“முகிலாம்பிகையை முன்ன பார்த்ததுக்கும் இப்ப பார்க்குறதுக்கும் நல்ல மாற்றம் தெரியுது இல்ல அக்கா.. நல்லா வளர்ந்துட்டா..” என்று புவனா முகிலாம்பிகையை பாசமாய் பார்த்த படி சொல்லி பர்வதத்தை பார்க்க
“ஆமா புவனா... பொம்பளை பிள்ளைங்க வளர்ச்சி அப்படி தானே இருக்கும்” என்று பேசினாலும் “கொல்லி கண்ணை வச்சுக்கிட்டு புள்ளைய பார்த்து கண்ணு வைக்கிறாளே” புலம்பினார்.
“ம்ம் எந்த வேலை செய்யாம சும்மா உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டே இருந்தா நல்லா தான் இருப்பா” என்று முகிலாம்பிகையின் காதோரம் முனகினான் பழமலை நாதன்..
அதில் சினம் துளிர்த்தாலும் தன்னை அடக்கிக்கொண்டாள்.
“பருவதம் நான் கொஞ்ச நாள் புள்ளைய அழைச்சுக்கிட்டு போறேன். என் தங்கச்சி இருந்தா இப்படி அனுமதி கேக்கனும்ன்ற அவசியம் இல்ல.. என்ன பண்றது எல்லாம் விதி. வயசு புள்ளைய விட்டுட்டு எப்படி தான் போக மனசு வந்துச்சோ ரெண்டு பேத்துக்கும்” என்று பாசாங்காய் அனுதாப பட்டவரை கொலை வெறியுடன் பார்த்தான் பழமலை நாதன்.
அவரது பேச்சில் கண்கள் கலங்கி போனது அவளுக்கு. “என்னடி உன் மாமா வந்தா ஒழுங்கா போக மாட்டானாமா.. என் கிட்ட வாங்கி கட்டிக்கிட்டு தான் போவானாமா... சொல்லி வையி என்னை பத்தி. ஓவரா சீன போட்டுக்கிட்டு இருக்கான். ஏதோ இப்போ தான் உன் அப்பன் ஆத்தா செத்து போன மாதிரி.. அவக செத்து போயி வருஷம் வந்துடுச்சு.. இப்போ தான் துக்க பட்டுக்கிட்டு இருக்கான்” என்று இவன் வேறு அவளை காயப்படுத்த அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் உள்ளே சென்றுவிட்டாள்.
அவளது அந்த உதாசீனம் அவனை கோவப்படுத்த கொஞ்சநேரம் கழித்து இவனும் பின்னோடு சென்றான். அதை பார்த்த புவனாவுக்கு நெற்றி சுருங்கியது. சாடையாய் தன் கணவனை கிள்ள
“ம்ம்ம் பார்த்துக்கிட்டு தாண்டி இருக்கேன்” முனகிய பெருமாள் விழிகளை சுழற்றி அவ்வீட்டை ஆராய்ந்தார்.
இருவரது கண் சாடையையும் பாராமல் பார்த்துக்கொண்டு இருந்த பருவதத்துக்கு அடி வயிற்றில் பக்கென்று இருந்தது. “என்ன ஏதாவது முடிவோட வந்து இருக்குங்களோ” வேதனை மனதை கவ்வியது.
சமையல் அறைக்குள் சென்றவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவளுக்கு நன்றாகவே புரிந்தது பெரியவரின் பேச்சில் இருந்த போலி தனம். இருந்தாலும் தன் பெற்றவர்களின் இழப்பு இவர்களுக்கெல்லாம் வேடிக்கையாய் போய்விட்டதே என்று தான் அவளால் தாங்க முடியாமல் போனது.
அதை புரிந்து கொள்ளாமல் பழமலை நாதன் வேறு தன் பங்குக்கு அவளை வருத்திவிட்டானே என்று இருந்தது. அவனை பத்தி தெரிந்து இருந்தாலும் ஏனோ இந்த சமயம் அவனது வார்த்தையை ஏற்க்க முடியவில்லை அவளால்.
அதனால் அவளால் அங்கு இருக்க முடியாமல் பஜ்ஜியை எடுக்கும் சாக்கோடு உள்ளே வந்தாள். அவளை அங்கு கூட நிம்மதியாய் இருக்க விடாமல் கூடவே வந்தான் பழமலை நாதன்.
அவனது வருகையை உணர்ந்தவள் வேகமாய் கண்ணீரை துடைத்துக்கொண்டாள். அவளது அரவமே அவனுக்கு அவள் அழுகிறாள் என்று உணர்த்த
“என்னடி உன் மாமா கிட்ட சொல்லாம சொல்றீயாக்கும் இந்த வீட்டுல என்னை கொடுமை படுத்துறாங்க கையோட கூட்டிட்டு போங்கன்னு” என்று கொடுக்காய் கொட்டியவனை கண்டு அடிபட்ட பார்வை ஒன்றை வீசியவள் எதுவும் பேசாமல் தட்டில் எடுத்து வைத்த பஜ்ஜிக்கு சின்ன கிண்ணங்களில் சட்னி ஊத்தி பெரிய தட்டில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு கோவமாய் வந்தது.
“என்னடி நான் கேட்டுக்கிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு பதில் சொல்லாம இருக்க.. துளிர் விட்டு போச்சா...” என்றவனை அப்போதும் பார்த்தாளே தவிர எதுவும் பேசவில்லை.
“என்னை மதிக்க மாட்டியா..” என்றான் ஒரு மாதிரி குரலில்..
அந்த குறலை கேட்டவளுக்கு உயிர் துடித்தது. வெடுக்கென்று அவனை பார்த்தவள் “வீட்டுக்கு வந்த விருந்தாளியை கவனிக்கிறதா இல்லை நீங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிக்கிட்டு இங்கனவே இருக்குறதா... சொல்லுங்க” என்றவளின் பேச்சில் கண்கள் மின்ன
“அப்போ அவங்க விருந்தாளின்றது நல்லா புரியுதா” என்றான். அவன் கேள்விக்கு பதிலாய் தலை ஆட்டியவள் “நான் போகட்டா” என்றாள் அனுமதியாய்.
“ம்ம் போடி நானும் வரேன்...” என்று சொம்பில் நீரை எடுத்துக்கொண்டு அவளோடு பின் வந்தான். இருவரையும் சேர்த்து பார்த்தவர்களுக்கு என்னவோ போல இருந்தது.
மூவருக்கும் பரிமாறியவள் பழமலை நாதனை உட்கார சொன்னாள். அது அவனுக்கு புரியாமல் போக “என்ன” என்றான்.
சரியான மாங்கா மண்ட.. திட்டியவள் “இருக்கயில உக்காருங்க” என்றாள். “ம்ம்ம்” என்றவன் அமர அவனுக்கும் ஒரு தட்டை நீட்டினாள்.
“ப்ச் எனக்கு பஜ்ஜி பிடிக்காதுன்னு தெரியாதா” என்றான் சுல்லேன்று
“இது பஜ்ஜி இல்ல... உருளைகிழங்கு போண்டா”
“இது எப்போடி போட்ட...” என்றவனின் கண்ணில் மின்னல் வந்தது.
“நீங்க போனதுக்கு பிறகு போட்டேன்”
“ம்ம்ம்” என்றவன் ஆசையாக வாங்கி சாப்பிட இருவரது நெருக்கத்தையும் பார்த்தவர்களுக்கு மனம் எரிந்தது.
“நீ தான் இங்க சமைப்பியா முகிலாம்பிகை” புவனா ஆழம் பார்க்க பழமலை நாதன் அவளை முறைத்தான்.
“இல்ல அத்த நான் எப்போதாவது தான் செய்வேன். எப்பவும் அத்தை தான் செய்வாங்க..”
“ஏன் சொல்ல வேண்டியது தானே நான் இங்க வேலைகாரியா தான் இருக்கேன்னு” என்று அவன் பொறும...
அவனை எப்படி அடக்குவது என்று தெரியாமல் சட்டென்று அவனது தோளில் கைவைத்து அழுத்தினாள். அவளது தொடுகையில் அவன் அமைதியாகினான். அதுவும் சிறிது நேரம் தான்.
“ம்ம் இல்ல இவ்வளவு அருமையா செஞ்சு இருக்கியே. உன் அம்மா இருந்த வரை உனக்கு அடுப்படி எங்க இருக்குன்னே தெரியாதே அந்த அளவுக்கு உன்னை வளர்த்தாளே அதான் கேட்டேன்.”
“அப்படியே இருக்க முடியாதே புவனா... பொம்பளை பிள்ளை அதுவும் இன்னொரு வீட்டில் போய் வாழ வேண்டியவ இல்லையா.. அதான் நான் கொஞ்சம் கத்துக்க சொன்னேன்.”
“நீங்க சொல்றதும் சரி தான். என்ன இருந்தாலும் அம்மா கிட்ட இருக்குற சுதந்திரம் வராது இல்ல க்கா” என்றார் பெரிய மனதாக..
“ரொம்ப ஓவரா போராங்கடி..” பல்லை கடித்தான்
“ப்ளீஸ் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” சட்னி பரிமாறுவது போல கீழே குனிந்து அவனுக்கு மட்டும் கேட்பது போல சொன்னவளை முறைத்தான்.
“என்னை எதுக்கு அடக்குற மரியாதையா பேச சொல்லு உன் அத்தை காரிய..”
“மாமா ப்ளீஸ்..”
“ம்கும் இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல” இருவரது குசுகுசு பேச்சை பார்த்த பர்வதத்துக்கு சிரிப்பு வந்தாலும் மற்றவர்களின் கண்ணு அவர்கள் மீது படிவத்தை அவர் விரும்ப வில்லை.
“கண்ணு உள்ள போய் சாப்பாடு ரெடியான்னு பாரு” அவளை உள்ளே போக சொல்ல
“சரிங்க அத்தை” என்றவள் அங்கிருந்து நழுவினாள்.
அவள் உள்ளே செல்லவும் பருவதத்தை முறைத்தான் பழமலை நாதன்.
“டேய் உன் அளப்பறைய கொஞ்ச நேரம் மூட்டை கட்டி வைடா.. மகனே” என்று பார்வையிலே கெஞ்சினார்.
அதற்கும் ஒரு முறைப்பான பார்வையை கொடுத்தவன் தன் போனில் மூழ்கினான்.
உள்ளே சென்றவள் பழமலை அவசர கதியில் சமைத்து அவர்களுக்கு பரிமாற அவளது வேகத்தை கண்டு அசந்து தான் போனார்கள் பெருமாள் தம்பதியினர்.
சாப்பிட்டு முடித்துவிட்டு “சரி பருவதம் நான் என் மருமகளை அழைச்சுக்கிட்டு போறேன்” என்று சொல்ல பழமலைக்கு செம்ம கடுப்பு வந்தது. முகிலாம்பிகையை முறைத்து பார்த்தான்.
அவனை பார்க்கமாலே அவனது கோவத்தை உணர்ந்து கொண்டவள் தன் அத்தை பருவதத்தை பார்த்தாள் ‘வேணாம்’ என்று.
அவளது விழி மொழியை படித்தவர் “இப்படி திடுதிப்புன்னு வந்து சொன்னா எப்படிங்க.. இப்போதைக்கு இவ இங்கயே இருக்கட்டும். கொஞ்ச நாள் கழிச்சு பார்த்துக்கலாம்” என்று மறுத்துவிட்டார்.
“என்ன பருவத அக்கா இப்படி சொல்லீட்டீங்க.. அவருக்கும் அவரு மருமக மேல பாசம் இருக்கும்ல.. கொஞ்ச நாள் அங்கயும் வந்து தங்கினா முகிலாம்பிகைக்கும் மனசுக்கு கொஞ்சம் இதமா இருக்குனு தானே கூப்பிட வந்தாரு.. இப்போ இப்படி சொல்றீக” புவனா நீட்டி முழக்க
“இல்ல புவனா இத்தனை நாள் முகிலாம்பிகை என் கூடவே இருந்துட்டாளா பொசுக்குன்னு நீங்க வந்து கூப்பிடவும் மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. எனக்கு பொம்பள பிள்ளை இல்லை. இத்தனை வருசமா விடுப்புக்கு மட்டும் வந்தவ இப்போ தான் என் கூடவே முழுசா இருந்து அந்த குறைய போக்கிக்கிட்டு இருக்கா... இப்போ வந்து அவளை கூப்பிட்டா அதான்..” தயங்கினார்.
“அதுக்குன்னு அவளை உங்க வீட்டுலையே வச்சுக்க முடியுமா.. நாளைக்கு அவளை கல்யாணம் பண்ணி குடுத்தா என்ன பண்ணுவ பருவதம். அப்போ பிருஞ்சு தானே ஆகணும்” பெருமாள் பேச பருவதத்திற்க்கு என்ன பதில் பேசுவது என்று தெரியவில்லை.
“நானே வச்சுக்குறேன் என் மருமகளை” என்று அவரால் உரிமையாக பேச முடியவில்லை. பழமலை நாதன் அதற்கு குறுக்கே நிற்கிறான். அவன் சரி என்று சொல்லி இருந்தால் இந்நேரம் அவர்களை பேசவே விட்டு இருந்திருக்க மாட்டார் பர்வதம்.
“இல்லங்க..” என்று சொல்ல வரும் முன்பே தன் அத்தையின் அவஸ்த்தையை பார்த்த முகிலாம்பிகை
“கொஞ்ச நாள் கழிச்சு வரேன் மாமா.. இங்க ஒரு வகுப்பு போயிட்டு இருக்கேன். அதை அப்படியே பாதியில விட்டுட்டு வர முடியாது. அதான் அத்தை தயங்குறாங்க. அதை முடுச்சவுடன் உங்க வீட்டுக்கு வரேன்” என்று சமாதான படுத்துவது போல சொன்னவளை இரு பெரியவர்களும் நம்பவில்லை என்றாலும் வேறவழி இல்லை என்பதால் எப்போ முடியும் என்று கால கணக்கை கேட்டுக்கொண்டே சென்றார்கள்.
அவர்கள் அந்த பக்கம் சென்றார்களோ இல்லையோ இங்கே பழமலை நாதன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க தொடங்கினான்.
“இங்க இவளை அப்படி என்ன கொடுமை படுத்தினோம்னு அந்த ஆளுங்க இப்படி பேசிட்டு போறாங்க... இவ என்னமோ ரொம்ப தான் ஓவரா போறா... நீ என்னடான்னா அவனுங்க கால்லயே விழுந்துடுவ போல... இவள கூட்டிட்டு போனா கூட்டிட்டு போவட்டுமே.. இங்க அவ அப்படி என்னத்த தாங்கிக்கிட்டு இருக்கான்னு இவ்வளவு சீன் போடுறீங்க ரெண்டு பேரும்” அவனது கத்தலில் முகிலாம்பிகையின் மனம் புண் பட்டு போக எழுந்து கொள்ளை புரத்துக்கு வந்துவிட்டாள்.
“ஆனா இவளுக்கு இவ்வளவு திமிரு ஆகாது. பேசிக்கிட்டு இருக்கேன்ல கொஞ்ச மாச்சும் மதிக்கிறாளா பாரு... யாருக்கிட்டயோ பேசிக்கிட்டு இருக்கேன்ற கணக்கா எழுந்து போறா..” அதற்கும் அவன் வசவ வெளியே வந்தாலும் அவனது சுடு சொற்கள் அவளது காதில் விழுந்து அவளை துன்பப்படுத்தியது.
“நான் இங்க இருக்கிறது இவனுக்கு பிடிக்கலையா...” என்று எண்ணியவளுக்கு கண்களில் நில்லாமல் கண்ணீர் வந்தது. எதுவும் சொல்லாமல் கால் போன போக்கில் நடந்து சென்றுவிட்டாள்.
ரைட்டர் நீங்க சொன்னது உண்மையோ உண்மை....
எப்ப டேய்....அவ என்ன டா பண்ணும்னு நினைக்கர🤦🤦🤦🤦
அவ தான் இப்ப போகல இல்ல
இவன் ரொம்ப பண்றான்... இவனுக்கு என்ன பிரச்சனை