ராக்கியிடமிருந்து தகவல் வர அடித்து பிடித்துக்கொண்டு ஆனந்தியும் சேகரும் வந்தார்கள் மருத்துவமனைக்கு.
வந்தவர்கள் அவளிருக்கும் கோலம் கண்டு கலங்கி போனார்கள்.
“அங்கிள் ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டாங்க... மயக்கம் தான்.. பீவேர் குறைய மருந்து குடுத்து இருக்காங்க... சீக்கிரமா கண் முழிச்சிடுவா...” சொன்னான்.
அதில் நிம்மதி வந்தாலும் வேரறுந்த கொடி போல கிடப்பவளை காண்கையில் மனமெல்லாம் கரைந்து போனது...
மருத்துவர் வந்து மீண்டும் ஒருமுறை பரிசோதித்துவிட்டு, சேகரையும் ஆனந்தியையும் தன்னை வந்து பார்க்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.
இருவரும் அவரை பார்க்க செல்ல,
“ப்ராப்பரா பேபிக்கு பீட் பண்ணாலே இவங்களுக்கு இட்ன்ஹா பிரச்சனை வராது... ஒழுங்கா நேரா நேரத்துக்கு பீட் பண்ண சொல்லுங்க... குழந்தை இவங்க கிட்ட பால் குடிக்கிறது தான் இவங்களோட மருந்து...” என்றுவிட்டு செல்ல, சேகர் வேதனையுடன் ஆனந்தியை பார்த்தார்.
“நீங்க போய் பேசுறீங்களா ங்க...” கண்ணீருடன் கேட்டார் ஆனந்தி.
“ஆமா, ஆனா இந்த விஷயம் சதிக்கு தெரியாம பார்த்துக்கணும்...” என்றவர், “நீ பாப்பா கண்ணு முழிச்சவுடன் வீட்டுக்கு கூட்டிட்டு போ... நான் போய் மாப்பிளையை பார்த்து பேசிட்டு வரேன்...” என்று குருவை பார்க்க சென்றார்.
குரு அவளை மருத்துவமனைக்கு அனுமதித்துவிட்டு நடனாலயம் வந்து தன் கோவத்தை முழுவதும் நடனத்தில் காட்டி தன் ஆத்திரத்தை குறைக்க பார்த்தான். ஆனால் அது முடியாமல் இருக்க இருக்க அதிகமாக பெருகிக்கொண்டே இருந்தது நொடிக்கு நொடி...
அதை இன்னும் அதிகமாக்குவது போல சேகரும் அவனை தேடி வந்தார்.
அவனுடைய தனிப்பட்ட அறையில் அவர் அவனுக்காக காத்துக்கொண்டு இருக்க, சிறிது நேரத்திலே வந்து அமர்ந்தான் அவரின் முன்பு.
அமர்ந்தானே தவிர வேறு எதுவும் பேசவே இல்லை. அவ்வளவு பிடிவாதமாய் அமர்ந்து இருந்தான்.
அவனது பிடிவாதம் அவருக்கு தெரிந்தது தான் என்றாலும் இப்பொழுதும் கூட அமைதியாய் இருந்தவனை கண்டு மனம் கனத்து போனது அவருக்கு... எப்படியும் நாம பேசாமல் அவன் பேசப்போவது இல்லை என்று அறிந்து
“குரு...” என்றார் தயக்கத்துடன்.
அவன் என்ன என்பது போல அவரை பார்த்தான். அவனது இந்த அழுத்தம் கண்டு சோர்ந்து தான் போனார்.
“அது.... சதிக்கு ரொம்ப முடியல ப்பா... அவளுக்கு மருந்து குட்டி குமாரன் தான்னு மருத்துவர் சொல்றாரு... எனக்கும் வேற வழி தெரியல... உன் வருத்தமும் எனக்கு புரியுது... ஆனா இதை இப்படியே விட முடியாது இல்லையா.. குழந்தைக்கு ரெண்டு வயது வரை தாய் பால் ரொம்ப முக்கியம்... நாம சொத்து சுகம் சேர்த்து வைக்கிறதை விட ஆரோக்கியத்தை சம்பாரிச்சி வைக்கணும்னு சொல்லுவாங்க பெரியவங்க... அதுக்கு பிறந்த குழந்தைக்கு தாய் பால் அவசியம்... கொஞ்சம் யோசி ப்பா...” என்றார் கெஞ்சலாக...
“எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல... ஆனா உங்க மகளை நம்பி எப்படி நான் மகனை குடுக்க முடியும் சொல்லுங்க... எந்த நம்பிக்கையில நான் என் மகனை குடுக்குறது... ஏதாவது பாண்டு போட்டுக்கலாமா...?” ஏளனத்துடன் கேட்டவனை வருத்தத்துடன் பார்த்தவர்,
“பழசை மறக்குறது எல்லாருக்கும் நல்லது தம்பி...” வருத்ததுடன் சொன்னார்.
“எதை மறக்க சொல்றீங்க மாமா... இல்ல எதை மறக்க சொல்றீங்க... உதிரம் முழுசும் என் கையில உறைந்து போன அந்த சம்பவத்தை மறக்க சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது... இப்போ வரை ஒவ்வொரு இரவும் என்னை அந்த நிகழ்வு பயமுறுத்திக்கிட்டே இருக்கே... அதுக்கு என்ன தீர்வை சொல்ல போறீங்க... இல்ல நடந்து போன சம்பவத்துக்கு எனக்கு என்ன ஆறுதலை சொல்ல போறீங்க... வேணாம் மாமா என்னால எதையும் மறக்க முடியாது.. இந்த பேச்சை இதோட நிறுத்திக்கோங்க...”
“இப்படியே விட்டா என் மகளோட மனசும் சரி உடலும் சரி ஒண்ணுத்துக்குமே இல்லாம போடும் தம்பி... எனக்கு இந்த மகளாவது உயிரோட வேணும்...” என்று சட்டென்று கண்கள் கலங்கி அவர் அவனது கையை பற்றிக்கொள்ள, அவனால் அவரது கையை தட்டிவிட முடியவில்லை...
“மாமா...”
“ஆமா தம்பி, எனக்கு என்னோட இந்த மகளாவது வேணும்.. இவ நல்லா வாழுறதை பார்க்கணும்... ப்ளீஸ் தம்பி...” கண்ணீருடன் கெஞ்சியவரின் வேதனையை தன்னுள் முழுமையாக உணர்ந்தவனுக்கு சில சம்பவம் கண் முன் எழுந்தது..
அன்று இரு குடும்பமும் அடைந்த வேதனை... சொல்லவே முடியாத அளவுக்கு இருந்தது... கண்களை மூடி தன்னுள் சில முடிவுகளை எடுத்தவன்,
“உங்களுக்காக மட்டும் என்னோட முடிவுல கொஞ்சமே கொஞ்சம் மாற்றம் செய்யிறேன்...” என்றவன்,
“குழந்தைக்கு பீட் பண்ணட்டும்... ஆனா இதை சாக்கா வச்சி என் குழந்தையை உரிமை கொண்டாட கூடாது... அதோட இல்லாம பகல் மட்டும் தான் அவளுக்கு என் மகனை குடுப்பேன்... ராத்திரி அவன் என் கூட தான் இருப்பான்...”
“தம்பி பிள்ளைங்க இரவு தான் தாய்கிட்ட...”
“ம்ஹும்... என்னோட குட்டி குமரன் என்கிட்டே தான் இருப்பான்...” என்று உறுதியாக சொல்லிவிட்டான்.
“அப்போ நான் வேணா சதியை அங்க வர சொல்லவா...?” தயக்கத்துடன் கேட்டார்.
ஒரு நிமிடம் முழுமையாக எடுத்து யோசித்தவன்,
“வரட்டும் ஆனா ஒரு வாடகை தாயா தான் வரணும்.. அதுக்கு சம்மதம்னா வரட்டும். இல்லன்னா வேணாம்...” என்று தன் முடிவை சொல்லிவிட்டு எழுந்து செல்ல, சேகருக்கு குரு இந்த அளவுக்கு இறங்கி வந்ததே போதும் என்று தோன்ற, மகிழ்வுடனே மருத்துவ மனைக்கு வந்தார்.
அங்கு சதி கண் விழித்து இருக்க, அவளை அழைத்துக்கொண்டு மூவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
ராக்கியும் நடனாலயத்துக்கு சென்றுவிட்டான்.
வந்த உடனே சதியின் உடமைகளை எடுத்துக்கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு குருவின் வீட்டுக்கு சென்றார்கள் பெரியவர்கள்.
அவர்களது நோக்கம் புரிய,
“அப்பா எதுக்கு இதெல்லாம்... எனக்கு இங்க வர விருப்பமே இல்ல... ப்ளீஸ் என்னை கம்பல் பண்ணாதீங்க... வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்...” என்று சதி கூற,
“பாப்பா இப்போ நீ இந்த வீட்டுக்கு வெறும் வாடகை தாயாதான் வந்து இருக்க...” என்று எங்கோ பார்த்துக்கொண்டு சேகர் சொல்ல, சதியின் விழிகளில் சொல்லரியாத வேதனை நிறைந்தது..
“ஓஓஓ....”
“நீ...” மேற்க்கொண்டு அறிவுரை கூற வந்தவரை பார்த்து புன்னகைத்தவள்,
“ஒரு ‘வாடகைத் தாய்’ என்ன மாதிரி நடப்பாங்களோ நான் அது மாதிரி நடந்துக்குறேன் ப்பா... நீங்க கவலை படாதீங்க...” என்று வாடகை தாய் என்பதில் மனம் உடைந்து போனாள். ஆனால் அதை அவள் வெளியே சிறிதும் கூட காண்பித்துக்கொள்ளவில்லை...
ஆனந்தி ஆதுரமாக அவளின் தோளை தொட,
“நான் பார்த்துக்குறேன் ம்மா...” என்றவள் குருவின் வீட்டின் உள்ளே நுழைந்தாள்.
அவளின் வருகையை பார்த்த ராதிகா வேகமாய் ஓடிவந்து தன் மருமகளை வரவேற்று கட்டிக்கொண்டார்.
“வாடா என் தங்கம்... நீ எப்போ வருவன்னு தான் நான் தவம் கிடக்குறேன்..” என்று முகத்தோடு முகம் வைத்து அவளை மனதார வரவேற்றார்.
“அத்தை நான் இங்க உங்க மருமகளா வரல... வெறும் வாடகை தாயா தான் வந்து இருக்கேன்...” என்று சாதரணமாக சொல்ல, அந்த வார்த்தையில் அவளை விட வேதனை கொண்டார் ராதிகா.
“என்ன கண்ணு சொல்ற...?”
“ஆமா அத்தை உங்க மகன் அப்படி தான் சொல்லி இருக்காரு... அதனால நான் அப்படி தான் இந்த வீட்டுல இருக்க போறேன்...” என்று சொன்னவளை இறுக அணைத்துக்கொண்டவர்,
“அவனுக்கு கிறுக்கு தான் பிடிச்சி இருக்கு... அவன் கிடக்குறான் நீ வாடா...” என்று அவளை பிள்ளை பெற்ற பின் முதல் முறையாக வீட்டின் உள்ளே அழைத்து சென்றார்...
வாசலில் காலை வைத்த சதிக்கு முன்பு ஒரு முறை நடந்த நிகழ்வு நினைவுக்கு வர, கால்கள் அப்படியே நின்றது அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல்...
அதை உணர்ந்தவர் “விடு அவனை ஓட ஓட விரட்டிடலாம்... நீ வாடா தங்கம்...” என்று அழைத்து சென்றவர், கூடத்தின் உள்ளே வந்தவுடன் அவருடைய கால் அப்படியே நின்றது...
குரு சோபாவில் தோரணையாக அமர்ந்து தன் தாயையே கூர்மையாக பார்த்துக்கொண்டு இருந்தான்.
அதில் ராதிகாவுக்கு லேசாய் பயம் வந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சதியை குருவின் அறைக்கு அனுப்ப பார்த்தார்.
அப்பொழுது குருவின் அப்பா குமாரும் அங்கே வர, அவரையும் ஒரு பார்வை பார்த்தவன்,
“இங்க என் பேச்சை தாண்டி எதுவும் நடக்க கூடாது... குறிப்பா உங்களுக்கு தான்...” என்று தன் தாயை பார்த்து சொன்னவன்,
“அவங்களுக்கு கெஸ்ட் ரூமை குடுங்க... அவங்க வேலை என்னோட பிள்ளைக்கு பால் குடுக்குறது மட்டும் தான்... அதை தவிர அவங்க இங்க வேற எதுவும் செய்ய கூடாது.. குறிப்பா என் அறைக்குள்ள வர அனுமதி கிடையாது... என் கண்ணுலையும் பட கூடாது... மாச சம்பளம் பத்தாயிரம்...” என்று தாய் பாலுக்கு சம்பளம் பேசினான் ஈவு இறக்கம் என்று எதுவும் இல்லாமல்.
அதைக் கேட்டவளுக்கு “என் பிள்ளைக்கு பால் குடுக்க நீங்க யாரு இடையில நின்னு சம்பளம் குடுக்குறது...”ன்னு கேட்டுவிட ஆசையாக இருந்தது.
ஆனால் அப்படி கேட்டுவிட்டால் முதலுக்கே மோசமாகி பிள்ளையை கண்ணிலே காட்டாமல் செய்துவிடுவான் என்ற அபாயம் இருப்பதால் எதுவுமே பேசவில்லை.
ஆனந்திக்கு தான் குருவின் பேச்சை கேட்டு வேதனையாய் இருந்தது.. ஆனால் அவன் சொல்வதும் சரிதானே என்று நியாயத்தின் பிடியில் இருந்தார்.
இதெல்லாம் ஒரு பார்வையாளனாக நின்று இருந்த குருவின் தம்பி நவீனுக்கு கோவமாய் வந்தது...
‘இவரு ரொம்ப தான் ஓவரா போறாரு... யாரும் எதுத்து கேட்க ஆளு இல்லன்னு இஷ்டத்துக்கு ரூல்ஸ் போடுறாரு... நான் இருக்கேன் இவரோட ரூல்ஸ ப்ரேக் பண்றதுக்கு...’ என்று வேகமாய் குருவின் முன்பு வந்து நிற்க பார்க்க, சேகர் அவனது கையை பிடித்து தடுத்துவிட்டார்.
“ஏன் மாமா என்னை தடுக்குறீங்க... யாரும் கேள்வி கேக்காததுனால தான் இவர் ரொம்ப ஓவரா போறாரு... நீங்களும் கேள்வி கேக்காதீங்க, என்னையும் கேள்வி கேட்க விடாதீங்க...” என்று பொருமினான்..
“இந்த கேள்வி கேக்குற வேலையெல்லாம் உன் அண்ணி தான் செய்யணும்... அவளுக்கு இல்லாத மான ரோசம் நமக்கு மட்டும் என்னத்துக்கு... விடு, இது அவ வாழ்க்கை.. அவ தான் முடிவெடுத்து தன் வாழ்க்கையை காப்பாதிக்கிறதுக்காக போராடனும்... நீயோ நானோ இல்ல... சரியா...?” அடக்கியவர் தன் மருமகனையே பார்த்துக்கொண்டு இருந்தார்.
அவர் சொல்வதும் உண்மை தான் என்று உணர்ந்தவன் பொங்கிய பாலில் தண்ணீரை தெளித்தது போல புஸ்சென்று அடங்கி போனான்.
ஒருவழியாய் சதியை குருவின் வீட்டில் செட் செய்தவர், தன் அக்கா சமையலை ஒரு பிடி பிடித்துவிட்டு நிம்மதியாக ஒரு தூக்கத்தை போட்டார்.
அன்றைய நாள் கலைக்கூடத்திற்கு செல்லாமல் வீட்டிலே கழிந்தது இருவருக்கும்...
பால் குடிக்க மட்டுமே அவளிடம் குழந்தையை விட்டவன், மற்றைய நேரம் தன் நெஞ்சிலே போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டான்.
எப்பொழுதும் இரவில் மட்டுமே தன் நெஞ்சில் போட்டு அவனை தூங்க வைப்பான். பகல் பொழுது முழுவதும் ராதிகாவின் வசம் தான் இருப்பான் குட்டி.
இன்றைக்கு அவரிடம் கூட கொடுக்காமல் தன் நெஞ்சிலே குட்டியை போட்டு அடைக்காத்தான். அவனது நோக்கம் புரிந்து ராதிகா பல்லை கடிக்க,
“விடுங்க அத்தை இன்னைக்கு ஒரு நாள் தானே... அவராலையும் எதையும் அவ்வளவு சுலபமா ஏத்துக்க முடியாது இல்லையா... கொஞ்சம் பொறுத்து இருப்போம்..” என்று சதி தன் மாமியாருக்கு ஆறுதல் சொன்னவள், குருவின் இந்த செயலில் அடி பட்டு தான் போனாள்...
என்ன தான் டா ஆச்சி????
இவ என்ன பண்ணினா????
ஒரு மகளா???? அப்ப சதி kku அக்கா தங்கை யாரும் இருந்தாளா?????