்னோட லவ் அவ்வளவு தானா...?” ஆற்ற முடியாமல் கேட்டவனை வாஞ்சையுடன் பார்த்தவள்,
“இதுல வருத்தப்பட என்னங்க இருக்கு... இது தீபாவோட கடைசி ஆசை... இதை நல்ல படியா நடத்தி குடுக்கணும்... அது மட்டும் தான் எனக்கு பெருசா தெரியுது... தீபா முகத்துல இப்போ எவ்வளவு ஆசை இருக்கு பார்த்தீங்களா...? இந்த மகிழ்ச்சிக்காக என்ன வேணாலும் செய்யலாம் தெரியுமா...?” என்று சகோதர பாசத்தில் பேசியவளை கண்டு காதல் கொண்ட மனது பலமாக அடிவாங்கியது.
ஆனால் அதை அவளிடம் காட்டாமல் இதழை மட்டும் இழுத்து சிரிப்பது போல வைத்தவன்,
“ஆமா, நான் கூட எங்க நீ என்னை குடுத்துட்டு வருத்தப்படுவியோன்னு யோசிச்சேன்... நல்ல வேலை நீ அந்த அளவுக்கு போகல... ஓகே வா தானே இருக்க...” என்று தன் வேதனையை மறைத்துக்கொண்டு அவளுக்கு ஈடாக அவளது நலனை பற்றி இவன் பேச,
அவளும் புன்னகையுடன், “நான் பக்கா ஓகே... நீங்க எதையும் யோசிச்சு மனசை போட்டு குழப்பீக்காதீங்க மாமா... நாளைக்கு அக்காவுக்கு நகை வாங்க போகணும்.. கூடவே தாலியும் வாங்க போகணும்...” என்று சொன்னவளை கூர்ந்து பார்த்தான்... அவளது முகத்தில் எள்ளளவும் வேதனை படரவில்லை...
அக்காவின் கல்யாணம் என்கிற மகிழ்வு மட்டுமே நிறைந்து இருந்தது...
அதில் ஒரு மனது மகிழ்ச்சி அடைந்தாலும் இன்னொரு மனம் ‘அப்போ என்னை வாரி குடுத்ததுல உனக்கு வேதனையே இல்லையா...?' என்று துக்கம் கொண்டது.
அடுத்த நாள் நல்ல நாளாக இருக்க கண்டு தாலி வாங்க அனைவரும் கடைக்கு சென்றார்கள்.
தாலியோடு இன்னும் கொஞ்ச புது நகைகளும் தீபாவிற்கு வாங்கினார்கள். சதி தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் அவளுக்கும் இன்னும் பல நகைகள் வாங்கி கொடுக்க, அவளின் உயர்ந்த மனதை அனைவரும் அறிந்துக்கொண்டார்கள்.
சதியை சேகர் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டார்...
“உன் மனசுக்கு நீ இன்னும் ரொம்ப நல்லா இருப்படா...” என்று ஆசிவதித்தவர் தன் பெரிய மகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு மனம் நிறைந்து போனார்.
“அப்பா... ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்...” என்று சொல்லிவிட்டு சதி போனாள்.
சிறிது நேரத்திலே வெளி வந்தவள் அங்கே குரு நிற்பதை கண்டு திகைத்து போனாள்.
“இங்க என்ன மாமா பண்றீங்க... எல்லோரும் அங்க இருக்கும் போது... வாங்க போகலாம்...” என்று அவனை அழைத்து செல்ல பார்க்க,
“யாரோ எனக்கு எந்த வருத்தமும் இல்ல... மகிழ்ச்சி தான்னு சொன்னாங்க நேத்தைக்கு... அது யாருன்னு தெரியுமா சதி...?” கேட்டவனை சிவந்து கலங்கி போன கண்களுடன் ஏறிட்டாள்.
“மாமா...”
அவளது கண்களில் இருந்த சிவப்பிலே இவ்வளவு நேரமும் அவள் அழுது இருக்கிறாள் என்பதை அறிந்தவனுக்கு, அவளது வருத்தம் காதல் கொண்ட நெஞ்சுக்கு இதமாக அமைந்தது...
“ப்ச்... விடுடி... எனக்கும் வருத்தமா தான் இருக்கு...” என்றவன் அவளை கட்டிக்கொண்டான்.
அவனது தோள் வளைவில் இருந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்...
“என்னடி” என்றான்.
“ம்ஹும்...” என்று தலையசைத்தாள்...
“பரவால சொல்லுடி...”
“இல்ல ஒண்ணும் இல்ல மாமா... வாங்க போகலாம்... ரெண்டு பேரும் காணாம போய்ட்டா தீபாவுக்கு சங்கடமா போய்டும்... வாங்க.” என்று இருவரும் எல்லோருடனும் சேர்ந்துக்கொண்டார்கள்.
புடவை எடுத்து, நகை எடுத்து, தாலி எடுத்து, பத்திரிக்கை அடிக்க குடுத்து, அதை வாங்கி அனைவருக்கும் கொடுத்து என்று எல்லா வேலைகளும் பரபரப்பாய் நடந்துக்கொண்டு இருந்தது... கூடவே நிறுத்தி நிதானமாக, ஒவ்வொரு சடங்கையும் பார்த்து பார்த்து செய்தார்கள் தீபாவிற்க்காக... அதில் இன்னும் அதிக மகிழ்ச்சி கொண்டாள் தீபா...
விடிந்தால் கல்யாணம் என்கிற நிலையில் வந்து நின்றது நாள்... இரவு வரவேற்பு வைத்து அதன் பின் காலையில் தாலி கட்டு என்பது போல ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
வரவேற்பில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் ஒரே வண்ணத்தில் உடை போட்டு அந்த வரவேற்ப்பையே கலக்கிக்கொண்டு இருந்தார்கள் உள்ளுக்குள் இருக்கும் துக்கத்தை மறைத்துக்கொண்டு.
குருவும் சதியும் சினி பீல்டில் இருப்பதால் அதிகமானவர்கள் சினிமா துறையிலிருந்தே வந்து இருந்தார்கள்.
அதனால் செக்யூரிட்டி அதிகமாக போட்டு இருந்தார்கள். கலகலப்பாக போய்க்கொண்டு இருந்தது... தீபா பாதி நேரம் சதியை தன் கைபிடியிலேயே வைத்து இருந்தாள்.
“அக்கா இது உன்னோட கல்யாணம்... நீ என்ஜாய் பண்ணு... நான் வந்தவங்களை கவனிக்கிறேன்...” என்று சொல்ல,
“பயமா இருக்குடி... நிறைய பேர் பெரிய பெரிய செலேபிரட்டி எல்லாம் வராங்க... ப்ளீஸ் டி...” என்ற போது தான் அவளது பயமே புரிந்து சதிக்கு...
“ஒண்ணும் இல்ல க்கா... நான் பார்த்துக்குறேன்...” என்று சொல்லி அவளுடன் கூடவே துணைக்கு இருந்தாள்.
குருவின் கண்கள் சதி இடம் தஞ்சமடைய துடிதுடித்துக்கொண்டு இருந்தது... ஆனால் பார்க்கிறவர்கள் எல்லோரும் என்னவென்று எண்ணுவார்கள்.
அக்காவுடன் திருமணத்தை வைத்துக்கொண்டு தங்கையை பார்த்துக்கொண்டு இருந்தால் அவ்வளவு தான்... தேவையில்லாத கிசுகிசுப்புக்கு ஆளாகி போவோம் என்று புரிய தன் மனதை பெரிதும் அடக்க படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தான்.
அதை விட சதிக்கு நெருப்பின் மேல் நிர்ப்பது போல இருந்தது... என்ன தான் அக்காவிற்கு விட்டுக்கொடுத்தாலும் தன் மனம் கொண்டவன் இன்னொருத்தியுடன் மேடயில் நிற்பதை கண்டு வெம்பி தளும்பியது மனசு... அதை விட மனம் விரும்பியவனின் கல்யாணத்திற்கு அவளே மணமகள் தோழியாக இருப்பது உயிர் வேதனையை கொடுத்தது...
ஆனால் அதையும் சிறு புன்னகையில் அடக்கிக்கொண்டு சகோதரிக்காக அந்த தியாகத்தையும் செய்தால் சதி.
அவள் மனம் என்ன பாடு படும் என்பதை உணர்ந்த குரு எப்பொழுது தான் இந்த வரவேற்பு முடியும் என்று எரிச்சலுடன் காத்திருந்தான்...
ஒரு வழியாக இரவு பத்து மணிக்கு மணமக்கள் இருவரையும் சாப்பிட அழைத்து சென்று சாப்பிட விட்டார்கள். நவினுக்கு சதியை பார்க்க அவ்வளவு கஷ்டமாய் இருந்தது... வெளியே சொல்லிக்கொள்ள வில்லை என்றாலும் அவளின் துக்கத்தை நவீன் உணர்ந்தான்.
அதனாலே தீபா சதியையும் தங்களுடன் சாப்பிட அழைக்கும் போது ஆரம்பிக்கும் போது, சதியுடன் இணைந்துக்கொண்டான் நவீன்...
அவனை நிமிர்ந்து பார்த்தாள் சதி...
“ஒண்ணும் இல்ல அண்ணி, நானும் இன்னும் சாப்பிடல... அது தான்...” என்று அவளுடன் அமர்ந்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
அவனது இந்த செய்கை குருவுக்குள் ஒரு நெகிழ்வை கொடுத்தது...
“தேங்க்ஸ் டா...” என்று நவீனுக்கு மெசேஜ் பண்ணினான்...
அதை எடுத்து பார்த்தவன் பதிலுக்கு ஸ்மைலியை அனுப்பி வைத்தான்..
இருவரது நடவடிக்கையும் கவனித்த சதிக்கு இதழ்களில் ஒரு கர்வ புன்னகை எழுந்தது... அதை அடக்கிக்கொண்டு தன் அக்காவை நிறைவாக கவனித்தாள்.
மண்டபத்தில் இரவு சந்தடி அடங்கிய பின் சதி மட்டும் மாடியில் தனியாக நின்று இருந்தாள்... அவளுக்கு துணையாக அவளை தேடி குருவும் அவளிடம் வந்து சேர்ந்தான்...
இந்த சேகர் பண்றது முதலில் சரியா?????