குருவிடமிருந்து ராதிகாவிற்கு கால் வரவும் பதற்றமானவர் வேகமாய் போனை எடுத்து தன் மருமகளிடம் காண்பித்தார்...
அவளுக்கும் அவரது பதற்றம் தொற்றிக்கொண்டது... ஏனெனில் எப்பொழுதும் குரு யாருக்கும் போன் செய்யவே மாட்டான்... குறிப்பாக இடையில் பண்ணவே மாட்டான்.
ஆனால் இன்று அவன் அழைக்கவும் தவிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“எதுக்கு சதி இப்போ உன் புருஷன் கூப்பிடுறான்... ஒருவேளை நாம இங்க சந்திச்சுக்கிட்டது தெரிஞ்சு போச்சா...”
“அத்தை அப்படியெல்லாம் எதுவும் இருக்காது... முதல்ல நீங்க அவருக்கிட்ட என்னன்னு விசாரிங்க... பயப்படாம நடுங்காம கேளுங்க...” என்று சொன்னவள் வேகமாய் குருவின் ஓட்டுனருக்கு போன் போட்டாள்.
சற்று தள்ளிவந்து பேசினாள்.
“சார் இப்போ எங்க இருக்காங்க அண்ணா... ஷூட் அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா...” பதட்டத்துடன் கேட்டாள்.
“இல்லம்மா சார் ஷூட் ல தான் இருக்காங்க... ஒரு டாக்குமென்ட் வேணும்னு தான் அம்மாவுக்கு பேசுனாங்க... என்னை அதுக்கு தான் வீட்டுக்கு வர சொன்னாங்க...”
“அப்படியா வேற ஒண்ணும் இல்லையே அண்ணா...”
“இல்லம்மா இருந்தா நான் முன்னாடியே உங்களுக்கு தகவல் குடுத்து இருப்பேனே...”
“நன்றிண்ணா...”
“இதுக்கெதுக்கு ம்மா நன்றியெல்லாம்... இது நீங்க குடுத்த வாழ்க்கை... அந்த நன்றி எப்பவும் எனக்கு இருக்கும்...” என்று வைத்துவிட்டார்.
இவள் வைத்த நேரம் ராதிகாவும் குருவிடம் பேசிவிட்டு ஆசுவாசமானார்.
“என்ன அண்ணி சொன்னாரு மாப்பிள்ளை...” பதட்டத்துடன் ஆனந்தி கேட்டார்.
“ஒரு டாக்குமென்ட் வேணுமாம் அதுக்கு இந்த பாடு படுத்துறான்... ச்சை கொஞ்ச நேரத்துல ஈர குழையே நடுங்கிடுச்சு...” என்று நெஞ்சில் கை வைத்து பதட்டத்தை தணித்துக்கொண்டார்.
“இதுக்கு தான் நான் அப்பவே மாப்பிள்ளைக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்னு சொன்னேன்... யாரு கேக்குறீங்க...” குறைபட்டுக்கொண்டே வந்தார் தன் பேரனுடன் சேகர்.
“ம்கும்... நீ இங்க வக்கனையா பேசுவடா... ஆனா அவன் கிட்ட மட்டும் பம்மு... ஏற்கனவே நம்ம மேல கொலை வெறியில சுத்திக்கிட்டு இருக்கான்.. இதுல நீ தூபம் போட்டீன்னா எல்லாரோட சொளியையும் முடுச்சுட்டு போய்கிட்டே இருப்பான்...” என்று அங்கலாய்த்தார் சேகரின் ஒரே அக்கா ராதிகா..
“இல்லக்கா நாம கொஞ்சம் உடும்பு பிடியா இருந்து இருந்தா இப்படி மறைவா சதி அவளோட பிள்ளையை கொஞ்சனும்னு அவசியமே இருந்து இருக்காதுன்னு எனக்கு தோணுது..”
“அடேய் நீ வேரடா, நானே குழந்தைக்கு இரண்டு வயசு வரையிலும் தாய் பால் முக்கியம் அதுக்காகவாவது அவ இந்த வீட்டுல இருக்கட்டும் னு சொன்னேன்.. அதுக்கே ஆச்சா போச்சான்னு அந்த குதி குதித்தான்...”
“சரி இந்த வீட்டுல இல்லன்னாலும் வெளியில எங்கயாவது இருந்து பாலை குடுத்துக்கட்டும்னு சொன்னேன்... அதுக்கு அந்த தடி மாடு என் புள்ள மேல அவ நிழல் கூட படக்கூடாதுன்னு சொல்லிட்டான்...”
“ஆனா அவன் மட்டும் அவனோட கலைக்கூடத்துல சதிய வச்சுக்குவானாம்... என்ன ஒரு அநியாயம்...” என்றார்.
“கேட்டா லைப் வேற ப்ரோபிசனல் வேறங்குறான்... இப்படி பண்றவன்கிட்ட நியாயம் கேட்டா சுவத்துல முட்டுன கதையா தான் போகும்.. அதனால தான் அவனுக்கு தெரியாம என் மருமகளையும் என் பேரனையும் சேர்த்து வச்சுக்கிட்டு இருக்கேன்...”
“அந்த கழுத முரண்டு எனக்கு பிடிச்சா என்ன... அவன் கண் மறைவா என்னால என்ன செய்ய முடியுமோ அதை நான் செஞ்சுட்டு போறேன்... அவ்வளவு தான்...” என்று ராதிகா சொல்ல தன் அக்காவை பெருமையாக பார்த்தார் சேகர்...
“அண்ணி நீங்க மட்டும் இல்லனா நிஜமா சதியோட நிலையை நினைச்சி பார்த்திருக்கவே முடியாது... அவ ஒவ்வொரு இரவும் பக்கத்துல தடவி தடவி பார்த்துட்டு ஏக்கமா தூங்காம கழிக்கிற இரவை எண்ணி எத்தனை நாள் தெரியுமா நாங்க ரெண்டு பேரும் தூக்கத்தை தொலைச்சிட்டு நிக்கிறோம்...” கண்கள் கலங்க ராதிகாவின் கைகளை பற்றிக்கொண்டார் ஆனந்தி.
“ஆனந்தி எல்லாமே சரியா போகும்... நீ எதுக்கும் கவலை படாத... அவனோட கோவமும் நியாயம் தானே... அது ஆற கொஞ்சம் நாள் குடுத்து தான் பார்ப்போமே...” என்றவர் சதியின் கரங்களை இறுக பற்றிக்கொண்டு நான் இருக்கிறேன் என்பது போல ஆறுதல் கொடுத்தார்.
அதற்க்கு மென்மையான புன்னகையை கொடுத்தவள் தன்னிடம் தாவி வந்த மகனை நெஞ்சோடு அனைத்து முத்தமிட்டாள்.
இனி அவனை நாளை காலையில் தான் காண முடியும். எண்ணும்போதே கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது...
“ஆமா கேக்கணும்னு நினைச்சேன்... ஏன் நொண்டி நொண்டி நடந்து வந்த சதி...” ராதிகா கேட்க அவளால் இது தான் என்று அவர்களிடம் சொல்ல முடியவில்லை...
“அது... கீழ விழுந்துட்டேன் அத்தை... அதான் நடக்க முடியல...” லேசாக தடுமாறியபடி சொன்னாள்.
“கீழ விழுந்தியா இல்ல உன் புருஷன் செஞ்ச லீலையா...” என்று உள்ளது உள்ளபடி கேட்ட ராதிகாவை சமாளிக்க முடியாமல் தடுமாறி போனாள்.
“இல்ல நிஜமாவே கீழ தான் விழுந்தேன் அத்தை...”
“எங்க விழுந்த...”
“வண்டியில வந்துக்கிட்டே இருந்தேன்... அப்போ ஒரு பையன் புதுசா வண்டி கத்துக்கிட்டு இருந்தான்.. அவன் தான் தெரியாம வந்து என் மேல இடிச்சிட்டான் அத்தை..”
“வர்றப்ப வா...”
“ம்ம்ம்... ஆமாம் அத்தை...”
“அப்படியா...? ஆனா எனக்கு தகவல் வந்தது என்னவோ கலைக்கூடத்தில் தான் உனக்கு அடிப்பட்டதுன்னு கேள்வி பட்டேன்...” என்று அவர் கொக்கிப்போட்டு இழுக்க, சதி தலை குனிந்துக்கொண்டாள்.
“நீ இப்படி அவனை காப்பாத்துற அளவுக்கு அவன் ஒண்ணும் உத்தமன் கிடையாது சதி...”
“இல்ல அத்தை... கைல இருந்த வளையல் எல்லாமே நாட்டியம் ஆடும்போது உடைஞ்சி கீழ விழுந்துடுச்சி... ருத்திர தாண்டவம் வேற... குருவுக்கு தான் நாட்டியம்ன்னு வந்துட்டா எதுவுமே கண்ணுல படாதே... இப்பவும் அந்த மாதிரி தான்... என்னை விட அவருக்கு தான் கால்ல அதிக காயம்... அதோடவே இப்போ கிளம்பி போய் இருக்காரு...” வேதனையுடன் சொன்னவளை அன்புடன் பார்த்தவர்,
“உன்னோட அன்புக்கு கொஞ்சமும் தகுதியே இல்லாதவன் அவன்...” என்றார்.
“இல்ல க்கா அவரோட முழு குணத்தையும் நாம தான் சரிவர ஒழுங்கா புரிஞ்சுக்கல...” என்று மாப்பிள்ளைக்கு சப்போர்ட் செய்தார் சேகர்.
“ம்கும்... எங்கயும் உன் மருமகனை விட்டே குடுத்துடாத... அதனால தான் அவன் இந்த அளவுக்கு ஆடிக்கிட்டு இருக்கான்...” நொடித்துக்கொண்டார்.
“இல்ல அத்தை. அப்பா சொல்றது சரிதான். இவரு பொய்யா எதையும் பேசல... இருக்கிறதை தான் சொல்றாங்க... என் மாமா குணம் அவ்வளவும் தங்கம் தான் அத்தை... அதை நான் பக்கத்துல இருந்து அனுபவிச்சி இருக்கேன்...” என்று தன் பிள்ளையில் தன் காதலனை பார்த்தாள் சதி...
சின்ன குமரன் அப்படியே குரு தான்.. அவனுடைய முரட்டு தனம் அப்படியே இவனுக்கும் வந்து இருக்கிறது... கை கால்கள், உடம்பு என எல்லாம் இப்பவே அவ்வளவு கெட்டியாக இருந்தது...
அதில் சதிக்கு பெருமை தான்... அச்சு அசல் கணவனின் வார்ப்பில் பிள்ளைகள் இருந்தால், அதுவும் காதலித்து மணந்த பெண்களுக்கு சொல்லவும் வேண்டுமா...?”
கணவனை கொஞ்சி எடுத்ததை விட, பிள்ளைகளை தன் கணவன் உருவத்தில் பார்த்தால் எப்பொழுதுமே தனி கவனிப்பு உண்டு அந்த குழைந்தைகளுக்கு. அதோடு கூடுதல் கொஞ்சலும் அவர்களுக்கு தான்...
இப்பொழுது சதியும் அப்படி தான் தன் மகனை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அதன் பின் மறுபடியும் தன் மகனுக்கு ஒதக்கு புறமாய் சென்று பசியாற்றிவிடு வந்தவள், அவனுக்கு உச்சி முத்தம் வைத்து தன் பெற்றவர்களோடு கிளம்பி வீட்டுக்கு வந்தாள்.
வந்தவள் காலையிலிருந்து ஆடிய ஆட்டத்திலும், இன்றும் மகனை தன்னோடு அழைத்து வர முடியவில்லையே என்ற ஏக்கத்திலும் கவிழ்ந்து படுத்துவிட்டாள்...
லேசாய் கண்கள் கலங்கிய படி தூங்கி போனாள். சாப்பிடாமல் கூட தூங்கி போனவளை மன பாரத்துடன் பார்த்தவர்கள், உணவை செய்துவிட்டு அவளது வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தார்கள் கூடத்தில் சதியின் பெற்றவர்கள்.
அடுத்த நாள் காலையில் எழுந்திரிக்கும் போதே காய்ச்சலோடு தான் எழுந்தாள் சதி... நேற்றைக்கு அதிக நேரம் பிள்ளைக்கு அமுது ஊட்ட முடியாமல் போனதோடு, கால்களில் வளையல்கள் குத்தி கிழித்து இருக்க, இரண்டும் சேர்ந்து அவளை காய்ச்சலில் தள்ளியது...
இருந்தும் தட்டு தடுமாறி, எழுந்து குளித்துவிட்டு கலைக்கூடத்திற்கு சென்றாள்.
அங்கு குரு வருவதற்கு முன்பே ராதிகா குழந்தையோடு நிற்க, வேகமாய் அவனை வாங்கி மறைவிடம் சென்றாள் யாரும் கவனிக்கும் முன்...
குரு இன்னும் வந்து இருக்கவில்லை... குழந்தையை ராதிகாவிடம் ஒப்படைக்கும் போதுதான் அவளுக்கு காய்ச்சல் என்றே கண்டு கொண்டார் அவர்.
“என்னாச்சுடி இப்படி உடம்பு சுடுது...”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல அத்தை... அவரு வர்றதுக்கு முன்னாடி நீங்க கிளம்பிடுங்க...” என்று அவரை வலுக்காட்டாயமாக அனுப்பி வைத்தவள், தன்னுடைய அறையில் சென்று படுத்துக்கொண்டாள்.
கண்களை மூடி படுத்திருந்தவளுக்கு குருவின் காலடி சத்தம் மிக அருகில் கேட்க, அவளால் கண்களை திறந்து அவனை பார்க்கவே முடியவில்லை... ஏதோ ஒரு சுழலுக்குள் சிக்கி இருப்பதை போல இருந்தது...
அவனது பேச்சு குரல் கேட்டது... முயன்று பார்த்தாள் ம்ஹும் முடியவில்லை... ஒற்றை கரத்தை மட்டும் அவன் நிற்கும் திசை உணர்ந்து நீட்டினாள்.
ஆனால் அவனோ அவளது கரத்தை பிடிக்காமல் அப்படியே நின்று வேடிக்கை பார்த்தான்...
“சோ... முடியாதுன்னு சீன போட்டுக்கிட்டு இருக்க இல்லையா...?” கடுப்புடன் ஒலித்தது அவனது குரல். அதில் இன்னும் சோர்வாகி போனாள் சதி...
“இப்போ உன்னை பாவம் பார்த்து நான் மருத்துவமனையில சேர்க்கணும், இல்லன்னா உன்னை கொண்டு போய் உன் வீட்டுல விடனும். அதுக்கு தானே இந்த ட்ராமா...?” கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் கேட்டவனை கடினப்பட்டு விழி விரித்து பார்த்தாள்.
அவள் பார்த்த உடன் அவனது இதழ்களில் இன்னும் அதிக ஏளனம் சிந்தியது...
அதை பார்த்து மனம் நொந்தவள், முயற்சி செய்து எழுந்து நின்றாள்.
“ம்ம்ம்.. இப்போ எப்படி எழும்ப முடிந்தது... அவ்வளவு வேஷம் இல்ல... உனக்கு தான் இரும்பு உடம்பாச்சே... உனக்கு போய் ஏதாவது வந்தா தான் நான் ஆச்சர்ய படணும்...” என்று மேலும் ஏளனம் செய்தவன்
“ரிகசல் இருக்கு...” என்றவன் அவளை வா வென்று கூட அழைக்கவில்லை... அவனது பேச்சில் கண்களை முட்டிக்கொண்டு கண்ணீர் வந்தது...
ஆனால் கண்ணீர் சிந்தினால் அது சதியல்லவே...
கண்ணீரை உள்ளுக்குள் மறைத்தவள், நடக்க முடியாமல் நடந்து வந்து அவனுடைய கூடத்தில் நுழைந்தாள்.
அங்கு அவன் ஆடுவதற்கு தயாராய் இருக்க... ஒன்றுமே சொல்லாமல் அவன் அருகில் சென்று நின்றாள்.
மேற்க்கத்திய பாடல் ஒலிக்க, அதற்க்கு பெல்லி நடனம் தான் சரியாக வரும் என்று அனுமானித்து அவள் ஆட ஆரம்பிக்க, அவனும் இணைந்துக்கொண்டான்...
இந்த நடனம் தான் நாளைக்கு ஷூட்டில் ஆட வேண்டிய பாடல். அதனால் அவளை வைத்து ஒரு ரிகசல் பார்த்தவன், தன் கைவளைவில் வைத்து எப்பொழுதும் போல அவளை ஆட்டிவித்துக்கொண்டு இருந்தான்...
அவளின் இடை தொட்டு ஆடும் சமயம் எல்லாம் அவளின் உடம்பில் தெரிந்த வெப்பம் அவனை சுட்டது என்றாலும் வீம்புக்காகவே அவளை ஆட்டிவைத்துக்கொண்டு இருந்தான்.
சதியால் நீண்ட நேரம் தாக்கு பிடிக்க முடியாமல் அப்படியே அவனது கையிலே மயங்கி சரிந்தாள்... வேரறுந்த மரமாய் சாய்ந்தவளை கையில் தாங்கியவன், அவளை தன்னோடு இறுக்கமாக அனைத்து அவளது நெற்றியில் முத்தம் வைத்தவன், கண்கள் இரண்டும் கலங்க சதியை உயிர் போகும் வேதனையுடன் பார்த்தவன் விரைந்து மருத்துவமனைக்கு சென்று அவளை அனுமதித்து மருத்துவம் வழங்க ஏற்பாடு செய்தான்.
அந்த கனிவு எல்லாமே கொஞ்ச நேரம் மட்டுமே இருந்தது குருவிடம். பின்பு எப்பொழுதும் போல இறுக்கம் வந்து ஒட்டிக்கொள்ள, வேதனையுடன் அவளை பார்த்தவன், ராக்கியிடம் சொல்லி இருவீட்டுக்கும் தகவலை சொல்ல சொன்னவன் அடுத்த ஒரு நிமிடம் கூட அங்கு நிற்கவில்லை அவன்..
நின்றால் கண்டிப்பாக சதி அவனிடம் அடி வாங்கியிருப்பாள் என்பது நிச்சையம்... அதை தவிர்க்கவே குரு அங்கிருந்து சென்றான்...
ரொம்ப பாசமா தான் இருக்கான்.....
அப்புறமும் ஏன் டா அவளை போட்டு படுத்தறா?????
பாவமா இருக்கு சதியை பார்க்க....
அவன் அம்மா சொல்றாங்க....அவன் பக்கம் காரணம் இருக்குனு?????